This entry is in the series 20040610_Issue

சாந்தி மனோகரன்


முட்களை உடலெங்கும்
பதிய வைத்து – மென்மையாய்
பூ முகம் காட்டி சிரிக்கின்ற
செடியைப் பார்த்து
சில நேரம் வியந்ததுண்டு…!

என்னருகில்
தோழியொருத்தி
பூத்திருந்தாள்…!

பூமுகம் மட்டும்
பார்த்திருந்த எனக்கு
அவளென்றும் தனக்குள்ளே
எரிந்துகொண்டிருப்பதை
கவனித்திட தோன்றவில்லை…

நான் கூட பல நேரம்
எரியும் நெருப்பில் எண்ணெயாய்
அவள் மனம் நோகும்படி பேசியதுண்டு…

உண்மையில்…,
இவளை கவனிக்க தொடங்கிய
நாள் முதலாய்-முற்பூஞ்செடியெல்லாம்
அதிசயமாய் தோன்றவில்லை..!

ஆம்..!!
புன்னகை பூக்கள் உதிர்க்கும்
தீந்தழல் செடியொன்று
தனக்குள்ளே எரிந்துகொண்டு – எனக்கும் கூட
நிழல் தருவதாலோ என்னவோ -இவளைவிட
அதிசயமாய் வேறெதுவும்
தோன்றவில்லை..இனியும்
தோன்றிடாது…!!!
—-
-shanthi_yem@yahoo.com

Series Navigation