This entry is in the series 20021013_Issue

வசீகர் நாகராஜன்


பத்து நிமிட இடைவெளியில்
பள்ளியில் விளையாண்ட
எறிபந்தின் வடு பரிசாய் இன்றும்
என் நெற்றியில் …

விடுமுறைக்காய் போன தாத்தா
வீட்டுத் திண்ணையில் சாக்பீஸால் வரைந்த
பொங்கல் பானையும் தோகைக்கரும்பும்
தித்திப்பாய் மனதில் ….

காலை வெயிலில் பருந்து தவறவிட்ட
கலர் கோழிக்குஞ்சு இரைக்காய்
அலகால் கொத்திய குறுகுறுப்பு
உள்ளங் கைகளில் ….
பரந்தாமன் வாத்தியார் பிரம்புக்குப்
பயந்து கையை நீட்டி பின்னிழுத்து
அடிக்கும் முன்னே அழுத கண்ணீர்
காயாமல் கன்னத்தில் ….

ஆற்று மணலில் கட்டிய கோவிலின்
வாசலுக்காய் இருபுறம் தோண்டுகையில்
ஜில்லென்று தீண்டிய விரல்களின் வெம்மை
அதிர்வுகளாய் விரல்களில் ….

தூக்கம் கலைந்த இரவில் நினைவுகள்
ஒரு வழிப் பாதையாய் ….
பனி சுமத்தல் கூட சுகமில்லை
பல சமயம் புற்களுக்கு ….

VNagarajan@us.imshealth.com

Series Navigation