புரிவதே இல்லை இந்தக் கதைகள்
யூசுப் ராவுத்தர் ரஜித்
புரிவதே இல்லை இந்தக் கதைகள்
குளத்தில் சங்கமித்த
மழைத் துளியின் வரலாறு
மீன்களுக்குப் புரியும்
ஆறுவண்ணமிழந்த
நீலவானின் புலம்பல்
முகில்களுக்குப் புரியும்
புரதங்கள் சேர்த்த
மண்ணின் கதையெலாம்
வேர்களுக்குப் புரியும்
கோடிக் கோடி செல்களுக்கு
ரத்தம் சோறூட்டும் ரகசியம்
நரம்புகளுக்குப் புரியும்
பூக்கள்
தேன் சேர்த்த பாடெல்லாம்
பூச்சிகளுக்குப் புரியும்
சுவரான கதையை
மண்ணும் மரமும் பேசுவது
பல்லிகளுக்குப் புரியும்
எல்லாம் புரிந்த
இயற்கைக்கு
சொல்லத் தெரிவதில்லை
சொல்லத் தெரிந்த
நமக்கோ இந்தக் கதைகள்
புரிவதே யில்லை