குழந்தை யேசு
மாலதி மைத்ரி

(தொகுப்பு சங்கராபரணி . வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் , 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001. விலை ரூ 30)
யேசுவின் குருதி வலியாய் சூழ்கிறது
கைகளை நீட்டி ஒற்றைக்காலில் நின்று
சுவரில் சாய்ந்து தலை ஒடித்து
சிலையாய் எழுகிறது துயரம்
ரப்பர் பொம்மையை மார்பில்
அணைக்கக் கொடுத்து
கன்னி மேரியென சொல்ல
தவித்து சலித்து
யேசுவை மடியிருத்தி பாலூட்டுகின்றாள்
மலம் கழித்த குழந்தையை
கால் கழுவுத் துடைத்து
உடைமாற்றி செல்லம் கொஞ்சி
சண்டி பண்ணும் பயலை
மடியில் கவிழ்த்துப் போட்டு
புட்டத்தில் அடி கொடுக்கிறாள்.
யேசு ஏன் அழுகின்றான்
கேள்வியை சிலுவையாய் சுமந்து அலைகிறாள்.
****************