கடித இலக்கியம் – 27 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

வே. சபாநாயகம்


(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் – 27

நாகராஜம்பட்டி,
1-6-81

அன்புள்ள சபா அவர்களுக்கு,

வணக்கம்.

ஏழெட்டு இன்லாண்டு கவர்களை ஏக காலத்தில் எழுதும் காரியங்களில் இருக்கிறேன்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் நானும் 13-5-81 முதல் 24-5-81 வரை வேலூர் சிறையில் இருந்தேன். முதல்முதலாக வாழ்வில் முகூர்த்தப் பந்தலுக்குள் நுழைவது போல் மங்கல உணர்ச்சிகளோடு வலது காலை முதலில் எடுத்து வைத்துச் சிறைக்குள் நுழைந்தேன். ஆலமரங்களினடியிலும் அரசமரங்களினடியிலும் ஒரு ரிஷி போன்றிருந்தேன். ஆத்மாவை எவரும் சிறைப்படுத்த முடியாது என்று அறிந்தேன். இரவுகள் தோறும் பாரதிக்குப் பல்லாண்டு பாடிக் கொண்டிருந் தேன். நள்ளிராக் கடந்த நிலவொளியில் மதிற் சுவரோரம் குழுக்களிடையே அமர்ந்து நான் கற்ற வேதங்களை ஓதிக்கொண்டிருந்தேன். மனிதமன ஆழங்களை முக்குளித்துப் பார்ப்பது போல் அனுபங்கள் அடைந்தேன். நீங்களும் நானறிந்த நண்பர்கள் எல்லோருமே சேர்ந்திருப்பது போல் உணர்ந்தேன். நாங்கள் நுழைந்த போது குச்சிகளாக நின்றிருந்த அரசமரம், மெள்ளமெள்ளத் துளிராகி இலை விரித்து நிழல் பரப்பிய கோலத்தை அனுதினமும் கவனித்தேன். சிறை சம்பந்தமாகப் பின்னால் உங்களுக்கு ஏராளம் எழுதுவேன்…………….

சிறையிலும் ஒரு நட்புச் சிகாமணி கிடைத்தார். ருத்ராச்சாரி. பாட்டனார் பெயர் வேதாந்தி பொன்னாச்சாரி. ஆசிரியர். Blacksmith. கிராமத்துத் தேவை களுக்கு வீட்டின் முன்னறை உலைக்கூடத்தில் இரும்படித்துத் தருகிறவர். உள்ளங்கைகளில் அந்தத் தழுபுகள் கொண்டவர். “தோழர்”.

வரட்சிக் கொடுமையிலும், சிறை உல்லாசத்திலும், இவற்றுக் கிடையே பட்ட எண்ணிரண்டாயிரம் ஈனக் கவலைகளிலும் விடுமுறை சென்றது. மாட்டுக் கவலை வேறு.

தங்கள் விருந்தினராக அங்கு வருகிற பாக்கியம், வாழ்வின் அரிய தனங்களில் ஒன்று, அதை வெகு எளிதிலா தீர்த்து விடுவது என்கிற தெவிட்டாத வியப்புக்கு ஆட்பட்டுள்ளோம். தங்களையெல்லாம் அழைக்கும் பாக்கியத்துக்கும் பருவம் பார்த்து ஏமாறுகிறோம். இவ்வாறு நடக்கிறது வாழ்க்கை.

சோகமுற்றுள்ளேன். ஆனால் சோர்ந்திலேன். எனது களத்தில் எனது உக்கிரத்தைக் காட்டுவேன்.

அந்தோன் மக்காரென்கோ கிடைத்தாரா எழுதுங்கள்.

அஞ்சுதல் வேண்டா. குழம்புதல் வேண்டா. திகைத்தல் வேண்டா. சிதையா நெஞ்சு கொள்ளுங்கள்.
‘செய்தலுன் கடனே – அறஞ்
செய்தலுன் கடனே – அதில்
எய்துறும் விளைவினில்
எண்ணம் வைக்காதே’ –
என்றான் பார்த்தனுக்குச் சாரதி.

நமது செல்வங்கள் நம்மினும் நிறை வாழ்வு வாழும்! இதைச் சாதனை செய்க பராசக்தி – அவள் கடைக் கண்ணுக்குப் பெயர் சோஷலிஸம்.

– பி.ச.குப்புசாமி.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்