மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

தாஜ்


பெரியார் தனது சமூகப்பணியில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தக் காலத்தில் தலைவர்கள் பலரை சமூகப்பணி நிமிர்த்தமாகவும், அரசியல் நிமிர்த்தமாகவும் சந்தித்திருக்கிறார். இந்திய தலைவர்கள் மட்டுமல்லாது உலகத் தலைவர்களும் அதில் அடக்கம். அந்த சந்திப்புகள் குறித்த தகவல்களும், செய்திகளும் நமக்கு பதிவுகளாக கிடைக்கவும் கிடைக்கிறது. ஆனால், அந்த சந்திப்பின் உரையாடல்கள், உரையாடல்கள் வடிவத்திலேயே நமக்கு கிடைக்கவில்லை. சில குறிப்பிடத் தகுந்த தலைவர்களுடான சந்திப்பாவது அப்படி கிடைத்திருக்கும் பட்சம் அது வழுவான ஆவனமாகியிருக்கும். செய்தியும், தகவலும் தருகிற நிறைவை விட இப்படியானப் பதிவுகள் தருகிற நிறைவு முழுமையை கொண்டதாக விளங்கும்.

பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்காரும் பலதரம் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். பல நேரம் ஒத்தகருத்துகளோடும், சில நேரம் மாறுபட்ட கருத்துகளோடும் நட்பு நிலையிலேயே உரையாடியிருக்கிறார்கள். குறைந்த பட்சம், இந்த சந்திப்புகளையாவது அப்படி பதிவு செய்திருக்கலாம். ரவிகுமார் போன்ற ‘நவீன அரசியல்வாதி’கள் பெரியாரின் கட்டுரைகளை கவிதைகளாக நினைத்து, கணித்துச் சொல்லும் புது புது அர்த்த வியாக்கியானங்கள் பாதிக்குப்பாதியாவது குறைய வாய்ப்பாகியிருக்கும்! அரசியல் வாதிகளை அரசியல்வாதிகளாகவும், பெரியாரை பெரியாரகவும்தான் நாம் பார்க்கிறோம் என்பது வேறுசெய்தி.

பெரியார் பதிவுகளில் உரையாடல் வடிவம் இல்லாமைப்பற்றி பெரியாரிஸ சகா ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கிற போது, அப் படியொருப் பதிவு இருக்கிறது, அதுவும் முக்கியமான ஒன்றென்றார். யாருடனான சந்திப்பின் பதிவு? யென வினவியபோது, மகாத்மா காந்தியும் பெரியாரும் ஆயிரத்தி தொழாயிரத்தி இருபத்திஏழாம் ஆண்டு பெங்களூரில் சந்தித்த சந்திப்பென்றார். ஆர்வம் தொற்றிக்கொண்ட நிலையில் மேலும் சில தகவல்களையும் அவர் மூலம் அறிந்தேன்.

மகாத்மா காந்தியும் பெரியாரும் சந்தித்த சந்திப்பில் அதிகம் பேசப்பட்டப் பொருள் ‘இந்துமதம்’ என்றும், அந்தப் பேச்சினூடே பிராமணர்களின் நம்பகத் தன்மைக் குறித்து பெரியார் விரிவாகப்பேசியதாகவும், இதுவரை ஒரு பெரியாராலும் ( இந்து மத சீர்திருத்த முனைப்பில் பாடுபட்ட பெரியார்கள்) மதம் சம்பந்தமானத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்றும், அப்படி முயல்பவர்கள் பிராமணர்கள் விட்டு வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் பெரியார் குறிப்பிட, மகாத்மா காந்தி அதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டதாகவுமே அந்த சந்திப்பு முடிந்து போனது என்று கூறியவர் மேலும் ஒரு தகவலையும் அழுந்தக் குறிப்பிட்டார்.

1948 – ஜனவரி 30 – வெள்ளி கிழமை – மாலை ஐந்து மணிக்கு, நாதுராம் விநாயகக் கோட்சே என்கிற ஒரு மராட்டிய பிராமணன், மகாத்மா காந்தி அவர்கள் பிராத்தனை செய்துக் கொண்டிருந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்றான். அதையொட்டி நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா என்று மேலும் சில மராட்டிய பிராமணர்கள் கைது செய்யப்பட்டு தண்டனையும் அடைந்தார்கள். ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கர்,இன்னும் சில பிராமணர்கள் போதிய சாட்சிகள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்கள் என்பதை நாம் அறிய வருகிறபோது, அன்றைய பிராமணர்களை பற்றி மாகாத்மாவிடம் பெரியார் பேசிக்கொண்டிருந்த பேச்சு எத்தனை உண்மையாகிவிட்டது என்பதைதான் அழுத்தக் குறிப்பாக நண்பர் சொன்னார்.

நான் அந்த சந்திப்பின் பதிவுகொண்ட புத்தகத்தை வாசிக்க விரும்பினேன். வள்ளுவர் பதிப்பகத்தார், 1948ல் பிரசுரித்திருந்த ‘இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்’ என்கிற தொகுப்பில் அந்த நேர்காணலின் பதிவு இருக்கிறது என்றும் அது தொகுப்பு தற்போது கிடைக்க வாய்ப்பு குறைவு என்றும் சிலர் கூறினார்கள். ‘பெரியார்’ திரைப்படச் செய்திகள் நம் பத்திரிகைகளில் வெளி வர தொடங்கியபோது,பெரியார் / காந்தியைச் சந்தித்த நிகழ்வை படத்திற்காக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரியவர, திராவிடக் கழகங்கள் வெளியிட்டிருக்கிற பெரியாரின் பேச்சுகளும், எழுத்துகளும் அடங்கிய சில தொகுப்புகளை வாங்கித் தேடலானேன். கிடைத்தது. நண்பர் சொன்னதில் உண்மையில்லாமல் இல்லை. அந்த சந்திப்பின் பதிவும் தேர்ந்ததாகவும் இருந்தது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதிவை கீழே வாசகர்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.

மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு.

பெரியார்: இந்து மதம் ஒழிந்தாக வேண்டும்.

காந்தியார்: ஏன்?

பெரியார்: இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை.

காந்தியார்: இருக்கிறதே!

பெரியார்: இருக்கிறதாகப் பார்ப்பனர்கள் பித்து. அதை மக்கள் மனதில் அப்படி நினைக்கும்படிச் செய்திருக்கிறார்கள்.

காந்தியார்: எல்லா மதங்களும் அப்படித்தாமே?

பெரியார்: அப்படி அல்ல; மற்ற மதங்களுக்குச் சரித்திர சம்பந்தமான ஆதாரங்களும், மதக்காரகள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளக் கூடிய கொள்கைகளும் உண்டு.

காந்தியார்: இந்து மதத்துக்கு அப்படி ஒன்றும் இல்லையா?

பெரியார்: என்ன இருக்கிறது? ஒருவன் பிராமணன், ஒருவன் சூத்திரன், ஒருவன் பஞ்சமன், என்கிற இந்தப் பேதப்பிரிவுத் தன்மை அல்லாமல் வேறு என்ன பொதுக் கொள்கைகள், பொது ஆதாரங்கள், இருக்கின்றன? அதுவும், பிராமணன்
உயர்ந்தவன்; சூத்திரன், பஞ்சமன் தாழ்ந்தவன் என்கிற தன்மை நடப்புத் தவிர வேறு என்ன இருக்கிறது?

காந்தியார்: சரி அந்தக் கொள்கையாவது இருக்கிறதே!

பெரியார்: இருந்தால் நமக்கு இலாபமென்ன? அதனால், பார்ப்பனர் பெரிய சாதி; நீங்களும் நாங்களும் சின்ன சாதி என்பதாக
அல்லவா இருந்துவருகிறது?

காந்தியார்: நீங்கள் சொல்வது தவறு. வருண தர்மத்தில் சின்ன சாதி, பெரிய சாதி என்பது இல்லை.

பெரியார்: இது தாங்கள் வாயால் சொல்லலாம்; காரியத்தில் நடவாது.

காந்தியார்: காரியத்தில் நடத்தலாம்.

பெரியார்: இந்து மதம் உள்ளவரை ஒருவராலும் நடத்த முடியாது.

காந்தியார்: இந்து மதத்தின் மூலம்தான் செய்யலாம்.

பெரியார்: அப்படியானால் பிராமணன், சூத்திரன் என்பதாக உள்ள மத ஆதாரங்கள் என்ன ஆவது?

காந்தியார்: நீங்கள்தான், இந்து மதத்திற்கு ஆதாரங்கள் இல்லை என்கிறீர்களே!

பெரியார்: நான் மதமும் இல்லை; குறிப்பிட்ட ஆதாரமும் இல்லை என்கின்றேன். மதத்தை ஒப்புக்கொண்டால், ஆதாரத்தையும்
ஒப்புக்கொள்ள வேண்டாமா?

காந்தியார்: மதத்தை ஒப்புக்கொண்டு, ஆதாரங்களை நாம் ஏற்படுத்தலாமே!

பெரியார்: அதுதான் முடியாது. மதத்தை ஒப்புக்கொண்டால் அப்புறம் நாம் ஒன்றும் மாற்ற முடியாது.

காந்தியார்: நீங்கள் சொல்வது மற்ற மதங்களுக்குச் சரி; இந்து மதத்துக்கு அது பொருந்தாது. மதத்தை ஒப்புக்கொண்டு, மதத் தின் பேரால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; உங்களை ஆட்சேபிக்க எவனாலும் முடியாது.

பெரியார்: அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? அப்படி என்றால் யார் சம்மதிப்பார்கள்? அதற்கு என்ன ஆதாரம் என்று சொல்ல வேண்டாமா?

காந்தியார்: நீங்கள் சொல்வது எல்லாம் சரி, அதாவது, இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. உண்மைதான். நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்குக் குறிப்பிட்ட கொள்கை இல்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆதலால்தான், நாம் ஒரு இந்து மதம்தான் என்பதை ஒப்புக்கொண்டு, நம் இஷ்டம் போல் அதற்குக் கொள்கை ஏற்படுத்திக் கொள்ளலாம். இன்று இந்த நாட்டில், ஏன் உலகத்திலேயே சொல்கிறேன்… மக்களை நாம் கருதுகிறபடி நல்வழிக்குக் கொண்டு வர வேண்டுமானால், இந்து மதம் ஒன்றினால்தான் முடியும்; மற்ற மதங்களால் முடியாது; ஏனென்றால், மற்ற மதங்களுக்குச் சரித்திர ஆதாரம், கொள்கை ஆதாரம் உண்டு. அவற்றில் கைவைத்தால் கையை வெட்டி விடுவார்கள். கிறிஸ்துநாதர் என்ன சொன்னாரோ, அவர் சொன்னதாகச் சொல்லும் பைபிள் என்ன சொல்கிறதோ, அந்தப்படிதான் கிறிஸ்தவர்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும்.

முகம்மது நபி அவர்கள் என்ன சொன்னாரோ, குரான் என்ன சொல்லுகிறதோ, அதன்படிதான் முஸ்லீம்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும், மாறுபட்டு ஏதாவது ஒரு திருத்தம் சொன்னால், அது மத விரோதமாக ஆகிவிடும். சொல்லுகிறவர் மதத்திற்கு வெளியில் வந்துதான் சொல்ல வேண்டும். உள்ளே இருந்து சொன்னால், ஒழித்து விடுவார்கள் இதுதான் உண்மையான மதம் என்பவைகளின் தன்மை.

ஆனால், இந்து மதம் என்பது இல்லாத மதம் ஆனதால், அந்த மதத்தின் பேரால் யாரும் மகான்களாக ஆகி எதையும் சொல்லலாம். அப்படியே இந்துமதத்தில் ஏற்பட்ட பல பெரியோர்கள், மகான்கள் பலவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், நாமும் அந்த மதத்தை வைத்துக் கொண்டே அநேக சீர்திருத்தங்களை இந்தக் கால மனிதவர்க்கத் தேவைக்கு ஏற்றபடிச் செய்யலாம்.

பெரியார்: மன்னிக்க வேண்டும். அதுதான் முடியாது.

காந்தியார்: ஏன்?

பெரியார்: இந்து மதத்தில் உள்ள சுயநலக்கும்பல் அதற்குச் சற்றும் இடம் கொடுக்காது.

காந்தியார்: ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? ‘இந்து மதத்தில் தீண்டாமை இல்லை’ என்று சொல்லுவதை இந்து மதத்தினர்
ஒப்புக்கொள்ளவில்லையா?

பெரியார்: ஒப்புக்கொள்வது என்பது ஒன்று, ஒப்புக்கொண்டப்படி நடப்பது என்பது வேறு. ஆகையால், இது காரியத்தில்
நடக்காது.

காந்தியார்: நான் காரியத்தில் செய்கிறேன். இந்த 4,5 வருஷங்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள்
உணரவில்லையா?

பெரியார்: உணருகிறேன். அடிப்படையில் மாறவில்லை, தங்களுக்கு உள்ள செல்வாக்கைக் கண்டும், தாங்கள் அவர்களுக்கு
வேண்டியிருக்கிறது என்ற சுயநலத்துக்கு ஆகவும் ஒப்புக்கொண்டதாக நடிக்கிறார்கள். அதைத் தாங்கள் நம்புகிறீர்கள்.

காந்தியார்: (சிரித்துக் கொண்டே) யார் அப்படி நடக்கிறார்கள்?

பெரியார்: பார்ப்பனர்கள் யாவரும்தான்.

காந்தியார்: எல்லாப் பார்ப்பனருமா?

பெரியார்: ஆம், ஏன்? தங்கள்கூட இருக்கும் பார்ப்பனர்கள் எல்லோரும்தான்.

காந்தியார்: அப்படியானால் உங்களுக்கு ஒரு பார்ப்பனிடம்கூட நம்பிக்கை இல்லையா?

பெரியார்: நம்பிக்கை ஏற்படமாட்டேன் என்கிறது.

காந்தியார்: இராஜகோபாலாச்சாரியாரிடம்கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

பெரியார்: அவர் நல்லவர்; உண்மையானவர்; தியாகி; சுயநலமில்லாதவர். ஆனால், இவையெல்லாம் அவர்களது வகுப்பு
நலனுக்கு அவர் உண்மையான தொண்டர், நல்ல தியாகி, அத்தொண்டில் சுயநலமில்லாதவர். ஆனால், என்
வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்துவிடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது.

காந்தியார்: இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால், உலகத்தில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லை
என்பது உங்கள் கருத்தா?

பெரியார்: இருக்கலாமோ என்னமோ? எனக்குத் தென்படவில்லை.

காந்தியார்: அப்படிச் சொல்லாதீர், நான் ஒரு பிராமணனைப் பார்த்திருக்கிறேன். சந்தேகமற நான் இன்னும் அவரை நல்ல
பிராமணன் என்றே கருதுகிறேன். அவர் யார் தெரியுமா? அவர்தான் கோபால கிருஷ்ணகோகலே.

பெரியார்: அப்பாடா! தங்கள் போன்ற மகாத்மாவினுடைய கண்ணுக்கே இப்பெரிய உலகில் ஒரே ஒரு பிராமணன் தென்பட்டு
இருந்தால், எங்களைப் போன்ற சாதாரண பாவிகள் கண்களுக்கு எப்படி உண்மைப் பிராமணன் தென்பட்டிருக்க
முடியும்?

காந்தியார்: (சிரித்துக்கொண்டே) உலகம் எப்போதும் ‘இண்டெலீஜன்சியா'(படித்த கூட்டத்தார்) ஆதிக்கத்தில் இருக்கும். பிராமணர்கள் படித்தவர்கள். அவர்களது எந்தக் காலத்திலும் ஆதிக்கமுள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால், அவர்களைக் குற்றம் சொல்வதில் பயனில்லை, மற்றவர்களும் அந்த நிலைக்கு வரவேண்டும்.

பெரியார்: மற்ற மதங்களில் அப்படி இல்லை. இந்து மதத்தில் மாத்திரம்தான் பார்ப்பனரே யாவரும் இண்டெலிஜன்சியாவாக(படித்தவர்களாக) இருக்கிறார்கள். மற்றவர்கள் அநேகமாக 100க்கு 90க்கும் மேற்பட்ட மக்கள் படிக்காதவர்களாக, ஏமாளிகளாக இருக்கிறார்கள். ஆகவே, ஒரு சமுதாயத்தில் ஒரு சாதி மாத்திரமே ‘இண்டெலிஜன்சியா’வாக ஆதிக்கக்காரர்களாக இருக்கமுடியும் என்றால், அந்த மதம், அந்த ஜாதி தவிர்த்த மற்ற சாதியருக்குக் கேடானதல்லவா? ஆதலால்தான், நான் அந்த மதம் பொய்மதம் என்பதோடு, அந்த மதம் மற்றவர்களுக்குக் கேடானது; ஆதலால் ஒழிய வேண்டும் என்கிறேன்.

காந்தியார்: உங்கள் கருத்து என்ன? இந்துமதம் ஒழிய வேண்டும்; பிராமணர்கள் ஒழிய வேண்டும் என்பதாக நான் கருதலாமா?

பெரியார்: இந்துமதம், அதாவது இல்லாத பொய்யான இந்துமதம் ஒழிந்தால்,பிராமணன் இருக்கமாட்டான்.இந்துமதம் இருந்தால்,
பிராமணன் இருக்கிறான். நானும் தங்களும் சூத்திரர்களாக இருக்கிறோம். எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள்
கையில் இருக்கிறது.

காந்தியார்: அப்படி அல்ல நான் இப்பொழுது சொல்லுவதைப் பிராமணர்கள் கேட்கவில்லையா? இந்தச் சமயத்திலேயே நாம்
யாவர்களும் சேர்ந்து நீங்கள் கருதுகிற குறைபாடுகளை இந்து மதத்தின் பேராலேயே நீக்கி விடலாமல்லவா?

பெரியார்: தாங்களால் அது முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. முடிந்தாலுங்கூடத் தங்களுக்குப் பிறகு மற்றொரு
மகான் தோன்றி, முன்பு இருந்து வருவதை இப்போது தாங்கள் மாற்றுவதுபோல், இன்று தாங்கள் செய்ததை அந்த
இன்னொரு மகான் மாற்றிவிடுவார்.

காந்தியார்: எப்படி மாற்றக்கூடும்?

பெரியார்: தாங்கள்தான் இந்துமதத்தின் பேரால் எதையும் சொல்லி மக்களைநடக்கச் செய்யலாம் என்று சொன்னீர்களே! அதே
போல் நாளைக்கு வரப்போகும் மகானும் இந்துமதத்தின் பேரால் எதையும் செய்யலாமல்லவா?

காந்தியார்: இனிவரும் காலத்தில் அந்தப்படி மாற்ற எவராலும் சுலபத்தில் முடியாது.

பெரியார்: நான் சொல்லுகிறேன், தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக்கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமாகிறது என்று கண்டால், உடனே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

இதுவரை ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப் பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டு வைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

காந்தியார்: உங்கள் மனதில் பிராமணர் மீது ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதுவே உங்களுக்கு முன்னணியில் நிற்கிறது. இது விஷயமாய் இவ்வளவு நேரம் நாமிருவரும் பேசியதில் இதுவரை நாம் எவ்வித ஒற்றுமை முடிவுக்கும் வரவில்லை என்பதாக நான் நினைக்கிறேன். ஆனாலும், இனியும் 2,3 தடவை சந்திப்போம். பிறகு நான் என்ன செய்யலாம் என்பதைப்பற்றிச் சிந்திக்கலாம் – என்று சொல்லிக்கொண்டு படுக்கையில் இருந்தபடியே ஒரு கையால் தன் தலையை உருட்டித் தடவினார்.

******
நன்றி: பெரியார் களஞ்சியம்-4
தட்டச்சு/வடிவம்: தாஜ்
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்