நினைவுகளின் சுவட்டில் – 42

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

வெங்கட் சாமிநாதன்


பரிட்¨க்ஷ எழுதி முடிந்த பிறகு கிராமத்தில் தான் இருந்தேன். ரிசல்ட் வரக் காத்திருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்வதற்கில்லை. பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டதால், ஏதும் பொய் சொல்லி கும்பகோணம் போகவும் முடியாது. ஆக வீடு தான், கிராமம் தான் கதி. அதிகம் பொழுது இரண்டு வீடுகள் தள்ளி இருந்த ஒரு காலி வீட்டில் அப்பா பொறுப்பேற்றிருந்த லைப்ரரி(!)யில் கழிந்தது. அது என்ன லைப்ரரி? ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகள், பழைய பத்திரிகைகளிலிருந்து கிழித்து பைண்டு செய்து வைத்திருந்த தொடர் கதைகள், எல்லாம் சேர்த்து ஒரு இருபது புத்தகங்கள் இருக்கும். ஒரிரண்டு மாத பத்திரிகைகள் பழ்சாகும் வரை காத்திருக்கும். இதற்கெல்லாம் கிராமத்தில் நிறைய டிமாண்ட் இருந்தது. இந்தத் தொடர்கதை வேணும், அந்தத் தொடர்கதை வேணும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த பைண்டு செய்யப் பட்ட தொடர்கதைகள் நான் ஏற்கனவே படித்தவை தான். ஆனாலும் பொழுது போகவேண்டுமே. ஓரிரு முறை இரண்டு மைல் தூரத்திலிருக்கும் நாதன் கோயிலுக்குப் போய் அங்கு ஒரு பையனிடமிருந்து புத்தகங்கள் வாங்கி வந்தது நினைவிலிருக்கிறது.

நிலக்கோட்டை மாமாவிடமிருந்து எப்போதாவது கடிதம் வரும். சின்ன மாமா ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்திருப்பதாக தெரிந்தது. மறுபடியும் எஸ். எஸ். எல்.ஸி பரிட்சை எழுதினாரா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் பின்னர் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த செய்தி வந்தது. எஸ்.எஸ்.எல்.ஸி பரிட்சை எழுதி தேறாவிட்டாலும், லோயர் க்ரேட் ஆசிரியராகலாம். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்குத் தடை இல்லை. நான் நிலக்கோட்டையில் இருந்த வரை, “போறும் போறும் ஒருத்தன் வாத்தியாராகி பாழாப் போனது போறும். நீயாவது நன்னா படிச்சு கவன்மெண்ட் வேலை தேடிக்கோ” என்று சின்ன மாமா வைப் பாத்து, பாட்டி அடிக்கடி சொல்லி ஆதங்கப்பட்டுக்கொண்டிருப்பாள். சின்ன மாமா வீட்டில் இல்லாவிட்டாலும், பணத்துக்கு அவதிப் படும் சமயங்களில் எல்லாம் பாட்டி இதையே சொலலிப் புலம்பிக்கொண்டிருப்பாள். ஆனால், சின்ன மாமாவுக்குக் கடைசியில் வாய்த்தது ஆசிரியர் வேலை தான். முதலில் மாமா இருந்த பள்ளிக்கூடத்திலேயே ஆசிரியராகச் சேர்ந்தார் என்று தான் நினைக்கிறேன். பின்னர் அலங்காநல்லூர், பாப்புநாயக்கன் பட்டி என்று பெயர்கள் அடிபட்டது நினைவில் இருக்கிறது. ஒரு சமயம் நான் விடுமுறையில் வந்திருந்த போது ஊர் சுற்றக் கிளம்பி, பாப்புநாயக்கன் பட்டிக்குப் போனதும் நினைவில் இருக்கிறது. மதுரையிலிருந்து விருது நகர் போகும் மெயின் ரோடில் வழியில் ஒரு ரோடோரம் இருக்கும் ஒரு மரத்தடி மேடையில் எழுப்பப்பட்டிருக்கும் கோயிலை அடையாளம் வைத்துக்கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கி உள்ளே வண்டிப் பாதையில் மூன்றுமைல் நடக்க வேண்டும். “பாப்பு நாயக்கன் பட்டிக்குங்களா? யார் வீட்டுக்குங்க? என்று ஒரு ஆர்வமும் சுவாரஸ்யமும் தொனிக்க, பஸ் கண்டக்டர் கேட்ட போது, கிராமப்புறங்களில் இன்னமும் நம் பழைய இயல்பான , அன்னியோன்ய மனித நேய உணர்வுகளும், பண்பாடும் மறையவில்லை என்று மன நெகிழ்வோடு நினைத்துக் கொண்டேன். பாட்டி தன் இரண்டாவது பிள்ளைக்கும் வாத்தியார் வேலைதான் விதித்திருந்தது என்றால் மிகவும் வேதனைப் பட்டிருப்பாள். அப்போதைய பாட்டியின் வேதனையைக் கேட்க நான் அங்கு இல்லை. பாட்டியின் அந்த சிறிய ஆசை கூட நிறைவேறாதது கொடுமை தான். பாட்டி அதற்குப் பிறகு அதிக வருஷங்கள் உயிரோடு இருக்கவில்லை. சின்ன மாமாவுக்கும் கல்யாணம் ஆகி, மாமியும் ஒரு பள்ளி ஆசிரியை தான், அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து அந்தப் பேத்தியையும் பார்த்துவிட்டுத் தான் கண்மூடினாள்.

அது மட்டுமல்ல. சிறு வயதில் இருந்த சாமாவுக்கும் – (சின்ன மாமாவின் பெயரும் சாமிநாதன் தான். ஸ்வாமி மலையோடு தொடர்பு கொண்ட தஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பிள்ளைக்காவது சாமிநாதன் என்று நிச்சயம் பெயர் சூட்டப் பட்டிருக்கும்) – பின்னர் தானே பொறுப்புணர்ந்து எப்படியாவது எந்த வேலைக்காவது தன்னைத் தகுதிப் படுத்திக்கொண்டு குடும்பத்துக்கு உதவியாக இருக்கவேண்டும், குடும்பத்தின் கஷ்டங்களைக் குறைக்கவாவது வேண்டும் என்ற முனைப்பு பிறந்துவிட்ட சாமாவைப் பாட்டி பார்த்திருக்கிறாள். அது அவளுக்கு, தன் கடைசிப் பிள்ளைக்கும் தான் வெறுத்த வாத்தியார் வேலையே தான் விதிக்கப்பட்டிருந்தாலும், சாமாவின் மாற்றமும் பொறுப் புணர்வும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்திருக்கும். பாட்டி பார்த்து மனம் சமாதானமடைந்தது சாமா மாமாவின் மாற்றத்தின் தொடக்கத்தைத் தான். குடும்பப் பொறுப்பில் தானும் பங்கு கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு தான், தனக்கு மனைவியாக வரப்போகிறவளும் சம்பாதிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும், அவளும் தன்னோடேயே வேலை பார்க்கவேண்டும், அது சாத்தியமாக அவளும் ஆசிரியையாகத் தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தான், அவர் இதை ஒரு நிபந்தனையாகவே வைத்து ஒரு ஆசிரியையே மணந்துகொண்டார் என்று எனக்கு பின்னர் சொல்லப்பட்டது..

அவரிடம் இனி திட்டமிட்டுச் செயல்படவேண்டும் என்ற தீவிர முனைப்பு செயல்படத்தொடங்கியது, மணமான முதல் ஒன்றிரண்டு வருடங்களிலேயே தெரியவந்தது. அப்போது நான் ஒரிஸ்ஸாவில் இருந்தேன். அண்ணா பெயரில் (பெரிய மாமாவின் பெயரில்) இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்சி எடுத்து உபரி வருமானத்திற்கு வழிசெய்து கொண்டிருந்தார் எனத் தெரிந்தது. நான் ஒரிஸ்ஸாவிலிருந்து விடுமுறைக்கு நிலக்கோட்டைக்கும் சென்றிருந்த போது, மாமா என்னையும் ஒரு பாலிஸி எடுத்துக்கொள்ளச் சொன்னார். ரூ. 3000 க்கு 30 வருடத்திற்கு எடுத்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் ஒழுங்காக ப்ரீமியம் கட்டாது, எனக்கோ மாமாவுக்கோ யாருக்குமே உபயோகமில்லாது ஒரு சில நூறு ரூபாய்கள் வீணானதும் நினைவிருக்கிறது. சின்ன மாமாவும் இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ஸியை ஒரு சில வருடங்களுக்குப் பிறகு விட்டு விட்டார் என்று தான் நினைப்பு. எவ்வளவு கஷ்டங்களுக்கிடையேயும் வாழ்க்கையை மனத்திடத்டோடும் முனைப்போடும் எதிர்கொண்டு வெற்றி கொள்வது என்பது பள்ளிப்படிப்புத் தகுதியைச் சார்ந்தது அல்ல, இவ்விரண்டிற்கும் ஒரு சம்பந்த்தமும் இல்லை என்பதை தான் வாழ்ந்து காட்டியே நிரூபித்தவர் சின்ன மாமா சாமிநாதன். நான் தமிழ் நாட்டை விட்டு வெளியேறிவிட்டேன், வேலை தேடி. சின்ன மாமாவின் ஒவ்வொரு அடியெடுப்பையும் நான் அவ்வப்போது நேரில் கண்டவனில்லை. அவ்வப்போது என் காதுகளுக் கெட்டி அறிந்து கொண்டவன் தான் நான் எங்கிருந்து இவ்வளவு தைரியமும், வாழ்க்கையை எதிர்கொண்டு வெல்லும் மன உறுதியும் திறனும் வந்தது?

இனி அன்ணாவுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்ற எண்ணமே அவர் காரியங்களைத் தீர்மானித்தது. அண்ணாவின் பெரிய பையனின் படிப்பு, பெண்ணின் கல்யாணம் எல்லாம் அவர் உதவியால் தான் சாத்தியமாயிற்று. அத்தோடு அவரது பெருகி வரும் குடும்ப பாரமும் சேர்ந்தது. அவருக்கு ஐந்து மகன்கள், நான்கு பெண்கள். அவ்வளவு பேரையும் அவரவர் படிக்க விரும்பிய அளவுக்கு படிக்க முடிந்த அளவு படிக்கவைத்தவர். நான்கு பெண்களையும் நல்ல இடங்களில் மணம் செய்து கொடுத்தவர். மூத்த பையன் பிலானியில் படித்தான். இப்போது அவன் பாஸ்டனில் மனைவி இரண்டு குழந்தைகளோடு வாசம். இங்கு வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் மதுரையில் ஆஜராகிவிடுவான், அப்பாவுக்கு எல்லாவிதத்திலும் உதவ. பெண் ஒருத்தியும் அமெரிக்காவில் தான். எங்கே என்று இப்போது நினைவில் இல்லை. முதல் பெண் மும்பைக்கார் ஆகிவிட்டாள். அவளுடைய பெண் இப்போது மணமாகி அமெரிக்காவில் வாசம். ஒரு பையன் திருச்சி ரீஜனல் என்ஜினியரிங் காலேஜில் கெமிஸ்ட்ரி ப்ரொ•பஸராக இருந்தான். தன் அண்ணா குடும்பத்துக்கும் உதவியாக இருந்து கொண்டு, தன் பெரிய குடும்பத்தையும் வளர்த்து, படிக்க வைத்து ஒரு சீரான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளச் செய்து, அவ்வளவும் செய்து முடிக்க முடிந்தது, ஒரு எளிய பலமற்ற ஆரம்பபள்ளி ஆசிரியர் என்ற புள்ளியிலிருந்து தொடங்கிய வாழ்க்கையில். பெரிய காரியம் தான். இப்போது அது பற்றி நினைக்கும் போது மலைப்பாகத் தான் இருக்கிறது. ஆனால், அவ்வப்போது பையன்கள் வளர்ந்து படித்து பெரியவர்களாகி சம்பாதிக்க ஆரம்பித்ததும் அப்பாவுக்கு உதவியதும் அவர் தன் வாழ்க்கையை பெரிய போராட்டங்கள் இல்லாது சமாளிக்க உதவியது. தொடக்கப் புள்ளியின் தீர்மானமும், சாதிக்கும் மனத்திடமும் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டால் போதும் போல. என்னைவிட ஏழு வயது பெரியவர். சமீபத்தில் மதுரையில் நடந்த அவரது பேத்தியின் கல்யாணத்திற்குச் சென்றிருந்தேன். பி.டி.ராஜன் ஹாலில் கல்யாணம். ஹாலுக்குள் நுழைய படிகளில் ஏற நான் கஷ்டப்படுவதைப் பார்த்து, “என்னாச்சு, ஏன் ஏறக் கஷ்டப்படறே?” என்று கேட்டார். மூட்டு வலி என்று பதில் சொன்னேன்.

