வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

வெங்கட்ரமணன்


கடந்த ஜுன் 10ம் தேதியன்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனுக்கு இயல்விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் பிரிவும், டொராண்டோவின் ‘இலக்கியத் தோட்டம் ‘ அமைப்பும் இணைந்து வழங்கும் இந்த விருதை அதன் மூன்றாவது வருடத்தில் வெங்கட் சாமிநாதன் பெறுகிறார். தமிழ் இலக்கியத்திற்கு ஆயுட்கால பங்களிப்புக்காக வழங்கப்படும் இந்த விருதை முதல் வருடத்தில் பெற்றவர் எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் சுந்தர ராமசாமி. இவரைத் தொடர்ந்து இலங்கை எழுத்தாளர், விமர்கர் ஏ.கணேஷ் விருது பெற்றார். இவர்களில் அடுத்தபடியாக வந்திருப்பவர் வெங்கட் சாமிநாதன். அறுபதுகளில் தொடங்கி தன்னுடைய நேர்மையான, அவதானமிக்க விமர்சனத்தால் தமிழ் இலக்கியத்தின் போக்கை குறிப்பிடத்தக்க அளவில் பாதித்திருப்பவர் வெ.சா.

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பாரம்பரிய மிக்க ட்ரினிடி கல்லூரி வளாகத்தில் சீலீ அரங்கில் நடைபெற்ற மாலை நேர விழாவிற்கு வந்திருந்தவர்களை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை பேராசிரியர் செல்வா கனகநாயகம் வரவேற்றார். தொடர்ந்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இலக்கியத் தோட்டத்தின் பணிகளைப்பற்றிய அறிமுகம் தந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு இலக்கிய உரைகளை ஒழுங்கமைத்தல், தமிழ் புத்தகக் கண்காட்சிகளுக்கு உதவி வழங்கல், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் இலக்கியங்களை மொழிபெயர்த்தல், காலம் என்ற காலாண்டு இலக்கியப் பத்திரிக்கைக்கு உதவியளித்தல், டொராண்டோ மாநகரப் பொது நூலகங்களுக்குப் புத்தகங்களை வழங்குதல், மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்தல் போன்ற இலக்குகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நாளதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொது நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன. ஈழத்து எழுத்தாளர்களின் கதைகள் கவிதைகள் அடங்கிய தொகுதி பேரா. செல்வா கனகநாயகத்தால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டிருக்கிறது. (Lutesong and Lament – An anthology of Tamil writing from Srilanka – edited by Chelva Kanaganayakam. Published by TSAR). கனடா எழுத்தாளர் மகாலிங்கம் பன்னாட்டுச் சிறுகதைகளை ஆங்கில வாயிலாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் (இரவில் நான் உன் குதிரை, சில தேசங்களின் சில சிறுகதைகள், தமிழில்: மகாலிங்கம், காலச்சுவடு, 2004) இவைதவிர தமிழிலக்கியத்திற்கு ஆயுட்கால அரும்பணியாற்றிய எழுத்தாளர்களுக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இயல்விருது வழங்குதலும் இலக்கியத் தோட்டத்தின் முக்கிய சேவை.

தொடர்ந்து பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் சார்பில் திரு. அஸ்வின் பாலமோகன் பேசினார். ஆசியாவிற்கு வெளியே தமிழ் மாணவர்களை அதிகம் கொண்டது டொராண்டோ பல்கலைக்கழகம் (கிட்டத்தட்ட 600 மாணவர்கள்). இவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தவர். இவர்களிடையே கனடாவில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறைத் தமிழர்களின் எண்ணிக்கை இப்பொழுது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மொழியார்வம் கொண்ட மாணவர்களுக்கென பல்கலைக் கழக மாணவர் மண்றம் பனிக்கால தமிழ் வகுப்புகளை நடத்திவருகிறது. சென்ற வருடம் நடந்த இந்த வகுப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றதாக அஸ்வின் கூறினார்.

