This entry is in the series 20070104_Issue

புதியமாதவி, மும்பை


கழிவறைச் சுவர்களைத் தவிர
மற்ற எல்லா சுவர்களிலும்
கண்ணாடிக் கதவுகளுடன்
தொங்கிக்கொண்டிருக்கிறது
புத்தக அலமாரிகள்.

ஒவ்வொரு பொங்கலுக்கும்
வெவ்வேறு தளங்களில்
மாறி மாறி அடுக்கப்படுகிறது
புத்தகங்கள்.

அலமாரிக்கு கண்களாய்
இருக்கும் புத்தகங்கள் சில.
பிரபலங்களின் பெயர்கள்
பளிச்சிடும் கண்ணாடிக்குள்
புத்தகமாய் இருப்பதுகூட
அலமாரிக்கு அந்தஸ்தை
அதிகரித்து காட்டும் என்பதால்
எப்போதும் முன்வரிசையில்.

நண்பர்களின் புத்தகங்களைத்
தொட்டுப் பார்க்கும்போதெல்லாம்
சிலிர்த்து போகிறது
தனிமையின் நாட்கள்.

அலமாரியில் எப்போதும்
போனசாக சேர்ந்து கொள்கிறது
நானே காசு போட்டு
அச்சடித்து வைத்திருக்கும்
புத்தக வரிசைகள்.

தூசி துடைத்து
கரப்பான் அடித்து
கவனிக்க
அதிக கூலி கேட்கிறான்
கண்ணன் என் சேவகன்.

வைக்க இடமில்லை
என்பதால் மட்டுமே
எந்தப் புத்தகத்தையும்
பழைய பேப்பர்கடைக்கு
பார்சல் செய்யமுடியாமல்
அடிக்கடி எல்லைத்தாண்டி
அடுத்தவர் அலமாரிகளை
அபகரிக்கும் குற்றத்திற்காய்
எப்போது வேண்டுமானாலும்
தூக்கிலடப்படலாம் நானும்
என் எழுத்துகளும்.

என் கவலை எல்லாம்
சாவைக் குறித்தல்ல.
என் சாவுக்குப் பின்
அனாதையாகப் போகும்
அலமாரியின்
புத்தகங்களைப் பற்றித்தான்.


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation