This entry is in the series 20021007_Issue

சமயவேல்


இரவென்றால் என்ன ?

என் எல்லாக் காயங்களையும்
இந்த இருட்டா ஆற்றிவிட முடியும் ?
கோர்த்துக் கொள்கிறேன்
உன் விரல்களுக்குள் என்னை.

என் எல்லாத் தாகங்களும்
அடங்கிவிடும் என்று
உன் சிறிய உதடுகளைக்
கவ்விக் கொள்கிறேன்
கால்கள் வயிறு மார்பு என
முழுசுமாய் ஒட்டிக் கொள்ள
உயிர் நாக்கின் தீண்டல்கள்
மூச்சென்பது
ஒன்று, இரண்டு அல்லாது
பூமி தழுவிய
வளி மண்டலம்
*
இரவென்றாலே அடங்கா
இஇரவு தான்

**********************

சாதாரண அதிசயம்

இன்னும் இப்பொழுதும்
அதே ஈரத்துடன் இருக்கின்றன
உதடுகள்
நொடிகளையும் நிகழ்வுகளையும்
புறந்தள்ளிக் கொண்டு
சுற்றிச் சுற்றி வருகிரது
உன் வாசனை
மிருதுவான மிருதுவைத் தொட்ட
விரல்களில் ஆனந்தம்
கசிந்து கொண்டே இருக்கிறது
லட்சக் கணக்கான நொடிகள்
மனம் ஒருமுகப்பட்டு
நடந்த கூடலின் நறுமணம்
இயற்கை நமக்கு வழங்கிய
வெதுவெதுப்பான பரிசு

*************

(நன்றி : அட்சரம் : இதழ் 3)

Series Navigation