அடுத்தபடியாக எழுத்தாளரும் பத்திரிக்கையாசிரியருமான மகாலிங்கம் விருது பெறும் வெங்கட் சாமிநாதனைப்பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார். அறுபதுகளில் எழுத்து இதழில் தொடங்கி இன்றுவரை அதே வேகத்துடன் விமர்சனமாற்றிவரும் வெ.சாவிற்கான உரிய இடம் தமிழ் இலக்கிய உலகில் கொடுக்கப்படவில்லை என்றார் மகாலிங்கம். ‘நான் விமர்சகன் அல்லன், என் அபிப்பிராயங்களை உரத்துச் சொல்லிவருபவன் ‘ என்று தன்னிடத்தை வெ.சா குறைத்துக்கொண்ட பொழுதிலும் அவரது உரத்த அபிப்பிராயங்கள் தமிழ் இலக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவையாக இருந்துவருவதாகச் சொன்னார். கா.நா.சு, சி.சு. செல்லப்பா தொடங்கி, சுந்தர ராமசாமி, ஞாநி, ஜெயமோகன் என்ற நீண்ட விமர்சனப் பாரம்பரியத்தில் வெ.சாவின் இடம் தனியானது. படைப்பிலக்கியவாதிகளாக இருப்பதால் மற்றவர்களுக்கு உண்டாகும் தளைகளைக் கடந்து எந்தவிதமான நெருக்கடிகளுமின்றி வினையாற்றல் சாமிநாதனுக்கு மாத்திரமே சாத்தியமாகிறது என்றார். பல நேரங்களில் தன்னுடைய காட்டமான விமர்சனங்களால் தனிப்பட்டவர்களுக்குச் சங்கடத்தை அளித்துவந்தாலும், பொதுவில் உலகத்தரத்திற்குத் தமிழிலக்கியம் உயரவேண்டும் என்ற தார்மீக விருப்பமே வெ.சாவை முற்செலுத்துவதாக மகாலிங்கம் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் ஆசியப் பிரிவின் இயக்குநர், பேராசிரியர் மைக்கேல் டானலி சாமிநாதனுக்கு இயல்விருதை வழங்கி உரையாற்றினார். தனக்குத் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாததால் சாமிநாதனின் எழுத்துக்களுடன் பரிச்சயம் கிடையாது என்றும், தன்னுடைய மகனின் உதவியுடன் கூகிள் தேடல் இயந்திரத்தில் விருது பெறுபவரைப் பற்றி அறிய விஷயம் தேடியபொழுது இரண்டு கருத்துக்கள் அதிகம் தென்பட்டதாகவும் சொன்னார்; 1. தன்னுடைய மதிப்பீட்டை நேரடியாக முன்வைக்கத் தயங்காதவர், 2. காட்டமான விமர்சனங்களின் மூலம் சர்ச்சையை உண்டுபண்ணுவதில் தயக்கமற்றவர். தொடர்ந்து வருங்காலத்தில் டொராண்டோ பல்கலைக்கழத்தில் தமிழ் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளையும் சொன்னர். விழா தொடங்குவதற்கு முன் பல்கலைக்கழக மின்னியல் பேராசிரியர் பசுபதி, ஆங்கிலப் பேராசிரியர் செல்வா கனகநாயகம், நான் (புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் ஒளியியல் தொழில்நுட்பத் துறையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன்) மூவரும் மைக்கேல் டானலியுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது பல்கலைக்கழக நூலகத்தில் பல ஆண்டுகளாக வகைப்பாடு செய்யப்படாமல் இருக்கும் தமிழ்ப் புத்தகங்களைப் பற்றி அவரிடம் சொன்னபொழுது ஆச்சரியமடைந்தார். பேரா. பசுபதியின் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட பத்தாயிரம் தமிழ்ப்புத்தகங்கள் வகையீடில்லாமல் புழக்கமற்றுக் கிடக்கின்றன. தன்னுடைய பரிசளிப்பு உரையில் பேரா. டானலி இந்தப் புத்தகங்களைப் புகழக்கத்தில் கொண்டுவர தன்னாலான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தார்.

விருதைப் பெற்றுக்கொண்ட வெ.சா தனது நன்றியுரையில் விருதுபெறும் இந்தக் கணம் தன்னுடைய வாழ்வில் நினைத்துப் பார்க்காதது என்று சொன்னார். எதையுமே எதிர்ப்பார்க்காத இயல்பைப் கொண்டிருப்பதால் வாழ்வில் பெரிய ஏமாற்றங்களைத் தவிர்க்க முடிந்ததாகவும், அந்த நிலையில் இதுபோன்ற கெளரவம் தனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் சொன்னார். ‘விமர்சனம் எழுதும் உமக்கு ஒரு பரிசும் கிடைக்காது ‘ என்று சக எழுத்தாளர் ஒருவரின் புளகாங்கிதத்தை நினைவுகூர்ந்தார். பரிசு கொடுக்கத் தகுதியாக இலக்கியம், சினிமா, நாடகம், இசை என்று பலவற்றை அமைப்பாளர்கள் முன்வைத்திருந்தபொழுதும் இவையெல்லாம் தன்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயங்களின் உரத்த வெளிப்பாடுகள்தாமென்றும், பெரிய காரியமென்றும் சாதனைகளென்றும் தான் கருதவில்லை என்று சொன்னார். தொடர்ந்தும் தமிழகத்துக்கு வெளியே தான் கவனிக்கப்பட்டு வந்திருப்பதாகவும் அங்கெல்லாம் அவர்களுடைய கலைகளைப்பற்றிய காட்டமான அபிப்பிராயங்களைச் சொல்லியபொழுதும் தமிழை முன்னிருத்தியபொழுதும் அவர்களிடையே எந்தவிதமான கருத்துச் சுதந்திர மறுப்பும் தனக்கிருந்ததில்லை என்றார். இசையரங்கின் மையமான சரிகை வேட்டிகளையும், சில்க் ஜிப்பாக்களையும்தாண்டி எங்கோ இருப்பவனின் ஆத்மார்த்தமான இரசிப்பைப் போல உலகின் மறுகோடியான கனடாவில் தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்திற்கு தன்னுடைய வணக்கங்கள் என்றார்.

காலம் ஆசிரியர் செல்வத்தின் நன்றியுரையுடன் விழா முடிவடைந்தது.

—-

venkat@rogers.com

Series Navigation

வெங்கட்ரமணன்

வெங்கட்ரமணன்