கைது செய்யப்பட்ட விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்களை விடுதலை செய்யவேண்டும்

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

மோகன்


குமுதம் ரிப்போர்ட்டர் 24-11-2002இல் சிதறிப்போன சிந்து என்ற தலைப்பில் திரு என்பவர் எழுதிய ஒரு செய்திக்கட்டுரை, சார்லஸ் என்பவர் எடுத்த படங்களுடன் வெளியாகியிருக்கிறது.

மதுரை போலீஸ், தென் மாவட்டங்களில் இருக்கும் பெரிய விபச்சார புரோக்கர்களை குறிவைத்து ரெய்டு நடத்தி பல விபச்சார புரோக்கர்களையும், விபச்சாரிகளையும் பிடித்து ஜெயிலில் அடைத்திருக்கிறது.

விபச்சார புரோக்கர்களை பிடித்து அடைப்பது சரி. ஏன் விபச்சாரிகளைப் பிடிக்க வேண்டும் ? விபச்சார புரோக்கரின் படம் குமுதம் ரிப்போர்ட்டரில் பெரிய அளவில் வெளியிடப்படவில்லை. ஏனென்றால், அந்த பிரகிருதி ‘அழகி ‘ இல்லை. கட்டுரையின் வார்த்தையிலேயே ‘எல்லோருடைய அனுதாபத்தையும் பெற்ற ‘ பெண்ணின் படம் பெரிய அளவில். என்ன ஒரு பம்மாத்து! கைது செய்யப்பட்டு நீதி மன்றம் கொண்டு செல்லப்பட்டு தண்டனை கிடைக்கும் வரை, எவருமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. குற்றவாளிகள் அல்லர். ஆனால் இந்தப் படங்களை வெளியிட்டதன் மூலம், இவர்களுக்கு ஏற்கெனவே இந்தப் பத்திரிக்கை தண்டனை வழங்கி விட்டது. ஒரு பெண்ணுக்கும் அவள் எப்படிப்பட்ட குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் மனித உரிமைகள் உண்டு. இந்தப் பத்திரிக்கை இப்படிப்பட்டவர்களின் படங்களை வெளியிட்டு எக்ஸ்ப்ளாய்ட் செய்வது பற்றி எந்த மாதர் சங்கங்களும் பெண் விடுதலை இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவிக்காதது வருத்தத்தை அளிக்கிறது.

இன்று மிகவும் தீவிரமாக தமிழ்நாட்டைத் தாக்கிக்கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயைப் பற்றி எந்த விதமான ஒரு சமூக அக்கறையும் இல்லாமல், விபச்சாரத்தின் சமூகப் பின்னணியையும், சமூக விளைவையும் பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லாமல் விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணின் அழும் படத்தை வெளியிட்டு காசு பண்ணும் இன்றைய வெகுஜன பத்திரிக்கைகளைப் பற்றி எந்த ஒரு கோபமும் எந்த ஒரு அறிவுஜீவியிடமிருந்தும் வெளிவராமல் இருப்பதும் வருந்தத்தக்கது. நம் அறிவுஜீவிகளிடையே மனித உரிமைப் போராட்டம் என்பது சந்தனக்கொள்ளைக்காரனுக்கு கொடி பிடிப்பதும், போலீஸை தாக்குகிற பேர்வழிகளை சித்தாந்த டப்பாவுக்குள் அடைத்து அவர்களுடைய வன்முறைக்கு நியாயம் கற்பிக்கும் செய்கை மட்டுமே. அடிமட்டத்தில், ஏழைகள் அவர்கள் ஏழைகளாக இருப்பதாலேயே மேற்கொள்கிற சில சில்லறைக்குற்றங்களுக்காக குற்றவாளிகளாக முத்திரை குத்தப்படுவது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. போலீஸை எதிர்த்தாலே முற்போக்கு என்று எண்ணுபவர்கள் கூட இப்படிப்பட்ட ஏழைகளுக்காக குரல் கொடுப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. போலீஸ் ஒரு வகையில் அரசு சட்டதிட்டங்களை நிறைவேற்றுவதில் முனைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட முனைப்புக்காக மட்டுமே அவர்களை தனிமைப்படுத்தி குற்றம் சாட்டுவது தவறு. ஆனால் வரம்பு மீறும்போது, தனிப்பட்ட காவல்துறையினரை நாம் இனம் கண்டு தண்டிக்கவேண்டும். அதற்கான ஒரு சார்பற்ற வழிமுறை இருக்க வேண்டும். ஆனால், போலீஸ் இங்கு விபச்சாரம் ஒரு சமூகத்தாலும், அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட குற்றம் என்ற அடிப்படையின் காரணமாகவே இந்தப் பெண்களை கைது செய்திருக்கிறார்கள். போலீஸ் இது போன்ற ஒழுக்கரீதியான குற்றங்களை, விவாதத்துக்குறிய குற்றங்களை இரண்டாம் பட்சமாக்கி, சட்டம் ஒழுங்கு ரீதியான குற்றங்களை களைவதிலும், அரசாங்கம், சட்டம் ஒழுங்கு இழியும் ஒரு சூழ்நிலை வராதபடிக்கு, வேலை வாய்ப்பையும், கல்வியையும் பெருக்குவதையும், தொழில் முனைவர்களை சுதந்திரமாக சட்டரீதியான தொழிற்சாலைகள் திறப்பதற்கு உதவுவதையும் முக்கிய குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.

ஆனால் இங்கு இரண்டு விஷயங்களுக்காகப் போராட வேண்டும்.

ஒன்று, விபச்சாரத்தை குற்றம் என்று நிர்ணயித்து பெண்களை கூண்டில் அடைக்கும் சட்டம் திருத்தப்படவேண்டும். இந்தச்சட்டத்தில் பெரிதும் புரோக்கர்களும் அவர்களை உபயோகப்படுத்திக்கொள்ளும் பெரிய மனிதர்களும் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால், விபச்சாரிகள் ஒருமுறை கைது செய்யப்பட்டாலும் பிறகு தம்மை வேறு எந்தத் தொழிலுக்கும் போக முடியாத அளவுக்கு நசிந்து போகிறார்கள்.

இரண்டு, இப்படி பெண்களை படம் எடுத்து அவமானப்படுத்துவதை நிறைவேற்றும் பத்திரிக்கைகளையும், அவைகளை போட்டோ எடுக்க அனுமதித்த போலீஸ் காரர்களையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். பெண்களின் மனித உரிமை மீறலாகவும், பாலியல் சார்ந்த வன்முறையாகவும் இது காணப்பட வேண்டும்.

***

இந்தியாவிலேயே மிக அதிக அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும் ? ஏதோ பூனைக் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்பது போல, எய்ட்ஸ் நோயைப் பற்றி பேசாமல் இருந்தால், அது மறைந்துவிடும் என்பதாக எல்லோரும் இருக்கிறார்கள். இன்று 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன இந்த நோய் சுயம்புவாக வந்ததா ? படத்தில் வெளியிடப்பட்ட பெண்ணைத் தண்டிப்பதன்மூலம் அல்லது இது போன்ற பெண்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதன் மூலம், இந்தப் பரவுதல் தடுக்க முடியுமா ?

இவ்வாறு, படங்களை வெளியிடுவதன் மூலம், இந்தத்துறைக்கு வரசாத்தியமுள்ள பெண்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையக்கூடும். இதனால் எதிர்காலத்தில் விபச்சாரம் பரவுதல் தடுக்கப்படும் என்பது ஒரு வாதமாக இருக்கலாம். ஆனால், ஏற்கெனவே இந்தத் தொழிலில் அகப்பட்டுக்கொண்ட பெண்கள் வெளிவர முடியாதபடி இது மோசமான விளம்பரச்சிறையாக ஆகிவிடுகிறது. அதே வேளையில் இந்தத் தொழிலில் மாட்டிக்கொண்ட பெண்கள் தைரியமாக ஒரு மருத்துவமனைக்குச் சென்று தேவையான மருத்துவ உதவியைப் பெறவும் பெரும் தடையாகி விடுகிறது. இதன் காரணமாக, எய்ட்ஸ் நோயின் ஊற்றாக இவர்கள் உருவாகி விடுகிறார்கள். இது இருப்பதை மறைப்பதும், தொடர்ந்து தொழிலில் இருப்பதும் கட்டாயமாக ஆகிவிடுகிறது. இதன் காரணமாக, விபச்சாரத்துக்கு தொலைதூரத்தில் இருக்கும் அப்பாவிகள் பலரும் இதனால் பாதிக்கப்படுவதும், அம்மாக்களால் குழந்தைகள் நோயுடன் பிறப்பதும் அதிகமாகி வருகிறது.

***

விபச்சாரம் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதே வேளையில், யாருமே எந்தவிதமான கேள்வியும் இன்றி எய்ட்ஸ், மற்றும் பாலியல் நோய்களுக்கு மருத்துவ உதவிகளை பெறுவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும். இதுவன்றி, வெறும் ஒழுக்க ரீதியான பேச்சுக்களையும், பழங்காலச் சட்டங்களையும் வைத்துக்கொண்டு இந்த நவீன நோய் பரவுதலை தீர்க்க முடியாது.

***

Series Navigation

மோகன்

மோகன்