வையகத் தமிழ் வாழ்த்து

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue

சி. ஜெயபாரதன், கனடா


பாரத கண்டச் சீரிளம் தமிழே !
ஓரினம் நாமெலாம் ! ஒருதாய் மக்கள் ! வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
தாரணி மீதில்உன் வேர்களை விதைத்தாய் !
வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின !
ஈழத் தீவில் இணைமொழி நீயே !
சிங்கப் பூரினில் துணைமொழி நீயே !
மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் !
காசினி மீதில் மேவிய தமிழே !
வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !

ஆத்திச் சூடி ஓளவை, ஆண்டாள்,
வையகப் புலவர் வள்ளுவர், இளங்கோ,
பாரதி, கம்பர், பாரதி தாசன்,
யாவரும் உனது மாதவப் புதல்வர் !
மலைகடல் தாண்டி அலைகளைப் போல
ஆசியா, அரேபியா, ஆஃப்ரிக்கா, ஈரோப்,
வடஅமெ ரிக்கா, கனடா புகுந்து
சொந்த மாக்கினர், செந்தமிழ் மாந்தர் !
யாதும் நாடே ! யாவரும் கேளிர் !
பாதுகாத் துன்னைப் பரப்புதல் எம்பணி !
காசினி மீதில் நேசமாய் நிலவும்
மாசிலாத் தமிழே ! வாழ்த்துவம் உனையே !
வையகத் தமிழே ! வணங்குவம் உனையே !

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா