போதி மரம்

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

குரு அரவிந்தன்


………………………………………………………………………………

அமரர் பிரிகேடியர் பால்ராஜின் நினைவாக இச்சிறுகதை மறுபிரசுரம் செய்யப்படுகிறது. ஆனையிறவு சமரில் தலைமைதாங்கி வெற்றிவாகை சூடி தமிழர்களின் தன்மானங்காத்த நிகழ்வை (22-ஏப்ரல்-2000) ஆவணப்படுத்துவதற்காக அன்று சிறுகதை எழுத்தாளர்
குரு அரவிந்தனால் தமிழகத்தில் இருந்து வெளிவரும் கல்கி பத்திரிகையில் எழுதப்பட்டுப் பலராலும் பாராட்டப்பட்ட சிறு கதை இது.
நன்றி : கல்கி
………………………………………………………………………………

அதிகாலையின் மங்கிய இருட்டில் பனிக் குளிரைக் கிழித்துக் கொண்டு அருகே உள்ள பௌத்த விஹாரையிலிருந்து ஒலிபெருக்கியில் ‘பிரித்” ஓதும் சத்தம் அந்த இராணுவ மருத்துவமனைக்குள் எதிரொலித்தது.

புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி…!

அந்த மருத்துவ மனையில் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பண்டா “நான் ஒரு நல்ல பௌத்தனா?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். “இல்லை” என்ற அவனது மனச்சாட்சியின் பதில் அவன் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.

‘நான் ஏன் இப்படிச் சாக்கடைப் புழுவாய் மாறினேன்? நாட்டுப்பற்றா? மதவெறியா? இல்லை மொழிவெறியா?”

எதுவுமே இல்லை!

குடும்பத்தின் வறுமை தான் அவனை இராணுவத்தில் தொழில் புரிய இழுத்து வந்தது என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்குப் பள்ளிப் படிப்பு அதிகம் வரவில்லை. அவனது கட்டுமஸ்தான உடம்பிற்கு இந்தத் தொழில் ஒன்றுதான் அந்த நேரம் ஏற்றதாக இருந்தது. எனவே தான் வேறுவழியில்லாமல் இராணுவத்தில் சேர்ந்தான். அவன் இராணுவத்தில் சேர்ந்த காலத்தில் தினமும் பயிற்சி செய்வது, சாப்பிடுவது, தூங்குவது, போன்றவை தான் இராணுவத்தின் தொழிலாக இருந்தது.

எப்போதாவது எங்கேயாவது மழை வெள்ளமென்றால் அங்கே போய் மக்களுக்கு உதவி செய்வார்கள். அவ்வளவுதான். எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் இப்படித்தான் அவனது இராணுவ வாழ்க்கை ஆரம்பமானது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் நடைபெற்ற இனக்கலவரம் அவனால் மறக்க முடியாத ஒரு சம்பவமாகிவிட்டது. தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப் பட்டபோது வீதிக் காவல் கடமையில் அவன் நின்றிருக்கிறான். கொள்ளை அடித்தவர்கள் தனது இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவற்றைக் கண்டும் காணாதது போல அவன் இருந்திருக்கிறான். அன்றுதான் முதன்முதலாக அவனும் இப்படியான அனியாயத்திற்குத் துணைபோனான். அப்புறம் எத்தனையோ தடவைகள் இப்படியான அநியாயங்கள் நடக்கும் போதெல்லாம் தவறு என்று தெரிந்தும் வாய்மூடி மௌனமாய் இருந்திருக்கிறான்.

மண்ணாசை, பொன்னைசை, பெண்ணாசை இவையெல்லாம் மனிதனின் அழிவிற்காக ஏற்பட்ட ஆசைகள்தான் என்பது அவனுக்குத் தெரியும். மாற்றான் வீட்டு மண்ணை ஆக்கிரமிக்க அரசு ஆசைப்பட்ட போது சேவை காரணமாக மறுக்க முடியாமல் அவனும் அங்கே கடமைக்குப் போனான். ஆக்கிரமித்த நிலத்தில் கால் பதித்த கட்டுப்பாடற்ற இராணுவம் தான்தோன்றித் தனமாய் அங்கே நடக்க முற்பட்டது. வறுமையில் வாடிய அப்பாவி மக்கள் துப்பாக்கி முனையில் பலவந்தமாய் அடக்கப்பட்டனர். காய்ந்து கிடந்த இளமைகள் அடங்காத ஆசைகளோடு பொன்னுக்கும், பெண்ணுக்கும் ஆசைப்பட்டு அலைந்தன. ஆகமொத்தமாக தீராத வெறியோடுதான் அந்த இராணுவம் அங்கே களம் புகுந்தது.

அன்று வீதிச் சோதனைக்காக உயர் அதிகாரியோடு அவனும் வேறு சிலரும் சென்ற போது தான் அந்தச் சம்பவம் நடந்தது. வீதிக்குக்குறுக்கே யாரோ கற்பாறை ஒன்றை நகர்த்தி இருந்தார்கள். பாதைத் தடை காரணமாக சந்தேகத்தின் பேரில் அருகே உள்ள வீடுகளைச் சோதனை போட்டார்கள். அப்போது தான் மங்கிய வெளிச்சத்தில் ஜன்னல் வழியாக அவள் முகம் அங்கே தெரிந்தது. கட்டில் விளிம்பில் தலை குனிந்தபடி அவள் உட்கார்ந்திருந்தாள். பார்த்த மாத்திரத்திலேயே அவளிடம் ஒரு கவர்ச்சி தெரிந்தது. அந்த அழகை அவளுக்குத் தெரியாமல் வெளியே நின்றபடி அவன் ரசித்துக் கொண்டிருந்தான். திடீரென வாசற் கதவை உதைத்துக் கொண்டு உயரதிகாரி உள்ளே நுழைவதையும் அவள் பயத்தோடு திடுக்கிட்டு எழுந்து நிற்பதையும் அவனால் பார்க்க முடிந்தது. அவள் மடியில் இருந்த குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். அவன் நல்ல நோக்கத்தோடு உள்ளே வரவில்லை என்பதை அவனது பார்வையில் இருந்தே அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவசரமாக முந்தானையை இழுத்து திறந்த மார்பை மறைக்க முயற்சி செய்தாள். அவள் இருந்த கோலமும் தனிமையும் உயரதிகாரியை வெறி கொள்ளச் செய்திருக்க வேண்டும். அவளைப் பிடித்திழுத்து மூர்க்கத் தனமாய் கட்டிலில் உயரதிகாரி தள்ளிய போதுதான் “மது குடித்தால் தான் வெறிக்கும் மாது பார்த்தாலே வெறிக்கும்” என்று அந்த உயரதிகாரி அடிக்கடி சொல்வது அவனுக்கு நினைவிற்கு வந்தது. ‘அம்மா” என்று அவள் அப்போது எழுப்பிய அந்த அவலக் குரல் கூட குழந்தையின் அழுகைக்குள் புதைந்து போயிற்று.

உயரதிகாரி காரியம் முடிந்து வெளியேறியதும் அவன் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். அவள் கசக்கப்பட்ட மலராய் அலங்கோலமாய் கட்டிலில் மயங்கிக் கிடந்தாள். மார்பகம் நனைந்திருந்தது. பால்வடிந்த வாயோடு பச்சைக்குழந்தை தரையில் வீரிட்டுக் கொண்டிருந்தது. இதையெல்லாம் சகிக்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டவன் “லெட்ஸ் கோ” என்ற உயரதிகாரியின் கட்டளைக்குப் பணிய வேண்டிவந்தது. ஆனாலும் கடமையின் நிமிர்த்தம் அவன் மீண்டும் மௌனம் காத்தான்.

அந்தத் தாய் அன்று போட்ட சாபமோ என்னவோ ஆனையிறவுச் சமரின் போது அவர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த முகாம் விடுதலைப் போராளிகளால் முற்றுகை இடப்பட்டது. அவர்கள் தண்ணீரில்லாமல் நாவறண்டு உயிருக்குப் போராடியதும் முகாமை விட்டுத் தப்பிப் பின்பக்கமாய் ஓடும்போது தாங்களே முகாமின் பாதுகாப்பிற்காக புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி அந்த உயரதிகாரி பலியானதும், அவனது கால் ஊனமானதும் அவனால் மறக்க முடியாத ஓரு நிகழ்ச்சியாகும்.

முகாமை விட்டுத் தப்பி ஓடும் போது தான் மரணம் அவனைப் பின்னால் துரத்துவது அவனுக்குப் புரிந்தது. இந்த உலகில் வாழப்போவது சிறிது காலம் தான் என்று அவனுக்கு தெரிந்த அடுத்த நிமிடமே மரணபயமும் அவனைப் பிடித்துக் கொண்டது. அது கூட அவனது ஒரு கால் கண்ணிவெடியில் சிக்கி ஊனமுற்ற போது தான் அப்படி அவனுக்குச் சிந்திக்கத் தோன்றியது. காலின் வலியை விட மனசுதான் அதிகம் வலித்தது.

இந்தக் குறுகிய காலத்திற்குள் மொழிவேற்றுமை, மதவேற்றுமை, ஜாதிவேற்றுமை போன்ற பல விதமான வேற்றுமைகளை அவன் சந்தித்து இருக்கிறான். இந்த வேற்றுமை உணர்வுகள் தானே மனிதனை மிருகமாக்கி ரத்த வெறி பிடித்து அவர்களை அலைய வைக்கிறது. வேண்டாம், வேற்றுமை ஒன்றுமே வேண்டாம்! இப்போதைக்கு அன்பு என்கிற இயற்கையின் மொழியைப் புரிந்து கொண்டாலே அவனுக்குப் போதும் போல இருந்தது!

“அன்பு” என்றதும் அவனது உடம்பு சிலிர்த்துக் கொண்டது. அன்பாலே முடியாதது ஒன்றுமில்லை. அது ஒரு இன்ப ஊற்று. என்றுமே வற்றாத ஒரு ஜீவநதி. போதிமரம் இல்லாமலே அவனுக்கு சிறிது சிறிதாக ஞானம் பிறந்தது.

இராணுவத்திடம் இருந்து வந்த ‘விரும்பினால் மறுபடியும் சேவைக்கு வரலாம்” என்ற அழைப்புக் கடிதம் அவனை மீண்டும் சிந்திக்க வைத்தது. யுத்தம் என்ற போர்வையில் ஒன்றுமே அறியாத அப்பாவித் தமிழர்களின் உயிரைப் பலி எடுக்கவா இந்த அழைப்பு?

சின்ன வயதில் படித்த யுத்த வெறி பிடித்த அசோகச் சக்கரவர்த்தியின் சரித்திரம் கண் முன்னால் விரிந்து நின்றது. புத்தபிரானும் பிறப்பால் ஒரு இந்து தானே! அவர் புனித பூமியில் அவதரிக் காவிட்டால் நானும் ஒரு இந்துவாக இருந்திருப்பேனோ? அன்று அந்தப் பெண் “அம்மா” என்று கத்தாமல் “அம்மே” என்று எனது மொழியில் அவலக்குரல் எழுப்பி இருந்தால் உதவிக்கு ஓடியிருப்பேனோ? ஒருவேளை ஊமையாகப் பிறந்திருந்தால் நான் என்ன மொழி பேசியிருப்பேன்? மொழி எல்லாம் ஊமையானால்;;;தான் இந்தமண்ணில் அமைதி நிலவுமோ? அவனது சிந்தனைகள் விரிந்து கொண்டே போக கலங்கிக் கிடந்த மனம் தெளிவானது.

அவன் தனது இராணுவ உடையைக் கழைந்து விட்டு காவி உடை அணிந்து கொண்டான். ஆயுதத்தைக் கிழே போட்டுவிட்டு அகிம்சையைக் கைகளில் எடுத்துக் கொண்டான். கறை படிந்த உடம்பு தூய்மையானது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. இனி மனிதநேயம் ஒன்றே தனது லட்சியம் என்று எண்ணியவனாய் அருகே உள்ள பௌத்தசாலையை நோக்கி நொண்டிக் கொண்டே நடந்தான்.

வானத்தைப் பார்த்துப் பழகிப்போன அவன் அனிச்சையாக நிமிர்ந்து பார்த்தான். யுத்த மேகங்கள் கலைந்து போக வானத்து இரைச்சல் அடங்கிப் போயிருந்தது. அவனது மனதைப் போல நீண்ட நாட்களின் பின் கீழ்வானம் வெளித்திருந்தது. தொலைவானத்தில் காலைச் சூரியனின் கதிரெளியில் வெள்ளைப் புறாக்கள் சுதந்திரமாய் சிறகடித்துப் பறப்பதைப் பார்க்க காயப்பட்ட மனதிற்கு இதமாக இருந்தது.

பௌத்த மடத்தை அடைந்த போது அதன் வாசற் கதவு இழுத்து மூடப்பட்டிருந்தது. போதி மரத்தின் கீழ் காவி உடை ஒன்று மடித்து வைக்கப்பட்டிருந்தது. பௌத்த பிக்குவினால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றும் அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

‘தமிழர்களை வென்றெடுக்கும் யுத்தத்தில் பங்கு கொள்வதற்காக நான் இராணுவத்தில் சேர்ந்து ஆயுதம் ஏந்திப் போராடப் போகிறேன்.”

நிழல் நிஜமாக, நிஜம் நிழலானது!


kuruaravinthan@hotmail.com

(அமரர் பிரிகேடியர் பால்ராஜின் நினைவாக இச்சிறுகதை மறுபிரசுரம் செய்யப்படுகிறது. ஆனையிறவு சமரில் தலைமைதாங்கி வெற்றிவாகை சூடி தமிழர்களின் தன்மானங்காத்த நிகழ்வை (22-ஏப்ரல்-2000) ஆவணப்படுத்துவதற்காக அன்று சிறுகதை எழுத்தாளர்
குரு அரவிந்தனால் தமிழகத்தில் இருந்து வெளிவரும் கல்கி பத்திரிகையில் எழுதப்பட்டுப் பலராலும் பாராட்டப்பட்ட சிறு கதை இது.
நன்றி : கல்கி)

Series Navigation

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன்

போதி மரம்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

ரம்யா நாகேஸ்வரன்


‘அம்மா! நம்ம வீட்டுலே ரொம்ப நாள் முன்னாடி வாடகைக்கு இருந்தாங்களே விமலா மாமி, அந்த மாமியொட அட்ரஸ் இருக்கா ? ‘ அமெரிக்க வாசனையுடன், இரண்டு ராட்ஷச பெட்டிகள் பாதி திறந்த நிலையில் சாமான்களுக்கு நடுவெ அமர்ந்திருந்த என்னை ஆச்சர்யத்தோடு பார்த்தாள் அம்மா.

‘என்ன வைஷு ? வந்து 24 மணி நேரம் கூட ஆகலை, அதுக்குள்ளே 10-12 வருஷம் முன்னாடி காலி பண்ணிண்டு போன மாமியை பத்தி கேட்கறெ ? மாமிக்கு தெரிஞ்சவா யாரையாவது வாஷிங்டன்ல பார்த்தியா ? ‘

‘இல்லெம்மா. இது வேற காரணதுக்காக. அட்ரஸ் இருக்கா இல்லையா ? ‘

என்னுடைய பிடிவாத குணம் தெரிந்த அம்மா, ‘அப்பாவை கேட்டு பார்க்கறேன். சொந்த வீடு கட்டிண்டுதான் போனா விமலா. அதே இடத்துல தான் இருப்பாள்னு நினைக்கிறேன் ‘ என்று சொல்லிவிட்டு இரண்டு வருடம் கழித்து வந்திருக்கும் பேரன் பேத்திக்காக தட்டை செய்ய ஆரம்பித்தாள் அம்மா.

நல்ல வேளை! அப்பாவிடம் அட்ரஸூம் போன் நம்பரும் இருந்தது. அடுத்த நாளே போன் செய்து, அட்ரஸை சரி பார்த்துக் கொண்டு கிளம்பி விட்டேன். ஏழு வயது ஷ்ரவன் தாத்தாவின் மடியில் அமர்ந்து வி.சி.டியில் ராமாயணம் பார்த்துக் கொண்டே ‘தாத்தா, ஏன் ராமா எல்லார் மேலேயும் darts போடறாரு ? ‘ என்றான். நான்கு வயது ஷ்ருதி ஓடி வந்து ‘அம்மா! பாட்டி ஏன் ப்ளாண்ட் கிட்டே பேசறாங்க ? ‘ என்றாள் துளசி பூஜை செய்யும் அம்மாவைப் பார்த்து. ‘ரெண்டு பேரும் ஒரு த்ரீ அவர்ஸ் சமர்த்தா இருக்கணும் ‘ என்றபடி தலைப் பின்னிக் கொண்டேன்.

‘இன்னும் ஜெட் லாக் கூட போகலை! அத்தை, பெரியம்மா யார் வீட்டுக்கும் போகலை! இப்ப என்ன முக்கியமான வேலை விமலா மாமி கிட்டெ ? ‘ என்று புலம்பிய அப்பாவிடம் மழுப்பலாக சிரித்து விட்டு புறப்பட்டேன்.

ஒரு மணி நேர கார் பயணத்தில் நினைவுகள் அலை பாய்ந்தன!

‘அழகி….பேரழகி….உலகத்து அழகியே! ‘ அப்பொழுது எனக்கு பத்து வயது இருக்குமா ? இல்லை சற்று கூடவா ? நான், என் தோழிகள் ரமா, பாகீரதி மற்றும் அவள் தம்பி ப்ரகாஷும் சேர்ந்து இந்த பாட்டை பாடுவோம். விமலா மாமியின் பெண் உமாவைப் பார்த்து பாடுவோம். உமா பார்ப்பதற்க்குச் சுமாராக இருப்பாள். நிறம் கம்மி. அதுவும் தவிர கன்னத்தில் ஒரு பெரிய மச்சம் வேறு! அவளை சீண்டுவதற்காக நாங்கள் நால்வரும் அழகி என்ற சொல் வருகிற மாதிரி பல பாட்டுக்கள் இயற்றி இருக்கிறோம். உமா அழுது கொண்டெ மாமியிடம் ஓடுவாள். மாமி எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார். உமா அழும் பொழுது, கண்களில் சிறிது வலி தெரியும். ஆனால் சிரிப்பு மாறாது. ‘ந்ீங்களேல்லாம் சமுத்து தானே ? அவளை கேலி பண்ணாதீங்கப்பா ‘ என்று கெஞ்சும் குரலில் சொல்வார். ‘ சரி மாமி ‘ என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடி விடுவோம். இரண்டே நாளில் மறுபடியும் இதே நிகழ்வுகள் தொடரும்.

கொஞ்சம் பெரியவர்கள் ஆனவுடன் கேலி செய்வது குறைந்தாலும் உமாவை விட நாங்கள் எல்லொரும் அழகு என்ற கர்வம் இருக்கத் தான் செய்தது. சிறு சிறு செயல்களில் அது வெளிப்பட்டது. புன்னகை மாறாமல் அதை எதிர் கொண்டார் விமலா மாமி. உமாவும் அதை பெரிதாக சட்டை செய்த மாதிரி தெரியவில்லை.

இப்பொழுது நினைத்து பார்க்கும் பொழுது மிகவும் அவமானமாக இருந்தது. சே! மற்றவர்களின் அழுகையில் சந்தோஷப் படுகிற ஒரே ஜன்மம் மனித ஜன்மமாகத்தான் இருக்க முடியும்.

பிறகு அவர்கள் காலி செய்துக் கொண்டு போய்விட்டார்கள். நானும் கல்யாணம் ஆகி வாஷிங்டன் வந்து விட்டேன். ஷ்ரவன், ஷ்ருதி பிறந்தார்கள். நிறம் மற்றும் பழக்க வழக்கங்கள் வித்யாசமாக இருப்பதால் அவ்வப் பொழுது பள்ளியில் சீண்டல்கள், அவமானங்கள். ஷ்ருதி ஒரு நாள் அழுதபடி சொன்னாள், ‘அம்மா, என் தலை முடி கோல்டன் கலர்லே இல்லாததால் நான் விளையாட்டிலே ஒரு நாள் கூட ப்ரின்சஸ் ஆக முடியலைம்மா! ‘

ஒரு முறை என் கணவரின் நண்பர் ஷ்ரவனிடம், ‘நீ அப்பா மாதிரி எகானமிஸ்ட் ஆகப் போறியா இல்லே டாக்டரா ? ‘ என்று கேட்டவுடன் அவன் முகம் சிவக்க, கண்ணீரை அடக்கிக் கொண்டு, ‘நான் சாக்லெட் கலர். என்னாலே அதெல்லாம் ஆக முடியாது, ‘ என்றான்.

இரவு தூங்கப் பண்ணும் பொழுதுமெதுவாக, ‘யாருடா கண்ணா அப்படி சொன்னா ? ‘ என்றவுடன் ‘என் கூட படிக்கிற ஆலன் ‘ என்றான்.

செப்டம்பர் 11க்கு அப்புறம் சீண்டல்கள் அதிகமாயின. வாயைத் திறந்து ஷ்ரவன் சொல்லாத போதிலும் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது அவன் மூக்கும், காது நுனிகளும் சிவந்து இருப்பதை வைத்து புரிந்து கொண்டேன். ‘அண்ணாக்கும் ஆலனுக்கும் இன்னிக்கு சண்டை. ஆலன் அண்ணாவை பார்த்து கோ பாக் டு யுவர் கண்ட்ரினு சொன்னான் ‘ என்று ஒரு நாள் சொன்னாள் ஷ்ருதி. மிகவும் வலித்தது.

என் சமவயது தோழி சந்தியாவுடன் இது பற்றி பேசினேன். மிகவும் தெளிவானவள். ‘பட்’டேன்று விஷயத்தை விளக்கி விடுவாள். நான் சொல்வதைக் கேட்டு விட்டு சொன்னாள், “வைஷு, நீ ஏன் இதைப் பெரிசு படுத்தறே ? Bullying, racism எல்லாம் நம் வாழ்க்கையில் ஒரு அங்கம். நாம் அதை ஒரு experience ஆக எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியாவில் இல்லாத நிற வெறியா ? உனக்குத் தான் தெரியுமே. நான் நிறம் கொஞ்சம் கம்மி. எவ்வளவு வரன்கள் இதனாலே தட்டி போச்சு தெரியுமா ? என் அறிவோ, குணமோ, படிப்போ அங்கே எடுபடவே இல்லையே. ஆனால், நான் வருத்தப் படலை. என்னை எனக்காக கல்யாணம் செய்து கொள்ள வருண் வரலையா ? இப்போ நான் சந்தோஷமா இருக்கேன். அதனாலே நீயும் பெரிசா கவலைப்படாதே,” என்றாள்.

அவள் சொன்ன உண்மை என்னை சுட்டது. நான் இதைப் பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டிய சந்தர்ப்பம் அமையவில்லை. ஆமாம்.. எவ்வளவு சிகப்பழகு பொருட்கள் இந்தியாவில். நம் நிறத்திற்கு என்ன குறைச்சல் ? ஏன் நாமே ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறோம் ? இருந்தாலும் ஒரு தாய் என்ற முறையில் என் மனம் சமாதானமடையவில்லை. என் குழந்தைகளுக்கு இதை எப்படி புரிய வைப்பது ?

அப்பொழுது தான் சட்டென்று விமலா மாமியின் முகம் கண் முன்னே தோன்றியது. இந்தியா வந்தவுடன் மாமியை பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தான் வந்தேன்.

பல்லாயிரம் மையில்கள் தள்ளி இருக்கும் ஒரே பெண் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் பெற்றோர்கள் நினைப்பார்கள். அதனால் ஷ்ரவன் எல்லா பாடத்திலும் ஏ வாங்குவான் என்பதும் ஷ்ருதி மேரிலாண்ட் கோவிலில் பாட்டு பாடினாள் என்பது மட்டுமே அவர்களுக்கும் ஈ-மெயிலில் தவறாமல் வரும் விஷயங்கள்.

இதோ வந்து விட்டது வீடு. விமலா மாமி சிரிப்பு மாறாமல் இருந்தார். சில சுருக்கங்களுக்கு நடுவே பூத்த புன்னகை மனதை வருடியது. இவ்வளவு வருஷம் கழிச்சு ஞாபகம் வைச்சுண்டு வந்திருக்கியே வைஷு. ரொம்ப சந்தோஷம் ‘ என்றார்.

‘பாவ மன்னிப்பு கேட்க வந்திருக்கேன் மாமி ‘ என்று குரல் கம்ம எல்லாவற்றையும் சொன்னேன். ‘மாமி! இப்பத்தான் ஒரு தாயோட வலி என்னன்னு நான் புரிஞ்சுண்டேன். நீங்க எப்படி அமைதியா சமாளிச்சீங்க மாமி ? ‘

ஆதரவாக என் கைகளை பற்றிக் கொண்டார் மாமி. ‘பைத்தியம். இதுக்கா இவ்வளவு அப்ஸெட் ஆயிட்டே ? வைஷு, இந்த உலகத்துலே நாலு நல்லவங்க இருத்தா, இரண்டு கெட்டவங்க இருக்கத்தான் செய்வாங்க. சில குழந்தைகள் தங்கள் செயல்களோட

விளைவுகள் புரியாம தவறுகள் செய்யறாங்க. கேலி செய்யறவங்களை நினைச்சு வருத்தமோ, கோபமோ படுவதை விட நம்ம குழந்தைகளை மன ரீதியாவும், அறிவு பூர்வமாகவும் உலகத்தை சந்திக்க தயார் பண்ணணும். நீ சோர்ந்தாலோ, உடைத்தாலோ நிச்சியமா அது குழந்தைகளைப் பாதிக்கும். சகிப்புதன்மையும், தன்னம்பிக்கையும் வளர்க்கறது ஒரு தாயோட முக்கியமான கடமை. நான் உமா கிட்டே என்ன சொல்லுவேன் தெரியுமா ? கடவுள் சில பேருக்கு அழகைத் தரான், சிலருக்கு அறிவை, இன்னும் சிலருக்கு வேற சில நல்ல குணங்களை. பல விதமான பூக்கள் இருத்தாலும் எல்லா பூக்களும் அழகு தான் உமான்னு சொல்லுவேன். உன் குழந்தைகளுக்கு சொல்லு வைஷு. ஐஸ்வர்யா ராய் அழகுதான் ஆனால் மதர் தெரீஸாவும் அழகு தான் இல்லையா ? நான் உமாவோட நல்ல குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். வெளித் தோற்றத்தை விட முக்கியமான விஷயங்களை அறிமுகப் படுத்தினேன். மெதுவா அவ தன்னம்பிக்கையை வளர்த்தேன். அதான் நான் கையாண்ட வழி. ‘

மனதில் கொஞ்சம் அமைதி பிறந்தது. ‘உமா எப்படி இருக்கா மாமி ? ‘ என்றேன்.

‘கல்யாணம் ஆகி சந்தோஷமா பெங்களூர்ல இருக்கா. சைன் லாங்வேஜ் கத்துண்டு காது கேட்காத குழந்தைகளுக்கு டாச்சரா இருக்கா. எவ்வளவு குழந்தைகளுக்கு வழி காட்டறா தெரியுமா ? ‘ நிறைவோடு புன்னகைத்தார் மாமி. ‘வித்யாசங்கள் கொண்டாடப்படுகிற காலம் நிச்சியம் வரும் வைஷு. இப்ப நீ புரிஞ்சுகலையா ? கவலைப்படாதே! நீ காந்தி பிறந்த நாட்டிலேர்ந்து அமெரிக்கா போயிருக்கே. அதை மறத்துடாதே ‘ என்றபடி விடை கொடுத்தார்.

மாமி சொன்னது புரிந்தது. குழந்தைகளைத் தயார் படுத்த வேண்டும். அது தான் சிறந்த வழி. ஆனால் மாமியிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டதால் இனிமேல் ஆலன் ஷ்ரவனைக் கிண்டல் செய்ய மாட்டான் என்ற நப்பாசை மனத்தின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு போக மறுத்தது!

Mangayar Malar 2004

ramyanags@hotmail.com

Series Navigation

ரம்யா நாகேஸ்வரன்

ரம்யா நாகேஸ்வரன்