பரிபாடலில் முருகன் வரலாறு

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

முனைவர்,சி,சேதுராமன்


முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.` E. Mail: Malar.sethu@gmail.com

எட்டுத்தொகை இலக்கியங்களுள் ‘ஓங்கு பரிபாடல்’ என அடைமொழியால் சிறப்பிக்கப்படும் இலக்கியமாகப் பரிபாடல் விளங்குகிறது, பரிபாடல் என்னும் ஒருவகைப் பாவால் இயன்ற நூலாதலால் இ·து பரிபாடல் எனப் பெயர் பெற்றது. பரிபாடல்பாடிய புலவர்கள் பதின்மூவர். அவற்றிற்கு இசை வகுத்தோர் பதின்மர் ஆவர். செவ்வேளைப் பற்றிய எட்டுப்பாடல்கள் 612 அடிகளைக் கொண்டவையாக அமைந்துள்ளன.

செவ்வேள் பற்றிய பாடல்கள்

செவ்வேளைப் பற்றிய பாடல்களைக் கடுவனிளவெயினனார், ஆசிரியன் நல்லந்துவனார், குன்றம் பூதனார், கேசவனார், நல்லழிசியார், நப்பண்ணனார், நல்லச்சுதனார் போன்ற புலவர்கள் எழுவர் பாடியுள்ளனர். குன்றம் பூதனார் இரு பாடல்களைப் பாடியுள்ளார்(பாடல் 9,18)

கந்தவேளின் பெயர்கள்

முருகன் என்னும் பெயர் பரிபாடல் உள்ளிட்ட எல்லாச் சங்க இலக்கியங்களிலும் பயின்றுவந்துள்ளது. (முருகு.269, அகம்.158, பரி., 5;50, புறம்.,53, ஐங்குறு., 249) ‘விழைவு’ எனப் பொருள்படும். ‘வேள்’ (8:61), என்னும் சொல் அடைமொழி சேர்ந்து நெடுவேள்(3:37) வெல்வேள்(18:36), செவ்வேள்(5:13) எனப் பரிபாடலில் காணப்படுகிறது. கந்தவேளைக் குறிக்கும் செவ்வேள் எனும் பெயர் பரிபாடலில் மட்டும் தான்இடம்பெற்றுள்ளது. அதனால்தான் முருகனைப் பற்றிய பாடல்களைச் ‘செவ்வேள்’ எனும் தலைப்பில் பரிபாடலில் அமைத்தனர் எனலாம்.

கந்தவேளைக் குறிக்கும் பழைய சொல்லான ‘சேயோன்’ என்பதனைத் தொல்காப்பியத்தில் காணலாம். இச்சொல் விகுதியயின்றி, ‘சேய்’ எனப் பரிபாடலில்(6:69, 5:54) வந்துள்ளது. நச்சினார்க்கினியர், ‘செய்யவன்’ என்பதே ‘சேயோன்’ என நீண்டிருக்கவேண்டும் எனக் கருதுவர்.(முருகு. 61, நச்சர்.,உரை), ‘சேஎய்’ என்பது, ‘காஅய் கடவுட்சேய்'(5:13) என, ‘மகன்’ என்ற பொருளிலும் ‘சேஎய்குன்றம்’ (6:69) என, ‘செம்மை’ என்ற பொருளிலும் வந்து வழங்குகின்றது.

‘வேள்’ என்னும் சொல், ‘மன்மதன்’, ‘முருகன்’ இருவருக்கும் பொருவாக இருந்ததால் முறையே ‘கருவேள்'(மன்மதன்), ‘செவ்வேள்'(முருகன்) என்றும் அடைமொழி கொடுத்துக் குறிப்பிட்டனர். இளமையாய் இருத்தலின், ‘குமரன்’ என்றும்(9:82) திருமாலுக்கு மருமகனாய் இருத்தலின், ‘மாஅல்மருகன்'(19:57) முருகனுக்குப் பல பெயர்கள் உண்டு. ‘வெறிகொண்டான்'(9:44) என்றும் முருகன் அழைக்கப்பெற்றார்.

