This entry is in the series 20061019_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


அழைப்பின்
மகரந்த வாடையில்
ஏமாறிவிட்டீர்கள்

உமிழ்நீர் இழப்பு
வேறு

அது
அழைப்பல்ல…வலை.

அந்த இடத்திற்கு
உங்கள் மூளையை
அனுப்பிவைத்தது தவறு

எடைபோடத் தெரியாதவர்களால்
எப்படி எடை போடமுடியும்?

‘எடை’ மட்டுமே
தெரிந்தவர்களுக்கு
‘இதயம்’ எப்படித் தெரியும்?

நீளம் அகலம்
வண்ணம்பார்த்து
வருணிக்கத்தெரிந்தவர்களை
ஏலம்போட விடலாம்
எடைபோட விடக்கூடாது

ஈரம் சார்ந்த
வாழ்க்கையில்
ஈயம் இழந்தவர்களுக்கு
இடமே இல்லை

வியர்வையின்
ஒவ்வொரு துளியின்
எழுப்பும் வினாக்களுக்கு
என்ன விடை?
எங்கே விடை?

வியர்வையின் துளி
ஒவ்வொன்றும்
உதிரும்போதே உலரும்
என்பது தப்புக்கணக்கு

உதிரும்போதே அது
உளியானதுதான்
உண்மையான உண்மை

அந்த ஊற்றுக்கண்
துணையுடன்
இன்னும் செதுக்குவேன்
என்னையும் செதுக்குவேன்.

Series Navigation