This entry is in the series 20060616_Issue

திசைகள் அ.வெற்றிவேல்


கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்பட்டது குறித்து, திருவாளர்கள்,சின்னக்கருப்பன்,நாக.இளங்கோவன், ஜடாயு,செல்வன் ஆகியோரின் ஆதரவான கருத்துக்களும்,ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் எதிர்மறையான கருத்துக்களும் வாசித்தேன்.

கண்ணகி சிலை ஏன் மறுபடியும் நிறுவப்பட வேண்டும் என்று ஜோதிர்லதா கிரிஜாவிற்கு அழுத்தமான வகையில் தங்கள் வாதங்களை எடுத்து வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

அனைவரது பதில்களிலும் சொல்லாமல் விட்டது..

எனக்கு இலக்கியம், மரபு பற்றி அதிக பரிச்சியம் கிடையாது. சாதாரண தமிழ்க் குடிமகனாக என் மனதில்
உள்ள கேள்வி.கண்ணகி-தமிழர்களின் தாய்,கண்ணகி- ஒரு காவியப்பெண்,கற்புக்கரசி கண்ணகி
என்றெல்லாம் தமிழர்கள் மனதில் ஒரு குறியீடாய் இருக்கும் ஒரு மதிப்பிற்குரிய சிலையை, அந்தச் சிலை நிறுவி 38 வருடங்களுக்குப் பிறகு, எந்த விதக் காரணமும் இன்றி, ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த தமிழ் மக்களுக்கு எந்த வித அறிவிப்பும் இன்றி, இரவோடிரவாக தகர்த்தெடுத்து எங்கோ மூலையில் தூக்கி
எறிவது எந்த வித ஜனநாயகம்?காரணம் கேட்ட ஒரிரு பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்களுக்கு சொன்ன பதில்:”போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்தது”.இதை விட தமிழர்களை முட்டாளாக்கிய
பதில் எதுவும் இருக்காது.கண்ணகி சிலைக்கும் போக்குவரத்துக்கும் என்ன சம்பந்தம்..?கண்ணகி சிலை
சாலைக்கு நடுவிலா இருந்தது? சர்வாதிகார, ஆணவப்போக்கின் உச்சமல்லவா இந்தப் பதில்.
பழி வாங்கும் அரசியலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.ஆனால் அதிகாரத்தில் 5 வருட காலம், உட்கார வைத்தவர்கள் மக்கள்.அவர்கள் நினைத்தால், யாரையும் தூக்கி எறிந்துவிட்டு மாற்றாக வேறு ஒருவரை உட்காரவைக்க முடியும்..,முந்தைய ஆட்சிக் காலத்தில் மனது போனபடி அல்லது ஜோஸ்யர்
சொன்ன பரிகாரப்படி செய்த செயல்களில், நல்லதை வைத்துக் கொண்டு, அல்லாதவற்றை மாற்றி அமைக்க முடியும் என்று, நேற்றைய ஆட்சியாளர்களுக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் எச்சரிக்கை செய்யும்
விதமாக,கோட்டைக்குச் செல்லும் வழியில் ஆட்சியாளர்களுக்கு தினந்தோறும் இச்செய்தியை
ஞாபகப்படுத்தும் புதுக் குறியீட்டைப் பெற்றுள்ள கண்ணகி சிலையை வணங்குவோமாக..!மீண்டும் நிறுவிய கலைஞரை வாழ்த்துவோமாக..!!

vetrivel@nsc-ksa.com

Series Navigation