மத மாற்றமா ? மத ஒழிப்பா ?

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

தந்தை பெரியார்


உலகில் மதங்கள் என்பவை ஏற்பட்டுப் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியிருந்தாலும், மதங்களை ஏற்படுத்தினவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூலப் புருடர்கள் எல்லாம், தெய்விக சக்தி பொருந்தியவர்களாயும், தெய்வ சம்பந்தமுடையவர்களாயும், தீர்க்க தரிசன ஞானமுள்ள மகாத்மாக்களாயும் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டும், எல்லா மதக்கட்டளைகளும் தெய்வங்களாலேயே மூலப்புருஷர்கள் மூலம் உலகத்திற்கு இறக்கப்பட்டது என்று சொல்லப்பட்டும் இருந்தாலும், சதாசர்வகாலமும் அந்த அந்த மதப் பிரசாரம் செய்யப்படாவிட்டால் மதம் ஒழிந்துபோய் விடுமே என்கின்ற கவலை இன்று உலகிலுள்ள எல்லா மதஸ்தர்களிடமும் ஆதிமுதல் இன்றுவரை இருந்துதான் வருகின்றது. இந்த அபிப்பிராயத்திலும், காரியத்திலும் உலகில் இன்ன மதம் உயர்வு, இன்ன மதம் தாழ்வு என்று சொல்லுவதற்கில்லை.

சாதாரணமாக ஒரு கோடி ரூபாயோ, அல்லது இரண்டு கோடி ரூபாயோ கையில் வைத்துக்கொண்டு ஆயிரம் ஆட்களையோ, அல்லது இரண்டாயிரம் ஆட்களையோ நியமித்து, 5, 6 பாஷைகளில் பத்திரிகைகளையும் வைத்துக் கொண்டு, ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட மிருகத்தின் பேரால் ஒரு மதத்தைக் கற்பித்து, அம்மிருகத்துக்குச் சில ‘தெய்விகத்தன்மை ‘யைக் கற்பித்து, அது பல ‘அற்புதங்கள் ‘ செய்ததாக ஆபாசமானதும், பொருத்தமற்றதுமான கதைகளைக் கட்டிவிட்டுப் பிரசாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டால், கண்டிப்பாகச் சில வருடத்திற்குள் இலட்சக்கணக்கான மக்கள் அம்மதத்தைப் பின்பற்றுபவர்களாகச் செய்துவிடலாம். பிறகு, அந்த மதத்தை எவனாவது குற்றம் சொல்லுவானேயானால் அவன் தண்டிக்கப்படவோ, வையப்படவோ, அடிக்கப்படவோ, அம்மதக்காரரால் கொலை செய்யப்படவோ ஆளாகும்படியும் செய்துவிடலாம்.

ஆதலால், மதங்களுக்கு ஜீவநாடியாக இருந்து வருவது பணமும், பிரச்சாரமுமேயல்லாமல் அவற்றின் தெய்விகத் தன்மையோ, உயர்ந்த தத்துவமோ, அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருந்தக்கூடிய கொள்கைகளோ என்று எந்த மதத்தையும் யாரும் சொல்லிவிடமுடியாது.

சமீப காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணை ‘ஒரு பேய் பிடித்துக் கொண்டது ‘ என்று அந்தப் பெண்ணும் தலைவிரித்து ஆடத் தொடங்கினாள். அதற்காக ஒரு பேயோட்டியைக் கூப்பிட்டு, அந்தப் பேயை ஓட்டச் சொன்னதில், அந்தப் பேயோட்டி இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கும் பேய் யார் என்று கண்டுபிடிப்பதில் 2 நாள் செலவழித்துக் கடைசியாக, ‘5, 6 வருஷத்திற்கு முன்னால் அவ்வூர்க் கிணற்றில் விழுந்து செத்துப்போன ஒரு மராட்டியன் அடுத்த ஜன்மத்தில் நாயாய்ப் பிறந்து இந்தப் பெண் வீட்டில் வெகு செல்லமாய் வளர்ந்து, இந்தப் பெண்ணிடமும் மிக அன்பாய் இருந்து, ஆறு மாதத்திற்கு முன் அதுவும் கிணற்றில் விழுந்து செத்துப் போனதால், அது பேயாகி இப்போது அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொண்டது ‘ என்று சொன்னான். இதை அந்த ஊர்க்காரர்கள் நம்பினார்கள் என்ற குறியை இந்தப் பெண் தெரிந்தவுடன், பேய் ஆடும்போது அடிக்கடி நாய் மாதிரி குரைப்பதும், சிற்சில சந்தர்ப்பங்களில் மராட்டிப்பேச்சு மாதிரி பேசுவதுமாய் இருந்தாள். அதுமாத்திரமல்லாமல், தன்னைப் பிடித்திருக்கும் பிசாசு நாய் பிசாசுதான் என்பதைக் காட்டுவதற்காகச் சில சமயங்களில் மலத்தைச் சாப்பிடவும் செய்தாள். மற்றும், வேறு பல நாய்களுக்கும் தின்பண்டம் போட்டு சதா 7, 8 நாய்களுடன் காமாதூர விளையாட்டும் விளையாடுவாள். இதைப் பார்த்த எல்லோருமே சிறிதுகூடச் சந்தேகமில்லாமல் இந்தப் பெண்ணைப் பிடித்திருப்பது நாய்ப் பிசாசுதான் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

மதங்களும் இதுபோலவேதான். தன்னை ஒரு மதக்காரன் என்று காட்டிக்கொள்ள வேண்டுமானால், மதகுருக்கள் அல்லது மதகர்த்தர்கள், அல்லது மதப் பிரச்சாரக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் என்ன சொல்லுகின்றார்களோ, அந்தப்படி நடக்கத்தான் ஒவ்வொரு மதபக்தனும் ஆசைப்படுகிறான்.

மதம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதென்றும், சைன்சுக்கும் (Science), மதத்துக்கும் சம்பந்தம் பார்க்கக்கூடாதென்றும், பகுத்தறிவு வேறு, மதக்கோட்பாடுகள் வேறு என்றும், இந்தக்காலம் வேறு, அந்தக்காலம் வேறு என்றும், பெரியோர்கள் நியமனங்களுக்குக் காரண காரியங்கள் விசாரிக்கக்கூடாது என்றும், ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக் கூடாது என்றும் எல்லா மதக்காரர்களும் சொல்லிவிடுவதால், உலகில் மதத்தின் பேரால் எந்த மூடனும் எதையும் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்கின்ற தைரியத்தின் மீதே மத ஆபாசமும், மத அயோக்கியத்தனங்களும் உலகில் நிலைத்து வருகின்றன. இந்த லட்சணத்தில் உள்ள மதங்களுக்கு ஆள்பிடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தின் மீது மதமாற்றப் பிரச்சாரங்களும் நடந்து வருகின்றன என்றால், இது, ‘புழுத்ததின் மீது நாய்விட்டையிட்டது ‘ என்கின்ற பழமொழிப்படி, மனிதர்களை மேலும் மேலும் மூடர்களாக்குவதாகவே இருந்து வருகிறதே அன்றி, இதில் நாணயமோ – உயர்வோ இருப்பதாகச் சொல்ல முடியாது. சாதாரணமாக, இந்திய மக்களில் 100-க்கு 92 பேர்கள் தற்குறிகள், எழுதப்படிக்கத் தெரியாத பாமர மக்கள்; இவர்களிலும் 100-க்கு 90 பேர்கள் நல்ல ஜீவனத்துக்கு மார்க்கமில்லாமலும், வயிற்றுப் பிழைப்புக்கு எதையும் செய்யலாமென்று கற்பிக்கப்பட்டிருக்கிறவர்கள். இப்படிப் பட்ட இவர்களிடத்தில் எது சொன்னாலும் ஏறாது. என்ன சொன்னாலும் நம்பும் சக்தி – எழுத்து வாசனை அறியாத மூடர்களுக்கே அதிகம் ஆதலால், இப்படிப்பட்ட ஜனங்களிடம் மதப்பிரசாரம் செய்து மதமாற்றுதல் வேட்டை ஆடுவது என்பது யாவருக்கும் சுலபமான காரியமாகும்.

இந்திய மக்களின் கல்வி அறிவுவாசனை அற்ற தன்மையும், பாமரத்தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்த தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மதவேற்றுமைகளும், மதமாற்றங்களும் தாண்டவமாடுகின்றன. இந்தியாவில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், புத்தர்கள், யூதர்கள், பாரசீகர்கள், சீக்கியர்கள், ஆரிய சமாஜிகள், வைணவர்கள், சைவர்கள், ஸ்மார்த்தர்கள் – முதலிய கடவுள் மாறுபாடு உள்ளவர்களும், மதகர்த்தாக்கள் மாறுபாடுள்ளவர்களும், மதக்கோட்பாடுகளின் அர்த்த மாறுபாடுள்ளவர்களுமாக எத்தனையோ பிரிவினர்கள் இருந்துகொண்டு, வெகுகாலமாகவே மதமாற்றப் பிரச்சாரம் செய்துகொண்டுதான் வருகிறார்கள்.

ஆனால், இந்த மதங்களில் மனித வாழ்க்கைத் தத்துவத்தில் ஏதாவது ஒன்றுக்கொன்று பிரமாத வித்தியாசங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தால், ஒன்றுமே காணமுடியாத நிலையில்தான் இருந்து வருகின்றன.

எல்லா மதத்துக்குமே – ஒரு கடவுள் உண்டு,

மேல் லோகமுண்டு,

மோட்ச நரகமுண்டு,

ஆத்மா உண்டு,

செத்த பிறகு இந்த ஆத்மா என்கின்ற கொள்கைகளிலாவது, அல்லது மனிதன் அவனவன் நன்மை – தீமைக்கு ஏற்றவிதம் பலன், மோட்ச – நரகம் அனுபவிப்பான் என்கின்ற கொள்கைகளிலாவது கருத்து வித்தியாசமில்லாமலே இருந்துவருகின்றது.

பிரத்தியட்ச அனுபவத்திலோ, எல்லா மதத்திலும் ‘அயோக்கியர்கள் ‘, ‘யோக்கியர்கள் ‘ இருந்துதான் வருகிறார்கள்.

எல்லா மதத்திலும் ஏழைகள், பணக்காரர்கள் இருக்கிறார்கள்.

எல்லா மதத்திலும் எஜமான், கூலியாள் இருக்கிறார்கள்.

எல்லா மதத்திலும் உற்சவம், பண்டிகை இருக்கின்றன.

எல்லா மதத்திலும் வணக்கம், தொழுகை, பிரார்த்தனை ஜபம், தவம் இருக்கின்றன.

எல்லா மதக் கடவுள்களும் – தொழுகை, பிரார்த்தனை வணக்கம், பூசை ஆகியவைகளுக்குப் பலன் கொடுக்கும் என்றும், இவற்றாலேயே நாம் செய்த எப்படிப்பட்ட பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடலாம் என்றும் ஒரு நம்பிக்கை இருந்துதான் வருகின்றது.

மற்றும், எல்லா மதக்கடவுள்களும் கண்களுக்குத் தோன்றாததும், மனத்திற்குப் படாததும், ஆதி அந்தம், ரூபம், குணம், பிறப்பு, இறப்பு முதலியவைகள் இல்லாதவைகளுமாகவேதான் இருக்கின்றன. எல்லா மதங்களும், ‘கண்களுக்கும் ‘ மனத்திற்கும் தோன்றக்கூடிய எந்த வஸ்துவுக்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும் என்றும், ஆனால், கண்களுக்கும் மனத்திற்கும் எட்டாத ஒரு வஸ்துவாகிய கடவுளுக்கு மாத்திரம் ஒரு கர்த்தா இல்லையென்றுமே சொல்லுகின்றன. ஒரு மதமாவது, என் கடவுள் கண்ணுக்குத் தெரியக்கூடியது என்றோ, என் வேதமாவது தனது கோட்பாடுகள் எல்லாம், மக்கள் எல்லோரும் ஏற்று நடக்கக்கூடியதாய் இருந்து வருகின்றது. அல்லது நடக்கக்கூடியதாய்ச் செய்யச் சக்தி உள்ளதாய் இருக்கின்றது என்றோ, சொல்ல யோக்கியதை உடையதாக இல்லை. எல்லா மதக்காரர்களுக்கும் பசி, தாகம், நித்திரை, அதிருப்தி, கவலை, போதாது என்கின்ற தரித்திர குணம் ஆகியவை ஒன்று போலவேதான் இருக்கின்றன. எல்லோருடைய வேதமும், கடவுளாலும் கடவுள் தன்மை உடையவர்களாலுந்தான் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன என்றாலும், அவை ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகவும், பலவற்றில் நேர்மாறான கருத்துக் கொண்டதாகவும் இருந்து வருகின்றன. எல்லா மதக்காரர்களுக்கும் ஒவ்வொருவித அடையாளம் இருக்கின்றது. இந்த நிலையில், மதப்பிரச்சாரத்தால், மத மாற்றத்தால் மனிதர்களுக்கு என்ன லாபம் ஏற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை.

சாதாரணமாக, இந்தியர்களில் 8 கோடி முஸ்லீம்கள் இருக்கின்றார்கள்; 1 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்; சுமார் 10 கோடி வைணவர்கள் இருக்கிறார்கள்; 5 கோடி சைவர்கள் இருக்கிறார்கள்.

மற்றும், கலப்பு மதம் உள்ளவர்களும், மதக்குறிப்பு இல்லாதவர்களும் ஏராளமாயிருக்கிறார்கள் என்று உத்தேசமாகச் சொல்லக்கூடுமானாலும், இவர்களில் பெரும்பான்மையோர் சமீப காலங்களில் அதாவது சுமார் 1000, 2000 வருடங்களுக்குள் மதமாற்றமடைந்தவர்கள் என்று சொல்லலாமானாலும், இவர்களின் வாழ்க்கையில் ஏதாவது விசேஷமோ உயர்வோ உண்டா என்பதைச் சிந்தித்து நன்றாய்ப் பார்ப்போமேயானால், ஒருவித மேன்மையும் எந்த ஒரு தனி மதக்காரருக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அதாவது, அரசியலிலாகட்டும், பொருளியலிலாகட்டும், அறிவியலிலாகட்டும், சமுதாய வாழ்க்கையிலாகட்டும், ஆண், பெண் தலைமையிலாகட்டும், எல்லோரும் ஒரு திட்டத்தில் இல்லாவிட்டாலும், கொள்கையில் ஒரு மாதிரியாகவேதான் இருந்து வருகின்றார்கள்.

ஆகையால், மனித சமூகத்திற்கு அவரவர்கள் வாழ்க்கையில் உள்ள கவலைகள் அற்று – அதிருப்தி ஒழிந்து, சாந்தியும், சந்தோஷமும் கொண்டு வாழ்வதற்கும், பொருளியலிலும், சமுதாய இயலிலும், ஆண், பெண் தன்மையிலும் சமதர்ம தத்துவம் கொண்ட வாழ்க்கை ஏற்பட இந்தியாவுக்கோ, அல்லது உலகத்துக்கோ இனி மத ஒழிப்புப் பிரசாரம் வேண்டுமா, அல்லது மதம் மாற்றுப் பிரசாரம் வேண்டுமா என்பதை ஒவ்வொரு அறிவாளியும் யோசிக்க வேண்டிய முக்கியக் கடமையாகும்.

மதம் மாற்றுதல், மதப்பிரசாரம் ஆகிய காரியங்களால் சமீப காலத்திற்கு முன்பு உலகிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவிலும் நடந்த முட்டாள்தனமான – மூர்க்கத்தனமான பலாத்காரக் கொடுமைச் செயல்களும், கலகங்களும், அடிதடிகளும், குத்துவெட்டுகளும், கொலைகளும், சித்திரவதைகளும் எவ்வளவு என்பதற்குச் சரித்திரங்கள், புராணங்கள், பிரத்தியட்ச அனுபவங்கள் எத்தனையோ மலிந்து கிடக்கின்றன. இவைகளையெல்லாம் உத்தேசித்தாவது, இனி வரும் சுயமரியாதை – அறிவியக்க சமதர்ம உலக ஆட்சியில் மதவிஷயத்தைப் பற்றி ஆதரித்து எவராவது தெருவில் நின்று பேசினாலும், தெருவில் புத்தகங்கள் வைத்து விற்பனை செய்தாலும், பத்திரிகைகளில் எழுதினாலும் – அவர்களெல்லாம் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்று சட்டம் செய்யப்படுமானால், உலக மக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, தோளோடு தோள் பிணைந்து தோழர்களாக வாழமுடியும் என்பதோடு, மதத் தத்துவங்களின் பயனால் இன்று உலக மக்கள் அனுபவிக்கும் உயர்வு-தாழ்வு நிலை ஒழிந்து, சகல துறைகளிலும் சமத்துவத்துடன் வாழ முடியும் என்று வற்புறுத்திக் கூறுகிறோம். அந்த அபிப்பிராயமானது, மதங்கள் தெய்வத்தினாலும், தெய்வாம்சம் பெற்றவர்களாலும் உண்டாக்கப்பட்டது என்கின்ற நம்பிக்கையை உண்மையாயும், உறுதியாயும் உடையவர்களுக்கு விரோதமாய் இருக்காது; அவர்கள் ஆத்திரப்படவும் மாட்டார்கள் என்றும் கருதுகின்றோம். ஏனெனில், அப்படிப்பட்ட மதமானது அதாவது, கடவுளால் உண்டாக்கப்பட்ட மதமானது மனிதனுடைய பிரசாரம் இல்லாவிட்டால் அல்லது ஏதாவது ஒரு மனிதன் மறுத்தால் மறைந்து போகுமே – அழிந்து போகுமே என்று அவர்கள் (மத பக்தர்கள்) பயப்பட மாட்டார்கள்.

ஜனவரி 1, 1937 ‘பகுத்தறிவு ‘ இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600007 ‘ வெளியிட்டுள்ள ‘பெரியார் களஞ்சியம் ‘ நூல் வரிசையின் நான்காம் தொகுதியில் (குறைந்த அளவு நன்கொடை ரூ.80) வெளிவந்துள்ள கட்டுரை இது.

(தட்டச்சு உதவி: ஆசாரகீனன் aacharakeen@yahoo.com)

பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்:

கோஷா முறை

கண்ணகி கதை இலக்கியமா ?

திருவள்ளுவரின் பெண்ணுரிமை

எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?

ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது

பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்

கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்

கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்

கல்யாண ரத்து தீர்மானம்

பெண்கள் சொத்துரிமை

Series Navigation

தந்தை பெரியார்

தந்தை பெரியார்