This entry is in the series 20080904_Issue

மெலிஞ்சிமுத்தன்- நடராஜா முரளிதரன்



என் சூழ்விளக்கின் மீது
இருளைக் கொழுத்தி வைத்துவிட்டு
வெளிச்சம் பற்றிய எனது வியாக்கியானத்தை
நீ என்னென்று மறுக்கின்றாய்?

விளக்கின் தேவை குறித்தே
உனக்குள் எத்தனை சஞ்சலங்கள்
எனவே அதன் இருப்பையே மறுதலிப்பதால்தான்
உலகின் இருப்பையே
அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்
என்றே நான் எண்ணுகின்றேன்

என் இருத்தலுக்கும் இல்லாமைக்கும்
இடையில்
விரிந்து கிடக்கும் ஒரு பெருவெளியை
எதைக்கொண்டு நிரப்புவேன்
என் எழுத்தைத் தவிர
என் எழுத்து எழுந்து
உன்வாசல் வரை வரவில்லையா?

யுகம் யுகமாய்
வருவதும் போவதுமாய்
எழுந்தவைகளை
எண்ணிப் பார்த்துக்கொள்
நிலைத்தவைகளைவிட நிலையாமைகளே
வரலாற்றுப் பெருவெளியை
நிறைத்துக் கொண்டிருப்பதை
உணராயோ நீ ?

இல்லாமையின் பெருவெளியில்
தற்செயலாய் விழுந்த
சிறு துளிதான் நான்
என் இருத்தலுக்கான
பிரயத்தனங்கள் எல்லாம்
குமிழிகுமிழியாய் உடைந்து
இல்லாமையை நிரப்புகையில்
நான் என்ன செய்யலாம்
என நினைக்கின்றாய்

குமிழிகளின்
தற்காலிக இருத்தலின்பின்
வெடிப்புக்களும் உடைப்புக்களும்
நிகழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றன
எனவே
இல்லாமை என்ற பெருவெளியில்
வந்து குவிந்த நீயும்
இன்னோர் இல்லாiமாதான்


nmuralitharan@hotmail.com

Series Navigation