தமிழினத்தின் அழுகுரல் ..தமிழ்முரசுவுக்கு “நச்”சுனு இருக்கா..??

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

புதியமாதவி


தமிழினத்தின் அழுகுரல் ..தமிழ்முரசுவுக்கு “நச்”சுனு இருக்கா..??
புதியமாதவி

எப்போதெல்லாம் ” நச்” சுனு இருக்கு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்?

அவள் கச்சிதமாக உடை அணிந்திருந்தாள்.
அவளுக்கு அவள் உடை மிகவும் பொருத்தமாக இருந்தது.
>அவள் சும்மா ‘நச்’சுனு இருந்தாடா< அவன் ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கிறான். பெண்கள் அவனைப் பற்றிச் சொல்லும்போது சொல்லக்கூடும் > பார்த்தேன்பா..சும்மா ‘நச்’சுனு இருக்கான்!’< அவர் இரண்டே வார்த்தையில் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு இறங்கிவிட்டார். அவருடைய பேச்சைப் பற்றி குறிப்பிடும்போது > நச் சுனு இரண்டே வார்த்தையில் சொல்லிட்டு இறங்கிட்டார்ப்பா< பக்கம் பக்கமாக அவரைப் பற்றி வதந்தி செய்திகள். இதெல்லாம் உண்மையா என்று பத்திரிகை நிருபர்கள் அவரைச் சுற்றி வளைக்கிறார்கள். ஸ்ஸோ வாட்.. அலட்டிக்கொள்ளாமல் அவர் சொல்லிவிட்டு காரில் ஏறிவிடுகிறார். பத்திரிகை நிருபர்கள் அவருடைய பதிலை அலட்டிக்கொள்ளாமல் 'நச்'சுனு பதில்சொன்னார் என்கிறார்கள். இப்படி 'நச்'சுனு சொல்வதை இடம் பொருள் சுட்டி விளக்கவுரை நிறைய எழுதலாம். ஆனால் ஒரு சோகச்செய்தியைச் சொல்லும்போது "நச்'சுனு இருந்தது என்று யாரும் சொல்வதில்லை. கடந்த சனி, ஞாயிறு( 24, 25/6/06) நான் சன் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தப் போது திரைப்படத்தின் விளம்பர நேரத்தில் கால் மணி நேரத்திற்கு ஒருமுறை காட்டப்பட்ட தமிழ்முரசுவின் விளம்பரச் செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "தமிழர் பகுதியில் விமானங்கள் குண்டுவீச்சு" என்ற தலைப்பு செய்தியைக் காட்டும் தமிழ்முரசு பத்திரிகை.. உடனே ஒலிக்கிறது இசை .. "சும்மா 'நச்'சுனு இருக்கு தமிழ்முரசு............... தமிழ்முரசு நம்பர் 1 நாளிதழ்.. என்ற விளம்பர வாசகம் அடுத்து வருகிறது. எந்தச் செய்தியை தலைப்பு செய்தியாக காட்டுகிறோம்? அந்தச் செய்தி விளம்பரத்திற்கும் மகிழ்ச்சியான இசை கலந்த 'சும்மா நச் சுனு இருக்கு தமிழ்முரசு ' என்று பாடுவதற்குமான செய்தியா? இந்தச் செய்தியை ஒட்டு மொத்த தமிழகமும் தமிழகத் தலைவர்களும் தமிழ் நாட்டு தமிழ் ஆர்வலர்களும் பத்திரிகைகளும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்..! அவர்களுக்கு இந்தச் செய்தியிலும் செய்திக்குப் பின் ஒலிக்கும் இசையிலும் தொனிக்கும் அபத்தம் புரியவில்லையா? சரி இந்தச் செய்தியை நான் மாற்றி வேறுமாதிரி எழுதிக்காட்டுகிறேன். "நள்ளிரவில் டாக்டர் கலைஞரின் கைது! இழுத்துச் செல்கிறார்கள் .. புகைப்படத்துடன் தலைப்பு செய்தி.." இதைக் காட்டிவிட்டு அடுத்து காட்டுகிறார்கள் ..'சும்மா நச் சுனு இருக்கு தமிழ்முரசு.. தமிழ்முரசு நம்பர் 1 நாளிதழ்..யோசித்து பாருங்கள். கற்பனை செய்து பார்க்கும்போது கூட வலிக்கிறது அல்லவா. எனக்கும்தான் இப்படி ஒரு உதாரணத்தை எழுதுவதற்கும் வலிக்கிறது. ஆனால் முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்றாகிவிட்ட பின் எனக்கு வேறு வழியில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். இப்படி ஓர் உதாரணத்தை எழுதினாலாவது தமிழ்முரசுக்கு தான் எதை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறோம் என்று புரியாதா என்ற நப்பாசையில் எழுதுகிறேன். என்ன செய்யட்டும்? எதை எல்லாம் பொறுத்துக் கொள்வது? இப்படித்தான் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பிய அண்ணாமலை மெகா தொடரில் ஒரு வில்லி கதாபாத்திரத்திற்கு 'தமிழரசி' என்று பெயர் வைத்திருந்தார்கள். கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது. ஆனால் சன் தொலைக்காட்சி, ராடன் நிறுவனத்தின் ராதிகா சரத்குமார் இவர்கள் மீது இருந்த நம்பிக்கை அந்த நெருடலை பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்தது. இது வேண்டும் என்றே செய்த காரியமல்ல என்ற நம்பிக்கை அப்போதும் இப்போதும்., பெயரில் என்ன இருக்கிறது? என்ற விமர்சனத்தனமும் சேர்ந்து கொண்டது. இப்போதும் தமிழ்முரசு பத்திரிகை இந்தச் செய்தியை வேண்டும் என்றே இப்படிப்பட்ட தலைப்பு செய்தியுடன் வெளியிடுவதாக குற்றம் சாட்டுவது என் நோக்கமல்ல, ஆனால் இது சுட்டிக்காட்டப்பட வேண்டிய குற்றமே என்பதால் சொல்ல வேண்டிய நிலை. திருத்திக்கொள்ளுமா தமிழ்முரசு? ------------------------------------

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை