This entry is in the series 20060324_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


என்னரும் இறைவனே!
எந்த தெய்வீக அமுதத்தை
என்னுள்ளே புதைத்து வைத்துளாய் நீ,
பூரித்துப் பொங்கிடுமென்
வாழ்வுக் கிண்ணத்தி லிருந்து
வாரி எடுக்க ?
என்னரும் கவியரசே!
என்விழிக் காட்சிகள் மூலம்,
உனது
படைப்பைக் கண்டு நீ
பரவசம் அடைவதற்கோ ?
மெளனமாய்
என்செவி வாசலில் நீ
நின்று கொண்டு
முடிவில்லா
உந்தன் சீரிசைப்பாடை
முந்திக் கேட்பதற்கோ ?

உன்னால் படைக்க பட்ட உலகம்
என்வாய் மொழிகளாய்
பின்னி
நெய்யப் பட்டுள்ளது,
என் உள்ளத்திலே!
உனது பூரிப்பு பொங்கி எழுந்து
என் கவிதை களுக்கு
உன்னத இசைத்துவம்
அளித்துக் கொண்டுள்ளது!
அன்பைப் பொழிந்து
முழுமை யாக உன்னை
அர்ப்பணித் துள்ளாய்
எனக்கு!
மேலும்
உன் ஆக்கச் சுவை அனைத்தும்,
என் பிறவி மூலம்,
ஒருங்கே
உணர்கிறாய் நீ!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 20, 2006)]

Series Navigation