This entry is in the series 20020623_Issue

சித்தார்த் வெங்கடேசன்


பச்சை வயல்
வட்ட நிலா
இதமான காற்று
கயிற்றுக்கட்டில்
தூக்கமில்லா இரவு.

இந்த கலவை
கட்டாயம் உன்னை ஓர் கவிஞனாக்கும் என்பர்.

நான் கண்டதில்லை.

எனக்காய் ஒதுக்கப்பட்ட
சதுரத்திற்குள் நான் வாழ்ந்து வருகிறேன்.

இங்கு பச்சை வயல்களெல்லாம் இல்லை.

எட்டிப்பார்த்தால் ஒரு வேலை தெரியலாம்.

ஆனால் விளிம்பிற்கெல்லாம் நான் சென்றதில்லை.

போகலாம்தான்.

ஆனால் இவர்கள் என்ன நினைப்பார்களோ என்றுதான்……….

என்றாவது இரவில்,
எனக்குள் இருக்கும் என்னை நான் பார்க்க
நேரம் வாய்க்கும் போது,

‘நான் எதுக்கு இவங்களுக்கு பயப்படனும் ?
அப்படி எத தேடி அலையறேன், என்னையவே தொலச்சிட்டு ? ‘

என கேள்விகள் கேட்பேன்.

பின் உறங்கிப்போவேன்,
மறுநாள் நாடகத்திற்கான ஆயத்தமாய்.

——
siddhu_venkat@yahoo.com

Series Navigation