This entry is in the series 20050722_Issue

டான்கபூர்


வானத்து ஆட்சியின் அதிகாரம்.
கழன்றது கடையாணி.
சில்லொன்று உருண்டு வானத்தில்
திடாரென விழுந்து
வாழையில் முட்டி தென்னையை சரித்தது.
அழுதது ஆதவன்.
கூடவே வெள்ளியும் ஒன்று.

பின் வானமும் விழுந்தது.
அதில் ஒரு துண்டை புசித்தது ஆடொன்று.
செமிக்காத ஆட்டுக்கு வயிறு கோளாறு.
மாட்டுக்குக் கேட்டது.
மாடும் கத்தியது
குட்டியையும் மடி கீழே அமர்த்தி
தன் முகத்தை நிலத்தில் உரசியது
சூடு கிளம்பி புகையாக.
அது விட்ட மலம் கொஞ்சம்
விழுந்த ஒரு துண்டு வானத்தில் பட்டுத் தெறித்ததும்
சீ.. என்று
மூக்கைக் குத்தியது ஒரு பூனை.

அதைக்கண்ட வெள்ளியோ விறைத்தது.
ஓ.. என்று அழுத என்னில் சந்திரன் சிரித்தான்.

எலி வாயில் பட்ட வானத்தின் ஒரு துண்டு
பொரியலாய் மணக்க மாட்டியது.
பூனைக்கு சந்தோசம்.
அழாதே தாயகமே!
குத்திய பூரான் பற்றி சொல்லவா நான்.
அதன் விசம் பற்றி எழுதவா நான்.
இடையில் விழுந்துயர்ந்த புறாவுக்கும்
உடம்பு சொறிந்தது.

வானத்து ஆட்சியின் அதிகாரம் முடியவில்லை.
இன்னும் வெடிக்கும்.
இரத்தம் மிஞ்சிய படிக்கமாய் கவிழ்ந்து
நதியாகும்.
அப்போது நான் குளித்த மழை நீரோ கறையாகுமா ?

வானமே
வானமே
இடிக்காதே.
நிலைமையை சரிவரத்தான் கூவுகிறேன் என்றது சேவல்.
நாளை இன்னொரு தேர்தல் நடக்கும்.

டான்கபூர், இலங்கை

—-

Series Navigation