முன்றாவது நிலவு
Published June 29, 2001 • By
admin
வ.ஐ.ச.ஜெயபாலன்

தாயாட்சி என்று
தமிழகமே குதூகலித்து
திங்கள் இரண்டின்னும்
சென்று கழியவில்லை.
நீ ஆட்சி செய்தால்
நிலை மாறும் எனக் கண்ணீர்
ஊற்றான மீனவப் பெண்
உவந்தும் இரு மாதமில்லை
பட்டினங்கள் வாழப்
பசித்திருந்த கிராமங்கள்
உன் சுட்டு விரலைசைவில்
துயர் தொலையும் கனவு கண்டு
இன்னும் முழு நிலவு
இரண்டு கழியவில்லை
மீண்டும் களப்பிரர் போல்
வந்து தமிழகத்தில்
காட்டட்சி செய்ததென்ன ?
காணாய் நீ
முன்றாம் நிலவு.
பேயாட்சி செய்தால்
பிணம்தின்னும் தேவாரம்.