திருப்பெரும்புலியூர் தலப்பெருமை

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

கோ. தில்லை கோவிந்தராஜன்


தென்னாடு உடைய சிவனே போற்றி… என்பது ஆன்றோர் வாக்கு. அத்தென்னாட்டுத் திருத்தலங்கள் பல பாடல் பெற்றவை. அவைகளுள் சில காவிரியாற்றின் வடகரையிலும், தென்கரையிலுமாக காணப்படுகின்றன.

காவிரியாற்றின் வடகரையிலும் கொள்ளிடத்தின் தென்கரையிலும் வயல்கள் சூழ் இடத்தில்தான் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற இப்பெரும்புலியூர் அமைந்துள்ளது. இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது.

தலச்சிறப்புகள்:

புலிக்கால் முனிவரால் பூசிக்கப் பெற்றமையால் இப்பெயர் பெற்றது. (சிதம்பரத்திற்கும், பெரும்புலியூர், புலியூர் பெரும்பற்றப் புலியூர் என்ற பெயர்கள் உண்டு) எத்துன்பங்கள் உள்ளவரும் இத்தலத்தின் இறைவனை வணங்கினால் அத்துன்பம் நீங்கும்.

பிறைவளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை
நறை வளரும் பொழிற்காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
மறை வளருந் தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சினராகி நீடுலகத்திருப்பாரே

– தேவாரம் திருப்பெரும்புலியூர் பாடல் II

கனமஞ்சினமால் விடையான் விரும்புந்
கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்

-தேவாரம் பொது-திரு§க்ஷத்திரகோவை பாடல் – 6

பெண்ணையருட்டுறைப தன்பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்

– தேவாரம் பொது நிருநாவுக்கரசர் பாடல் எண்-6.

§க்ஷத்திரக் கோவைத் திருத்தாண்டகத்திலும் சிறப்பித்துள்ளனர்.

கட்டிட அமைப்பு:

ராஜகோபுரம், முகமண்டபம், மகாமண்டபம், கருவறை என அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் பத்ம பீடத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது. மகா மண்டபத்தில் வடக்கு, தெற்காக வாயில்கள் அமைந்துள்ளன.

ராஜகோபுரம்:

இக்கோபுரத்தில் தென்புறத்தில் விநாயகர், சோமசுந்தரர் திருக்கல்யாணம், வடபுறமாக வள்ளி, முருகன், தெய்வானை காலசம்ஹார சுதைச் சிற்பக் காட்சிகள் அமைந்துள்ளன. இச்சிற்பங்களுக்கு மேல் வரிசையில் மடாதிபதிகளின் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. இச்சுதை சிற்பங்கள் யாவும் கருங்கல், நிலை கோபுரத்தின் மேல் காணப்படுகின்றன.

முகமண்டபச் சிற்பங்கள்:

சூரியன், சந்திரன், சப்தமாதர்கள், உமாமகேஸ்வரன் போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நவக்கிரகங்கள்:

பிற்காலப் பாணியில் அமைந்துள்ளன.

துவாரபாலகர்:

சுதையில் செய்யப்பட்டுள்ளது.

மூலவர்: இறைவர்:
வியாக்கிரபுரீஸ்வரர்

அம்பாள்:
சௌந்தர நாயகி

காசிவிஸ்வநாதர், விசாலாட்சி மகாமண்டபத்தின் தென்புறாத்தில் உள்ளனர்.

பிரகாரத்தின் வெளியில் கணபதி கோயில், முருகன் கோயில், தட்சிணாமூர்த்தி போன்றவை காணப்படுகின்றன. கருவறையின் நேர்புறம் அமைந்துள்ள கோஷ்டத்தில்

மண்ணுமோர் பாகமுடையார் மாலுமோர் பாகமுடையார்
விண்ணுமோர் பாகமுடையார் வேதமுடைய விமலர்
கண்ணுமோர் பாகமுடையார் கங்கைசடையிற் கரந்தார்
பொண்ணுமோர் பாகமுடையார் பெரும்புலியூர் பிரியாரே

– தேவாரம் திருப்பெரும்புலியூர் பாடல் 1

எனத் தம் திருவாக்கினால் ‘அர்த்தநாரிஸ்வரர்’ பெருமைகளை விளக்குகின்றார்.

திருஞானசம்பந்தர்:

ஆளுடைய பிள்ளையார் நின்ற திருக்கோலத்தில் இருகைகளிலும் பொற்றாளம் வைத்துள்ளார்.

மாணிக்கவாசகர்:

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் – ஆன்றோர் மொழி.

“வாவூரன்ப பாவெனப் படுவதுதன் பாட்டு” என்பார் சிவப்பிரகாச சுவாமிகள் வாதபுரத்தில் சம்புபாதகிருதர், சிவஞானவதிக்கும் (அமாத்திய அந்தணர் குடியில்) திருமகனாக அவதரித்தார்.
பாண்டிய மன்னன் அரிமர்த்தனன் அவையில் முதலமைச்சராக விளங்கினார். இவருக்குத் தென்னவன் பிரமராயர், வாதவூர் அடிகள், வாதவூர்ச் சிவபாத்தியன், ஆளுடைய நம்பி, அடிகள் எனப் பிற பெயர்கள் வழங்கின.

இவருடைய பெருமைகளை திரூத்திரகோசமங்கைப் புராணம்’ திருவாதவூரர் புராணம்’, ‘திருவாலவாயுபுடையார் திருவிளையாடல் புராணம்’ ‘பரஞ்சோதிமுனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம்’ ‘திருப்பெருந்துறை புராணம்’ மூலம் அறிய முடிகிறது. திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் மாணிக்கவாசகர் மூலவர்கோயில் உள்ளது. அத்திருத்தலத்தில் சோமாஸ் கந்தர் ஸ்தானத்தில் விளங்குகிறார்.

இப்பெரும்புலியூரில் மாணிக்கவாசகர் சிற்பத்தின் வயது முதிர்ந்த திருக்கோலத்தில் தலையில் உருத்திராட்ச மாலையுடனும், வலது கை சின் முத்திரையுடனும், இடது கை ஓலைச்சுவடியும் தாங்கிய நிலையிலும் உள்ளன. மார்பினில் முப்புரி நூல் காணப்படுகிறது.

இச்சிற்பத்தின் காலம் 12 நூற்றாண்டைச் சேர்ந்தது. பிற இடங்களில் காணப்படும் சிற்பங்கள் யாவும் நின்ற கோலத்தில் அமைந்துள்ளன. இத்தலத்தில் மட்டும் அமர்ந்த கோலத்தில் காணக்கிடைப்பது சிறப்புடையதாகும்.

கல்வெட்டுகள்:

தில்லை ஸ்தானத்தில் (திருநெய் தானத்தில்) காணப்படும் தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் கல்வெட்டில் வெரும்புலியூர் குறிப்பிடப்படுகிறது. அதே போல் கீழப்பழுவூர் திருவையாறு போன்ற ஊர்களில் காணும் கல்வெட்டுகளில் இவ்வூர் சுட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலின் மகா மண்டபத்தின் வடக்கு வாயிலின் இரண்டு நிலைகளிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அக்கல்வெட்டில் கோப்பரகேசரி ராஜேந்திர சோழ தேவதற்கு ஆட்சி ஆண்டு 26 எனவும் ராஜேந்திர சோழ தேவற் (மனைவியார்) நம்பிராட்டியார் பஞ்சவன் மகாதேவியார் குறிக்கப்படுகிறார்.

உழவாரப்பணி:

இக்கோயிலில் திருவையாறு அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் நாட்டுநலப் பணி மூலம், தலைமையாசிரியர் என்.செல்வராஜ் அவர்கள் தலைமையில் உழவாரப்பணி செய்துள்ளனர்.

இத்திருத்தலத்தின் பதிகங்கள் 1949ஆம் ஆண்டு தருமபுர ஆதினத்தின் வரிசை எண் 185 ஆக வெளியிடப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு:

1. 10.1.2005 தினகரனில் “திருவையாறு அருகே கோயிலில் அமர்ந்த நிலையில் உள்ல மாணிக்கவாசகர் அபூர்வ சிலை” எனவும், 11.1.2005 தினத்தந்தி நாளிதழில் “மாணிக்கவாசகரின் அரிய சிற்பம்” என்ற தலைப்பிலும், 3.2.2005 தினமலர் நாளிதழில் “தஞ்சை அருகே உட்கார்ந்த நிலையில் மாணிக்கவாசகர்” என்ற தலைப்பிலும் செய்தி வெளிவந்துள்ளது.

thillai.g@gmail.com

Series Navigation

கோ. தில்லை கோவிந்தராஜன்

கோ. தில்லை கோவிந்தராஜன்