ஒரு வரம்.
எஸ். வைதேஹி.

பரந்த வெளியில் கிடக்கிறேன்
நீ உதிர்த்த
வார்த்தைகளினிடையே.
என் கனவுகளுக்கும்
அவ்வப்போது வரும்
உன் பற்றிய
நினைவுகளுக்கும்
இடையே சிக்கிக் கொண்டிருக்கிறது
நான் சொல்ல வந்த செய்தி.
நதி தாண்டி, மலை தாண்டி
உன்
பின் பயணம்
என் ஆயாச எண்ணங்களின்
முதல் அடி.
நண்ப,
காலம் செல்லுகிறது
உன்னையும் என்னையும்
புறந்தள்ளி.
நான் முன்னே செல்ல
நீ பின் வர
ஒரே ஒரு முறை
வரம் தா எனக்கு!
***