தொலைந்த செடிகளின் புன்னகை
ஹெச்.ஜி.ரசூல்

கொத்து கொத்தாய் பூத்திருந்தன நிழல்கள்
சொல்லாமல் கொள்ளாமல் பறித்தெடுத்து
தனக்குத்தானே சூடிக் கொண்டது மரம்.
விடுபடா துக்கங்களோடு
காம்புகள் தன்னந்தனியாய் தவித்திருக்க
காலடித் தடங்களில் உதிர்ந்த
கொன்றைமரப்பூக்கள்
தீராத மரணத்தை எழுதிச் செல்கின்றன.
செடிகளில் பூக்களில்லை இப்போது.
அடிமண்ணின் ஈரம்பற்றி
தொட்டிச் செடிகளுக்கு
எதுவும் தெரியாது
முற்றத்துச் செடி பூத்தது குறித்து
சந்தோசம் யாருக்கும் இல்லை.
தோட்டமழித்த
அரிவாள்களுக்குத் தெரியாது
செடிகளின் புன்னகைப் பற்றி