புதியதோர் உலகம்
வைகைச் செல்வி

இதோ –
கூப்பிடு தொலைவில்
புதியதோர் உலகம்.
அந்தரத்தில்
தொங்குகின்ற பூமி.
மேலே-
பொங்கி வரும் நீரலையில்
மிதந்து வரும் அடர்காடு.
கிளையெல்லாம் மீன்கள்.
கீழே-
மேகக் கூடுகளில்
பூச்சிகளும் பறவைகளும்.
சூரிய வெளியெல்லாம்
பூக்கள். . .பூக்கள்.
நிலவு மேடையிலோ
கணிப்பொறி முன்
சிங்கங்கள்.
ஆனால்-
தரையில் மட்டும்
ஊர்வனவாய் எங்கெங்கும்
இரண்டு கால் பிராணிகள்.
********
அனுப்பியவர்: சி. ஜெயபாரதன், கனடா