இலை போட்டாச்சு! – 23 – ரசவாங்கி வகைகள் (அரைத்து விடாத) கத்தரிக்காய் ரசவாங்கி

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

பாரதி மகேந்திரன்



ரசவாங்கி வகைகள்

(அரைத்து விடாத) கத்தரிக்காய் ரசவாங்கி

தேவைப்படும் போருள்கள்:

கத்தரிக்காய் (பிஞ்சானவை) – 350 கிராம்
புளி – எலுமிச்சங்காய் அளவு
பச்சைமிளகாய் – 10 / 12
துவரம் பருப்பு – 150 கிராம்
கடலைப் பருப்பு – 1 மே. க.
உளுத்தம் பருப்பு – 2 மே. க.
பெருங்காயக் கரைசல் – 1 தே.க.
கடுகு – ஒன்றரை தே. க.
முற்றிய தேங்காயத் துருவல் – ஒரு பெரிய மூடி யளவு
மிளகாய் வற்றல் – 5 / 6
உப்பு – 1 மே. க.
மஞ்சள் பொடி – 3 சிட்டிகை
கறிவேப்பிலை – 2/3 ஆர்க்குகள்
வெல்லப் பொடி – 2 தே.க.
எண்ணெய் – 2 மே. க.

கத்தரிக்காயை நீளாவாக்கில் அரிந்து கொள்ளவும். கறுத்துப் போகாதிருக்கச் சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும். புளியைக் கோது இல்லாமல் நன்றாய்க் கரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் உப்பையும், மஞ்சள் பொடியையும் போட்டுக் கலக்கவும். துவரம்பருப்பைச் சமைப்பானில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி, அது காய்ந்ததும் கடுகைப் போட்டு அது பாதிக்கு மேல் வெடித்த பின் மிளகாய் வற்றலைக்கிள்ளிப் போட்டு, பிறகு கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றையும் அத்துடன் சேர்த்து, அவை சிவந்ததும், நெடுக்கு வாட்டத்தில் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, துருவிவைத்துள்ள தேங்காய்ப்பூ ஆகியவற்றை அதில் போட்டுப் பின்னர் புளிக்கரைசலையும் கொட்டிக் கொதிக்க விடவும். நன்றாய்க் கொதி வந்ததும், ந்£ரில் போட்டு வைத்துள்ள கத்தரிக்காய்த் துண்டங்களை நீரை நன்றாக வடித்துவிட்டு அதில் போட்டு ஒரு தட்டால் மூடி வைக்கவும். வெல்லப்பொடியைச் சேர்க்கவும். கொதிக்கும் புளியிலேயே கத்தரிக்காய் வேகும். அது நன்றாக வெந்ததும், வேக வைத்துள்ள துவரம்பருப்பை மசித்து இக்கலவையில் கொட்டவும். பெருங்காயக் கரைசலையும் சேர்த்துப் பிறகு நன்றாய்க் கிளறி, அது கொதிக்கத் தொடங்கியதும் இறக்கவும். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட ஏற்றது.

(கத்தரிக்காயை அடிக்கடி சாப்பிடக் கூடாது என்பார்கள். இதற்கும் மருத்துவக் குணங்கள் உண்டெனினும், அடிக்கடியும் நிறையவும் இதனைச் சாப்பிடுவது தோலைப் பாதிக்குமாம்.)


mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்