This entry is in the series 20050415_Issue

வைகைச் செல்வி


என் தாயே!
நீ மாதவம் செய்திருக்கத் தேவையில்லை.
அங்கே மாமரத்தின் கீழே
என் வயதுப் பையன்கள்
நட்சத்திரங்களுடன் பேசுகையில்
இங்கே நானோ,
சிம்னி வெளிச்சத்தில்
அரிசியிலே கல் பொறுக்குகிறேன்
உலை காய்ந்து கொண்டிருக்கிறது.
அந்தக் கூட்டத்தில்,
என் பிரிய நண்பன் இருக்கிறான்.
பகற் பொழுதினிலேயே
அவனுடன் நான் அமர இயலவில்லையே ?
இவ்விரவில்… ?
அவன் ஒரு ஆண்
நான் ஒரு பெண்ணாம்.
என் மனத்தின் ஆண்மை யாருக்குப் புரியும் ?
நேற்று ஒருவன் பாரதியைக் காதலித்தான்
இன்று நான் காதலிக்கிறேன்.
அவனுக்குப் பெயா பாரதிதாசன்.
தாசனுக்குப் பெண்பால் எனில்
தமிழே என்பால் கல்லெறியும்.
ஆதாமுக்குப் பிறகு ஆண்சாதியும் இல்லை.
ஏவாளுக்குப் பிறகு பெண்சாதியும் இல்லை.
இது இங்கே
யாருக்குப் புரியும் ?

—-

Series Navigation