கந்தவேள் பிறப்பு

செவ்வேளைப் பற்றி பாடிய புலவர்களுள் கடுவனிளவெயினனாரே கந்தவேளின் பிறப்பை விரிவாகக் கூறியுள்ளார். திரிபுரத்தை அழலால் எரித்தபின்பு சிவபெருமான் உமையோடு சேர்ந்திருந்தான்.இந்திரன் சிவபெருமானிடத்து ஒரு வரம் பெற்று இச்சேர்க்கையால் தோன்றிய கருவை அழிப்பாயாக என வேண்டினான்.சிவபெருமான் இந்திரனுக்குக் கொடுத்த வரத்தின்படி அக்கருவினைச் சிதைத்தான். சிதைக்கப்பட்டகரு அமரர் சேனைக்குத்தலைவனாகும் என ஞானத்தால் உணர்ந்த தெய்வ முனிவர்கள் எழுவரும் இந்திரனுக்கு ஊறு வாராதென உறுதி கூறி அவனிடமிருந்து அச்சிதைந்த கருவை ஏற்றுச் சென்றனர். அதனை அம்மாதவர் வேள்வியின்கண் இட்டனர். பின்னர் அதனை அந்ததி நீங்கலாக கார்த்திகை மகளிர் அறுவர்க்கும் வழங்கினர். இவ்வறுவரும் அதனை உண்டு சூழுற்றுப் பின் இமயமலையிலுள்ள சரவணப் பொய்கையில் தாமரைப் பூவாகிய பாயலில் குழந்தையை ஈன்றனர். ஈன்ற அப்பொழுதே இந்திரன்இகல்கொண்டு முனிவர்களுக்குத் தான் கொடுத்த வரத்தை மீறி வச்சிரப்படையால் அவற்றை வெட்னொன்.

அவை ஆறு துண்டமாகச் சிதைந்தன. ஆறு துண்டமும் ஆறு குழந்தைகளாகிப் பின் ஒன்றாயின. குழந்தைப் பருவத்திலேயே முருகனிடம் இந்திரம் தோல்வியுற்றதால், முருகனுடைய இவ்வாற்லைக் கண்ட அக்னிதேவன்(அனலன்) தன்மெய்யிற் பரித்துக் கோழியை முருகனுக்குப் பரிசாகக் கொடுத்தான். இந்திரன் மயிலை அளித்தான். எமன் வெள்ளாடு நல்கினான்(5:12, 14:25-26).

முருகனைக் கார்த்திகை மகளிர் உமையம்மை இருவருக்கும் மகனெனப் பரிபாடல் கூறுகிறது(8:127,128) விட்டா¢ன் மனைவியான அருந்ததி, சிவன், முருகன் என்னும் கடவுளரைவிடப் பெருமை வாய்ந்தவள் என்பதை நிறுவவே முருகன் பிறப்புப் பற்றிக் கதைகட்டிவிடப்பட்டுள்ளது என மறைமலையடிகளால் கருதுவர்(மறைமலையடிகளார், தமிழர் மதம், ப.,207)

முருகனின் திருவிளையாடல்

முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் பல பரிபாடலில் காணக்கிடக்கின்றன. பல பரிபாடல்கள் முருகன் சூரபதுமனை மாய்த்ததைக் குறிப்பிட்டுள்ளன. புராணக் கதைகளை விரித்துரைக்கும் கடுவனிளவெயினனார் சூரபதுமன் அழிவினையும் விரிவாகப் பாடியுள்ளார். முருகன் தன் ‘பிணிமுகம்’என்னும் யானை மீதமர்ந்து சூரன்தங்கி வாழும் கடலுக்குச் சென்றார்; அவன்மா மரமாகுவும் மலையாகவும் மாற்ருருக் கொண்டு மறைந்தனன். கந்தவேள் தன்னுடைய வேலை எரிந்து மாவினை அழித்தார். மலையினையும் அழித்தார்; சூரனின் சுற்றத்தாரையும் அழித்தார்(பரி. 5:12-14, 5:7, 9:70, 14:18, 18:4, 19:10-103, 21:8-9)

கிரெளஞ்கசிரி என்ற வடமொழிப் பெயர் பரிபாடலில் இடம்பெறவில்லை. கிரெளஞ்சம் என்பது அன்றிற்பறவையினைக் குறிக்குமாதலால் அம்மலையை பறவையின் பெயர்பெற்ற மலை, “புள்ளொடு பெயா¢ய பொருப்பு”(பரி. 21:9, 5:9) எனத் தமிழுணர்வுடன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கந்தவேள் விண்ணக மடந்தை தேவசேனையை மணந்தது போலவே, மண்ணக மடந்தை வள்ளியையும் மணந்தமையால் விண்ணுலகும் மண்ணுலகும் முருகனால்இன்புற்றன(பரி., 19:171,14:21-22)

கந்தவேள் உருவச் சிறப்பு

கந்தவேளின் உருவ அழகைப் பரிபாடலில் புலவர்கள் பலரும் ஈடுபாட்டுடன் பாடியுள்ளனர்.

மேனி

கடுவனிளவெயினனார் செவ்வேளின் நிறம் கதிரவன் ஒளி ஒக்கும் என்பர். கொழுந்துவிட்டொ¢யும் தீயின் றிநத்தை உவமையாக்குவர் நப்பண்ணனார்(பரி., 5:12, 19:99) இவ்விரு உவமைகள் தவிர அவர் நிறத்துக்கு வேறு உவமைகள் பரிபாடலில் காணப்பெறவில்லை.

தலை, கைகள்

ஆறு தலைகளையும்இளங்கதிர் மண்டிலம் போன்ற முகத்தினையும் உடையவர்கந்தவேள்( பரி., 5:10)

கந்தவேள் தன் பன்னிருகைகளிலும் பன்னிருபடைகளைக் கொண்டுள்ளார்(பரி., 5:63-68) அவர்தம் முந்நான்கு தோளும் முழவினை ஒக்கும் (பரி., 5:11) முருகனது பேரறிவையும், பேராற்றலையும் புலப்படுத்தவே அறுதலைகளையும், பன்னிருகைகளையும் உடையவராகஅவரை உருவகஞ்செய்துள்ளனர் என்பர். (மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் தொகுதி, 2, ப., 487)

மார்பும் அடியும்

மலைபோன்ற ஆற்றலும் அகலமும் கொண்டது செவ்வேளின் மார்பு. அதன்கண் வாளால் வெட்டப்பட்ட வெற்றித் தழும்புகள்நிறைய உள்ளன(பரி., 9:27-28). சந்தனம் முதலிய நறுமணப் புகைகமழ மலர்மாலையும் முத்துமாலையும் கந்தவேள் மார்பினை அணிசெய்கின்றன (பரி.,9:28-29) தன் திருவடியில்தோலாலாகிய செருப்பினைக் கந்தவேள் அணிந்துள்ளான்(பரி., 21:3-7) மிதியடியைப் புனைந்துரைத்தல் நல்லச்சுதனார் பாடல்ஒன்றிலேதான் காணப்படுகின்றது.

அணியும் ஆடையும்

முருகனது ஆடை செந்நிறமானது. பசும் பூணினையும், முத்தாரத்தினையும் அவர் அணிந்துள்ளார்.

மாலை

கடப்பந்தாரும் முத்துமாலையும் அவர்தம் மார்பினுக்கு அழகு செய்கின்றன(பரி., 19:97). கந்தவேளுக்கு உரியது கடம்பு ஆதலின், பெரும்பாலான புலவர்கள் அவரைக் கடப்பந்தார் சூடியவராகவே பாடியுள்ளனர்(பரி., 5:81, 21:10-11)

படைகள், கொடி, ஊர்தி

செவ்வேளைப் பற்றிப் பாடிய புலவர்கள் அனைவரும் முருகனது படைகள், கொடிடூ ஊர்தி பற்றிய சிறப்புகளை அழகுற எடுத்தியம்புகின்றனர்.

கந்தவேளைப் பாடிய புலவரெல்லாம் அவர்தம் வேற்படையினையும், சூரபதுமனை அழித்ததையும் தவறாது குறிப்பிட்டுள்ளனர். வேல் பரிபாடலில், “சுடர்ப் படை (14-18) ஏந்திலை(17-2), எ·கு(9-79) எனப் பலபெயரால் வழங்கப்பெறுகிறது. பலதேவர்கள் வழங்கிய பதினோரு படைகளும் முருகனிடம் இருந்தன(பரி., 5:63-68)

சேவலும் மயிலும் எழுதிய கொடிகளே முருகனுக்குரியன(பரி.,17-48) யானையையும்,மயிலையும் ஊர்தியாக உடையவர் செவ்வேள்(பரி., 19:28, 8-67) கடுவனிளவெயினனாரும், நல்லழிசியாரும் பாடிய பாடல்களால் முருகனுடைய யானை ஊர்தியின் பெயர், ‘பிணிமுகம்’ என்பதனை அறியலாம்(பரி., 5:2, 17:49)

வெறியாட்டு

வெறியாட்டத்தைப் பரிபாடல் விரவாகக் கூறவில்லை. கந்தவேளைப் பாடிப் பரவும் வேலனைப் பற்றிக் கூறும்போது சொல்லளவில், ‘வெறியாட்டம்’ பற்றிய குறிப்பு காணப்படுகிறது (பரி., 5:13-15, 9:44)

பரிபாடலும் முருகாற்றுப்படையும்

பரிபாடலின் முதற்பாடலே திருமாலைப் பற்றியதாதலின் அதற்கெனத் தனிக்கடவுள் வாழ்த்தில்லை. அதுபோன்றே பத்துப்பாட்டின் முதற்பாட்டு முருகனைப் பற்றியதாதலின் அதற்கும் தனியாகக் கடவுள் வாழ்த்தில்லை

பரிபாடல் பாண்டிய நாட்டை மட்டும் சிறப்பித்துக் கூறுகிறது. ஆனால் முருகாற்றுப்படை தமிழகத்திலுள்ள முருகனுடைய ஆறுபடைவீகளையும் பாடிப் புகழ்ந்துள்ளது. முருகாற்றுப்படை பழமுதிர்ச்சோலையை முருகனுக்குரியது என்று விளம்பும். பரிபாடலோ அதனைத் திருமாலுக்குரியதாகக் கூறும்.

முருகனது பிறப்பு அவனது சிறப்புகள் முதலியவற்றை இருநூல்களும் கருத்தொப்புமையுடன் எடுத்தியம்புகின்றன. வெறியாட்டு பற்றிய செய்திகளை முருகாற்றுப்படையில்(முருகு.,218-244) விரிவாகக் காணலாம். முருகாற்றுப்படையை விட பரிபாடலே கந்தவேளினது பிறப்பை விரிவாகக் கூறியுள்ளது. முருகனின் ஊர்திகளுள் ஆடும் ஒன்றென முருகாற்றுப்படை கூறுகிறது(முருகு., 210).

திருமால் ,சிவன், அயன் முதலிய கடவுளர்கள் பரங்குன்றத்திற்கு முருகனை வணங்கச்சென்றனர் என்று பரிபாடல் கூறும். முருகனால் சிறைப்படுத்தப்பட்ட நான்முகனைச் சிறைவீடு செய்யவே சிவன் மால், இந்திரன் முதலிய தேவர்கள் சென்றனர் என்று முருகாற்றுப்படை கூறுகிறது.

முருகாற்றுப்படை மட்டுமே முருகனின் ஆறு தலைகளும், பன்னிருகைகளும் புரியும் பணிகளை விரிவாகக் கூறுகிறது. பரிபாடலுக்குப் பண் வகுக்கப்பட்டுள்ளது. முருகாற்றுப்படைக்குப் பண் வகுக்கப்படவில்லை.

பரிபாடலும் கந்தபுராணமும்

பரிபாடலும் கந்தபுராணமும் முருகனைச் சிவபெருமானின் மகன் எனக் கூறினும் முருகன் பிறந்த கதையைக் கூறுவதில் கந்தபுராணம் பரிபாடலிலிருந்து வேறுபடுகிறது. பிரமனும் தேவர்களும் கைலாயம் சென்று சிவனைக் கண்டு தம்மைச் சூரபதுமனின் கொடுமைகளினின்றும் விடுவிக்க வேண்டுமென வேண்டினர். ஐம்முகமுடைய சிவபெருமான், மேலும் ஒருமுகத்தைப் படைத்துக்கொண்டு தம் ஆறுமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகளை உண்டாக்கினார். பின்னர் தீக்கடவுளையும், வாயுதேவனையும் நோக்கி இப்பொறிகளைக் கங்க¨யிற் கொண்டு சேர்க்குமாற கூறினார். அவர்கள் சேர்க்கவே கங்கை அவற்றைச் சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு அவ்வாறு தீப்பொறியும் ஆறுகுழந்தைகளாக மாறின.

திருமால் உள்ளிட்ட தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க கார்த்திகை மகளிர் அறுவரும் அக்குழந்தைகளை வளர்த்தனர், உமையம்மை சரவணப் பொய்கை சென்று ஆறு குழந்தைகளையும் ஒருசேரத்தழுவியவுடன் அவை ஆறுதலையும் பன்னிருகைகளுமுடைய ஒரு குழந்தையாயின. இதுவே முருகன் பிறப்புப் பற்றிய கந்தபுராணக்கதையாகும்.

நான்முகனைச் சிறைப்படுத்திய குறிப்பு பரிபாடலில் இல்லை. ஆனால் பிரணவப் பொருளை நான்முகன் அறியாததால் முருகன் அவரைச் சிறை வைத்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.

சூரபதுமனைக் கொன்ற வரலாறு பரிபாடலில் காணப்படுவது போன்று கந்தபுராணத்தில் காணப்படவில்லை. முருகனது வேல் சூரனது மார்பை இருகூறாக்கியதெனவும், ஒரு கூறு மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் மாறின என்றும் அவற்றை முருகன் ஊர்தியாகவும், கொடியாகவும் கொண்டான் எனவும் கந்தகபுராணம் கூறுகிறது. இச்செய்தி பரிபாடலுள் வேறாகக் காணப்படுகிறது. கந்தவேளின் ஊர்தியாக ஆடு நாரதர் செய்த வேள்ளியினின்றும் வந்தது எனக் கந்தபுராணம் கூறுகிறது.யமன் ஆட்டினை முருகப்பெருமானுக்குப் பரிசளித்தததாகப் பரிபாடல் கூறுகிறது. க்நதபுராணம் மிகப்பொ¢ய நூலாகும். அது வீரவாகுவின் வரலாறு, சூரபதுமனினன் தம்பி தராசுரன் பற்றிய கதை சூரனினன் பிறப்பு அவன் வேள்ளிவியில்மறைந்தது பின்னர்உடனே தோன்றியது, சுவர்க்கம் ,சத்தியவுலகம், வைகுந்தம் என்னும் உலகங்களுக்குச் சென்றது முருகனுக்கும், சூரனுக்கும் நிகழ்ந்த பெரும் போர் முருகன்,வள்ளி, தேவசேனையாரை மணந்தது முதலியவற்றைக் கற்பனையுடன் விரித்துரைக்கும்.

சங்கஇலக்கியங்களில் மற்ற நூல்களைக் காட்டிலும் பரிபாடலிலேயே கந்தவேளைப் பற்றிய செய்திகள் மிகுதியாகக் காண்ப்படுகின்றன. பரிபாடலில் கந்தவேளைப் பற்றிய செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. பரிபாடலில் கந்தவேள் அனைவருக்கும் அருளும் தெய்வமாகவும், சூரனையழித்த தேவசேனாபதியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பரிபாடலில் பரங்குன்றம் மட்டும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் கூறும் முருகனது பிறப்பு வரலாறு கபரிபாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது.

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.