இறைவா நீ இறந்துவிட்டால் ?
கவிஞர் புகாரி

நீ என்பதும் வேறோ இறைவா
நான் உனக்குள் இருப்பு
நான் என்பதும் வேறோ இறைவா
நீ எனக்குள் இருப்பு
உனக்கு என்னைத் தருவதென்பது
உனக்கு உன்னைத் தருவது
எனக்கு நீயும் அருள்வதென்பதும்
உனக்கு நீயே அருள்வது
நானே காணும் சுகங்கள்
அது நீ காணும் சுகங்கள்
நானே எண்ணும் எண்ணம்
அது நீ எண்ணும் எண்ணம்
நான் இறந்தேன் என்றால்
அது யார் இறந்தார் இறைவா
நான் இறந்தேன் என்றால்
அது நீ இறந்தாய் அன்றோ
நான் இறந்தேன் என்றால்
அது நீ இறந்தாய் இல்லை
ஏன் என்கிறேன் வியந்து
ஓ… நீ பிளந்தாய் உண்மை
உன்னைத் தந்தாய் எனக்கு
ஒரு செல்லைக் கிள்ளி உயிராய்
உன்றன் பூரண இருப்பில்
சிறு துகளின் மாற்றம் மரணம்
மரணம் என்னை அழித்தும்
ஒரு துளியும் அழிந்தாய் இல்லை
உருவில் புதினம் கண்டாய்
என் உயிரைப் பிரிதாய்க் கொண்டாய்
உனக்கு அழிவே இல்லை
எனில் எனக்கும் அழிவே இல்லை
மரணம் என்பது மாற்றம்
அட மாற்றம் என்பதே இறைவன்
buhari@gmail.com