This entry is in the series 20051118_Issue

புகாரி


அடா
என் பிரியக் கிளியே
நான்
காத்திருக்கிறேனடி

விழிகள்
சிவப்பேற
இரவுக் கவிஞனுக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கும்
மேற்கு வானமாய்

நான்
காத்திருக்கிறேனடி

உன்னிடம்
சொல்லச் சுரந்த
கவிதை முத்துக்களை
ஒவ்வொன்றாய்
கழற்றி
எறிந்துகொண்டே

நான்
காத்திருக்கிறேனடி

நிச்சயம் வருவேன்
என்ற உன்
சத்தியமொழி மெல்ல
வெளுக்க வெளுக்க
அதற்குப்
பொய்வர்ணம் பூசிக்கொண்டே

நான்
காத்திருக்கிறேனடி

மலரசையும் நேரமெல்லாம்
உன்
மார்பசையும்
இசையமுதோவென
எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டே

நான்
காத்திருக்கிறேனடி

நிமிச விசங்களைச்
சீரணிக்கத் தவிக்கும்
என் பொறுமையுடன்

நான்
காத்திருக்கிறேனடி

மூடி மலரும் என் இமைகளே
உன்னை
நேரங்கழித்துக் காட்டிவிடும்
என்றெண்ணி அவற்றைக்
கொஞ்சம் கொஞ்சமாய்ப்
பிய்த்தெறிந்து கொண்டே.

நீ வரும் வாய்க்காலை
என் விழிகளால்
ஆழப் படுத்திக் கொண்டே

நான்
காத்திருக்கிறேனடி

அடா
நீ வரமாட்டாயா

வந்துவிடு
இல்லையேல்
வரமாட்டேன் என்று
என் கல்லறையிலாவது
வந்து எழுதிவிடு

(சரணமென்றேன் கவிதைத் தொகுப்பிலிருந்து)
buhari@gmail.com

20051118_Issue

எம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு