This entry is in the series 20071108_Issue

சக்தி சக்திதாசன்


தீபங்களின் ஒளிவீசும் திருநாளிது
தீயவைகளை ஓழித்திடும் நன்னாளிது
உள்ளங்கள் செழித்திடும் பொன்னாளிது
உணர்வுகள் சிலிர்த்திடும் இந்நாளது

விழாக்களின் வகையோடு செல்லும்போது
வினாக்களை வீசி நாம் எமையுணர்வோம்
வறுமையில் வாடிடும் பல இல்லங்கள்
வாருங்கள் அவைகளிலும் ஒளியேற்றுவோம்

எங்கெங்கோ பிறந்திட்டாலும் நாம்
எப்படியோ இத்திருநாளில் இணைகின்றோம்
இவ்வுண்மை நெஞ்சத்தில் நிறுத்தியே
இதயத்தில் அன்புதனை வளர்த்திடுவோம்

உயர்ந்தோர்கள் தாழ்ந்தோர்கள் இல்லாத
உயர்வான சமுதாயம் நாமென்றுணர்வோம்
இல்லாமை என்றோர் கொடிய வியாதி
இல்லாத உலகம் ஒன்றைச் சமைப்போம்

பொதுவான இறையொன்றே உள்ளதென்போம்
போற்றுவோம் அனைத்து மதங்களையும் சமமாக
தீபாவளித் திருநாளில் தீபங்களை ஏற்றி
தியாகத் தீபத்தினை ஏற்றிடுவோம் வாரீர்

பேதங்கள் இல்லை உலகில் எனும் உண்மை
வேதங்கள் என்றும் ஓதவில்லை பிரிவினைகள்
நாமெல்லொரும் மனிதர்களே மறவாதீர்
நானிலத்தில் ஒன்றில்லை மனிதத்தை விஞ்சியே


Series Navigation