கீதாஞ்சலி (67) வானும் நீ! கூடும் நீ! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


வனப்பு மிக்க எழிலரசே!
வானம் நீ! வசிக்கும் கூடும் நீ!
வாழும் கூடுகள் எங்கணும்,
நிரம்பிப் பொங்கிடும்
நினது நேசப்பாடு! அது
மனித
ஆத்மாவைப் போர்த்தும்
வண்ண மயத்ததைக் காட்டும்!
நறுமணம் பூக்கும்
நுகர்ச்சியை உணர்த்தும்!
கீதங்கள் எழுப்பும்
நாத ஒலித் தாளங்களில்
ஓதும்!
பொழுது புலர்ந்ததும்
பொன் கூடையில்
பூக்களை ஏந்திக் கொண்டு
பூமிக்கு
மகுடம் சூட
மெளனமாய்ப்
புகுந்திடும் பரிதி!

அந்தி மயங்கும் வேளை,
ஆட்டு மந்தை
கடந்து சென்ற பசுமைத் தளங்கள்
தடம் தெரியாமல் போகும்!
நெஞ்சம் குளிர்ந்து
மென்மையாய்த் தென்றல்
தழுவிடும் பொழுது,
தங்கச் செங்கதிர் மேற்கில்
மங்கி மறைந்திடும்,
மாலைப் பொழுதின் போது!
விளிம்பில்லாத விண்வெளியில்
ஆத்மா
சிறகுகளை விரித்துக்
கறை படாத
வெண்ணிற ஒளிக்கதிர்ச் சுடர்கள்
நிரந்தர ஆட்சி செய்யும்,
நிற்காப் பயணம் செய்து!
அற்புத அந்த அண்ட வெளியில்
இரவில்லை! பகலில்லை!
வடிவில்லை!
வண்ண மய மில்லை!
வாய்ச் சொற்கள் எதுவும்
பாய்ந்து
பயணிப்ப தில்லை!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 3, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா