கிளி சொல்ல மறந்த கதை
ஹெச்.ஜி.ரசூல்
பறந்து சென்ற கால்களில்
ஒட்டிக் கொண்டிருந்த காலத்தை
காற்றின் மண்டலத்தில்
புரட்டிப் போட்டுப் பார்த்தாய்
நின்றும் சுழன்றும்
என் கண்களை கொத்த வந்து
ஒரு கிளியாய் மாறியது
வார்த்தை சொல்லத் தவித்து
பழம் தின்ற அலகுகளில்
பிரபஞ்சத்தை தூக்கி அலைந்து
கலைப்பில் துயின்றது.
மிக நெருக்கமான பொழுதுகளில் கூட
அன்பில் தோய்ந்த இதயத்தை
வெளிக் காட்டத் தயங்கி
தொலை தூரத்தில் கவிழ்ந்து நிற்க
கிளி சொல்ல மறந்த வார்த்தை
ஒரு செடியில் பூத்திருந்தது.
mylanchirazool@yahoo.co.in