This entry is in the series 20080515_Issue

புதியமாதவி, மும்பை


தூசிப்படலத்தில்
இருமிக்கொண்டு
மூச்சுவிடமுடியாத
அவஸ்தையில்
நிம்மதியாகத் தூங்கும்
தெருநாய்களை
பொறாமையுடன்
பார்க்கின்றன
சன்னல் இரும்புக்கம்பிகளைத்
தாண்டி வெளியில்வரமுடியாத
உயிரெழுத்துகள்.

காற்றில் படபடக்கும்
காகிதங்களில்
சிக்கித்தவிக்கும்
எழுத்துக்கள்
தலைக்குப்புற விழும்
ஒவ்வொரு நிமிடமும்
ஓராயிரம்தடவை
கேட்டுத் தொலைக்கின்றன
எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?

கிழிக்க என்ன இருக்கிறது
வெற்றுக்காகிதங்களில்!
இப்போதெல்லாம்
“உள்ளேன் அய்யா” என்று
வாத்தியார் கேட்காமலேயே
இருத்தலை எல்லோருக்கும்
சொல்ல
என்னவோ எழுதிக்கொண்டிருக்கிறேன்..
இப்பொதெல்லாம்
நீங்களும்தான்
அடிக்கடி கேட்டுத் தொலைக்கிறீர்கள்
அட ..எழுதி என்னத்தைக் க்கிழிச்சேனு!


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation