தட்டிக் கேட்க ஆளில்லாதவர்கள்

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

மலர் மன்னன்


“காலச் சுவடு’ மாத இதழின் 20 ஆண்டுகள், 100 இதழ்கள், 250 புத்தக வெளியீடுகளையொட்டி 2008 ஏப்ரல் 19 ஆம் நாள் சனிக் கிழமை சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் ஒரு முழு நாள் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறுஞ் செய்தியாகவும், தொலைபேசி மூலமாகவும் ஒன்றுக்கு இரண்டாக அழைப்பிதழ்களை அனுப்பியும் கூப்பிட்டதால் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஒரு பார்வையாளனாகக் கலந்துகொள்ள முழு நாளையும் ஒதுக்குவது என முடிவு செய்தேன். ஒருவகையில் அது காலஞ் சென்ற என் நண்பர் சுந்தர ராமசாமியை நினவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதாக அமையும் எனக் கருதியும் சனிக் கிழமைக்கான எனது எல்லா அலுவல்களையும் நியாயப்படி விடுமுறை நாளாõன மறுநாள் ஞாயிற்றுக் கிழமைக்கு ஒத்திப் போட்டுவிட்டுச் சென்றேன்.

அன்று மாலை இறுதியாக நிகழ்ந்த அமர்வுபற்றித்தான் இங்கு விவரிக்கப் போகிறேன். மற்ற நிகழ்ச்சிகள் பற்றிய எனது மதிப்பீட்டைப் பின்னர் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் அந்தக் கடைசி அமர்வில் தவிர்க்கவியலாமல் நான் சம்பந்தப்பட்டுப்போனேன். பார்வையாளன் என்கிற தகுதியில்தான் என்றாலும்.

கடந்துபோன ஆண்டுகளில் “காலச் சுவடு’ இதழில் முகமதியம் பற்றி வெளிவந்த பதிவுகளையெல்லாம் தொகுத்து ஒரு நூலாகக் “காலச் சுவடு’வின் புத்தக வெளியீட்டுப் பிரிவு அன்று வெளியிட்டிருந்தது. அதையொட்டி, “காலச் சுவடு’ வும் ஒரு ஊடகம் என்பதால் ஊடகங்களில் முகமதியம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகவே கலந்துரையாடல் என்பது “காலச்சுவடு’ என்கிற ஊடகத்தின் அணுகுமுறை இந்த விஷயத்தில் எத்தகைய கோணத்தில் அமைந்திருக்கிறது என்பது அடிப்படையாகவும் முக்கிய விவாதப் பொருளாகவும் அமையும் என்கிற நியாயமான எதிர்பார்ப்பு என்போன்ற பார்வையாளர்கள் சிலருக்காவது இருந்திருக்கும்.

தெருமுனை வம்புப் பேச்சு போல…

கிருஷ்ணானந்த் என்பவர் தலைமையில் தொடங்கிய கலந்துரையாடலில் திமுக சல்மா என்கிற புனைபெயரில் கவிதைகள் எழுதும் பெண்மணியும், ஆய்வாளர் என்று அறிமுகம் பெற்றுள்ள வேங்கடாசலபதியும் களந்தை பீர் முகமது என்கிறவரும் தங்களுக்குள் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

“காலச் சுவடு’ என்கிற ஊடகத்தில் கடந்த காலத்தில் முகமதியம் தொடர்பாக வெளி வந்துள்ள பதிவுகளை மேடையில் அமரும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் அறிவு பூர்வமாக ஆராய்வார்கள் என்று மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் இதுபோன்ற சபைகளில் தீவிரமான அவதானிப்பும் பரிசீலனையுமாக நடைபெறும் வழக்கமான கலந்துரையாடல் போலன்றி, எடுத்த எடுப்பிலேயே பொழுது போகாமல் தெருமுனையில் நாலுபேர் சந்தித்து வம்பு பேசுவதுபோல அது அமைவது கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். என்னடா இது, நம் நண்பர் சுந்தர ராமசாமி தொடங்கிய “காலச் சுவடு’க்கு நேர்ந்த அபகீர்த்தி என்று நொந்து கொண்டு சரி, கலந்துரையாடல் எப்படித்தான் போகிறது என்று பார்க்கலானேன் (சுந்தர ராமசாமியினது மட்டுமல்ல, அவருடைய மாமன் பரந்தாமன் என்கிறபெயரில் எழுதி வந்த நாராயணன், அவருடைய மகன், ஏன் சுந்தர ராமசாமியின் தகப்பனார், தூரத்து உறவினர்களான வேதாந்தம், பகவான் என அந்தக் குடும்பத்தின் மூத்த தலைமுறையினர் பலரின் நட்பும் எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படி நொந்துகொள்ள வேண்டியிராது).

கலந்துரையாடலின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த கிருஷ்ணானந்த் என்பவர் இதழியல் படித்தவர் என்றும் ஏஷியன் இதழியல் பயிற்சிக் கூடத்திலோ வேறெங்குமோ இதழியல் பாடம் நடத்துவதாகவும் கேள்விப்பட்டேன். எனவே அவர் சிறிது ஆழமாகத் தனது தொடக்கப் பேச்சை ஆரம்பித்து, கலந்துரையாடலைத் தொடங்கி வைப்பார் என நினைத்தேன்.

கிருஷ்ணானந்தர் தமது அறிவைவிட அறியாமையைத்தான் தம் பேச்சின் மூலம் வரிக்கு வரி அம்பலப் படுத்திக் கொள்ளலானார். இவர் இதழியல் படித்தது போதாது என்று இதழியல் பாடமும் நடத்துகிறாராமே, இவரிடம் படிக்கும் மாணவர்கள் எப்படிப்பட்ட இதழாளர்களாக வெளியே வருவார்கள்? இளம் மூளைகளைச் சலவை செய்து அனுப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுதான் வேலையில் சேர்ந்திருப்பாரோ ஒரு வேளை?

ஊடகங்கள் போக்கின் உண்மை நிலை

ஹிந்துஸ்தானத்தின் மிகப் பெரும்பாலான ஊடகங்கள் தங்களை மதச் சார்பற்றவர் என்பதை நிரூபித்துக் கொள்வதற்காகப் பெரும்பான்மைச் சமூகத்தின் நலன் பற்றிக் கவலைப் படாமல் சிறுபான்மையினருக்காக மாய்ந்து மாய்ந்து பரிவு காட்டி வருவதுதான் கண்ணேதிரே தெரியும் நடப்பி லுள்ள நிலவரம்.

ஏதாவது எழுதப்போய் கூட்டமாக வந்து கொளுத்திவிட்டுப் போய்விடுவார்களோ என்கிற அச்சம் காரணமாகவும் அவை சிறுபான்மையினர் மனம் ஒரு சிறிதும் நோகாதவாறு ஒரு நிகழ்வு உண்மையே ஆனாலும் அதை வெளிப்படுத்தி விடாதவாறு சர்வ ஜாக்கிதரையாக இருப்பது வழக்கம். ஏனெனில் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, அரசு சிறுபான்மையினருக்குச் சாதகமாகத்தான் இயங்கும் என்று அவற்றுக்குத் தெரியும். சிறுபான்மையினரின் வாக்கு நம்பகமான வாக்கு. சிதறிப்போகாத வாக்கு. அதனை இழக்க எந்த அரசியல் கட்சிக்குத்தான் மனம் வரும்? மேலும் அரசின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் எந்தப் பத்திரிகைக்குத்தான் நிஜம் பேசுகிற தைரியம் வரும்?

ஆனால் கிருஷ்ணானந்தரின் பார்வை இந்த உண்மை நிலவரத்திற்கு முற்றிலும் நேர்மாறாக இருந்தது!

முகமதிய பயங்கரவாதிகளை ஊடகங்கள் அவர்களின் மதத்தால் அடையாளப் படுத்துகின்றனவாம். அந்த பயங்கரவாதிகள் ஜிஹாதிகள் எனத் தங்களைத் தாங்களே பெருமிதத்துடன் பிரகடனம் செய்துகொள்வதுதானே உண்மை? மதத்தின் பெயரால்தானே அவர்கள் எல்லாப் பயங்கர வாதச் செயல்களையும் செய்கிறார்கள்? தேவ்பந்த் மதரஸா கூட அவர்களை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைத்தான் பயங்கர வாதம் என்று சொல்லிவிட்டது. அதற்கப்புறம் இவரும் எதற்காக தேவ்பந்த் முல்லாவாகக் குல்லா தரித்துக் கொள்ளவேண்டும்?

அதெப்படி சுட்டுக் கொல்லப்படும் பயங்கரவாதிகள் எல்லாரும் சொல்லிவைத்தாற்போல தங்கள் கைத் தொலைபேசியையும் குறிப்பேட்டையும் தடையங்களாக விட்டுச் செல்கிறார்கள் என்று கேட்டு நமது புலனாய்வுப் பிரிவினரையும் காவல் துறையினரையும் எல்லைக் காவல் படையினரையும் ஏளனம் செய்தார், கிருஷ்ணானந்த். உடனே அவரோடு உட்கார்ந்திருந்தவர்களும் தலையை ஆட்டி ரசித்துச் சிரித்தார்கள்.

குற்றவியலில் ஒரு பால பாடம் குற்றவாளி எப்போதும் தன்னைப்பற்றி ஏதேனும் ஒரு தடயத்தை விட்டுச் செல்லத் தவறுவதில்லை என்பது. ஆனால் இப்படியொரு விஷயம் இருப்பதே அறியாதவர்களாக கிருஷ்ணானந்தும் அவரோடு அமர்ந்திருந்தவர்களும் காணப்பட்டனர். சாகச் செயல் புரிந்து அதற்குப் பரிசாக சொர்க்கத்தில் எண்ணிறந்த இளம் பெண்களுடன் சுகம் காணப் போகிறோம் என்கிற நம்பிக்கையில் தற்கொலைப் படையின் அங்கத்தினராகவே பயங்கரவாதத்தில் இறங்குபவர்கள் தங்கள் அடையாளங்களை விட்டுச் செல்ல விரும்புவதில் முரண் என்ன? மேலும் தங்கள் மரணத்தை உறுதிப்படுத்தித் தமது குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டைத் தங்கள் இயக்கம் தரவேண்டும் என்பதற்காகவும் அவர்கள் தமது அடையாளங்களைத் தம்மோடு வைத்திருப்பதை ஒரு அவசியமாகக் கொள்ளக் கூடும். மேலும் ஒரு பயங்கர வாதச் செயல் நிகழ்ந்ததும் அதற்கு பகிரங்கமாக உரிமை கொண்டா டுவதுதானே பயங்கர வாத இயக்கங்களின் வழக்கம்? அவற்றால் பயிற்றுவிக்கப்படுபவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொள்வத்ற்குப் பதிலாகக் குறிப்பிட்ட பயங்கரவாதச் செயலைச் செய்ததில் தனது பங்கை உறுதி செய்ய விரும்புவது இயல்பே அல்லவா?

ஈராக்கில் நடப்பது என்ன?

கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக மேடையேற்றப்பட்டிருந்த களந்தை பீர் முகமது என்பவர் ஈராக்கில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்த்துகொண்டு இருக்கிற ஈராக்கியர்
களையெல்லாம் கொன்று குவித்து வருவதாகக் கூறினார். உண்மையில் ஈராக்கில் சுன்னி, ஷியா என்னும் இரு பிரிவினரிடையேயான பரஸ்பர மரண விளையாட்டுதான் ஒரு போட்டிப் பந்தயம் மாதிரி நடந்துகொண்டிருக்கிறது. அண்டையிலுள்ள ஷியா தேசமான ஈரானிலிருந்து ஈராக்கிய ஷியாக்கள் ஆயுத உதவியும் ஆள்பலமும் பெற்று நிலைமை மோசமாகலாகாது என்பதால் அமெரிக்காவும் இங்கிலாந்தும் அதற்கு அணை போடுகின்றன. தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு தடைபடுவதால் சீற்றமடையும் ஷியாக்கள் சுன்னிகளைத் தாக்குவதோடு, அமெரிக்க, பிரிட்டன் ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள்.

சதாம் ஹுசேனின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட ஆத்திரத்தில் சதாம் ஆட்சியில் பயனடைந்த சுன்னிகளும் ஷியாக்களைத் தாக்கும் கையோடு, அமெரிக்க, பிரிட்டன் படைகளையும் தாக்கிவிட்டு சொர்க்க சுகம் காண ஜிஹாதியாகச் செத்துப் போகிறார்கள்.

ஈராக்கில் இன்று தினந்தோறும் ஐம்பது, நூறு என்று குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் எனப் பலரும் பயங்கர வாதத்திற்கு உயிர்ப் பலியாகிக்கொண்டும் நிரந்தரமாக உடல் ஊனப்பட்டும் வருகிறார்கள். வழிபாட்டுத் தலங்கள், மருத்துவ மனைகள், இறுதிச் சடங்கு இரங்கல் கூட்டங்கள், திருமண வைபவங்கள் என்றெல்லாம் பேதம் பார்க்காது, சுன்னிகளும் ஷியாக்களும் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் சமயம் பார்த்து, அதுதான் அதிக அளவில் உயிர்ப் பலி வாங்குவதற்குச் சரியான தருணம் எனத் தேர்ந்து, வழிபாட்டுத் தலங்களின் மீது இரு தரப்பாரும் கூசாமல் குண்டு வீசித் தாக்குதல் நடத்துகிறார்கள். இவ்வளவுக்கும் அவ்விரு வழிபாட்டுத் தலங்களுமே மசூதிகள்தாம்.

ஊடகங்களின் இரட்டை அணுகுமுறை

இந்த முரண் பற்றி ஊடகங்கள் வாய் திறப்பதில்லை. ஆனால் இதே ஊடகங்கள்தாம் ராமபிரானுக்கான ஆராதனைகள் மட்டுமே நடந்து வந்த பாபர் நினைவு மண்டபம் என்கிற தேசிய அவமானச் சின்னம் இடித்துத் தகர்க்கப்பட்ட போது ஏதோ முகமதியரின் வழிபாட்டுத் தலமே உடைத்து எறியப்பட்டு விட்டதுபோல அங்கலாய்த்து, முகமதியர்களைத் தூண்டிவிட்டன! பார்க்கப் போனால் தில்லி சுல்தான் இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்து ஒரு அந்நிய ஆட்சிக்கு அடிகோலிய அந்நிய மொகலாய மன்னன் பாபரின் நினைவாக எழுப்பப்பட்ட மண்டபம், ஆங்கிலேயக் கொலை வெறியன் நீல் என்கிறவனின் சிலையைப் போலவே ஒரு தேசிய அவமானச் சின்னம் என உணர்ந்து, பாபர் நினைவு மண்டபத்தை அகற்றுவதில் ஹிந்துஸ்தானத்து முகமதியரும் பங்கேற்றிருப்பதுதான் முறை. சென்னையிலிருந்த நீல் சிலை எப்படி நீக்கப்பட்டடதோ அதே மாதிரி பாபர் நினைவு மண்டபம் அகற்றப்பட்டதில் தவறில்லை என்று சமாதானம் சொல்லியிருக்க வேண்டிய நமது ஊடகங்கள், அதற்கு முற்றிலும் மாறாக, ஏதோ பெரும் பாதகம் நிகழ்ந்துவிட்டதுபோல் விஷயத்தைப் பெரிதுபடுத்தி எழுத்துக் களேபரமும் பேச்சுக் கலவரமும் நடத்தி முகமதிய அமைப்புகளைத் தூண்டிவிட்டன. பாபர் நினைவு மண்டபம் தகர்க்கப்பட்டதில் கருத்து வேறுபாடே இருப்பினும் அவற்றுக்கு அமைதியான சூழல் நிலவச் செய்வதில் அக்கறையோ பொறுப்போ இருக்குமானால் ஏதோ நடந்தது நடந்து விட்டது; இதனைப் பெரிது படுத்தாமல் சிறிது அடக்கி வாசிப்போம்; முகமதியர் இடிக்காத தொல்பொருள்களா, அண்மையில் பாமியான் புத்தர் சிலைகள் கூட முகமதியரால் தகர்க்கப்பட்டனவே அதனை ஒரு பெரிய பிரச்சிøயாக ஆக்காமல் ஒரு பெருமூச்சு விட்டதோடு மறந்துவிடவில்லையா என்று ஊடகங்கள் சின்னதாக ஒரு பாட்டம் அழுதுவிட்டுச் சும்மா இருந்திருக்கலாம் அல்லவா? ஆனால் அவற்றுக்குத் தீனி தேவைப்பட்டதால் ஏதோ மிகப் பெரிய அட்டூழியம் நடந்துவிட்டதுபோலப் பெருங் குரல் எடுத்து அலறின. ஹிந்து நலனுக்கான அமைப்புகள் மீது அவதூறு சுமத்துவதையே தமது பிறவியின் நோக்கம எனக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட்டு
களும் முற்போக்கு முத்திரைக்கு ஏங்குபவர்களும் இதுதான் சந்தர்ப்பம் என்று பாபர் நினைவு மண்டபம் என்கிற தேசிய அவமானச் சின்ன நீக்கத்தை முகமதியருக்கு எதிரான ஹிந்து அமைப்புகளின் செயல் எனத் திரித்துப் பிரசாரம் செய்யலாயின.

இன்று ஷியாக்கள் வழிபாடு செய்யும் நேரம் பார்ர்து அவர்களின் மசூதியில் சுன்னிகளும் அதற்கு பதிலாக சுன்னிகளின் மசூதியில் ஷியாக்களும் குண்டுவீசி ஒருவர் மசூதியை மற்றவர் தகர்த்துக் கொண்டிருக்கிறார்களே இதுபற்றி எந்த ஊடகமும் மூச்சு விடுவ
தில்லையே அதன் மர்மம் என்ன?

மசூதிகள் பதுங்கு குழிகளா?

காஷ்மீரில் பாகிஸ்தானிலிருந்து திருட்டுத்தனமாக உள்ளே நுழையும் பாயங்கரவாதிகள் மசூதிக்குள் புகுந்து தமக்கு ப் பாதுகாப்பு தேடிக் கொள்கிறார்கள். மசூதிக்குச் சேதாரம் ஏதும் விளையாமல் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதாலேயே நமது ராணுவத்தினரும் எல்லைக் காவல் துறையினரும் மிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடுகிறது. இதன் விளைவாகத் தேவையின்றி நம் ராணுவ வீரர்களும் எல்லைக் காவல் படையினரும் அதிக அளவில் ரத்தம் சிந்தியும் உயிர்ப் பலி கொடுத்தும் கை கால்களை இழந்தும் கடமையாற்ற வேண்டியுள்ளது. இது நம் ஊடகங்களுக்குச் செய்தியாக இல்லை. தப்பித் தவறி மசூதிக்கு ஏதேனும் சிறு ஊறு நேர்ந்துவிட்டால் அது அரசுகளுக்கும் ஊடகங்களுக்கும் பெரிய பிரச்சினையாகிவிடுகிறது! இதற்குப் பயந்தே நமது ராணுவத்தினரும் எல்லைக் காவல் படையினரும் மசூதியில் பதுங்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு, அந்த பயங்கரவாதிகள் தப்பிச் சென்றாலும் பரவாயில்லை மசூதிக்கு எவ்வித பாதிப்பும் தங்களால் வந்துவிடலாகாது என்று மிதமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இதனை மசூதிகளில் பதுங்கும் பயங்கரவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, முடிந்தவரை ராணுவத்தினரையும் எல்லைக் காவலரையும் தாக்கிவிட்டுத் தப்பியோடி விடுகிறார்கள். ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் நேரில் இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் இதனைப் பதிவு செய்கிறேன்.

சவூதியில் மெக்காவிலேயே கூட பயங்கரவாதிகளை அப்புறப்படுத்த மிகப் புனிதமாகக் கருதப்படும் மசூதியின் மீது தாக்குதல் நடந்ததுண்டு. அண்மையில் பாகிஸ்தானில்கூட பயங்கரவாதிகளை அப்புறப்படுத்துவதற்காக மசூதியின் மீது தாக்குதல் நடந்தது. இதையெல்லாம் நமது ஊடகங்கள் பெரிது படுத்தா. ஹிந்துஸ்தானத்தில் மட்டுமே எக்காரணம் பற்றியும் மசூதியின் மீது தாக்குதல் எதுவும் நடந்துவிடக் கூடாது! இது தெரிந்திருப்பதால்தான் ஹிந்துஸ்தானத்திற்குள் நுழையும் பயங்கரவாதிகள் மிகவும் பத்திரமான இடம் என்று மசூதிக்குள் புகுந்துகொள்கிறார்கள்.

பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதா?

ஈராக்கில் ஷியாக்களும் சதாம் ஆதரவு சுன்னிகளும் தங்கள் ஆத்திரத்தை அமெரிக்க பிரிட்டன் படைகள் மீது காட்டும்போது பதிலுக்கு அவையும் மரண நடனத்தில் பங்கேற்கின்றன. அங்கு சதாமின் சர்வாதிகார ஆட்சிக்கு மாற்றாக அமைந்துள்ள அரசு சதாம் ஆதரவாளர்களின் தாக்குதலைச் சமாளிக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் அமெரிக்க பிரிட்டன் படைகளின் சகாயத்தை எதிர்நோக்கியுள்ளன. இதன் காரணமாகவும் அமெரிக்க பிரிட்டன் ராணுவம் தாக்குதல் வேட்டையில் இறங்க வேண்டிய நிலைமை உருவாகிறது.

பெரும்பான்மையினரான தாம், அண்டையில் உள்ள ஷியா தேசமான ஈஎரானின் உதவியுடன் ஈராக்கின் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் கைப்பற்றிக்கொள்வதற்கு இடைஞ்சலாக இருக்கின்றன என்பதால் ஷியாக்களுக்கு அமெரிக்க பிரிட்டன்
ராணுவங்கள் மீது எரிச்சல். தங்கள் எதேச்சாதிகார செல்வாக்கு சரிந்துவிட்டதில் சுன்னிகளுக்கு அமெரிக்க பிரிட்டன் ராணுவங்கள் கண் உறுத்தல். இந்த உண்ஙை புரியாமலோ அல்லது புரிந்தும் அதனை வெளிப்படுத்த விரும்பாமல் ஈராக்கில் ஏதோ விடுதலைப் போராட்டம் நடப்பதுபோல பாவனை காட்டுகிறார்களா?

ஈராக்கில் சதாம் நடத்தியது வன்கொடுமைச் சர்வாதிகாரம் அல்லவா? ஈராக் விழுந்த அன்று மக்கள் விடுதலைக் காற்றைச் சுவாசித்த மகிழ்ச்சியில் வெளியே கூட்டம் கூட்டமாக வந்து எங்கு பார்த்தாலும் நின்றுகொண்டிருந்த சதாமின் சிலைகளைக் கோப வெறியுடன் உடைத்து எறியவில்லையா?

மீண்டும் மீண்டும் நினைவு படுத்த வேண்டியுள்ளது, ஈராக்கின் மக்கள் தொகையில் ஷியாக்கள்தான் பெரும்பான்மையினர். ஆனால் சுன்னியான சதாம் மிருக பலத்துடன் அவர்களை அடக்கி ஆண்டார். ஈராக்கிய ஷியாக்கள் இன்று தாமே பெரும்பான்மையினர் என்பதால் முழு அதிகாரத்தையும் கைப்பற்றிக்கொள்வதில் தீவிரம் காட்டுகிறார்கள். அதற்கு அண்டையில் உள்ள ஈரானின் துணையை எதிர்பார்க்கிறார்கள். ஈரானும் அதற்கு இசைவாக உள்ளது. கைவிட்டுப் போன அதிகாரத்தை மீண்டும் பெற ஈராக்கிய சுன்னிகளும் அரும்பாடு படுகிறார்கள். இந்த உண்மை ஏன் மறைக்கப்படுகிறது?

ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கபளீகரம் செய்துவிட அமெரிக்கபிரிட்டன் வல்லரசுகள்
காத்திருப்பது உண்மைதான். ஆனால் அது சிக்கலில் ஒரு கண்ணியேயல்லவா? அதை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? ஒரு பிரச்சினையை அணுகவதானால் எல்லாக் கோணங்களிலிருந்தும் அதனை ஆராய்வதுதானே சரியாக இருக்கும்?

இன்று ஈராக் மயான பூமியாகிக் கொண்டிருப்பது ஷியா சுன்னி உட்பிரிவு
களுக்கிடையேயான ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற அநாகரிகப் பரஸ்பரத் தாக்குதல்களால்தான். இந்நிலையில் அமெரிக்க பிரிட்டன் ராணுவங்கள் ஈராக்கிலிருந்து வெளியேறினால் அடுத்த கணமே ஈரானின் மறைமுக ஊடுருவலும் சுன்னிகளின் முரட்டு ஆவேசத் தாக்குதலுமாக ஈராக் உலக வரைபடத்திலிருந்தே காணாமற் போகும். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் இன்று ஈராக்கில் அமைந்துள்ள ஆட்சி அமெரிக்காவையும் பிரிட்டனையும் எங்களை அந்தரத்தில் விட்டுவிட்டுப் போய் விடாதீர்கள் என்று “போகாதே, போகாதே என் கணவா’ எனப் பாடாத குறையாக மன்றாடிக் கொண்டிருக்கின்றது. இந்த உண்மையைச் சொல்ல ஏன் வாய் வருவதில்லை? இல்லை இந்த உண்மையெல்லாம் தெரியாமல்தான் பேசுகிறார்களா?

சியாமா பிரசாத் மீது அவதூறு

இந்தச் சநத்ர்ப்பத்தில் கிருஷ்னானந்த் இன்னொரு விசித்திர வாதத்தை முன் வைத்தார்.

அபுல் கலாம் ஆசாதைக் குறிப்பிடும்போது “தேசிய முஸ்லிம்’ என்று சொல்கிறார்களாம். ஆனால் சியாமா ப்ரஸாத் முகர்ஜியைப் பற்றிக் குறிப்பிடும்போது மட்டும் “தேச விரோத ஹிந்து’ என்று குறிப்பிடுவதில்லையாம். இந்தப் பாரபட்சம் ஏன் என்று கேட்டார், இதழியல் ஆசிரியர் கிருஷ்ணானந்த்.

அண்மைக்கால வரலாறுகூடச் சரியாக அறியாத அந்த இதழியல் ஆசிரியரிடம் கற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலுள்ள இதழியல் மாணவர்களை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருந்தது.

மதத்தின் அடிப்படையில் இரு தேசியக் கொள்கையை வலியுறுத்தி பாகிஸ்தான் பிரிவினையை வற்புறுத்தினார் முஸ்லிம் லீக் தலைவர் முகமதலி ஜின்னா. காங்கிரசில் இருந்த ஆசாத், தில்லி, ஃபதேபூர் சிக்ரி தாஜ் மஹால், எல்லாவற்றையும் துறந்துவிட்டுப் போக வேண்டுமா என்றார். பிரிவினையை அவர் ஏற்க மறுத்ததால் அவரை தேசிய முஸ்லிம் என்று காந்திஜி பாராட்டினார். பிறகு அதுவே அவருக்கு ஒரு பட்டப் பெயராகப் போயிற்று. அவ்வளவுதான் விஷயம்.

சியாமா பிரசாத் முகர்ஜி என்கிற மகத்தான தேசத் தலைவரை “தேச விரோத ஹிந்து’ என்று பதிலுக்கு ஏன் அழைப்பதில்லை என்று கிருஷ்ணானந்த் கேட்டபோது இது என்ன புதுக் கரடி என்று அதிசயித்தேன். ரஷ்யக் கரடிதான் காலாவதியாகிவிட்டதே இது ஒரு வேளை சீனக் கரடியாக இருக்குமோ எனத் திகைத்தேன். சீனாவில் கரடிகளை ஒரு மருத்துவப் பொருளாகத்தானே உபயோகப்படுத்துவது வழக்கம் என்றும் யோசித்தேன் (சீனாவில் கரடிகளின் வாய், கால்கள் எல்லவற்றையும் சங்கிலியால் பிணைத்து மல்லாக்கப் போட்டு கூரிய கம்பியால் வயிற்றைத் துளைத்து பித்த நீர், இன்சுலின் என்றெல்லாம் கொடூரமான முறையில் எடுப்பார்கள்).

1942-43 ல் சியாமா பிரசாத் முகர்ஜி அன்றைய வங்காள ராஜதானி அரசின் நிதி அமைச்சராகப் பதவி வகித்தாராம். ஆங்கிலேயர் காலத்தில் அமைச்சராக இருந்தாராம்! அதனால் அவர் தேச விரோத ஹிந்துவாம்! ஒரு இதழியல் ஆசிரியரின் அறியாமை இந்த அளவுக்கா இருக்கும்? நம்ப முடியவில்லை.

மேலும் கிருஷ்ணானந்த் குறிப்பிட்ட ஆண்டுகளும் பிழையானவையே.

1937ல் ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலேதான் காங்கிரஸ் எல்லா மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிட்டுப் பல மாநிலங்களில் அமைச்சரவையினையும் அமைத்தது. அப்படியானால் அது தேசத் துரோகக் கட்சியா? அந்த அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் அனைவரும் தேசத் துரோகிகளா?

1917ல் முதல் உலகப் போரின்போது, இந்த இக்கட்டான தருணத்தில் நாம் பிரிட்டனைத் தொந்தரவு செய்யக் கூடாது: ஆகவே காங்கிரஸ் அரசியல் கிளர்ச்சிகளைத் தொடாமல் சமூக சேவையில் ஈடுபடட்டும் என்று சொன்ன காந்திஜி, 1940 தொடக்கத்தில் தீவிரமடைந்த இரண்டாம் உலகப் போரின்போது மட்டும், அதிலும் பிரிட்டன் முன்னைக் காட்டிலும் பெரும் சங்கடத்தில் இருந்த போதிலும் அதற்கு மேலும் தொல்லை கொடுக்கும் விதமாகத் தமது கோட்பாட்டிற்கே முரணாக, “செய் அல்லது செத்துப் போ’ எனக் காங்கிரசாருக்கு உத்தரவிட்டு, வன்முறை உள்ளிட்ட பெரும் கிளர்ச்சிக்கு வழிசெய்தார். இதில் காங்கிரசிலேயே அவரோடு கருத்து வேறுபாடு கொண்டவர்கள் பலர். அவர்களில் காந்திஜிக்கு மிகவும் நெருங்கிய ராஜாஜியும் அடக்கம்.

சியாமா பிரசாத் முகர்ஜி தொடக்கத்தில் காங்கிரஸ்காரராக இருந்தவர்தாம். 1937ல் காங்கிரஸ் கட்சி தேர்தல் களத்தில் இறங்கியபோது, சியாமா பிரசாத் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளாராகப் போட்டியிட்டு அன்றைய ஒருங்கிணைந்த வங்காள மாநிலத்தில்சட்டப் பேரவையின் மேலவையில் இடம் பெற்றார். 1939ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டப் பேரவைகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று கட்சி தீர்மானித்தபோது, சியாமா பிரசாத் முகர்ஜியும் தமது மேலவை உறுப்பினர் பதவியைத் துறந்தார்.

1939 ல் நிகழ்ந்த காங்கிரஸ் பதவி விலகல்களையடுத்துத் தேர்தல்கள் நடந்தபோது வங்காளத்தின் சட்ட மன்றத்திற்கும் தேர்தல் நடந்தது. அன்றைக்கு கிழக்க்கும் மேற்கும் ஒன்றாகஇருந்த வண்ங்காலத்தில் ஹிந்து வாக்காளர்களைக் காட்டிலும் முகமதிய வாக்காளர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. அன்று வங்காள சட்டமன்றத்தில் மொத்த இருக்கைகள் 250.

அப்போது அங்கு பிரபலமாக இருந்த அரசியல் தலைவர்களில் ஃபஸுல் ஹக் என்பவர் முஸ்லிம் லீகுடன் உறவாடிக் கொண்டே தமக்கென உழைப்பாளர் கட்சி என்கிற பெயரில் ஒரு கட்சியையும் வைத்துக் கொண்டிருந்தார். தேர்தலில் அவரது கட்சியும் முஸ்லிம் லீகும் 117 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அறுதிப் பெரும்பான்மை கிட்டாததால் அவை மேலும் சிலரின் ஆதரவோடு ஆட்சியமைக்க முனைந்தன.

ஹிந்துக்கள் நலன் கருதி

கட்சித் தலைமையின் கட்டளைக்கு இணங்க மேலவை உறுப்பினர் பதவியைத் துறந்திருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, காங்கிரஸின் அந்தக் கொள்கையிலிருந்து கருத்து மாறுபட்டு காங்கிரசிலிருந்தும் விலகிவிட்டிருந்தார். வங்காளத்தில் மீண்டும் தேர்தல் நடந்த போது, அன்றைக்கிருந்த நிலைமையை நன்கு புரிந்துகொண்டிருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, சட்ட மன்றத்தில் ஹிந்துக்களின் நலனுக்கான குரல் கேட்காமல் போய்விடலாகாது என்பதற்காக ஒரு சுயேற்சை வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்டு
வெற்றியும் பெற்றார். சட்ட மன்ற உறுப்பினராக உள்ளே நுழைந்த முகர்ஜியிடம் ஃபஸுல் ஹக் ஆதரவு கோரினார். சிறந்த நிர்வாகியான முகர்ஜியைத் தாம் அமைக்கும் அமைச்ச
ரவையில் நிதியமைச்சராகப் பொறுப்பு ஏற்குமாறு வேண்டினார். ஹிந்துக்களின் நலன் காக்கவும் அவர்களின் பிரதிநிதியாகப் பணியாற்றவும் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார், சியாமா பிரசாத் முகர்ஜி.

ஆக வங்காளத்தில் முறைப்படி நடந்த தேர்தலில் சுயேற்சை வேட்பாளராக முறைப்படி வெற்றி பெற்று, ஃபஸுல் ஹக் முறைப்படிக் கேட்ட ஆதரவினை அளித்து, ஹிந்துக்களின் நலன் காக்கவும் அவர்களின் பிரதிநிதி போலவும் ஹக்கின் முறைப்படி அமைந்த அமைச்சரவையில் நிதி அமைச்சராக முகர்ஜி பதவி ஏற்றதில் தேசத் துரோகம் எங்கே வந்தது?

பிற்காலத்தில் ஆங்கிலேயர் அதிகாரத்தின் கீழ் மத்தியில் நேரு அமைத்த இடைக்கால சர்க்காரில் தாழ்த்தப்பட்டோர் நலன் காக்க டாக்டர் அம்பேத்கர் இடம்பெற ஒப்புக் கொள்ளவில்லையா? சியாமா பிரசாத் முகர்ஜியும் அதே நோக்கில் நேருவின் அமைச்சரவையில் இடம் பெறவில்லையா?

சியாமா பிரசாத் முகர்ஜி ஆங்கில அரசைக் கண்டித்துப் பதவி விலகினார்

மேலும் கிருஷ்ணானந்துக்குத் தெரியாத அல்லது தெரிந்திருந்திருந்தும் வேண்டுமென்றே மறைத்த உண்மை, ஆங்கிலேய அரசின் போக்கினைக் கண்டித்து 1943ல் சியாமா பிரசாத் முகர்ஜி தமது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது.

194243 ல் செயற்கையாக உருவாக்கப்பட்ட கொடிய வங்கப் பஞ்சத்தின் போது ஆங்கிலேய அரசின் மெத்தனத்தைக் கண்டித்தும் அதன் அலட்சியப் போக்கினை எதிர்த்தும் சியாமா பிரசாத் அமைச்சர் பதவியிலிருந்து விலகி, பஞ்சத்தால் தவித்த மக்களுக்குத் தம்மால் இயன்ற நிவாரணப் பணிகளை முழு மூச்சுடன் மேற்கொண்டார். இத்தகைய சியாமா பிரசாத் முகர்ஜியைத்தான் கிருஷ்ணானந்த் “தேசத் துரோக ஹிந்து’ என்று அழைக்க விரும்புகிறார்! துவேஷத்திற்கும் ஒரு எல்லை இல்லையா?

ஒருவேளை சியாமா பிரசாத் முகர்ஜி உலகப் போரின்போது ஆங்கிலேய அரசுக்கு இடையூறாக நிற்கவில்லை என்பதற்காக அவரை கிருஷ்ணானந்த் தேசத் துரோகியாகக் காண்கிறார் என்றால் அன்று கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட பலரும் பல்வேறு காரணங்
களுக்காக ஆங்கிலேய அரசின் யுத்த முயற்சிகளுக்கு ஆதரவாகவே இருந்தனர். குறிப்பாகக் கம்யூனிஸ்ட்டுகளின்பாடு இந்த விஷயத்தில் திண்டாட்டமாகிவிட்டிருந்தது!

ஹிட்லர் உதவியுடன் ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போராடிய சுபாஷ் சந்திர போசை முதலில் பாராட்டிய அவர்கள், பிறகு நிலைமை மாறியதும் அவரையும் தேசத் துரோகி என வர்ணித்தனர்! திருடன் தன்னைக் காத்துக் கொள்ள “திருடன், திருடன்’ என்று கூவிக்கொண்டு ஓடுகிற சங்கதிதான் நம் கம்யூனிஸ்ட்டுகள் கையாளுகிற உத்தியும்!

இரண்டாம் உலகப் போரின்போது, அன்றைய சோவியத் யூனியனுக்கும் ஹிட்லரின் ஜெர்மனிக்கும் உடன்பாடு இருந்தவரை இங்கிருந்த கம்யூனிஸ்ட்டுகள் ஹிட்லருக்கு எதிராக வாய் திறக்கவில்லை என்பது மட்டுமல்ல, அது ஏதோ, முதலாளித்துவத்திற்கு எதிரான போர் என்பதுபோல ஹிட்லர் குவித்த வெற்றிகள் கண்டு அகமகிழ்ந்து கொண்டும் இருந்தனர். ஹிட்லர் சோவியத் யூனியன் மீதும் தாக்குதலைத் தொடங்கிய பிறகுதான் ஹிட்லர் கம்யூனிஸ்ட்டுகளின் கண்களுக்கு ஒரு ஃபாசிஸ்டாகத் தெரிய ஆரம்பித்தார்! அதன் பிறகு கம்யூனிஸ்ட்டுகளும் பிரிட்டனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்கள்.

சாவர்கர், அம்பேத்கர் தீர்க்க தரிசனம்

ஹிந்துஸ்தானத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதைத் தமது மதி நுட்பத்தால் நன்கு அறிந்த விநாயக தாமோதர சாவர்கர்ஜி, இரண்டாம் உலகப் போரை நவீன ஆயுதப் பயிற்சியும் நேரடியான போர்க்கள அனுபவமும் கிட்டுவதற்கான அரிய வாய்ப்பாகக் கண்டார். அதனை ஹிந்து இளைஞர்கள் இழந்து விடலாகாது என முடிவு செய்தார். விரைவில் விடுதலை பெறும் சுதந்திர ஹிந்துஸ்தானத்தின் ராணுவத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதுதான் ஹிந்துஸ்தானத்தின் எதிர்காலத்திற்கு நல்லது என ஹிந்து சமுதாயத்திற்கு வாராது வந்த மாமணியாம் சாவர்கர்ஜி கண்டுணர்ந்தார். எனவே
ஹிந்து இளைஞர்களைப் பெருமளவில் ராணுவத்தில் சேருமாறு ஊக்குவித்தார். டாக்டர் அம்பேத்கரும் ஹிந்து சமூகத்தின் ஓர் அங்கமேயான தாழ்த்தப்பட்டோர் நலன் கருதி, அவர்களையும் பட்டாலத்தில் சேருமாறு வலியுறுத்தி, யுத்தப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கினார். தீண்டாமையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கும் தாழ்த்தப்பட்டோருக்குத் துணிவும் தலை நிமிர்வும் கிடைக்கச் செய்வதற்குப் பட்டாளம்தான் சரியான இடம் என்பதை அம்பேத்கர் தெளிவாகவே அறிந்திருந்தார். தழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓற் இளைஞன் சீருடையும் கையில் அயுதமுமாகத் தனது கிராமத்துத் தெருக்களில் தலை நிமிர்ந்து நடந்து சென்றல் எந்த மேல்சாதிக்காரனால்தான் தனது சொரூபத்தைக் காட்ட முடியும்?

தெற்கே இவ்வாறான காரணம் எதனையும் வெளிப்படையாகக் கூறாமலேயே அண்ணா அவர்கள் தமது பேச்சாற்றலைப் பயன்படுத்தி ஊர் ஊராகச் சென்று யுத்தப் பிரசாரம் செய்து ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களைத் தூண்டினார். ஈ.வே.ரா. அவர்களோ தமது “விடுதலை’ நாளிதழையே நேச நாடுகளுக்கு ஆதரவான யுத்தப் பிரசாரத்திற்கு தத்தம் செய்துகொடுத்து விட்டார். சாவர்கர்ஜியும் அம்பேத்கரும் ஹிந்துக்களின் நலன் கருதி யுத்தப் பிரசாரத்தில் பிரதிபலன் பாராது ஈடுபட்டனர்.

முஸ்லிம் லீகும் தன் பங்கிற்கு யுத்தப் பிரசரம் செய்து தனது மதத்தினரைப் பட்டாளத்தில் சேற ஊக்குவித்தது. காங்கிரஸ் மட்டுமே இந்த விஷயத்தில் தனிமைப் பட்டுப் போனது.
அதன் காரணமாக பிரிட்டிஷ் ஆட்சியினதும் பிரிட்டிஷ் மக்களினதுமான அனுதாபத்தை இழந்தது. அதன் விளைவு பின்னர் எதிரொலித்தது. காந்தியின் ஹிமாலயத் தவறுகளில் இந்த யுத்த எதிர்ப்பும் அந்த இகட்டான சமயம் பார்த்து அரசுக்கு எதிரான கிளர்சிக்கு இளைஞர்களைத் தூண்டியதும் ஒன்று! “நீங்கள் என்னைச் சிறை வைக்காமல் இருந்தி
ருந்தால் ஆகஸ்ட் புரட்சி என்கிற பெயரில் வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் பார்த்துக் கொண்டிருந்திருப்பேன்’ என்று பின்னர் காந்தி சமதானம் சொன்னார்!

வரலாற்றுப் பதிவுகள் இவ்வாறு இருக்கையில் சியாமா பிரசாத் முகர்ஜியை ‘தேச விரோத ஹிந்து’ என்று அழைக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? எனினும் அவரை ஏன் அவ்வாறு யாரும் அழைப்பதில்லை என்று கிருஷ்ணானந்த் ஆதங்கப்பட்டபோது பார்வையாளர்களிடையே சிறு சலசலப்பு கூட எழவில்லை. நமக்கு நமது அண்மைக்கால வரலாறுகூடப் புகட்டப்படுவதில்லை என்பதோடு அது முற்றிலும் தலைகீழாகவும் புகட்டப்படுவதன் விளைவுதான் இது.

ஹிந்து சமுதாயத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி யார் என்பதையே அறியாதவர்கள் மிகுந்த சபையில் அவர் மீது சுமத்தப்பட்ட அந்த அபாண்டமான பழிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க எவருமே முற்படுவது சாத்தியமில்லைதான். சரி, இவர்கள் இன்னும் எவ்வளவு தொலைவுக்குப் போகிறார்கள் என்பதையும் பார்த்து விடுவோம் என்று நானும் பொறுமையாகவே இருந்தேன்.

இனியும் தாங்காது

ஆனால் கலந்துரையாடல் என்கிற சாக்கில் ஹிந்து துவேஷப் பிரசாரமும் பயங்கரவாதிகள் ஆதரவுப் பிரசாரமும் தங்கு தடையின்றித் தொடர்ந்ததால் இனியும் தாங்காது எனக் கருதி, கலந்துரையாடலுக்கான தலைப்பிற்குப் பொருந்தாமல் எதற்காக இப்படியொரு ஒருதலைப் பட்சமான பிரசாரத்தை இவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த “காலச் சுவடு’ கண்ணனிடம் உரத்த குரலில் கேட்டேன். அவ்வளவுதான். மேடையில் தனிக் கச்சேரி செய்துகொண்டிருந்தவர்கள் தங்கள் பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்கள்.

எனது கேள்வி பார்வையாளரிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியது. என் கருத்தை வரவேற்றும் மறுத்தும் குரல்கள் எழலாயின. நிலைமையைக் கண்டுகொண்ட கண்ணன்
உடனே அரங்கிற்குச் சென்று, “கலந்துரையாடல் “காலச் சுவடு’ வில் வெளிவந்த இஸ்லாம் பற்றிய பதிவுகள் நூலாகத் தொகுக்கப்பட்டிருப்பதையொட்டி நடைபெறுவதால் அதில் ஹிந்துத்துவத்திற்குப் பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க இயலாது’ என்று விளக்கம் அளித்தார்.

இந்த அரங்கில் ஹிந்துத்துவத்திற்குப் பிரதிநிதித்துவம் எதையும் நான் எதிர்பார்க்கவும் இல்லை, வேண்டவும் இல்லை என்று அதற்கு பதில் சொன்னேன். இங்கு “காலச் சுவடு’ பதிவு செய்த முகமதியம் பற்றிய தொகுப்பை முன்வைத்து, “தமிழ் ஊடகங்களில் இஸ்லாம்’ என்கிற தலைப்பையொட்டி இதுவரை பொதுவான கலந்துரையாடல் ஏதும் நடைபெறக் காணோம், வெறும் முகமதிய பயங்கரவாத ஆதரவுப் பிரசாரம்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; அவ்வாறு நடைபெறுவதால் ஒருதலைப் பட்சமாகக் கலந்துரையாடல் அமையலாகாது, மறுதரப்புக் கருத்தும் இடம் பெறுமாறு சமவாய்ப்பு இல்லாதவரை இது கலந்துரையாடலாக இருக்காது, வெறும் ஒரு தரப்புப் பிரசாரமாகத்தான் இருக்கும் என்றும் தெரிவித்தேன்.

இதற்குள் பதில் சொல்ல இயலாது போகும்போது தனிநபர் தாக்குதல் என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் திராவிட இயக்க, மார்க்சிஸ்ட் கோஷ்டி சம்பிரதாயப்படி, கிருஷ்ணானந்த் என்னை ஃபாசிஸ்ட் என்று வர்ணிக்கலானார். “நீங்கள் எதிர்பார்க்கிற விதமாக நான் பேசமுடியாது’ என்று என்னிடம் சொன்னார்.

“எனது வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளிவர வேண்டும் என்று நான் எதிர்பார்க்க மாட்டேன், ஆனால் கலந்துரையாடல் என்று சொல்லிவிட்டுத் தலைப்பின் பிரகாரம் பேச வேண்டியதைப் பேசாமல் வேறுவிதமாகப் பேசிக்கொண்டிருந்தால் அதற்கு மாற்றாகப் பேசவும் முடிகிற மாதிரி சமவாய்ப்பு இருக்க வேண்டும், தராசு நேராகப் பிடிக்கப்பட வேண்டும்; ஒரு பக்கமாகவே சாயக் கூடாது’ என்று அவருக்கு பதில் சொன்னேன். எனது இரு கைகளையும் படுக்கை வாட்டில் நேர்க்கோடு போலச் சமவாக்கில் காண்பித்துவிட்டு இடதுபுறமாக அது சாய்வதையும் உணர்த்தினேன். தான் அரங்க மேடையில் அமர்ந்துகொண்டு தன் மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கும் கிருஷ்ணானந்த், நான் பேசுவதை ஆட்சேபித்துவிட்டு, என்னை ஃபாசிஸ்ட் என்று வர்ணிப்பதும் தன்னை ஒரு ஜனநாயகவாதிபோலக் காண்பித்துக் கொள்வதும் சரியான வேடிக்கை என்றும் அவருக்கு பதிலிறுத்தேன்.

கிருஷ்ணானந்த் என் மீதான தனது தனி நபர் தாக்குதலைத் தொடர்ந்தார். நான் எனது கோணத்தில் ஈராக் நிலவரம் குறித்துப் பேசியதாலோ என்னவோ, எனக்கு அமெரிக்காவின் வீஸா கிடைப்பது நிச்சயம் என்று கேலி செய்தார். தமக்குச் சீனா, கூபா ஆகியவற்றின் வீஸா கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அமெரிக்க எதிர்ப்புப் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறாரா என்று பதிலுக்கு நானும் அவரைக் கேட்டேன்.

அவ்வளவில் கண்ணன் கலந்துரையாடல் முற்றுப் பெற விரும்பி, சல்மாவைச் சுருக்கமாக முடிவுரை புகன்று சம்பிரதாயப்படி கலந்துரையாடலை நிறைவு செய்யுமாறு கூறினார்.

தஸ்லிமாவை மறந்த சல்மா!

சல்மாவும் தஸ்லிமாவை மறந்தவராய், இங்கே ஒரு தரப்பினர் பேசுவதைக் கேட்பதற்குக் கூட சகிப்புத் தன்மை இல்லாது போய்விட்டது என்று குற்றம் சாட்டுவதுபோல அவசரமாக ஏதோ சொல்லிவிட்டுக் கலந்துரையாடலை முடித்துவைக்கும் சடங்கைத் தலைமை வகித்த கிருஷ்ணானந்துக்குக் கொடுக்காமல் தானே முடித்து வைத்தார்.

எது எப்படிப் போனாலும் கிருஷ்ணானந்த் தேவையில்லாமல் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களை இழுத்ததோடு, விவரம் தெரியாமல் அவர் மீது அபாண்டமாக ஒரு பழியையும் சுமத்தியதன் மூலம் “சரியான பார்வையில் சியாமா பிரசாத் முகர்ஜி’ என்ற தலைப்பில் ஒரு விரிவான கட்டுரை எழுதியாக வேண்டிய கட்டாயத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார். உடல் நலிந்துவரும் நிலையில், விரல்கள் வலிக்கவும் கண்கள் நோகவும் பழைய ஆவணங்களையெல்லாம் தேடிப் புரட்டி எழுத வேண்டியிருப்பது சுகமான வேலையல்ல என்றாலும் சியாமா பிரசாத் முகர்ஜி என்கிற நாட்டின் மானத்திற்காகக் காஷ்மீர் சிறையில் சூழ்ச்சிகளை எதிர்கொண்டு, தனது உயிரையே பலிகொடுத்த தலை சிறந்த தேசபக்தரைப் பற்றி இதுவரை முற்றிலுமாகவோ சரியாகவோ அறியாதவர்களுக்குப் பயன்படுமாதலால் அந்த வேலையை நான் செய்துதானாக வேண்டும்.

ஜூன் மாதம் 23 ஆம் தேதி சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு தினம். அதாவது
காஷ்மீர்ச் சிறையில் அவர் நஞ்சிட்டுக் கொல்லப்பட்ட தினம். அதற்குள்ளாகவாவது எழுதப் பார்க்கிறேன். அங்கீகாரம் ஏதும் இல்லாதவன்தான் என்றாலும் அதனைப் பிரசுரிப்பதற்கு யாராவது இல்லாமலா போய்விடுவார்கள்? பார்க்கலாம்!


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்