This entry is in the series 20010910_Issue

கே ஆர் விஜய்


பதினெட்டு வருட வாழ்வைக் கழித்து
கல்லூரி மண்ணின் வாசம் கண்டேன்.
கூட்டம் கூட்டமாய் இளைஞர்கள்
நெளிந்து வளைந்து பல இளைஞிகள்

எத்தனையோ பேர் இருந்தும்
எனை நீ மட்டும் கண்டாயே–ஏன் ?
பண்புடனே பேசிப்பேசி
பழக்கத்தை உண்டு செய்தாயே–ஏன் ?

பலர் முன் சிரித்து நானும்
உள்ளுள் அழுதேனே
அன்றெல்லாம்
நீ மட்டும் எப்படி கண்டுபிடித்தாய் ?

எனக்குள்ளே உறங்கிக் கிடந்த
திறமைகளை வெளிக் கொணர்ந்த்தாய்.
படிப்பதற்கு துணைபுரிந்தாய்
பண்பாட்டை வளரச்செய்தாய்.

குடும்பத்தை அறிந்து கொண்டாய்
பொறுப்பினை உணரச் செய்தாய்
தவறான வழியில் சென்றால்
தடுத்தே நீயும் நிறுத்திட்டாய்.

பிரச்சினைகள் வந்த போது
சேர்ந்து நின்று தோள் கொடுத்தாய்
அடிக்கடி சண்டை போட்டாய்
பிரிவினை உணரச் செய்தாய்

கலை நிகழ்ச்சி என்று வந்தால்
என்னுடனே சேர்ந்து நீயும்
ஆடச்செய்தாய், பாடச்செய்தாய்
மகிழ்ச்சிக் கடலில் திளைக்கச்செய்தாய்.

ஏன் இதெல்லாம் ?
இன்று வருந்துகிறேன்…
நம் பிரிவினை எண்ணும் போது!
தனிமையிலே இருக்கையிலே
கண்ணீர் கொட்டுதடா!

நண்பா..
நான்கு வருடம் நாம் பழகியது
நானூறு ஆண்டும் நெஞ்சம் மறவாது
இக்கல்லூரி மண்ணை விட்டு
நாம் மறைந்தாலும்…
நம் காலடித் தடங்கள்
என்றும் உயிர் வாழும்.

Series Navigation