This entry is in the series 20010505_Issue

திலகபாமா, சிவகாசி


காய்ந்து கிடந்த சருகில்

வீழ்ந்த ஒரு நெருப்பில்

மரங்கள் வாழ்ந்த காடெரியலாம்

மனிதர் வாழும் நாடெரியலாமா

குளத்துக்கு நடுவே

குவிந்திருந்த தாமரையாய்

எங்களூரின் நடுவே கோவில்

தீபாவளி என்பதால் கோவில்

திண்ணை நாடி வராதகூட்டம்

இருந்தும் ஓர் சருகு

இளந்தளிர்களின் கும்மாளத்தை

முளைத்து மூணுஇலைகூட விடாத

முறுவல்களின் நூலகத்தை

மெளனமாய் வாசித்தபடி

வானவேடிக்கையின் எல்லையில்

கொண்டு விட்டது தொல்லையில்

மனிதனாய் பேசியிருந்தால்

நெருப்பை அணைக்கும்

நீராய் இருந்திருக்கும்

சாதியாய் பேசியதில்

நெருப்புச் சகதிக்குள்

ஆக்ஸிஜன் திண்ண நெருப்பாய்

தின்று தீர்த்தது வெறுப்பால்

மருந்துக்கடை வைத்திருந்த

மாரியின் எதிர்காலம்

பெட்டிக் கடை வைத்திருந்த

பெரியவரின்

இறந்த கால இருப்பும்

எதிர்கால வாழ்வும்

கரியாய் போன கடையின்

இருளில் கேள்விக்குறியாய்

வீதிக்கு வீதி விரைத்து நிற்கும்

காவல் விட்டு

மனங்களுக்கு காவல்

மனிதர்களாய் போடுங்கள்

கரிகள்…..

கரிந்து போனகரிகள்

நரிகளாய் ஆன உங்கள் முகங்களில்

எல்லாம் எரிந்தாலும்

எந்த சாதியும்

எரிந்து போகாமல்

Series Navigation