கீதாஞ்சலி (51) உன் காதல் என் மீது ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


உள்ளத்தைக் கவர்ந்த காதலனே!
உன்னை நானறிவேன்,
காதலைத் தவிர,
யாதொன்று மில்லை,
என்மீது நீ
கொண்டிருப்பது!
பரிதியின்
தங்க ஒளிகள் துள்ளி
நடனமிடும்,
சலசலக்கும் மரத்தின் இலைகளில்!
படகுபோல்
மிதந்து செல்லும்,
வான வெளியின் குறுக்கே,
மோன முகிற் கூட்டம்!
தவழ்ந்திடும்
தென்றலின் சிலுசிலுப்பு,
தனது குளிர்ச்சியைத்
தடவிப் போகும்
நடுவே
என் நெற்றியில்!

பொழுது புலர்ந்ததும்
பொற்சுடர் ஒளிமயம்
கண்ணிமை கட்குத் திரையிடும்,
வெண்ணிற வெள்ளத்தால்!
என் நெஞ்சுக்கு உணர்த்திடும்,
உன் அறிவுரை
அதுவே!
மேலிருந்து வளைகிறது,
கீழ் நோக்கி
உன்முகம்!
விண்ணிலிருந்து பார்க்கின்றன
கீழே
என்னிரு விழிகளை,
நின் விழிகள்!
என்னிதயம் தொடுகின்றது,
பணிந்து சென்று
நின்னிரு
பாதங்களை!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 27, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா