கனடாவில் ‘உனையே மயல் கொண்டு’…..

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

ஊர்க்குரீஇ



கடந்த சனிக்கிழமை (29.12.2007) அன்று ஸ்கார்பரோ நகர மண்டபத்தில் மருத்துவர் நடேசனின் ‘உனையே மயல் கொண்டு’ நாவலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. வாசகர்கள், எழுத்தாளர்களெனக் கனேடியத் தமிழ் கலை,இலக்கியத் துறைகளில் நன்கு அறியப்பட்ட பலரைக் காண முடிந்தது. ‘காலம்’ செல்வம், அதிபர் பொ.கனகசபாபதி, எழுத்தாளர் த.சிவபாலு, எழுத்தாளர் நவம், பொறியியலாளர் ஜானகி பாலகிருஷ்ணன், எழுத்தாளரும் , குறுந்திரைப்படத் தயாரிப்பாளருமான சுமதி ரூபன், எழுத்தாளர் ‘பூரணி என்.கே.மகாலிங்கம், வ.ந.கிரிதரன், ஆஸ்திரேலியாவிலிருந்து எழுத்தாளர் லெ.முருகபூபதி, எழுத்தாளர் ‘தாயகம்’ ஜோர்ஜ். குருஷேவ், சட்டத்தரணி (இலங்கை) சிவகுருநாதன், கவிஞரும் , நாடகாசிரியருமான பா.அ. ஜயகரன், நடிகரும் , புரவலருமான பாபு…. இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம். நிகழ்வுக்கு எழுத்தாளர் ‘பூரணி’ மகாலிங்கம் தலைமை வகிக்க, நூல் ஆய்வாளர்களாக ஜயகரன், சுமதி ரூபன், முருகபூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகாலிங்கம் தனது தலைமையுரையில் நடேசன் அவரது அரசியல், இலக்கியப் பின்னணி பற்றிய சிறியதொரு அறிமுகத்தினை ஆற்றினார். அதிலவர் 1983 கலவரத்தைத் தொடர்ந்து நடேசன் அவர்கள் தமிழகத்தில் ஈழத்து அகதிகளுக்காக ஆற்றிய பணிகளைப் பற்றிக் குறிப்பிட்டார். நடேசனது படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் ‘உனையே மயல்’ கூறும் பொருளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அத்துடன் அதிலவரும் பெண் பாத்திரங்கள் அனைவரும் தாமாகவே முடிவெடுக்கும் வல்லமை கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டினார். நாவலின் நாயகன் மிகவும் பலகீனமானவனென்றும், சுய முடிவெடுக்கும் திறனற்ற படித்த யாழ்ப்பாணத்து வாலிபர்களின் பிரதிநிதியென்றும் சுட்டிக் காட்டிய மகாலிங்கம் நாவல் முழுவதும் அவனது பாத்திரம் எந்தவித வளர்ச்சியுமற்று தேங்கிக் கிடப்பதையொரு குறைபாடாக எடுத்துரைத்தார். மேலும் நாவலில் பெண் பாத்திரங்களில் ஜூலியா என்னும் பாத்திரம் மட்டுமே முழுமையாகப் படைக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் எதிர்காலத்தில் நடேசன் மேலும் நல்ல படைப்புகளைத் தருவாரென்ற நம்பிக்கையினையும் வெளியிட்டார்.

அடுத்துப் பேசிய கவிஞர் ஜயகரன் தனதுரையில் நடேசனின் முதலாவது நாவலான ‘வண்ணாத்திக்குளம்’ படித்துவிட்டு, அதில்வரும் சிங்களப் பெண்ண மணந்த நாயகன் நடேசன் தானாவென்று அவரது தம்பியான ச்பேசனிடம் கேட்டபோது அவர் பல்கலைக்கழக்க்
காலகட்டத்திலேயே தமிழ்ப் பெண்ணொருத்தியைக் காதலித்து மணந்தவரென்ற விபரத்தைக் கேட்டுத் தாம் ஆச்சரியமுற்றதை நினைவு கூர்ந்தார். அவ்விதமே இந்த நாவலையும் வாசித்ததும் இது நடேசனின் சொந்தக் கதையோவென்று தாம் ஐயமுற்றதாகக் குறிப்பிட்டார். தனதுரையினைச் சுருக்கமாகவே முடித்துக் கொண்ட ஜயகரன் , பின்னர் கலந்துரையாடலின்போது மேலதிகக் கேள்விகள் கேடகபபடும் பட்சத்தில் பதிலிறுப்பதாகக் குறிப்பிட்டார்.

அடுத்துப் பேசிய சுமதி ரூபன் தனதுரையில் நாவலின் முக்கிய குறைபாடாக நாவலின் நடையே இருந்ததாக குறிப்பிட்டார். அவரது
முக்கியமான குற்றச்சாட்டு.. நாவலின் சுருக்கமான நடை பாத்திரங்களின் உள்ளத்துணர்வுகளை வாசகரைப் பாதிக்குமளவில்
வெளிப்படுத்தவில்லையென்பதுதான். உளவியல் நோயால் பாதிக்கப்பட்ட நாயகியின் கடந்தகால இனக்கலவரப் பாதிப்பு நிகழ்வுகளெல்லாம் வெறும் தட்டையாகச் செயதிகளாக மட்டுமே தென்படுகின்றனவென்பதைச் சுட்டிக் காட்டிய அவர் தானொருமுறை நூலாசிரியருடன் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பற்றிக் கதைத்ததையும் நினைவு கூர்ந்தார். அவ்வுரையாடலின்போது நடேசன் அவர்கள் விஷ்ணுபுரத்தின் விரிந்த நடையினைக் குறை கூறியதைக் குறிப்பிட்ட சுமதி ரூபன் நாவலின் பாத்திரங்களை விபரிப்பதற்கு, உணர்வதற்கு அவ்விதம் நாவல் விரிந்திருப்பதவசியமென்பது தன் கருத்தென்றார். அத்துடன் அண்மையில் தான் வாசித்த ஆப்கான் பற்றிய நாவலொன்றினைக் குறிப்பிட்ட அவர் அந்நாவலைப் படித்ததும் தன்னால் அதில் வரும் கதாபாத்திரத்தின் உணர்வுகளையெல்லாம் விரிவாக அறிய முடிந்ததாகவும், அதுபோல் அண்மையில் வாசித்த டால்ஸ்டாயின் பரந்த நாவலான ‘போரும் அமைதியும்’ நாவலில் டால்ஸ்டாய் மிகவும் விரிந்த அளவில் பாத்திரங்களை விபரித்திருப்பதால் தன்னால் அந்தப் பாத்திரங்களைப் பற்றியெல்லாம் ஆழமாக அறிய முடிந்ததாகவும் குறிப்பிட்டார்; அத்துடன் அதுபோல் நடேசனும் நடையில் கவனம் செலுத்த வேண்டுமென்பதை எடுத்துரைத்தார். ஆயினும் நாவல் கூறும் பொருளில் சிறந்ததென்பதை பலதடவைகள் வலியுறுத்தினார். அத்துடன் நாவலின் குறைபாடுகளுக்கான காரணங்கலிற்கான பதில்களையும் எதிர்பார்த்து நூலாசிரியரிடம் வினாத்தொடுத்தார். இவ்விதம அவர் காமத்தை மையமாக வைத்து வெளியான மேற்படி நாவலைப் பரந்த அளவில் ஆன்மிகத்தளத்தில் இயங்குமொரு நாவலான ‘விஷ்ணுபுரம்’ மற்றும் ‘போரும் அமைதியும்’ போன்ற நாவல்களுடன் ஒப்பிடுவது சரியாகப் படவில்லை. அவ்விதம் ஒப்பிடுவாரானால் ‘விஷ்ணுபுரத்தைப்’ பரந்த அளவில் படைத்த ஜெயமோகன் ஏன் காமத்தை மையமாக வைத்துப் படைத்த சிறு நாவலான ‘கன்னியாகுமரியை’ வார்த்தைகளைச் சுருக்கிப் படைத்தாரென்று கேட்க வேண்டி வந்துவிடும். உண்மையில் அவர் காமத்தை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட’கன்னியாகுமரியை’ நடேசனின் ‘உனையே மயல் கொண்டு’ நாவலுடன் ஒப்பிட்டு வேறொரு கோணத்தில் விவாதத்தைக் கொண்டு சென்றிருந்தாரென்றால் நன்றாயிருந்திருக்கும்.

இதன்பின்னர் பேசிய எழுத்தாளர் முருகபூபதி மேற்படி கேள்விகளுக்கெல்லாம் பதிலிறுப்பதுபோல் நூலாசிரியரின் எழுத்துச் சிறப்பை எடுத்துரைத்தார். அத்துடன் நடேசனின் ‘வண்ணாத்திக் குளம்’ வாசித்த தமிழகத் திரைப்பட இயக்குநர் மகேந்திரன் அதனால் கவரப்பட்டு அதற்கான திரைக்கதையினை எழுதி அனுப்பியிருந்த விபரத்தை எடுத்துரைத்தார். மேலும் வண்ணாத்திக்குளம்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் மனதைப் பறிகொடுத்த மறைந்த பேராசிரியர் எலீசரின் துணைவியார் நாவலின் நூறு பிரதிகளை வாங்கித் த்னது ஆங்கில நண்பர்களுக்கு விற்றுதவிய விபரததினையும் பதிவு செய்தார்.

அதன்பின்னர் பதிலுரையாற்றிய நூலாசியர் நடேசன் கேட்கப்பட்ட கேளவிகளுக்கெல்லாம் பதிலளிக்க முற்பட்டது தேவையற்றதொரு விடயம். உதாரணமாகத் தன் வேலைப்பளு காரணமாக அவ்விதமொரு விரிவான நாவலை எழுத முடியாதென்றும் குறிப்பிட்டார். இதற்குப் பதிலாக அவ்விதம் நாவலானது சுருக்கமாக அமைந்திருப்பதும் ஒரு காரணத்துடன் தானென்று ஆணித்தரமாக ஆசிரியர் எடுத்துரைத்தாரென்றால் அது ஆசிரியரின் எழுத்துச் சிறப்புக்கொரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும். நூல் வெளியீட்டு விழாவொன்றில் இவ்விதம் தன் பதிலினை அளிப்பதானது விழாவுக்கு நூலை வாங்க வந்திருக்கும் வாசகர்களின் வாசிக்கும் சுதந்திரத்தில் தலையிடுவதாக அமைந்து விடுகின்றது. இதற்குப் பதிலாக ஆசிரியர் தனதுரையில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி கூறுவதுடன் நின்றிருக்கலாம். அத்துடன் இதுபோல் இந்நூலினை வாசிக்கும் அனைவரிடமிருந்தும் மேலும் கருத்துகளைக் கேட்க ஆவலாயிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கலாம்.

கலந்துரையாடலின்போது ‘காலம்’ செலவம் சுமதி ரூபன் ஆசிரியரிடம் கேள்விகளைக் கேட்பதற்குப் பதிலாக அவற்றைத் தனது கருத்துகளாகக் கூறியிருந்திருக்கலாமென்று குறிப்பிட்டார். ஜானகி பாலகிருஷ்ணன் வெளியிட்டு விழாக்களையும் விமர்சனக் கூட்டங்களையும் குழப்பாத வகையில் எதிர்காலத்தில் இத்தகைய அமர்வுகள் திட்டமிட்டு நடத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இன்னுமொரு அன்பரொருவர் கனடாத் தமிழர்கள் அவருக்கு எந்தவகையில் உதவமுடியுமென அவர் எதிர்பார்க்கிறரென்பதை அறிய ஆவலாயிருப்பதாகக் குறிப்பிட்டார். இவ்விதமாக நடந்த இலக்கிய விழாவானது குறுகியதாக அமைந்திருந்தாலும் காத்திரமானதாகவே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

– ஊர்க்குரீஇ-

Series Navigation

ஊர்க்குரீஇ

ஊர்க்குரீஇ