சகுந்தலை வேண்டும் சாபம்

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

திலகபாமா


இடறி விழுந்தேன் நீருக்குள்
துள்ளும் விறால் ஒன்றென் வாய்க்குள்
இழுத்து வந்தேனென் வாழ்வுக்குள்
சுவாசம் திணறும் மூச்சு
முகத்தில் அடிக்கும் மீன்வால் வீச்சு
மீன்வாசமடிக்கும் கவிச்சல்
இருந்தும் இழுத்து வந்தேனென் வாழ்வுக்குள்
துள்ளும் விறால் ஒன்றென்வாய்க்குள்
மீனின் வாய்க்குள்
மின்னும் மோதிரமிருந்தால்
சுற்றி இருக்கும்
துஸ்யந்த சமூகம் எனை
சகுந்தலையாய் நினைவு கொள்ளலாம்
சாபத்தால்
சகுந்தலை மறந்தாய்
கணையாழியால்
கண்டு கொண்டாய்
சகுந்தலை உனை மறந்திருந்தால்
சாத்தியமா நினைவு படுத்தல் ?
கண்களை ,காதலை மறந்து
கணையாழியால்நினைவு பெறும்
துஸ்யந்தனே
சகுந்தலை உனை மறக்க
சாபத்தை வரமாய் வேண்டியபடி

Series Navigation

திலகபாமா

திலகபாமா