“ஒருத்தன் வாத்தியாராகி அல்லல் படறது போறும். நீயாவது நன்னா படிச்சு கவர்ன்மெண்ட் வேலைக்குப் போ,” என்று அடிக்கடி பாட்டி சொல்லிக்கொண்டிருந்தாலும், கடைசியில் தான் ஆசைப்பட்டது எதுவும் நடக்காது இரண்டாவது பிள்ளைக்கும் வாத்தியார் வேலைதானா விதித்தது என்று பாட்டி முதலில் ரொம்பவும் துக்கப்பட்டிருப்பாள். பின் சமாதானமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். நான் அங்கு இல்லை. ஆனால் தன் இரண்டாவது பிள்ளை வாத்தியாராக இருந்து கொண்டே சாதித்துள்ளதைப் பாட்டிக்கு பார்த்து மகிழ கொடுத்து வைத்திருக்கவில்லை. அதன் பின் பாட்டி அதிக காலம் வாழவில்லை. எங்கே ஒரு பட்டிக்காட்டில் வாத்தியாரக இருந்து கொண்டே அவளுடைய பெரிய பிள்ளையும் (என் பெரிய மாமா) தன் உத்தியோகத்தின் கடைசி வருடங்களில் ஆசிரியர்களுக்கு ராஷ்டிரபதி தரும் பரிசு பெற்றார். தில்லிக்கு தன் பள்ளி ஆசிரியர் படையுடன் சென்று தில்லியின் விஞ்ஞான் பவனில் நடந்த பெரிய விழாவில், ராஷ்டிரபதி வி.வி.கிரி கரங்களிலிருந்து பரிசு பெற்றதைப் பாட்டி காணமுடிந்திருந்தால் ஒரு ஆறுதல் அவளுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அந்த பரிசு பெற்ற கணத்தின் போட்டோவில் கூட மாமா மலர்ந்த முகத்துடன் காணப்படவில்லை. அந்த கணத்தை அவரால் அனுபவிக்க முடியவில்லை என்று தான் தோன்றிற்று. அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை அவரை வஞ்சிப்பதாகவே இருந்து விட்டது. அதற்குப் பிறகு அவர் அதிக நாட்கள் வாழவில்லை. ராஷ்டிரபதி பரிசு பெற்றது 1969-ல். அதற்கு அடுத்த வருடம் அவர் ஓய்வு பெற்றிருக்கவேண்டும். அதன் பின் அவர் அதிக நாள் வாழவில்லை. 1அவர் இறந்து விட்டதாக எனக்கு தபால் வந்தது தில்லியில்.

1948-1949 வருடங்களில் அனேகமாக சின்ன மாமா, நான், பின் என் அத்திம்பேர் மூவரும் கிட்டத்தட்ட ஒரே புள்ளியிலிருந்து தான் வாழ்க்கையைத் தொடங்கினோம். மூவருமே அப்போது தான் வேலை தேடிக்கிளம்பினோம். அவரவர் சாமர்த்தியத்திற்கேற்பத் தான் வாழ்க்கை எங்களுக்கு அமைந்தது என்று சொல்ல வேண்டும். இது என்னில் தானே தோன்றிய ஞானோதயம் இல்லை தான். பின்னால், பத்திருபது வருடங்களுக்குப் பின் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது அத்திம்பேர் சொன்னார். “சாமா, உன்னைப் போலத்தானேடா நானும் இருந்தேன். இருக்கறது எல்லாத்தையும் லாகூர்லே தொலைச்சுட்டு வெறுங்கையோட தானேடா வந்தேன். நானும் வேலை தேடி மெட்ராசுக்குப் போனேன். நீ அதுக்கு ஒருவருஷம் கழித்து வேலை தேடிக் கிளம்பினே.” அவர் சொல்லாமல் சொன்னது, “நீ இன்னொரு இருபது இருபந்தைந்து ரூபாய் அதிகப்படி சம்பளத்துக்கு அடுத்த ப்ரமோஷன் எப்போ கிடைக்கும்னு காத்திண்டிருக்கே? பாத்துக்கோ” என்று ஒரு இடி அதில் தொக்கி நின்றது. அவர் அப்போது பல லக்ஷங்களுக்கு அதிபதியாக தன் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டவர். அவர் இடித்துரைத்ததும் உண்மை தான். சின்ன மாமா, அத்திம்பேர், நான் என்று மூவருமே கிட்டத்தட்ட ஒரே கல்வித் தகுதியோடு, ஒரே சமயத்தில் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். இந்த மூவரில் சாமர்த்தியமற்றவன் நான் தான். அத்தோடு பெரிய லக்ஷ¢யங்களோ, முனைப்போ, திட மனதோ இல்லாததும் காரணங்கள் என்று சொல்லவேண்டும்.

வெங்கட் சாமிநாதன்/22.9.09

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்