நாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

செம்மதி


நான்கு வேலிகளுக்குள்
சிறைப்பிடிக்கப்பட்டது
எமது வாழ்வு
மிருகக் காட்சிச்சாலையில்
அடைக்கப்பட்ட
குரங்குகளைப்போல
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்க
நாம் காட்சிப்பொருள்
எங்களை வைத்தே
பல வித்தைகள் காட்டி
பணம் தேடுகிறார்கள்
பல சிம்மாசனம்
எம்மீதே போடப்பட்டுள்ளன
எமது அசைவுகள்
அவற்றை சாய்க்கா விட்டாலும்
ஆட்டம் காண வைக்கக்கூடியவை
நாம் காட்டு மூங்கில்கள் ஆனோம்
யுத்தம் எம்மீது பல
துளைகளை இட்டுள்ளது
வீசுகின்ற காற்றக்கள்
துளைகள் ஊடே சென்ற
பல நாதங்களை எழுப்புகின்றன
மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி
தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன
காலம் எமக்க
கடிவாளம் இட்டுள்ளது
எமது சிந்தனைகள்
திசை திருப்பப்படுகின்றன
கடிவாளத்தின் கயிறுகள்
இரண்டும் ஒருவன் கையில் இல்லை
இரண்டு கயிறுகளும் மாறிமாறி
இழுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
நாம் பயணிக்கவேண்டி பாதை
எமக்கு தெரிகின்றது
ஆனால் பாதங்கள்
பாதை மாற்றப்படுகின்றன
எவ்வாறு இருப்பினும்
நாளைய நம்பிக்கைகளுடன்
இன்றைய நமது
பொழுதுகள் களிக்கின்றன….


chemmathy@gmail.com

Series Navigation

செம்மதி

செம்மதி