தீபாவளித் திருநாளில்
சக்தி சக்திதாசன்

தீபங்களின் ஒளிவீசும் திருநாளிது
தீயவைகளை ஓழித்திடும் நன்னாளிது
உள்ளங்கள் செழித்திடும் பொன்னாளிது
உணர்வுகள் சிலிர்த்திடும் இந்நாளது
விழாக்களின் வகையோடு செல்லும்போது
வினாக்களை வீசி நாம் எமையுணர்வோம்
வறுமையில் வாடிடும் பல இல்லங்கள்
வாருங்கள் அவைகளிலும் ஒளியேற்றுவோம்
எங்கெங்கோ பிறந்திட்டாலும் நாம்
எப்படியோ இத்திருநாளில் இணைகின்றோம்
இவ்வுண்மை நெஞ்சத்தில் நிறுத்தியே
இதயத்தில் அன்புதனை வளர்த்திடுவோம்
உயர்ந்தோர்கள் தாழ்ந்தோர்கள் இல்லாத
உயர்வான சமுதாயம் நாமென்றுணர்வோம்
இல்லாமை என்றோர் கொடிய வியாதி
இல்லாத உலகம் ஒன்றைச் சமைப்போம்
பொதுவான இறையொன்றே உள்ளதென்போம்
போற்றுவோம் அனைத்து மதங்களையும் சமமாக
தீபாவளித் திருநாளில் தீபங்களை ஏற்றி
தியாகத் தீபத்தினை ஏற்றிடுவோம் வாரீர்
பேதங்கள் இல்லை உலகில் எனும் உண்மை
வேதங்கள் என்றும் ஓதவில்லை பிரிவினைகள்
நாமெல்லொரும் மனிதர்களே மறவாதீர்
நானிலத்தில் ஒன்றில்லை மனிதத்தை விஞ்சியே