பழைய பாண்டம் – புதிய பண்டம்

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

குமரிமைந்தன்.


குமரிமைந்தன்

(Geetham.net இணையதளத்தில் குமரி நாடு என்ற தலைப்பில் வெளியான கார்க்கி மற்றும் அனைத்து நண்பர்களின் கருத்தாடல்களின் விளைவு இக்கட்டுரை.)

முக்கழகங்களும் தமிழ் இலக்கியம் கூறும் இரு கடற்கோள்களும் அன்றி அவற்றுக்கு முன்னும் பின்னும் கூட கடற்கோள்கள் நிகழ்ந்துள்ளமைக்கு நம் பண்பாட்டில் தடயங்கள் உள்ளன. கார்க்கி சரியாகக் குறிப்பிடுவது போல் மனிதனின் புறமயிர் உதிர்வு நிகழ்ந்தது சுறவக்கோட்டை (மகர ரேகை Tropic of capricon) ஒட்டிய பாலைவனத்துக்கும் அதனைத் தொடர்ந்துள்ள தென்முனைப் பனிப்பகுதிகளுக்கும் இடையிலிருக்க வேண்டும். அங்குள்ள பகலில் தாங்கொணா வெப்பமும் இரவில் தாங்கொணாக் குளிரும் இரு வேளைகளிலும் ஈரமில்லாக் காற்றும் தோலாடையின் தேவையை ஏற்படுத்தியிருக்கும். தோலால் பொதியப்பட்ட உடம்புக்கு இயற்கையான மயிர்ப் போர்வை தேவையில்லாமல் அது உதிர்ந்திருக்கும். பனிப்படர்வால் நீர் உலர்ந்து உப்பு படிந்திருந்த இடங்களில் செத்த விலங்குகளின் தோல் அழுகாமல் இருப்பதைப் பார்த்து தோல் பதனிடும் தொழில்நுட்பம் உருவாகியிருக்கும். நம் தொன்மங்களில் ரிசபன் என்று ஒருவன் வருகிறான். ரிசபம் என்றால் காளைமாடு; ரிசபன் என்பது மாடன் என்பதன் சமற்கிருத வடிவம். சிவன், சமண சமயத்தாரின் முதல் தீர்த்தங்கரர் விருசபதேவர். சிவனுடைய தோலாடை தோலை பதப்படுத்தி அடையாக்கிக் கொண்டதன் அடையாளம்.

ரிசபன் தன் உடலில் மலத்தைப் பூசிக்கொண்டு காட்டில் அலைந்ததாக சமற்கிருதத் தொன்மங்களிலிருந்து அபிதான சிந்தாமணி செய்தி தொகுத்துத் தருகிறது. அதனால் தான் சிவனைப் பித்தன் என்கிறார்கள்போலும். தோல் பதனிடும் போது உண்டாகும் முடை நாற்றம் இந்த விளக்கத்துக்குக் காரணமாகலாம். சிந்து சமவெளி முத்திரைகளில் ஓகத்திலிருக்கும் சிவனுடையது என்று கூறப்படும் வடிவத்தின் கால்கள் எந்த ஓக இருக்கைக்கும் (ஆசனத்துக்கும்) பொருந்துவதில்லை. செருப்பு தைக்கும் செம்மார்கள் மட்டுமே அவ்வாறு இருப்பார்கள். சிந்து சமவெளியின் மேற்படி வடிவத்தின் தலையில் உள்ள கொம்புகளையும் அதனைச் சுற்றி பொறிக்கப்பட்ட பல்வேறு விலங்குகளையும் பார்த்தால் அது செம்மானின் வடிவம் என்பது உறுதிப்படும். சிவந்த பொருட்களால் தோல் பதனிடும் செம்மார் என்ற சொல்லுக்கும் சிவனுக்கும் சிவப்பு பொது.

நம் மரபில் மகிடம் மையிடம் (மை = கருமை – இருக்கும் இடம் மையிடம் → மகிசம் – சமற்கிருதம்; மை + இல் = மயில்; கூ + இல் = குயில் – கால்டுவெல்) எருமையைக் குறிக்கும். உலகில் பல்வேறு தேவைகளுக்கான தோலை வழங்கியதால் அத்தொழிலில் ஏற்பட்டிருந்த பூசல்களால் அவர்களை மகிசாசுரர்கள் என்றனர். தோல் தொழிலில் மேம்பட்டிருந்த மகிடர்களை (ஆந்திரத்தில் இவர்களை மடிகர்கள் என்கின்றனர். தமிழகத்தில் பகடைகள் என்கின்றனர். பகடு – எருமை) வென்றதால் மகிடாசுர மார்த்தனி என்றழைக்கப்படும் காளியை தோல் பதனிடும் தொழிலைத் தொடங்கி வைத்த சிவனுக்கு திருமணம் செய்து வைத்துப் பார்த்தனர் நம் தொன்மர்கள். ஆனால் இருவரும் ஒரே கருவறையில் சேர்ந்திருக்கும் கோயில் ஒன்று கூடத் தமிழகத்தில் இல்லை. இன்றும் அவர்கள் தனித்தனி கருவறைகளில் தான் வாழ்கின்றனர்.

புவியியங்கியலாளர்கள் (Geologists) குறிப்பிடுவது போல் கண்டப்பெயர்ச்சியின் போது, அதாவது இந்தியா ஆசியாக் கண்டத்தை நோக்கி தெற்கிருந்து, காண்டவனத்திலிருந்து உடைந்து சென்று அதனுடன் இணைவதற்கு முன் மனித இனம் தோன்றியிருக்கவில்லை என்று கூறுவது தவறு. அது மட்டுமல்ல, உலகமெல்லாம் மக்களின் இலக்கியப் பதிவுகளாகவும் செவிவழிச் செய்திகளாகவும் மரபுகளாகவும் நிலவுகின்ற கடற்கோள்கள் நிகழ்ந்த காலங்களில் மனிதன் தோன்றியிருக்கவில்லை என்று இவர்கள் கூறுகின்றனர். புவியியங்கியலார் கூறும் முடிவுகள் இவர்கள் பெற்ற புலனங்களிலிருந்து ஊய்தறிந்தவை. அதே நேரத்தில் மக்களின் பதிவுகள் என்றோ வாழ்ந்த மக்கள் கண்ட உண்மைகள். புவியியங்கியலாரின் காலக் கணிப்புகள் இன்று வரை ஒரு திடமான விடையைத் தரவில்லை. எனவே இவர்களின் காலக்கணிப்புகள் சரியானவையா என்பதற்கு மனிதர்களின் பதிவுகள் தாம் உரைக்கல்லாக முடியுமேயொழிய மக்களின் பதிவுகளைச் சரிபார்க்க இன்றைய புவியியங்கியலாளர்களால் இயலாது. மனிதர்களின் தோற்றக்காலம் பற்றிய ஆய்வுகளும் இன்னும் திடமான விடைகளைத் தர இயலாதவையாகவே உள்ளன.

எடுத்துக்காட்டாக, பொய்களையே சொல்வதற்கென்று திரு.சு.கி. செயகரன் என்பார் எழுதி நாகர்கோயில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள குமரி நீலநீட்சி (இரண்டாம் பதிப்பு -2004 அக்டோபர்) எனும் நூல் பாவாணர் அடிக்கடி கூறும் “எண்ணெயும் உண்மையும் மேலே வந்தே தீரும்” என்பது போல் சில அரிய உண்மைகளைத் தந்துள்ளது. திபெத்தில் உள்ள வெள்ளப்பெருக்குக் கதை: “ஒரு பெரும் வெள்ளத்தால் உலகம் முழுகும் நிலையில் இருந்தது. கடவுள் மக்கள் பட்ட வேதனையைக் கண்டு வங்காளம் வழியாக நீரை ஓடவிட்டு வெள்ளத்தை வற்றச் செய்தார். அப்போது திபெத்தில் வாழ்ந்த மக்கள் குரங்குகளை விட சற்றே மேம்பட்ட நிலையில் இருந்தனர். இவர்களை மேம்படுத்தவும் அறிவுப் பாதையில் இட்டுச் செல்லுமுகமாகவும் சில சான்றோர்களைக் கடவுள் இங்கு அனுப்பியுள்ளதாகக் கூறுகிறது”, பக். 64

அந்த நூலில் தாலமி என்ற கிரேக்க அறிஞர் வரைந்த உலகப்பபடம் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிறார். “அப்பகுதிகளை உலகப் படத்தில் வரைந்த போது செய்த பிழைகள் பல. அவற்றில் முக்கியமானவை இரண்டு : இந்தியா ஒரு தீபகற்பம் என்பது தெரியாமல் இந்தியாவை ஒரு பெரும் தீவாகக் காட்டியது மற்றும் இலங்கையின் அமைப்பை ஏறத்தாழ பதினான்கு மடங்கு மிகைப்படுத்திக் காட்டியது” (பக். 35).

தாலமியின் உலக வரைபடம் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட வரைபடங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவை ஒன்றுக்கொன்று அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவற்றுள் ஒன்று இன்றைய உலக வரைபடத்தின் திரிபடைந்த வடிவம் என்று சொல்லலாம். இன்றைய அக்க மற்றும் நேர் வரைகளே (Latitudes and Longitudes) அதிலும் தரப்பட்டுள்ளன.

ஆனால் பிற வரைபடங்களில் அக்க, நேர் வரைகள் மாறுபட்டுள்ளன. அத்துடன் ஒரு படத்தில் இந்தியா என்பது ஒரு தீவாகக் காட்டப்பட்டுள்ளது. வேறு படங்களில் தீவாகக் காட்டப்பட்டுள்ள பகுதியில் “தாம்பிரபேன்” என்ற பெயரில் இலங்கை என்று காட்டப்பட்டுள்ளது. திரு.சு.கி. செயகரன் இந்த இரண்டு படங்களில் எதையுமே முழுமையாகக் காட்டாமல் அவற்றில் ஒன்றில் தாம்பிரபேன் என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை மட்டும் தனியாகப் போட்டுவிட்டு இந்தியா தீவாகக் காட்டப்பட்டிருப்பதும் “தாம்பிரபேன்” காட்டப்பட்டுள்ளதும் ஒரே படம் என்பது போன்ற ஒரு பொய்மையை உருவாக்கியுள்ளார்.

எனக்கு நண்பர் ம. எட்வின் பிரகாசு 6 உலக வரைபடங்களை வலைத் தளங்களிலிருந்து எடுத்துக் கொடுத்துள்ளார்.

(1) http://libraries.uta.edu/specColl/Exhibits/wenromaps/tm5-plolemy 1508.jpg

இது இன்றைய உலகப் படத்தைப் போன்று தோற்றமளிப்பது.

(2) http://www.ibiblio.org/expo/vatican.exhibit/exhibit/d-mathematics/images/math 15.jpg

இதில் “இந்தியா” ஒரு தீவு போன்று ஒரு புள்ளியில் மட்டும் “ஆசியா”வோடு தொடர்பு கொண்டுள்ளது. இதைத் தான் சு.கி. செயகரன் முதல் பிழையாகச் சுட்டியுள்ளார் போலும். ஆனால் இந்தப் படத்தில் குமரி(இந்து)மாக்கடல் பகுதி மட்டுமே துண்டித்துத் தரப்பட்டுள்ளது.

(3) http://www.wls.wels.net/conted/science/day03/PTOLOMY’S %20GLOBE.JPG.

(4) http://upload.wikimedia.org/wikipedia/en/2/23/PtolomyWorldMap.jpg.

(5) http://www.geocities.com/mhaille21/Ptol1Col.jpg

(6) http://www.nmm.ac.uk/upload/img/C8584-2.jpg.

இந்த இறுதி நான்குக்கு இடையில் பெரும் வேறுபாடுகள் இல்லை. இதில் காட்டப்பட்டிருக்கும் “தாப்பிரபேனை” அடுத்துள்ளதாகக் கூறப்படும் “இந்தியா”வுக்கும் (2) ஆம் படத்தில் “இந்தியா” தொட்டுக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ள “ஆசியா”வுக்கும் பெரும் வேறுபாடு இல்லை.

தாலமியின் உலக வரைபடம் ஓர் ஏமாற்று என்று கூறுவோரும் உண்டு. அதில் உண்மையும் உண்டு தவறும் உண்டு. இன்று துல்லியமானதாகக் கூறப்படும் உலக திணைப்படம் வரையும் முயற்சியில் முதலில் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடத்தைத் தாலமியின் வரைபடம் என்று எவரோ கூறி வெளியிட்டிருக்கலாம் (முதல் படம்) என்று தோன்றுகிறது. (2) ஆம் வரைபடம் பெரும்பாலும் தாலமிக்குக் கிடைத்த ஒரு பழம் வரைபடம் என்று தோன்றுகிறது. அதில் இந்தியா ஒரு தீவாகக் காட்டப்பட்டிருப்பதால் அதை நீக்கிவிட்டு அதன் இடத்தில் “தாப்பிரபேனை” அவர் வைத்துள்ளார் போலும். ஆனால் “தாப்பிரபேன்” இந்தியாவிலிருந்து பலநாள் கடல் செலவில் செல்ல வேண்டிய இடம் என்று அரேபியக் கடலோடிகளும் அங்கு நிழல் தெற்கு நோக்கி மட்டும் விழும் என்றும் அதனைச் சுற்றிக் கடலில் வந்தவர்கள் எவருமில்லை என்றும் கிரேக்கர்களும் எழுதி வைத்துள்ளனர் (பார்க்க “தென்னிலங்கை” கட்டுரை இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், ஆசிரியர் குமரிமைந்தன், வேங்கை பதிப்பகம், 80 அ, மேலமாசி வீதி, மதுரை – 625 001). அவற்றைப் பார்த்து அவர் காலத்தில் “தாப்பிரபேன்” என்று அழைக்கப்பட்ட இலங்கைத் தீவுக்குக் கூடுதல் பரப்பை அளித்து தாலமி உலகப்படம் வரைந்து விட்டார் போலும்.

மேலே கூறிய (2) ஆம் திணைப்படம் திபேத் மக்களிடையில் வழங்கும் வெள்ளப்பெருக்குக் கதைக்குப் பொருந்தி வருகிறது. கிழக்குக் கோடியில் ஒரேயொரு புள்ளியில் ஆசியாவைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்தியா மேலும் நெருங்கி மேற்குக் கோடியிலும் வால்போல் உள்ள பகுதியில் தொட்டு நெருங்கினால் இடையில் சிக்கிய நீர்மட்டம் உயர்வது இயல்பு. அவ்வாறு உயர்ந்து அந்த நீர் கீழ்க்கோடியில் உடைத்துக் கொண்டு இன்றைய கங்கைச் சமவெளி உருவாக வழியமைத்ததையே திபெத்திய வெள்ளப் பெருக்குக் கதை கூறுகிறது எனலாம்.

அப்படியானால் இந்த வெள்ளப்பெருக்குக் கதை கூறும் நிகழ்ச்சி நடைபெறுவதற்குப் பல இலக்கம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகத்திணைப் படத்தை வரைந்திருக்க வேண்டும். எரிக் வான் டெனிக்கன் போன்ற ஐரோப்பிய-அமெரிக்கர்களைக் கேட்டால் இது வேறு உலகங்களிலிருந்து நம்மை விட நாகரிகத்தில் உயர்ந்த மனிதர்கள் இங்கு வந்து வரைந்த படமாக்கும் என்பர். ஏனென்றால் உலகில் சொந்தமாக நாகரிகத்தை வளர்ப்பதற்கு வெள்ளைத் தோலர்களால் தான் முடியும் என்று நம்மை நம்ப வைப்பது அவர்களது குறிக்கோள். ஆனால் உண்மை அதுவல்ல, உலகின் தென் அரைக் கோளத்தில் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் வரைந்த உலகத் திணைப்படத்தின் ஒரு பகுதி தான் இது.

“கோண்ட்வானாக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியத் துணைக்கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கிலிருந்த லாரோசியா என்ற பெருங்கண்டத்தை நெருங்க, அப்பகுதியில் இருந்த டெதிசு எனும் ஆதிக்கடல் பரப்பு சிறுத்து, இடைப்பட்ட படிவங்கள் இமயமலை எனும் மடிப்பு மலையாக உயர்ந்தன. இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம். இது நடந்தது சுமார் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அதற்கும் 130 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது”. (அழுத்தம் செயகரனுடையது பார்க்க, அதே நூல் பக்: 59.)

இந்தக் கூற்றிலிருந்து பல உண்மைகளைப் பெற முடியும்:

(1) மனிதர்கள் தோன்றி (135-130) = 5 மில்லியன், அதாவது ஐம்பது இலக்கம் ஆண்டுகள் ஆயின என்பது. ஆனால் சிக்கல் என்னவென்றால் இந்த ஆசிரியர் இதே நூலில் மனிதன் தோன்றிய காலமாக ஐந்து இடங்களில் 5 வெவ்வேறு காலங்களைக் கூறுகிறார். அவற்றுள் 17-ஆம் பக்கத்தில் “ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆதிமனிதர் தோன்றிய பின்னர் கண்டங்கள் சில மீற்றர்கள் மட்டுமே நகர்ந்துள்ளன”. (தன்னினைவில்லாதவர் போன்று எழுதும் இவர் போன்றோரது படைப்புகளை ஆகா ஓகோவென்று புகழும் தமிழகத்து மதிப்புரையாளர்களை நினைக்கும்போது இன்றைய கல்வி முறை சிந்தனை என்ற புலனை எவ்வளவு அழிந்து விட்டது என்னும் திடுக்கிட வைக்கும் உண்மை புரிகிறது.)

(2) டெதிசு கடல் மறைந்து 135 மில்லியன் ஆண்டுகள் ஆயிற்று என்றால் அதற்கும் முன்பு டெதிசு கடலைக் காட்டும் வரைபடத்தை மனிதர்கள் வரைந்துள்ளனர் என்றால் மனிதன் புவிமேல் அதற்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் அதாவது 14 அல்லது 15 கோடி ஆண்டுகளுக்கும் முன்பே தோன்றிவிட்டான் என்பது புலனாகிறது.

(3) காட் எலியட் என்பவர் லெமூரிய மனித இனம் 13.5 முதல் 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்றும் அவர்களிலிருந்து இருபடிகள் முன்னேறிய இனமே ஆரிய இனம் என்று கூறுவதாகவும் திரு.சு.கி. செயகரன் கூறுகிறார். அப்போது டினோசர்கள் லெமூரியாவில் வாழ்ந்தன என்று காட் எலியட் கூறுவதாகக் கூறுகிறார். ஆரிய இனத்தை உயர்த்துவதற்காக உருவானதே லெமூரியாக் கோட்பாடு என்று இதை வைத்து சு.கி.செயகரன் கூறுகிறார். ஆனால் உண்மை அதுவல்ல எர்ணசுட்டு எக்கல் என்பார் உருவாக்கியது லெமூரியக் கோட்பாடு. மனிதன் தோன்றி வளர்ந்த நிலம் லெமூரியா என்பதோடு அவரது வேலை முடிந்தது. இதன் மூலம் ஐரோப்பா அல்லாத ஒரு மண்ணில் மனிதன் தோன்றி வளர்ந்ததாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக அதில் “உள்ளுணர்வால் உணர்ந்த செய்திகளை”ப் புகுத்தியவர் இறைநெறி (பிரம்மஞான)க் கழகத்தினர். இந்தியாவினுள் “ஆரிய” வேதங்களின் ஆட்சியை அழிக்கிறார்கள் ஆங்கிலேயர்கள் என்று பரப்பி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பார்ப்பனர்களிடையில் ஊடுருவத் திட்டமிட்ட அமெரிக்க முயற்சி தான் இறைநெறிக் கழகம். அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு மும்மையில் காலூன்ற முயன்ற அதனை அங்கு எவரும் ஏறெடுத்தும் பார்க்காததால் சென்னையில் காலூன்றிய அதனுள் உலகிலுள்ள “ஆரிய இன” வெறியர்களும் சாதி வெறியர்களும் புகுந்து கொண்டனர். இந்தியாவில் இறைநெறிக் கழகத்திலிருந்து அமெரிக்கப் பிடியை விலக்க அன்னிபெசன்றைக் கருவாக்கிய பிரிட்டனின் தந்திரம் குறிப்பிடத்தக்கது.

நமக்கு வேண்டியது டெத்திசுக் கடல் மறைந்த 13.5 கோடி ஆண்டுக்கும் லெமூரியாவில் மனிதர்கள் தோன்றியதாக காட் எலியட் கூறிய 13.5 – 22.5 கோடி ஆண்டுக்கும் தற்செயலாகவோ, ஏதோ ஏற்பட்ட இணைவை எண்ணிப் பார்க்கத் தோன்றுவது தான். இடைப்பிறவரலாக ஒன்றைக் கேட்கிறேன். கடாரம் (சுமத்திரா) மீது படையெடுத்த இராசேந்திரன் பிடித்த நாடுகளில் “இலாமுரிதேசம்” என்ற ஒன்று இருந்ததாக அவனது மெய்கீர்த்தி கூறுகிறது. அந்த வட்டாரத்தில் அத்தகைய பெயருள்ள பகுதி எது என்று அப்பகுதிவாழ் தமிழர்கள் கூற முடியுமா? லெமூரியா என்ற பெயர் நாம் பொதுவாகக் கருதுவது போல் லெமூர் எனும் குரங்குகளிலிருந்து வந்ததா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பது இதிலிருந்து ஒரு வேளை புலப்படலாம்.

இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களில் சுமத்ரா (சு + மதுரா) = நன்மதுரை அல்லது மூலமதுரை, போர்னியோ, புரூனெய் (பொருனை) போன்ற பகுதிகள் உள்ளன.

இனி தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள், உலக மக்களின் வரலாற்றையும் குழப்புவது மாக்சுமுல்லர் வகுத்துத் தந்த “ஆரிய இன”க் கோட்பாடு. அறிவொளிக் காலம் எனப்படும் 16 ஆம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியரின் உலக வலம் அவர்களுக்குப் பல்வேறு மொழிகளை அறிய வைத்தது. அவற்றுள் முதலில் அவர்கள் அறிந்த சமற்கிருத்ததுக்கும் கிரேக்க, இலத்தீன் மொழிகளுக்கும் இருந்த சில தொடர்புகளை வைத்து “ஆரியர்” என்ற இனத்தை செருமானியரான மாக்சுமுல்லர் உருவாக்கி அவர்களுக்கு செருமானியரின் உடல் தோற்றத்தையே சொந்தமாகக் காட்டினார். ஏறக்குறைய அதே காலகட்டத்தில் வாழ்ந்த கால்டுவெல் ஐயரும் நண்ணில (மத்திய தரை)க் கடல் பகுதி உட்படட 6 பகுதிகளிலிருந்து “திராவிட இனத்தவர்” இந்தியாவில் குடியேறியதாக தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் எழுதினார். இருவருக்கும் அறிஞர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. மாக்சு முல்லர் தான் எழுதிய Biography of words என்ற நூலில் தான் ஒன்றோடொன்று உறவுடைய மொழிகளைப் பேசும் மக்கள் இருந்ததாகத் தான் சொன்னதாகவும் அதனடிப்படையில் மனித இனங்களைக் கற்பிப்பது “பாவம்” என்றும் கூறி அதை மறுத்தார். அதே போல் 1875 இல் கால்டுவெல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பில் பிற்சேர்க்கையாக மனித இனங்களைப் பற்றிய விரிவான விளக்கங்களுடன் உடலின் நிறம், முகத்தோற்றம், மயிரமைப்பு முதலியவை வாழும் சூழல், உணவு ஆகியவற்றால் எளிதில் மாற்றமடைந்து விடுவதாகவும் மண்டையோட்டு நீள அகல விகிதம் தான் இன அடையாளமென்றும் அந்த வகையில் திராவிட ஆரிய மக்கள் எனப்படுவோரிடையில் வேறுபாடு இல்லையென்றும் எழுதினார். மாக்சுமுல்லர் கூறியதை எவரும் கண்டுகொள்ளவில்லை. ஐரோப்பாவில் செருமனி-பிரிட்டன் ஆதிக்க அரசியலுக்கும் இந்தியாவில் பார்ப்பன-வெள்ளாள ஆதிக்க அரசியலுக்கும் இவை தேவைப்பட்டன. கால்டுவெலாரின் நூலை மொழிபெயர்த்தவர்கள் அவரது பிற்சேர்க்கையைத் திட்டமிட்டு மறைந்துள்ளனர்.

முதலில் மனிதன் தோன்றிய நிலம் குமரிக் கண்டமே. அங்கிருந்து வெவ்வேறு காலகட்டங்களிலிருந்த மொழி, நாகரிக வளர்ச்சிகளுடன் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றவர்கள் ஆங்காங்கு தமக்குரிய வளர்ச்சியை அடைந்தோ அல்லது தேங்கியோ நிற்கின்றனர். அதுபோன்றே குமரிக் கண்டத்தில் தோன்றிய மொழியே மேலே கூறிய மாற்றங்களை ஆங்காங்குள்ள மக்களுடன் எய்தி நிற்கிறது. குமரிக் கண்டத்தில் தொழில்நுட்பம், ஆட்சி போன்றவை வளர்ச்சியடைந்த போது உருவான குழுஉக் குறி மொழி பூசகர்கள்-அரசர்கள் கூட்டணியால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டு படிப்படியாக வேதமொழியாகவும் சமற்கிருதமாகவும் உருவாகி நிற்கின்றன. உலகில் நாகரிக வளர்ச்சிடைந்த மக்களின் மொழிகளில் அடித்தளத்தில் தமிழின் சாயலையும் மேல் மட்டத்தில் சமற்கிருதத்தின் சாயலையும் காணலாம். ஆங்கிலச் செய்யுளும் தமிழின் உரைநடையும். எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் வைப்பில் இணையானவை. அதுபோலவே தமிழின் செய்யுளும் ஆங்கிலத்தின் உரைநடையும். சொற்களைப் பொறுத்தவரை ஐரோப்பிய மொழிகளைப் பொறுத்தவரை அவை சமற்கிருதத்தை விடத் தமிழுக்கு மிக மிக நெருக்கமானவை. உலகமெலாம் எழுத்தறிவற்ற மக்களின் பேச்சுவழக்குகள் தமிழுக்கு மிக நெருக்கமானவை.

உலகில் அகழ்வாய்வுச் சான்று ஒன்று கூட இன்றி அனைத்து வரலாற்றுக் கோட்பாடுகளையும் விடச் செல்வாக்குடன் கேள்வி கேட்பாரின்றி நிற்பது “ஆரிய இனக் கோட்பாடு” ஒன்று தான். அந்தக் கோட்பாட்டைத் தூக்கிக் குப்பையில் வீசினால் தான் உண்மையான குமரிக் கண்ட, தமிழக, இந்திய, ஏன் உலக வரலாறு மட்டுமின்றி மனித வரலாறே வெளிச்சத்துக்கு வரும்.

பாவாணர் முதல் பல்வேறு தமிழ் ஆய்வர்களும் தமிழ் இலக்கியங்களை விட சமற்கிருத நூல்களிலிருந்து தான் குமரிக் கண்டம் பற்றிக் கூடுதலான செய்திகளைத் தர முடிகிறது. தென் அரைக் கோளத்தில் இருந்த “ரூட்டா” என்ற நிலப்பகுதி கடலினுள் முழுகிய போது அங்கிருந்த மக்கள் சீனத்துக்கும் மேற்கு நோக்கியும் பாரதத்துக்கும் குடிபெயர்ந்தனர் என்று கூறுகிறது இருக்கு வேதம். மச்ச புராணம், வாயு புராணம் ஆகியவை கடற்கோள் பற்றி விரிவாகப் பேசுகின்றன.

நாக நாட்டை 700 காவதம் கடல் கொள்ளும் என்பதறிந்த பூருவ தேசத்து அரசன் படகில் மாவும் மரமும் புள்ளும் ஏற்றி குசராத்துக் கரையில் அவந்தி நாட்டில் கரையேறி காயங்கரை ஆற்றை அடைந்தான் என்கிறது “பழம் பிறப்புணர்ந்த காதை” மணிமேகலையில். அவர்கள் சிந்துக் கரையில் பரவி மேற்கு நோக்கிப் பாரசீகத்தையும் கிழக்கு நோக்கிக் கங்கைச் சமவெளியையும் அடைந்தனர். காயங்கரை ஆறு மணலிணுள் மறைந்துபோக கங்கையும் தொழுனை(யமுனை)யும் இணையும் இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மணலினுள் வந்து கலக்கும் சரசுவதி ஆறு என்று அதனை இன்றும் வழிபடுகின்றனர்.

சமற்கிருத நூல்களிலிருந்து அபிதான சிந்தமணி, கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி ஆகியவை திரட்டித் தரும் செய்திகளின் படி இமயமலையும் விந்திய மலையும் நில நடுக்கோட்டின் தெற்கிலிருந்து தொடங்கி வடக்கு நோக்கி நீண்டுகிடந்த இரு மலைத் தொடர்கள்; அவற்றுக்கு இடையில் இருந்த நிலம் நடுநாடு (மத்தியப் பிரதேசம்) என்ற செய்திகள் தெரிகின்றன. சீவகசிந்தாமணியில் வருகின்ற சச்சந்தனின் நடுநாடு இதுவாகலாம். இந்தியாவில் இருக்கின்ற மலைகள், ஆறுகளின் பெயர்கள் அனைத்தும் முழுகிப்போன நிலத்திலிருந்த மலைகள், ஆறுகளின் பெயர்களே. இந்தியாவில் கேரளத்திலும், சேலத்திலும் குமரி மாவட்டத்திலும் பறளியாறுகள் ஓடுகின்றன. நெல்லை மாவட்டத்திலும் குமரி மாவட்டத்திலும் தாமிரபரணியாறுகள் ஓடுகின்றன.

துவரைக் கோமான் என்பவன் இடைக் கழகத்தவன். கார்க்கி கூறுவது தவறு. துவார் என்றால் கதவு. கபாடம் என்றாலும் கதவு. கபாடபுரம் தான் துவாரகை →துவரை. தெற்கே கடலினுள் அமிழ்ந்த நிலத்துக்குத் துவரையம்பதி என்ற பெயர் உண்டு என்ற மரபு குமரி மாவட்டத்தில் உருவான அகிலத் திரட்டு அம்மானை என்ற நூலில் பதிவாகியுள்ளது. அய்யா ஒளி என்ற இதழில் நான் எழுதியுள்ள “துவரையம்பதி” என்ற கட்டுரை பார்க்க. கபாடபுரம் அழிந்த பின் அங்கிருந்து குசராத்துக் கரையில் குடியேறியவர்கள் தங்கள் நகரத்துக்குத் துவாரகை என்று பெயரிட்டனர்.

மகாபாரதம் மதுரை (மாத்ரா = மா + துறை → மாதுறை → மதுரை)யில் ஆண்ட கண்ணனை சிசுபாலன், என்ற நாக அரசன் துரத்த அவன் துவாரகையில் குடியேறியதாகக் கூறுகிறது. இதைக் குமரிக் கண்டத்தில் நிகழ்ந்த மதுரை → கபாடபுரம் இடப்பெயர்ச்சியை நினைவுகூரும் கதைக் கருவாகக் கொள்ளலாம்.

மகாபாரதம் குமரிக் கண்டத்தில் நடந்த நிகழ்வின் தொன்ம வடிவம். பாம்பைத் தோற்றக்குறியாகக் கொண்ட நூற்றுவர்க்கும் அதாவது நாகர்களுக்கும் இயற்கையில் அதன் எதிரியாகிய பருந்தைக் குலக்குறியாகக் கொண்ட கண்ணணுக்கும் அதாவது யாதவர்களுக்கும் நடந்த போர். அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் எரிக் வான டெனிக்கன் (பார்க்க Charists of Gods). காண்டவனத்தை (கோண்ட்வானா – காண்டவனம் இன்று இந்தியாவில் கோண்டு எனும் மக்கள் வாழும் பகுதியின் பெயர். கோண்டுவானா நிலம் என்று கண்டப்பெயர்ச்சிக்கு முன் தென் அரைக் கோளத்தில் அனைத்து நிலப்பரப்பும் திரண்டிருந்த நிலைக்கு ஏன் புவியியங்கியலாளர் பெயர் கொடுத்தனர்?) எரித்து அழிக்கப் புறப்பட்ட கண்ணணும் அருச்சுனனும் பயன்படுத்திய படைக்கலன் (அம்பு?) ஏற்படுத்திய விளைவுகளை நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் விளைவுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் அவர். அசுவத்தாமன் வீசிய ஓர் ஆயுதம் கருவிலிருந்த குழந்தைகள் அனைத்தையும் அழித்ததாம்.

நூற்றுவரும் சேரர்களின் முன்னோர் என்று பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை முரிஞ்சியூர் முடி நாகராயர் பாடிய பாடல் மூலம் தெரிய வருகிறது.

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைகி
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
(புறம் 1:13-16)

இதன் பொருள் ஐவரைப் பகைத்து போர்க்களத்தில் இறந்த நூற்றுவர்க்கும் சேரலாதன் முன்னோர் கடன் ஆற்றினான் என்பதாகும்.

மகாபாரதம் கலுழன் சருக்கத்தில் பாம்புகளுக்கும் பருந்துகளுக்கும் உள்ள பகைமை கூறப்பட்டுள்ளது. காண்டவனத்தைக் கணணணும் அருச்சுனனும் தீவைத்ததே நாகங்களை (நாகர்களை)க் கொல்லத்தான்.

போர் முடிந்து அனைவரும் மடிந்து இறுதியில் கண்ணன் உயிரைக் கால் கட்டைவிரலில் தேக்கி அறிதுயிலில் இருந்த போது அசைந்த விரலைக் குருவி எனக் கருதி அம்பெய்து கண்ணனின் சாவுக்குக் காரணமான வேடனின் பெயர் சேரன். அதுவரை நாகமாக இருந்த சேரனின் கொடி இதிலிருந்து தான் வில்லாயிற்றோ?

முரிஞ்சியூர் முடி நாகராயர் ஓர் நாகர் என்பது அவர் பெயரிலிருந்து தெரிகிறது. அவர் இரண்டாம் கழகத்தில் துவரையை ஆண்ட கண்ணனின் பிற்காலத்தவராக இருக்க வேண்டும்.

குமரிக் கண்டத்திலிருந்து முதலில் வெளியேறியவர்கள் தொலைவான இடங்களுக்கே சென்றனர். ஆறுகளின் கரைகளில் பாலை நிலம் முடிந்து மருத நிலம் தோன்றும் மென்காடுகளையே நாடினர். தாம் சென்ற இடங்களில் இரும்பைக் கண்டுபிடித்து கோடரி செய்த பின்னரே அடர்காட்டுப் பகுதிகளை நாடினர். கங்கைச் சமவெளிக்கும் அவ்வாறே. வட இந்தியாவில் அவர்களுக்கு முன்பே குடியிருந்தவர்களோடு போரிட வேண்டியிருந்தது. அந்தப் போரைப் பாடும் முகத்தான் குமரிக் கண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கொண்டனர். பாண்டியர்களின் நிலவு மரபு பாண்டவர்-கவுரவர்களுக்கும் சோழர்களின் கதிரவன் மரபு இராமனுக்கும் கூறப்பட்டுள்ளது. மேற்குக் கடற்கரையில் கோவா வரையுள்ள பகுதி மாவலி நாடு (மகாபலி நாடு) என்று சேரர்க்குரியதாகக் கூறப்படுகிறது.

தமிழகம் அடர்காட்டுப் பகுதியாக இருந்தது. எனவே இறுதியாகக் குமரிக் கண்டத்திலிருந்து வெளியேறிவர்கள் தாம் அங்கு குடியேறினர். பரசுராமன் கோடரி கொண்டு கடலில் வீசி சேரநாட்டை உருவாக்கினான் என்பது இதனைத் தான். சேரர், அவர்களைத் தெடர்ந்து சோழர், இறுதியில் பாண்டியர் குடியேறியதால் சேர, சோழ, பாண்டியர் என்ற வரிசை முறை வழங்குகிறது. நெல்லை மாவட்டத் தாமிரபரணியாற்றுக்குச் சோழனாறு என்ற பெயர் இருந்ததாக வி.கனகசபையார் தன் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் நூலில் குறிப்பிடுகிறார். அதன் கரையில் தான் ஆதித்த நல்லூர் அகவாய்வுக் களம் உள்ளது. ஆதித்தன் எனும் கதிரவன் குலத்தினர் சோழர்கள். அவர்களைத் துரத்திவிட்டுப் பாண்டியன் அமர்ந்தான்.

“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தன்னவன்”.

என்று முல்லைக் கலிப்பாடல் (104 : 1-4) இதனைக் குறிப்பிடுகிறது.

சோழன் இந்திரனுடன் உறவு கொண்டவன்; இது சிலப்பதிகாரத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்திரன் அவையில் ஆடல் மகளான ஊர்வசி எனும் மாதவியை இந்திரன் சோழ நாட்டுக்கு நாடுகடத்த அவள் வழிவந்த மாதவி தான் கோவலனின் காதலி என்கிறது சிலம்பு. இந்திரன் வாழ்ந்த நாடு தாய்லாந்து என்கிறார் பாவாணர். இந்தரனின் ஊர்தியாகிய வெள்ளையானை அங்கு தான் உள்ளது. அங்குள்ள ஒரு நகரின் பெயர் சம்பாபதி புகார் நகரக் காவல் தெய்வமும் சம்பாபதியே-மணிமேகலை. சம்பா என்ற ஒரு வகை நெல்லைத் தாய்லாந்திலிருந்து சோழன் கொண்டுவந்திருக்கலாம்; இன்று பள்ளர்கள் என்று அழைக்கப்படும் மருதர்கள் அங்கிருந்து சோழர்களுடன் வந்திருக்கலாம். இந்திரனை மருத்துக்கள் என்பவர்களோடு எப்போதுமே இணைத்துப் பேசுகின்றன மறைகளும் தொன்மங்களும்.

இந்திரனிடமிருந்து ஒருவகை நெல்லையும் ஒருவகைக் கரும்பையும் சேரன் பெற்றுவந்தான் என்று கழக இலக்கியம் கூறுகிறது.

இந்திரனுக்கும் பாண்டியனுக்கும் பகை இருந்ததையும் இந்திரனது மணிமுடியிலிருந்த வளையத்தை உடைத்து அவனது ஆரத்தைப் பிடுங்கிக் கழுத்தில் அணிந்து கொண்டான் பாண்டியன் என்கிறது சிலம்பு. மறைகளில் வரும் இந்திரனும் வருணனும் பொருளிலக்கணத்தில் மருத நெய்தல் நிலத் தெய்வங்கள் எனும் போது மறைகளையும் தொல்காப்பியத்தையும் யாத்தவர்கள் தமிழர்களே என்பதும் “ஆரியர்கள்” என்பவர்கள் ஐரோப்பியர் உருவாக்கிய கற்பனை என்பதும் தாமே விளங்காவா?

உலகில் உள்ள ஆண்டுமுறைகள் அனைத்தையும் உருவாக்கியவர்கள் குமரிக்கண்ட மக்களே. 29½ நாட்களைக் கொண்ட நிலா மாதங்களையும் 354 நாட்களைக் கொண்ட நிலவாண்டையும் வகுத்தவர்கள் அவர்களே. இன்று உலகில் தூய நிலவாண்டு முகம்மதிய ஆண்டே. ஊதர்கள், சீனர்கள், சப்பானியர்கள் மற்றும் தென்கிழக்காசிய, தென்னமெரிக்க நாடுகளில் வழங்கும் 19 ஆண்டுகளைக் கொண்ட சுழற்சியில் 7 ஆண்டுகளுக்கு 13 மாதங்களுடன் ஒரு கதிர்-நிலவாண்டு (நிலா மாதங்களைக் கொண்ட ஆண்டுகளைக் கதிராண்டுகளுடன் இணைத்தல்) முறை உள்ளது. நம் ஐந்திரங்களில் (பஞ்சாங்கங்களில்) இந்த ஆண்டுப் பிறப்பை “துவாபர யுகாதி” என்று குறிக்கிறார்கள். வட இந்தியாவிலும் ஆந்திரத்திலும் கருநாடகத்திலும் வழங்கும் ஆண்டுமுறை 2½ ஆண்டுகளுக்கு ஒரு மாதத்தைச் சூனிய மாதம் என்று கழித்து கதிராண்டுடன் நிலவாண்டை இணைக்கும் முறையாகும். வாரம் → மாதம் → ஆண்டு என்று ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காக 27 உடன் அபிசித்து எனும் ஒன்றைச் சேர்த்து 28 நாண்மீன்களாக்கி (நட்சத்திரங்களாக்கி) 28 x 12 = 336 நாட்களைக் கொண்ட சாவரம் எனும் ஆண்டையும் நம் முன்னோர் உருவாக்கிப் பின்னர் கைவிட்டுள்ளனர்.

கதிரவன் தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள கிட்டத்தட்ட 25⅓ நாட்களாகின்றன. புவி கதிரவனைச் சுற்றி வருவதால் இங்கிருந்து பார்க்கும் போது அது ஏறக்குறைய 27½ நாட்களுக்குத் ஒரு முறையாகிறது. கதிரவனின் ஊடாகச் செல்லும் ஒரு துளை கரும்புள்ளியாகத் தெரிகிறது. அதுவும் 27⅓ நாட்களுக்கு ஒரு முறை புவியை நோக்கி வருகிறது. அப்போது வீசும் காந்தப்புயலினால் புவியில் தொலைபேசிகளின் இயக்கம் தடுமாறுவதாகக் கூறப்படுகிறது. நாம் நோன்பு கடைப்பிடிக்கும் கார்த்திகை நாளுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்பதை ஆய வேண்டும்.

இந்த அடிப்படையில் வான மண்டலத்தை 27 ஆகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் உள்ள துலக்கமான விண்மீன் கூட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு வடிவம் கொடுத்து அந்த வடிவப் பெயர்களை அந்த 27 நாண்மீன்களுக்கும் இட்டனர். தனி மீனை விண்மீன் என்றனர். (சமற்கிருதத்தில் நாண்மீன் விண்மீன் இரண்டையும் நட்சத்திரம் நாள் + சத்திரம் = நாள் இருக்குமிடம் என்றே அழைக்கின்றனர்).

ஒரு நிறைமதி நாளில் நிலவுக்கு அப்பால் இருக்கும் விண்மீன் அடுத்த நிறைமதி நாளில் இருப்பதில்லை. ஏறக்குறைய 12 மாதங்களுக்குப் பின்பே அவ்வாறு நிகழ்கிறது. எனவே 12 மாதங்கள் கொண்ட ஒரு காலச் சுழற்சியை ஆண்டு எனக் கடைப்பிடித்ததுடன் வான மண்டலத்தை 12 சம பாகங்களாகப் பகுத்;து ஒவ்வொன்றுக்கும் அடையாளமாக ஒரு விண்மீன் கூட்டத்தையும் அதிலிருந்து ஓர் உருவத்தைக் கற்பனை செய்து அதற்குப் பெயரையும் வழங்கினர். அதற்கு ஒரை (ராசி) என்று பெயரிட்டனர்.

ஒரை என்ற சொல் நேரம் எனப் பொருட்படும் ஓரா (Hora) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்ததாகப் பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழில் ஒரை என்பதற்கு மகளிர் விளையாட்டு மகளிர் சேர்ந்து தங்குமிடம், மகளிர் கூட்டம் என்ற பொருட்களும் உண்டு. விண்மீன் கூட்டங்களாக இருப்பதால் தான் அவற்றை ஓரைகள் என்றனர் நம் முன்னோர். ஓரை என்பதற்கு Team என்ற ஆங்கிலச் சொல் பொருத்தமாக இருக்கும். ஒரை முதலில் கூட்டத்தை, பின்னர் விண்மீன் கூட்டத்தை, அப்புறம் அவ்விண்மீன் கூட்டம் காட்டும் நேரத்தைக் குறிப்பதாகி அந்த வடிவத்தில் கிரேக்கத்துக்குச் சென்றுள்ளது.

கதிரவன் சுழற்சியை நோட்டமிட்டு உருவாக்கிய நாண்மீன் பகுப்பை நிலவுடனும் நிலவின் இயக்கத்தை நோட்டமிட்டு வகுத்த ஓரைப் பகுப்யைச் கதிரவனின் இயக்கத்தைக் கணிக்கவும் தமிழர்கள் பயன்படுத்தினர். கதிரவனைப் பொறுத்து இதற்கு ஒரு தேவையும் ஏற்பட்டது. கதிரவன் ஆண்டுக்கொருமுறை தெற்கு வடக்காக நகர்ந்து கொண்டிருக்கிறது. தெற்கே மகரக் கோட்டிலிருந்து புறப்பட்டு வடக்கே கடகத் திருப்பம் சென்று மீண்டும் மகரக் கோட்டுக்கு வருகிறது. இது தெளிவான காலச் சுழற்சி. உலகெங்கும் பருவகாலங்களும் உயிர்களின் இனப்பெருக்கமும் இந்தச் சுழற்சியின் வரிசையிலேயே இயங்குகின்றன.

புவியின் நிலப்பரப்பில் பெரும்பகுதி தெற்கில் இருந்தது. நிலநடுக்கோடு மக்கள் புகமுடியாத அடர்ந்த காடு. மகரத்திருப்பம் பாலையும் பனிப் பகுதியும் நெருங்கி மனிதன் மயிர் உதிர்த்து முழுமை பெற்ற இடம். இங்கு தெற்கே விழும் நிழல் ஒரேயொரு நாள் மட்டும் காலடியில் விழுந்து விட்டு மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பிவிடும். இதனை ஆண்டுப் பிறப்பாகக் கொள்வது பொருத்தம். இவ்வாறு இன்றைய தைப்பொங்கலுக்கு இணையான ஒரு நாளில் கதிராண்டு தொடக்கம் வைக்கப்பட்டது. இங்கு தான் இராவணனின் தென்னிலங்கை இருந்தது.

இராவணனின் தமையன் குபேரன் அவன் தன் தந்தையான மாலிய வந்தனிடமிருந்து இலங்கையைக் கைப்பற்றினான். மாலியவந்தன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து இராவணனைப் பெற்றான். அவன் இலங்கையிலிருந்து குபேரனைத் துரத்தினான். குபேரன் நில நடுக்கோட்டிலிருந்த மேருவிற்குச் சென்றான் என்கின்றன நம் தொன்மங்கள்.

மேரு என்பது ஒரு மலைமுகடு. பொதுவாக மலைமுகடுகளை மேரு என்பதுண்டு. யாழில் உள்ள மேடுகளை மேரு என்று தான் அழைப்பர். இங்கு மேரு என்பது சில நடுக்கோட்டில் இருந்த மலைமுகடு. பனி மூடிய அதன் உச்சியால் அது வெள்ளி மால்வரை என்று அழைக்கப்பட்டது. அதைத் தான் கயிலை என்று நம் தொன்மங்கள் கூறின. அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்கள் தாங்கள் குடியேறிய இடத்தை “சுமேரு” “சுமேரியா” என்றனர். மேருவே உலக நடு அதனைச் சுற்றியே மேகங்கள் நகர்கின்றன என்கின்றன ஐந்திறங்கள்.

நம் மரபில் மூன்று இலங்கைகள் உள்ளன. ஒன்று தென்னிலங்கை. அது இராவணனின் தலைநகரம். மகரக்கோட்டில் உள்ளது. இன்னொன்றின் பெயர் “நிரட்ச”லங்கை. அதாவது அட்சம் இல்லாதது. அதாவது 0°அச்சக் கோட்டில் அதாவது நில நடுக்கோட்டில் உள்ளது. இது பற்றிய பதிவு ஐந்திறங்களில் உள்ளது. இந்த நிரட்சலங்கையை “லங்காபுரி” என்று மயனால் எழுதப்பட்ட சூரிய சித்தாந்தம் கூறுகிறது. லங்காபுரி, உரோமகபுரி, சித்தபுரி, பத்திராசுவம் என்ற நான்கு நகரங்கள் ஒன்றிலிருந்து ஒன்று 90° மேற்காக அமைந்திருப்பதாக அபிதான சிந்தாமணி, தமிழ் மொழி அகராதி மற்றும் சூரியசித்தாந்தம் ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுக்கு மேகலா நகரங்கள் என்று பெயர். நிலநடுக்கோட்டை நம் முன்னோர் மேகலைக்கோடு (மேகலாரேகை) என்றே குறிப்பிட்டனர். மேகலை என்பது “மேல்கலை” அரையில் (உடலின் நடுவில்) உடைக்கு (கலைக்கு) வெளியே அணியும் ஓர் அணி ஆகும்.

மணிமேகலைக் காப்பியத் தலைவி மணிமேகலைக்கு மணிமேகலைத் தெய்வத்தின் பெயரை அவளது தந்தை கோவலன் இட்டான். அதற்குக் காரணம் அவனது முதாதையரில் ஒருவர் கடலில் கப்பல் உடைந்து தத்;தளிக்கையில் மணிமேகலைத் தெய்வம் அவரைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிப்பது.

புத்த சாதகக் கதைகள் என்பவை புத்தர் எடுத்த 550 பிறவிகளில் நடந்தவையாகக் கூறப்படும் ஓரு கதைத் தொகுதி. அதில் ஒன்றில் காவிரிப்பூம்பட்டினத்து வாணிகரான அவர் கடலில் தத்தளிந்த போது அவரது மன ஊக்கத்தை மெச்சி மணிமேகலைத் தெய்வம் காப்பற்றியது என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கரை சேர்ந்த வாணிகன் அந்நாட்டு மக்களால் அரசனாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அக்கதை கூறுகிறது. தாய்லாந்து மன்னன் அவ்வாறு அரசனாக்கப்பட்டவன் என்று அந்நாட்டு வரலாறு கூறுகிறது. இவ்வாறு நிலநடுகோட்டில் சமதொலைவுகளில் நான்கு நகரங்களும் அவற்றுக்கு மேகலா நகரங்கள் என்ற பொதுப்பெயரும் கடலில் கப்பல் கவிழ்ந்து தத்தளிப்போரை மணிமேகலைத் தெய்வம் என்றொரு தெய்வம் காப்பாற்றியதாகப் பழங்கதைகள் பதிந்திருப்பதாலும் இந்நான்கு நகரங்களும் கடல் கண்காணிப்பு நிலையங்கள் என்றும் அவை கப்பல்கள் கவிழ்ந்து தத்தளிப்பவர்களைக் காக்கும் பணியைச் செய்து வந்தன என்றும் கொள்ளலாம். அந்தக் கட்டமைப்பே பின்னர் மணிமேகலா தெய்வம் என்று தொன்ம வடிவம் பெற்றுள்ளது.

பண்டை உலகில் இருபெரும் மக்களினத்தினர் வாழ்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்களில் ஒரு சாரார் மஞ்சள் இனத்தினர். இவர்கள் சுறவ(மகர)க் கோட்டுப் பகுதியில் வாழ்ந்தனர். இன்னொரு பகுதியினர் கறுப்பர்கள். இவர்கள் நிலநடுப்பகுதியில் வாழ்ந்தனர். மஞ்சள் இனத்தினர் அடிக்கடி கப்பல்களில் வந்து கறுப்பின மக்களைத் தாக்கிவிட்டுக் விரைந்து கப்பலில் சென்று மறைந்துவிட்டனர். கறுப்பர்களிடையில் தலைவராக இருந்த அகத்தியர் என்பார் தாங்களும் கடலைக் கடக்கும் உத்தியை வகுத்துத் தந்ததும் இருவரும் இணக்கத்துக்கு வந்தனர் என்று கொள்ளலாம். இவர்களது சண்டையில் ஒருவரை யொருவர் அரக்கர் என்று தொன்மங்களில் பதிந்து வைத்துள்ளனர்.

அரக்கன் ஒருவன் தாக்கிவிட்டுக் கடலினுள் மறைந்து விட்டதாகவும் அகத்தியர் கடல் நீர் ழுழுவதையும் குடித்து அவளை வெளியில் கொண்டு வந்ததாகவும் கூறும் ஒரு தொன்மக்கதை இதைத் தான் கூறுகிறது என்று கொள்ளலாம்.

மக்களின் உடல் நிறம் அவர்களது வாழிடங்களைப் பொறுத்து மாறுகிறது அடந்த நாடுகளுக்குள் வாழ்பவர்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வகையில் இயற்கையாகவே கருமை நிறம் பெறுகின்றனர். பாலைவனப்பகுதியில் வாழ்பவர்கள் மஞ்சள் நிறமாகவும் பனிபடர்ந்த பகுதிகளில் வாழ்பவர்கள் வெண்மையாகவும் ஓரிரு தலைமுறைகளில் மாறிவிடுவார்கள். வீடு உடைகள் போன்ற செயற்கைப் பாதுகாப்புகள் உருவாகும் போது இந்த உடல் நிறமாற்றம் வேகம் குறைகிறது.

மனித வரலாற்றில் கடலில் செல்வோருக்கு திசைகாட்டியின் கண்டுபிடிப்பு ஒரு பெரும் புரட்சி. சீனர்கள் முதலில் ஆமை வடிவிலான ஒரு திசைகாட்டியை வைத்திருந்தனர் என்ற பதிவு உள்ளது. நம் தென்மத்தில் திருமால் ஆமை வடிவம் எடுத்துக் கொள்ள அதன் மீது மகேந்திர மலையை மத்தாகவும் நிலவைத் தறியாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரரும் தேவரும் கடலைக் கடைந்ததாகக் கூறுவது எதிரெதிராக இருந்த இருவகையின மக்களும் தங்களுக்குள் இணக்கம் கண்டு கடலை ஆண்டனர் என்பதன் தொன்ம வடிவமாகும். நிலவின் கலை(phase) மாற்றங்களைக் கடலில் செல்வோர் காலத்தை அளக்கும் அடையாளமாகக் கொண்டிருந்ததனை அதைத் தறியாகக் கொண்டதாகக் கூறுகிறது. நிரட்சலங்கை என்று நாம் குறிப்பிட்ட நிலநடுக்கோட்டிலிருந்த மேருமலையை நடுப்புள்ளியாக வைத்து உலகை அளந்ததை மகேந்திரகிரியை மத்தாகக் கொண்டதாக இக்கதை கூறுகிறது.

கடைந்ததில் அமுதம் கிடைத்ததாம். அதைத் தேவர்கள் திருடிக் கொண்டார்களாம். உண்மையில் அந்தச் சாவா மருந்து தான் என்ன?

விதேகன் என்பவனைப் பற்றி நம் தொன்மங்கள் கூறுகின்றன (அபிதான சிந்தாமணி). நிமி என்பவன் இறந்து போக அவனுடலை ஓர் எண்ணெய்யில் வைத்துப் பாதுகாத்தனர். பின்னர் அவ்வுடலைக் கடைந்து அதிலிருந்து ஒரு மகனை உருவாக்கினர். அவன் பெயர் தான் விதேகன். அவன் நாடு தான் விதேகம். அங்கு பிறந்தவள் தான் வைதேகி எனும் சீதை.

எகிப்தில் மம்மிகளை எவ்வாறு உருவாக்கிறார்கள் என்று கி.மு.ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த எரோமோட்டர் என்பவர் தான் எழுதிய வரலாறு(Historia) எனும் நூலில் எழுதி வைத்துள்ளார். இறந்த உடலிலிருந்து முளை, குடல், ஈரல் போன்ற பகுதிகளை அகற்றிவிட்டு ஓர் எண்ணெய்க் கலவையில் 41 நாட்கள் ஊற வைத்துப் பின்னர் அதன் மீது துணியைச் சுற்றி மெழுகால் பொதிந்து வைத்தனர். மெழுகு எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து மம்மி என்ற பெயர் வந்தது என்கிறது Chambers Dictiorary. நிமி என்ற சொல்லிலிருந்தும் வந்திருக்கலாம். மம்மிகளின் உடலிலுள்ள உயிரணுக்களில் இன்னும் உயிர் உள்ளது. அவற்றிலிருந்து படியாக்க முறையில் (Cloning) மனிதர்களை உருவாக்கலாம் என்கிறார் எரிக் வான் டெனிகன். நிமியின் உடலிலிருந்து விதேகன் தோன்றியது கற்பனையாயிருக்க முடியாது. ஆக இந்த எண்ணெய் தான் அமுதமா?

உலகை ஒரு பேரழிவு தாக்க இருக்கிறதென்றும் அதிலிருந்து தப்புவதற்காக அனைத்து உயிர்களின் விந்தணுக்களையும் திரட்டி ஒரு குடத்தில் (கும்பத்தில்) அமுதத்தினுள் வைத்து கும்பகோணத்தில் வைத்தனர் என்றும் ஊழி முடிந்ததும் கும்பத்திலிருந்து உயிர்களை மீட்டனர் என்றும் கும்பகோணத் தலபுராணம் கூறுவதாகத் தமிழ் நாடு சுற்றுலாத்துறை வெளியீடு கூறுகிறது. அந்தக் கும்பத்தை கங்கையும் யமுனையும் கூடும் திரிவேணி சங்கமத்தின் மீது கொண்டு வரும் போது அங்கு விழுந்து விட்டதாகவும் கும்பமேளா பற்றிய வரலாறு கூறுகிறது. ஊத மறை நூலிலும் மணிமேகலையிலும் அனைத்து உயிர்களிலும் ஒவ்வொரு இணையைக் கப்பலில் எடுத்துச் சென்று பாதுகாத்தனர் என்பதற்கு மேம்பட்ட ஒரு தொழில்நுட்ப மட்டத்தில் விந்தணுக்களைத் திரட்டிப் பாதுகாத்தனர் என்ற கதை அமைந்துள்ளது. இன்றும் நாம் விந்தணுக்களைத் திரட்டிப் பாதுகாத்து வருகிறோம். இப்படிப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஊடகம் தான் அமுதமா?

மனிதனைச் சாவில்லாதவனாகப் படைத்தார் கடவுள்; அவரது திட்டத்தைச் சிதைத்து அறிவுக் கனியை உண்ணவைத்துச் சாவுடையவானாக மாற்றி கடவுளைத் தோற்கடித்தான் பாம்பு வடிவில் வந்த சாத்தன் என்கிறது ஊத மறைநூல்.

கில்காமேசு என்பது பாபிலோனில் உருவான, இதுவரை நாம் அறிய வந்துள்ளவற்றுள் மிகப் பழமையான காப்பியம்; அதில் ஊத மறைநூலின் நோவாவின் மூலவடிவமான உட்நாப்பிடிம் வருகிறான். அவனிடமிருந்து சாவாமருந்தைப் பெற்று வருகிறான் கதைத் தலைவனான கில்காமேசு. அவனிடமிருந்து அதை ஒரு பாம்பு திருடிச் சென்று விடுகிறது. மகாபாரதத்தில் பாம்புகளுக்காக கருடன் இந்திரனிடமிருந்து அமுதத்தைப் பறித்துக் கொண்;டு தருகிறான். அதனை இந்திரன் தந்திரமாக மீட்டுக் கொள்கிறான் என்று கூறப்பட்டுள்ளது. ஆக நாகர்களுககும் மற்றவர்களுக்கும் அமுதத்தைப் பங்கிடுவதில் ஏற்பட்ட பூசல் உலக முழுவதும் பதிவாகியுள்ளது. அமுதத்தை எவரும் ஒளித்து வைக்கவில்லை. உலக அழிவுகளும் சேர்ந்துள்ளன. மனிதர்களும் பிற உயிர்களும் இன்றும் வாழ்கிறோம்.

பனியுகங்கள் ஓர் இலக்கம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்ந்தன என்று சு.கி. செயகரன் கூறுகிறார், பக்: 88. நீர் பனிக்கட்டியாகப் படிந்து கடல் நீர் மட்டம் குறைவதும் அது உருகி கடல்மட்டம் உயர்வதுமாக மீண்டும் மீண்டும் நிகழ்ந்த போது சுறவக் கோட்டில் மயிர் உதிர்ந்து முழுவடிவம் பெற்ற மனிதன் சிறுகச் சிறுக வடக்கு நோக்கி நகர்ந்தான். நில நடுக்கோட்டை அடைந்தான். அத்தகைய ஒரு சூழலில் தமிழர்கள் நில நடுக்கோட்டிலுள்ள மாதுறை என்ற துறைமுகத்தில் குமரி என்ற பெண் தலைமையில் மீன் கொடியுடன் பாண்டிய அரசமரபைத் தோற்றுவித்தனர். சிலம்பு இவளை மதுராபதி என்கிறது. மீனைக் கொடியாகக் கொண்டு ஆட்சி செய்ததால் மீனாட்சி என்கின்றனர். மீனைப்போல் கண்ணை இமைக்காதவள் என்று கூறுகின்றனர் தொன்மப்பூசாரிகள்; தன் பெயரோடு கடல் விழுங்கிய தன் நிலத்தின் ஓரத்தில் நின்று காவலும் நிற்கிறாள் குமரி அன்னை.

ஒரு பெண் பாண்டிய அரசை உருவாக்கினாள் என்று கூறுவது தமிழர்களின் “ஆண்மைக்கு” இழுக்கு என்று கருதும் தமிழ் அறிஞர்கள் பலர் இன்றும் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் குமரி என்ற செடி இருந்தது. காட்டை எரித்து உண்டாக்கப்பட்ட நிலத்துக்குக் குமரி நிலம் என்பது பெயர் என்றெல்லாம் தம் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அவர்களுக்கு எண்ணற்ற சான்றுகள் காட்டி வாயடைத்துள்ளார் கார்க்கி. வாழ்த்துகள்.

கழக இலக்கியங்களைத் தொகுத்தவர்களும் பெண்களுக்கு உள்ள சிறப்பை, தாய்வழிக் குமுக அடையாளங்களை வெறுப்பவர்கள். நம் குமுகத்தில் குடும்ப நிகழ்ச்சிகளில் குறிப்பாகத் திருமணத்தில் தாய்மாமனுக்கு அனைத்துச் சாதி மக்களிடையிலும் சிறப்பான பங்குண்டு. ஆனால் கழக இலக்கியத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகத்துறைப் பாடல்களில் ஒரிடத்தில் கூட தாய்மாமனைப் பற்றிய குறிப்பு இல்லை. இது தொகுப்பாளர்களின் மனப்பான்மையின் வெளிப்பாடு. அதுபோல் குமரியைப் பற்றிய செய்திகளும் இல்லை. “குமரியந்துறை அயிரை மாந்தி” என்று ஒரு வரியில் மட்டும் நன்னீர் மீனாகிய அயிரையைக் குறிப்பிடுவதன் மூலம் குமரியாறு பற்றி மறைமுகமாகத் தெரிய வருகிறது. மற்றப்படி குமரிமலை, குமரியாறு போன்ற செய்திகளை இளங்கோவடிகள் தாம் பிற்காலத்தவர்க்காக விட்டுச் சென்றுள்ளார்.

வரலாற்று வரைவென்பது ஓர் அரசியல் நடவடிக்கையாகும். எந்த ஒர் அரசியல் இயக்கமும் ஒரு வரலாற்று வரைவைத் தொட்டுத்தான் தொடங்குகிறது. வரலாறு உண்மையாக இருந்தாலும் அந்த உண்மையால் பயன்பெறும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை அது தெடங்கி வைக்கிறது.

சேர, சோழ, பாண்டியர் இன்றைய தமிழகத்தில் நுழைந்த போது இங்கு வாழ்ந்து வந்த மக்கள் பாணர், பறையர், துடியர், கடம்பர் என்ற நான்கு குழுக்கள் ஆகும். அவர்களின் எதிர்ப்புக்குரல் கழகப் பாடல் ஒன்றில் மாங்குடிக் கிழாரின் வழியாக வெளிப்பட்டுள்ளது. எனவே தாங்கள் வந்தேறிகள் என்ற உண்மை வெளிப்படாமல் இருக்க குமரிக் கண்டத்தைப் பற்றிய செய்திகளை முடிந்த வரையில் மறைத்தனர் கழக இலக்கியத்தை தொகுத்தோர். அதே வேளையில் மச்ச புராணம் போன்ற சமற்கிருத நூற்களில் எழுதி வைத்தனர் என்றும் கொள்ளலாம்.

இன்றும் ஆத்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பழங்குடி மக்கள் வெள்ளை வந்தேறிகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்குவதையும் அமெரிக்க வல்லரசு பழம் பெரும் நாகரிக வராலாறுகளை மறைக்கப் புதும்புது வராலாற்று அணுகல்களை அந்தந்த நாட்டுப் படிப்பாளிகளுக்கு ஆங்காங்குள்ள பல்கலைக் கழகங்கள் மூலமாகப் பரிந்துரைப்பதையும் யோன்றது இது.

கடல் வழிச் செல்கையில் கதிரவனின் கரும்புள்ளி புவியை நோக்கி வரும் போது வீசும் காந்தப்புயலால் திசைமானியின் நம்பகத்தன்மை பாதிப்படைகிறது. எனவே அந்த நாளை இனம் காண வேண்டிவந்தது. எனவே வானியல் நிகழ்வுகளைக் காட்டும் ஒரு கையேடு தேவைப்பட்டது. அந்த நோக்கத்தை நிறைவு செய்தது சிவாக்கியரின் வாக்கியப் பஞ்சாங்கம். வாக்கியம் என்பதற்கு பட்டியல் என்று பொருள் கூறப்படுகிறது. பஞ்சாங்கம் என்ற ஐந்திறத்தில் தேதி, நாள், திதி, நாண்மீன், யோகம் என்ற ஐந்து உறுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் விண் கோணங்களை நாழிகையில் கூறும் தரவுகளே. இந்தப் பட்டியல் தவிர்த்து ஒவ்வொரு நாளும் பகல் வேளையின் நீட்சி (அகசு), ஓரைகளின் (ராசிகளின்) இயக்கம் ஆகியவற்றைக் காட்டும் பட்டியல்களும் உள்ளன. இவை முற்றிலும் வானியல் சார்ந்தவையே. சோதிடம் எனப்படும் கணியத்துக்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இல்லை. அதற்கு வேண்டிய தரவுகளை இதிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள் அவ்வளவே.

ஐந்திறங்கள் வானிலையை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. பண்டை உலகின் மிகச் சிறந்த வானிலையியல் அறிஞரான இடைக்காடரின் 60 பாடல்களும் நம் வானிலையியலறிவிற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. நம் ஐந்திறங்களில் நம் வானிலையியலறிவு பற்றிய மேலும் பல செய்தகள் உள்ளன.

வானிலை சிறப்பாயிருந்தால் நாடு செழிப்பாகும்; மக்களின் வாழ்க்கை சிறப்பாகும்; அரசனின் செல்வாக்கும் வலிமையும் பெருகும். எனவே பருவகாலத்தை முன்னறிவதற்காக நிமித்திகன் இருந்தான். எனவே வானிலை அரசனின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அது பிற தலைவர்களுக்கும் கையாளப்பட்டு தனிப்பட்ட மக்களின் வாழ்க்கைக்குக் கையாளப்பட்டு கணியமாக வாணிக வடிவம் பெற்று விட்டது.

இங்கு திசைமானியைத் தமிழ்க் கடலோடிகள் பயன்படுத்தினார்களா என்ற ஐயம் எழக்கூடும். தமிழில் வடக்குத் திசையைக் குறிக்க ஊசி என்று ஒரு சொல் உள்ளது. ஊசிக்கும் வடக்குக்கும் உள்ள உறவு காந்த ஊசி வடக்கு நோக்கியே நிற்கும் என்பது. இதிலிருந்து திசைமானியைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பது தெரிகிறது.

நிலநடுக்கோட்டில் தலைநகர் அமைத்த தமிழர்கள் தங்கள் தலைநகருக்கு மேலே கதிரவன் வரும் நாளை, அதாவது இன்றைய மார்ச் 21-ஐ ஆண்டுப் பிறப்பாகக் கொண்டனர். ஒரே வட்டத்தின் படி மேழம் விடை(மேசம்,இடபம்) என்று தொடங்கும் மாதங்களின் பெயர்களை இட்டார்கள்.

முக்கழகச் செய்திகளின் படி ஏறக்குறைய கி.மு.6000 ஆண்டளவில் முதற்கடற்கோள் (முந்திய கடற்கோள்கள் பற்றி தமிழிலக்கியங்களில் பதிவுகள் இல்லை. அதிலும் உரையாசிரியர்கள் மூலமாகவே நாம் கூறும் செய்திகளும் கிடைத்துள்ளன.) நிகழ்ந்தது. அது நிலநடுக்கோட்டில் இருந்த நிலப்பரப்பையே சிதறடித்து விட்டது. நில நடுக்கம், புவி மேலடுக்கினுள் நிலப்பரப்பு தாழ்தல், சுனாமி எனப்படும் ஓங்கலை என்று பேரழிவை அது ஏற்படுத்தியிருக்கும். இந்தோனேசியப் பகுதியை இன்றைய உலகத் திணைப்படத்தில் பார்த்தாலே அந்தச் சிதறல்களைப் புரிந்து கொள்ள முடியும்.

அணுப்போரால் ஏற்பட்ட அழிவு என்றும் விண்கற்கள் வீழ்ந்ததால் நேர்ந்ததென்றும் ஆய்வாளர்கள் விளக்கங்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மீனவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்திரன் இடையில் ஆட்சியைச் செலுத்தினான். இதற்கிடையில் நானும் ஒரு கதை சொல்லுகிறேன்.

மகாபாரதத்தில் யயாதி என்று ஓர் அரசன். அவன் சுக்கிரச்சாரி என்பவனின் மகள் தேவயானியை மணந்தான். ஒரு பூசலில் அவளுக்கு வேலைக்காரியாகப் பணிக்கப்பட்ட அசுர அரசனின் மகளும் உடன் செல்கிறாள். அவள், அரசனைத் தன்வயப்படுத்துகிறாள். இருவரும் மக்களைப் பெறுகின்றனர். இதனால் சினமடைந்த சுக்கிராச்சாரி அவனை முதுமையடையச் சபிக்கிறான். மருமகன் கெஞ்ச தன் மகன்களிலொருவனிடமிருந்து இளமையைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான். மனைவியின் மகன்கள் மறுக்க வேலைக்காரியின் மகன் ஒருவன் ஏற்றுக் கொள்கிறான். தனக்குப் பின் அவனை அரசனாக்கி விட்டு மனைவியின் மகன்களைத் துரத்தி விடுகிறான். அவர்களில் ஒருவன்; பெயர் யது. அவனது வழி வந்தவர் யாதவர். வேலைக்காரி மகன் வழி வந்தவர்கள் பாண்டவரும் நூற்றுவரும்.

ஊத மறைநூலில் ஒரு கதை. ஆபிரகாமுக்குக் குழந்தை இல்லை. அவன் மனைவி வேண்டியதனால் வேலைக்காரி மூலம் ஒரு பிள்ளையைப் பெறுகிறான். அவனுக்கு 99-ம் மனைவிக்கு 90-ம் அகவையான போது அவள் ஒரு பிள்ளையைப் பெற்றாள். வேலைக்காரி பிள்ளையைத் துரத்தி விட்டாள். அவளது பிள்ளை வழி வந்தவர் ஊதர். வேலைக்காரி வழி வந்தவர் அரேபியர். வேலைக்காரி பிள்ளை பெறுதல், முதுமை இரண்டும் இக்கதையின் பொதுவான கதைக்கருக்கள். இது போன்ற மிக வியப்பூட்டும் ஒற்றுமைகள் நம் இந்தியத் தொன்மங்களுக்கும் ஊதமறைநூலுக்கும் உள்ளன.

“மிசிரத்தானம்” என்ற சொல்லுக்கு, எகிப்து எனும் நாட்டின் பெயர் என்கிறது தமிழ்மொழி அகராதி. யயாதியின் மகன் யதுவின் வழிவந்தவர்கள் இங்கு குடியேறினர் என்கிறது. மிசிரம் என்றால் கலப்பு என்றும் பொருள் கூறுகிறது.

சீனமும் எகிப்தும் குமரிக் கண்டப் பண்பாட்டோடு தொடர்புடையவை. அவை தங்கள் நாட்டை நான்கு அரச மரபுகள் ஆண்டன என்கின்றன. நம் பண்பாட்டில் மறைகளில் முதலில் வருணன் போற்றப்படுகிறான். அடுத்து அவன் தூற்றப்பட்டு இந்திரன் போற்றப்படுகிறான். தொடர்ந்து தொன்மம் இந்திரனை இகழ்ந்து கண்ணனைப் போற்றுகிறது. மகாபாரதம் கண்ணனை வேடன் கொன்றதைக் காட்டுகிறது.

மகாபாரதப் போரில் துரியோதனன் நாக மரபைச் சேர்ந்தவனாகக் கூறப்பட்டாலும் அவனுக்கு மீனவர் தொடர்பு காட்டப்படுகிறது. அவனது பூட்டனான சந்தனு முதலில் கங்கையையும் பின்னர் மச்சகந்தி எனப்படும் மீனவப் பெண்ணையும் மணந்தான். அந்த மீனவப் பெண் வழி வந்தவர்களே நூற்றுவரும் பாண்டவர்களும் அதில் பாண்டவர்கள் இந்திரன், இயமன், வாயு, அசுலினி தேவர்கள் என்ற பிறருக்குப் பிறந்தவர்கள் என்ற வகையில் மரபு மாறிப் போனவர்கள். நூற்றுவரை எதிர்த்த போரில் கண்ணனும், இந்திரனின் மகனான அர்ச்சுனனும் சேர்ந்து நிற்பதையும் காணலாம். மீனவர்கள் நாகமரபினரே என்று வி. கனக சபையார் போன்றவர்கள் கூறுகின்றனர். நாகர்கோயில் தொடங்கி நாகூர் வரை நாகர்களின் பெயரிலமைந்த கடற்கரை ஊர்களைக் காண்கிறோம். நாகரம்மன் (நாகர்கோயில்), பிடாரி, புற்றடி மாரியம்மன் (சீர்காழி) என்று அம்மன்களின் வழிபாடும் நடைபெறுகிறது.

ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் மதுரை அழிவிற்கும் மகாபாரதப் போருக்கும் கூடத் தொடர்பு இருக்கலாம்.

யாயாதியால் துரத்தப்பட்ட யதுவின் வழிவந்தவர்கள் கபாடபுரத்தில் ஆண்டு கொண்டிருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். மதுரை அழிந்து சில நூற்றாண்டுகள் சென்று தமிழறிஞர்கள் சேர்ந்து வெண்டேர்ச் செழியன் என்பவன் தலைமையில் புதிய தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்திருக்கலாம். அங்கு நூற்றுவர் வழிவந்த அல்லது அவர்களுக்கு உறவான வேடர்கள் அவர்கள் மீது படையெடுத்து அவர்களைத் துரத்தி விட்டுத் தங்கள் ஆட்சியை அமைத்திருக்கலாம்.

உலகில் ஆண்டுமுறைகள் அனைத்தையும் அமைத்தவர்கள் குமரிக் கண்டத் தமிழர்கள் என்கிறோம். அவர்கள் ஐந்து வகையாகத் தொடங்கும் ஆண்டு முறைகளை வகுத்திருந்தனர். சம்வத்சரம், பரிவத்சரம், இடவத்சரம், அனுவத்சரம், உதயவத்சரம், ஆகியவை அவை. சர ராசிகள் எனப்படுபவை மேழம், கடகம், துலை, சுறவம் ஆகிய நான்கும் ஆகும். கடகத் திருப்பம், சுறவத் திருப்பம், வடக்கே செல்லும் போது மேழம் தெற்கே செல்லும் போது துலை என்று கதிரவன் நில நடுக்கோட்டைத் தொடுகையில் இருக்கும் இரண்டு ஓரைகள் என்று இவற்றை இவ்வாறு அழைக்கின்றனர்.; நம்மிடையில் பொங்கல், சித்திரை, ஆடிப் பிறப்பு, ஐப்பசி விசு ஆகியவற்றைக் கொண்டாடும் பழக்கம் உள்ளது. இவ்வகையில் மேழத்தில் பிறக்கும் ஆண்டுக்கு சம்வத்சரம் என்பது பெயர்(தமிழ் மொழி அகராதி பார்க்க). பிறவற்றில் எவற்றுக்கு எவை என்பது தெரியவில்லை. இவை நான்கையும் நீக்கி மலையாள ஆண்டு போன்று (மடங்கல்-சிங்கம்) வேறு ஓரைகளில் தொடங்கும் ஆண்டுகள் ஐந்தாவது வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதைத் தவறாகப் புரிந்துக் கொண்டு 5 ஆண்டுமுறை என்பதை ஐந்தைந்து ஆண்டுகளைக் கொண்ட தொகுதி என்று ஆய்வாளர் இராமதுரை அவர்கள் கருதுகிறார்.

இப்போது யாதவர் ஆட்சி முடிந்து வேடர்கள் – முருகன் ஆட்சி தொடங்கியது. இவர்கள் ஆண்டு முறையில் ஒரு மாற்றம் செய்தனர். ஏற்கனவே தலைநகரம் நிலநடுக்கோட்டில் இருந்த போது மேழ ஓரை தொடங்கும் இன்றைய மார்ச் 21-இல் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது 24 நாட்கள் தள்ளிப் போடப்பட்டது. ஏனென்றால் கபாடபுரம் ஏறத்தாழ 6 பாகைகள் வடக்கேயிருந்தது. இதனால் சுறவத்தில் பிடிக்கும் ஆண்டு, மேழத்தில் பிறக்கும் ஆண்டு என்று எல்லாமே மாறிப் போய்விட்டன. இந்த மாற்றத்துடன் கலியாண்டு முறை புகுத்தப்பட்டது. கண்ணன் இறந்த நாளிலிருந்து கலியாண்டு தொடங்குவதாக மரபு உள்ளது அனைவருக்கும் தெரியும். அதை யாதவர்கள் துவரையம் பதியாகிய கபாடபுரத்திலிருந்து துரத்தப்பட்ட நாளிலிருந்து தொடங்கப்பட்டது என்று மாற்றிப் புரிந்து கொள்ளலாம். இந்த எம்முடிவுக்குத் துணையாக ஒரு செய்தி உள்ளது. பண்டை எகிப்தியர் கி.மு. 3100 வாக்கில் தொடங்கும் ஓர் ஆண்டு முறையைக் கையாண்டணர் என்பதும் அவர்கள் வெளியிலிருந்து ஓர் உயர்ந்த நாகரிகத்தோடு குடியேறியவர்கள் என்பதும் அதுபோல் தென் அமெரிக்காவில் குடியேறியுள்ள மக்களும் அதே காலத்தில் தொடங்கும் ஓர் ஆண்டு முறையைக் கையாண்டுள்ளனர் என்பதும்.

உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்ற சோழன் கரிகாலனின் தந்தை. அவன் கருவிலிருக்கும் போதே தந்தை இறந்து போக நாட்டை இருங்கோவேள் என்பவன் கைப்பற்றுகிறான். அவன் கண்ணனுக்குப் பின் 49 தலைமுறைக்குப் பிந்தியவன் என்று கூறப்படுகிறது. கண்ணன் இறந்தபின் துவரையிலிருந்து வெளியேறிய யாதவர்களாகிய வேளிர்களில் அவனும் ஒருவன் என்று கூறப்படுகிறது. அவன் முன்னோர் விட்டு வெளியேறிய துவரை வடக்கே உள்ள துவாரகையாகவே இருக்க வேண்டும். தலைமுறைக்கும் ஆண்டுகள் என்று சராசரியாக வைத்துக் கொண்டால் 2450 ஆண்டுகள் ஆகின்றன. முதல் கரிகாலன் கி.மு. 150 என வைத்துக் கொண்டால் 2450 + 2150 = 4600 ஆண்டுகள். கலியாண்டு கணக்கிலிருந்து 400 ஆண்டுகள் வேறுபாடு இவர்கள் கபாடபுரமாகிய துவரையம்பதியிலிருந்து வடக்கிலுள்ள துவாரகைக்குக் குடிபெயர்ந்து தெற்கு நோக்கி நகர்ந்ததற்கு இடைப்பட்ட காலத்தைக் குறிக்கலாம்.

கலியாண்டு இயற்கை ஆண்டிலிருந்து 24 நாள் தள்ளிக் கணக்கிடும் இன்றைய முறையிலேயே அமைந்துள்ளது. அங்கிருந்து தான் உரோமுக்கு இன்றைய கிறித்துவ ஆண்டுமுறை சூலியர் சீசரால் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன் ஆண்டுக்குப் பத்து மாதங்களாய்ப் பகுத்து அவை ஒவ்வொன்றிலும் அங்குள்ள குக்குலங்கள் ஒவ்வொன்று ஆட்சி புரிவது போல் அமைக்கப்பட்டிருந்தது.

கிரேக்கர்கள் நிலவாண்டையும் கதிராண்டையும் இணைக்க புதுமையான ஓர் முறையைக் கையாண்டனர். 8 ஆண்டுகளில் இரண்டு முறை ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தினர். முதல் ஒலிம்பிக்கில் இரண்டு மாதங்களையும் இரண்டாம் ஒலிம்பிக்கில் ஒரு மாதத்தையும் கழித்துச் சரி செய்து விட்டனர்.

உரோமில் நடைமுறையிலிருந்த ஆண்டுமுறை மட்டுமின்றி சீனக் கடற்கரை மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ ஐரோப்பாவில் கலியாண்டிலுள்ள 24 நாள் பிழையில்லாத மேழத்திலிருந்து (மார்ச் 21) தொடங்கிய இயற்கை ஆண்டுகள் பல நாடுகளில் வழக்கத்திலிருந்துள்ளன.

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போப் கிரிகோரி என்பவர் மதமற்றவர்கள் (Pagens) என்று கருதப்படும் தமிழர்களின் பொங்கல் திருநாளும் கிறித்தவ ஆண்டுப்பிறப்பும் ஓரே நாளில் வருவது கண்டு அப்போது உருவாகியிருந்த விண்மீன் ஆண்டுமுறை நட்சத்திரமானம் Sidereal year {ஆண்டு முறைகளை நிலவாண்டு (Lunar year), கதிராண்டு (Solar year), கதிர் நிலவாண்டு (Lumisolar), விண்மீன் ஆண்டு (Sidereal year) என்று நான்காகப் பகுப்பர். வானில் உள்ள ஒரு விண்மீனுக்கு நேராகக் கதிரவன் அடுத்தடுத்து வரும் கால இடைவெளிக்கு விண்மீன் ஆண்டு என்று பெயர்; இது திருப்புகை (Tropical) ஆண்டை விட ஏறக்குறைய 20 நிமிடங்கள் நீளமானது.} என்ற சாக்கை வைத்து 13 நாட்கள் ஆண்டை முன் கூட்டியே கணித்தார். அதற்கு முன் நம் சித்திரை மாதப் பிறப்பு அன்று தான் ஏப்ரல் மாதமும் பிறந்தது.

நம் ஐந்திறங்கள் மதுரையிலோ அல்லது அதற்கும் முன் தென்னிலங்கையிலோ கணிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு அவற்றிலேயே சான்றுகள் உள்ளன. சித்திரை மாதத்தை எடுத்துக் கொள்வோம். தலைப்பில் சித்திரை மாதம், மேச ரவி என்று இருக்கும். ஆனால் 7 முதல் 9 ஆம் நாளுக்கு நேராக “ரிசிபாயனம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது கதிரவன் மேச ஓரையிலிருந்து ரிசப ஓரைக்குள் நுழையும் நாள் என்பது இதன் பொருள். அந்த மாத பகல்நேரப் பட்டியலில் (அகசு) 5 நாளுக்கொருமுறை நேரம் குறிப்பிட்டு விட்டு ரிசபாயன நாளுக்கு ஒரு நேரமும் குறிக்கப்பட்டிருக்கும். ஓரைகளின் இருப்பைக் காட்டும் பட்டியல் பழைய முறைக்குத் தான் பொருந்துமேயன்றி இப்போதைய முறைக்குப் பொருந்துவதில்லை. புதியவற்றைப் புகுத்தியிருக்கிறார்களேயன்றி பழையவற்றை அகற்றிவிடவில்லை. கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்ட திருக்கணித ஐந்திறம் சில மாற்றங்களைக் கொண்டுள்ளது. அண்மைக் காலத்தில் பிற நிறுவனங்களும் மாற்றங்களைச் செய்துள்ளன. மொத்தத்தில் ஐந்திறங்கள் நம் பண்டை வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு உதவும் மிகப் பெரும் கருவ10லங்களாகும்.

உலகில் 365¼ (சற்று குறைவாக) நாட்களையும், 12 மாதங்களையும் கொண்ட ஆண்டுமுறைகள் இரண்டே தான். ஒன்று தமிழர்களின் வாக்கிய ஐந்திறம் காட்டும் 60 ஆண்டுச் சுழற்சியுடைய கலியாண்டு. இன்னொன்று அதிலிருந்து தோன்றி மாதங்களின் நாட்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட சீர்மையால் கையாள்வதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் எளிமையான கிறித்துவ ஆண்டு. விடுதலையடைந்த பின் இந்திய அரசாங்கம் அமைத்த குழு வகுத்தளித்த சக ஆண்டு முறையையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் மதுரையில் கடற்கோளுக்கு முன் நாம் கடைப்பிடித்த ஆண்டுமுறை. ஆனால் மாதப் பெயர்கள் சைத்ரம், வைசாகம் என்றிருப்பதற்கு மாறாக மேழம், விடை என்று மலையாள மாதப் பெயர்களைப் போல் இருந்தன. அதன் வரலாற்றுப் பதிவாக ஐரோப்பிய சோதிடக் குறிப்புக்குப் பயன்படுத்தும் ஓரைவட்டம் (Zodiac) இன்று உள்ளது.

24 நாட்கள் தள்ளி ஆண்டைக் கணக்கிட்டு நம் முன்னோர்கள் அதற்கிசைய மாதப் பெயர்களை மாற்றி விட்டனர். 27 நாண்மீன்களை 12 ஓரை வட்டத்துக்குள் ஓரைக்கு 2¼ ஆக வைத்தால் ஒவ்வொரு ஓரையின் தொடக்கத்திலும் ஒரு நாண்மீன் இருக்கும். எனவே ஒவ்வொரு மாதமும் வெள்ளுவா (பவுர்ணமி-முழுநிலா) அன்று நிலவு எந்த ஓரையில் உள்ளதோ அந்த ஓரையின் முதல் நாண்மீனின் பெயரில் அந்த மாதம் அழைக்கப்பட்டது. முன்பு மேழ மாதம் முழுவதும் கதிரவன் மேழ ஓரையில் இருந்தது. இப்போது அதில் பிசகு ஏற்பட்டதால் அதற்கு எதிரில் அதாவது 7-வதாக இருக்கும் துலை ஓரையின் முதல் நாண்மீனாகிய சித்திரையின் பெயர் வைக்கப்பட்டது. இதில் நாண்மீன்கள் வரிசையை கார்த்திiயிலிருந்து தொடங்குவதா, அசுவதியிலிருந்து தொடங்குவதா என்ற குழப்பம் இன்றும் நிலவுகிறது.

தமிழர்கள் தம் அறிவுத் துறைகள் அனைத்தையும் ஓரைவட்டத்துக்குள் அடக்கி வைத்துக் காத்துள்ளனர். இது ஒரு தனித்துறை. இதுப்பற்றித் தனியாகப் பேசலாம்.

இன்று கிரீன்விச் மைவரை (Meridian) உலகின் நேரக் கணக்கீட்டுக்கு அடிப்படையாக இருப்பது போல் முன்பு லங்கோச்சையினி மைவரை இருந்தது. முன்பு விளக்கிய, சுறவக் கோட்டில் இருந்த இராவணனின் தென்னிலங்கையையும் இந்தியாவிலுள்ள உச்சையினியையும் இணைக்கும் கோடு இது. இது இலக்கத் தீவுகள், கடல் மட்டத்திலிருந்து 600 அடிக்குள் முழுகிக் கிடக்கும் பழைய இமைய மலையில் திரிகூட மலைகள் என்று சுறவக் கோட்டிலும் நிலநடுக்கோட்டிலும் மேற்கு நோக்கி கிளை மலைகள் பிரிந்து செல்லும் இடத்தில் அமைந்துள்ள இரண்டு இலங்கைகளையும் இணைத்து வடக்கே கடகக் கோட்டில் அமைந்துள்ள உச்சினியில் முடிகிறது. இது 750 கிழக்கில் உள்ளது. இன்றைய இலங்கை 790 கிழக்கில் உள்ளது. இதனை யாமேத்திர ரேகை என்றும் கூறுவர். எமதிசை – தென்திசை, உத்திரம் – வடக்கு எமம் → யாமம், எம உத்திரம் – யாமோத்திரம். அப்போதெல்லாம் கதிரவன் இந்தியாவில் அல்லது குமரிக் கண்டத்தில் தோன்றிப் பின் பிற பகுதிகளுக்குச் சென்றது போல் நாட்கணக்கு இருந்தது. இதை மாற்றுவதற்காக போப் கிரிகோரி 16 ஆம் நூற்றாண்டில் ஒரு வியாழக்கிழமையைக் கழித்து புதனுக்குப் பின்னர் வெள்ளிக் கிழமை வருவது போல் நாட்காட்டியை மாற்றியமைத்தார். எனவே இன்றைய கிரீன்விச் நேரம் நம்மை விட 5½ மணி நேரம் முன்னதாக உள்ளது.

இந்திரனைப் பாண்டியன் போரில் தோற்கடித்தது கண்ணனுக்கும் இந்திரனுக்கும் நடந்ததாகத் தொன்மங்கள் கூறும் போராக இருக்கலாம். மதுரை அழிந்து எஞ்சிய பகுதியில் இந்திரன் ஆட்சி நடந்ததற்கு எதிராகக் கண்ணன் நடத்திய போராக இது இருக்கலாம். அதனால் பாண்டிய நாட்டில் மழைவளம் குறைந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் குறையைப் போக்க மழையைக் கட்டியாண்டான் பாண்டியன் என்று சிலம்பு கூறுகிறது. கபாடபுரம் பகுதி மழை வளம் குறைந்ததாக இருந்திருக்கலாம். இந்திரன் அதுவரை அளித்து வந்த உணவுப் பண்டங்களை நிறுத்தியிருக்கலாம். அதனால் அணைகளைக் கட்டித் தண்ணீரைத் திருப்பியும் குளங்களை வெட்டி நீரைத் தேக்கியும் பாசன அமைப்புகளைப் பாண்டியன் உருவாக்கியிருக்கலாம். கண்ணனின் மூத்தோனாகக் கூறப்படும் வெள்ளையன் என்ற பலதேவன் அல்லது பலராமன் கலப்பையைக் கொடியாகவும் ஆயுதமாகவும் கொண்டவன். அவன் கலப்பையால் கங்கையைத் தன்னிடம் கொண்டு வந்தவன் என்றொரு தொன்மக் கதை உள்ளது. வெண்மையைப் பெயரில் கொண்ட வெண்டேர்ச்செழியன் பலதேவனாயிருக்கலாம். 60 ஆண்டுகளை மழைப் பொழிவின் அடிப்படையில் 20-20-20 எனப் பிரித்து ஆண்டுக்கு ஒரு வானிலையியல் பாடலையும் பாடிய இடைக்காடனார் மழையின் தேவை கருதி அதனைப் பாடியிருக்கலாம். நம் ஐந்திறங்களில் மழை பற்றிய குறிப்புகளுக்கும் இடைக்காடரின் பாடல்களுக்கும் முரண்பாடு உள்ளதா என்பதையும் ஆயலாம். இடைக்காடனார் ஓர் ஆயர்-இடையர் என்பதும் கண்ணனும் இடையன் என்பதும் இணைத்துப் பார்க்கத்தக்கது.

தமிழறிஞர்கள் நம் ஐந்திறங்களிலும் 60 ஆண்டுப் பெயர்களிலும் நாண்மீன், ஓரைப் பெயர்களிலும் உள்ள சமற்கிருத வடிவத்தை நோக்கி அவை நமக்குரியவை அல்லவென்கின்றனர். ஆனால் அப்பெயர்களைத் தமிழ்ப்படுத்தி விட்டால் மட்டும் அவை தமிழர்களுக்குரியவாகிவிடுமாம். வருணன். இந்திரன் போன்ற இருக்குவேத தெய்வங்களைத் தொல்காப்பிய நானிலத் தெய்வங்களில் சேர்த்திருக்கும் நமக்கு இருக்கு வேதமும் சமற்கிருதமும் எவ்வாறு அயலாக இருக்க முடியும்?

சமற்கிருதத்தில் 50 விழுக்காடு தமிழ்ச் சொற்கள் என்று சொன்னார் பாவாணர். அவருக்குப் பின் வந்தவர்கள் மேலும் பல சொற்களைத் தமிழுக்கு உரியதென்றனர். அவர்கள் விட்ட சொற்கள் இன்னும் எண்ணற்றவை. சாத்தூர் சேகரன் போன்றவர்கள் ஏறக்குறைய அனைத்துச் சொற்களையும் தமிழ் என்று கூறி அதற்குரிய சொல்லியல் நெறிமுறைகளையும் வகுத்துள்ளார். இவ்வாறு நம் தவறான நோக்கால் தமிழுக்குரிய எண்ணற்ற சொற்களையும், தமிழர்க்குரிய பல்வேறு எய்தல்களையும் படைப்புகளையும் நூல்களையும் அவை சமற்கிருதத்தில் உள்ளன என்ற ஓரே காரணத்தால்; நமக்குரியவையல்ல என்று மறுத்து வெறுங்கையராய் நிற்கிறோம்.

எடுத்துக்காட்டாக, கோயில் நடைமுறைகளை நெறிப்படுத்தும் ஆகம நூல்கள் கட்டடவியலில் அடிப்படை தோண்டுவதில் தொடங்கி “இறைவனை” இரவில் படுக்க வைப்பது வரை தேவைப்படும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத் துறைகளையும் விளக்குகின்றன. அவை சமற்கிருதத்தில் இருப்பதால் அவற்றைக் காண நாம் மறுக்கின்றோம். அவை கிரந்த மொழியில் உள்ளன என்கின்றனர் சிற்பிகள். கிரந்தம் அவர்களுக்குரிய (குழுஉக்குறி) மொழியாம்.

இங்கு குமரிக் கண்டம் குறித்த மிகக் குறைந்த செய்திகளை, நான் அறிந்தவற்றிலிருந்து ஒழுங்குபடுத்தித் தந்துள்ளேன். இது ஒரு முதல்நிலை முயற்சி தானேயொழிய முடிவானதல்ல. இதை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கொண்டு வருங்காலத்தவர் விரிவுபடுத்தலாம். இதில் பல முரண்களும் இருக்கலாம். சிவன், கண்ணன், பலதேவன், முருகன் போன்றவர்கள் இந்திரனைப் போன்று ஒரு பதவிப் பெயர்களா அல்லது தனிமனிதர்களா என்பது அவற்றுள் ஒன்று. பதவிப்பெயர்கள் என்று கொண்டாலே பல முரண்பாடுகளை விளக்க முடியும்.

1984 இல் குமரிக் கண்ட ஆய்வுக் கழகம் என்ற ஒன்றைத் தொடங்கினேன். உலகளாவிய நிலையில் ஆங்காங்குள்ள பண்பாடுகளுக்குக் குமரிக் கண்ட வரலாற்றோடு ஏதேனும் தொடர்பு இருந்தால் அவை பற்றிய கட்டுரைகளோடு கருத்தரங்குகள் நடத்தத் திட்டமிட்டு ஒரு கட்டுரைத் தலைப்புப் பட்டியல் உருவாக்கினேன். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் அமைந்த அந்தப் பட்டியலை அடியில் தருகிறேன்.

இன்று தமிழர்கள் உலகளவில் பரவியுள்ளனர். அவர்கள் நினைத்தால் இத்தகைய ஒரு கருத்தரங்கை நடத்த முடியும். அதற்கு இந்த உரையாடல்கள் உதவட்டும்.

உலகப் பேரழிவிலிருந்து தப்பிய மக்களின் வழிவந்தவர்களாக அமைதி வாரி (பசிபிக் பெருங்கடல்) தீவுகளில் வாழும் மக்கள் முழுகிப் போன நிலத்தில் வாழ்ந்த தம் முன்னோர்கள் தங்கள் வரலாற்றையும் அறிவியல் தொழில்நுட்பம் அனைத்தையும் பளிங்குக் கற்களில் பதிந்து வைத்துள்ளதாக நம்புகிறார்களாம். அவற்றை அவர்கள் வைத்துள்ளதாகவும் லெமூரியா பற்றிய இணைய தளம் ஒன்று கூறுகிறது. இன்று கணினித் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழர்கள் ஒரு நாள் அந்தப் பதிவைப் படித்து அறிவார்கள். உலகுக்கும் சொல்வார்கள் என்று நம்பலாம்.

முன்பு கூறியது போல் வரலாற்று வரைவு என்பது ஓர் அரசியல் பணி. தமிழர்களின் வருங்கால அரசியலுக்கு விதையாக இந்தக் குமரிக் கண்ட ஆய்வு அமையட்டும்.

அன்புடன்
குமரிமைந்தன்.

மின்னஞ்சல்: kumarimainthan@sify.com
வலைப்பக்கம்: http://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்