அரசூர் வம்சம் – அத்தியாயம் பதிமூன்று
இரா முருகன்
குப்புசாமி அய்யன் ஊர் எல்லைக்கு வரும்போது நடு மத்தியானமாகி விட்டிருந்தது.
நல்ல வேனல் சூடு. அடுப்படியில் நெருப்புக்குப் பக்கத்தில் நின்று கிண்டிக் கிளறி, வடித்து இறக்கிப் பொறித்து, இலை போட ஏவிக் கொண்டு, மலை மலையாகக் குவிந்த தேங்காயையும், சேனையையும், பூசணிக்காயையும், மூட்டையில் அஸ்காவையும், அரிசியையும் சதா கணக்குப் பார்த்துக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு மாசம் ஓடினதே தெரியவில்லை.
தேடித் தேடி சகல லட்சணமும் குணமும் பார்த்துத் தான் கூட்டுக்கு ஆள் சேர்த்துக் கொண்டு தொழிலுக்குக் கிளம்பியாகிறது. கூட வருகிற ஒருத்தனுக்கும் அரைக்கால் அங்குலம் கூடக் கை நீளம் இருக்கக் கூடாது என்பதில் மறுபேச்சுக்கே இடமில்லை. ஆனாலும் வாய் கொஞ்சம் அகலம் இருப்பதைப் பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
கோதுமை ரவை எடுக்கப் போனவன் பக்கத்துத் துணிப்பையில் இருந்து ஒரு பிடி முந்திரிப் பருப்பை வாயில் அடைத்துக் கொண்டு மொச்சு மொச்சென்று மென்று கொண்டு வந்தால் கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டியிருக்கிறது.
கறிகாய் நறுக்கிக் கொடுத்து, எடுபிடி காரியம் வைக்கும் துணையாட்கள் முக்காலே மூணுவீசம் பேர் கஷ்கத்தில் இப்போது தான் ரோமம் அரும்பிக் கொண்டிருக்கும் நவயுவன்கள்.
கருணைக் கிழங்கை நறுக்கக் கொடுத்தால் ஸ்தனம் போல் அதைப் பற்றிப் பிடித்து வருடி மற்றவர்களைச் சிரிக்க வைக்க நையாண்டி பேசுகிறார்கள். மட்டை உரித்துத் தேங்காய் எடுக்க உத்திரவு கொடுத்தால், நட்டுக் குத்தலாக நிமிர்த்தி வைத்த உலக்கையும் அதில் முறிபடும் காயும் அவர்களை நீச வார்த்தை பேச வைக்கிறது.
சமையலறை என்பதால் விசேஷத்துக்கு வந்த பெண்டுகள் சட்டென்று எந்த விதமான தயக்கமும் இல்லாமல் எல்லா நேரமும் உள்ளே வந்து விடுகிறார்கள். இது அவர்களின் சாம்ராஜ்ஜியம். ஒரு நாலு நாளைக்கு ஆண்பிள்ளைகள் கரண்டி பிடிக்க அதை மேற்பார்வையிடுகிற சந்தோஷம் முகம் முழுக்க அப்பி இருக்க, அவர்கள் பதார்த்தம் செய்வது குறித்துப் பலதும் யோசனை தருகிறார்கள். கூப்பிடாமலேயே ஆஜராகி வடையை எடுத்து விண்டு பார்த்து விட்டு உப்புப் போறாது என்று தீர்மானமாகத் தலையாட்டுகிறார்கள். பலாக்கறியில் வெளிச்செண்ணெய் குறைவு என்று அபிப்ராயப்படுகிறார்கள்.
அதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டதுபோல் காட்டிக் கொண்டு தன் பாட்டுக்கு வேலையைத் தொடரும்படி ஒவ்வொரு இடத்திலும் அடுப்புக்கு பூஜை போடும்போது குப்புசாமி அய்யன், கூட வந்தவர்களுக்குச் சொல்ல வேண்டியதை மறப்பதில்லை.
அதோடு கூட, சின்ன வயசுப் பையன்களோடு இழைய வருகிற ஸ்திரிகளையும், ஒரு புஞ்சிரி பொழிந்த மாத்திரத்தில் புளகாங்கிதமடைந்து விசேஷத்துக்கு வந்த பெண்குட்டியை சதா ஸ்மரித்துக் கொண்டு அலைகிற குட்டன்மாரையும் போதும் நிறுத்தணும் என்று சமிக்ஞையாகச் சொல்லி விலக்க வேண்டி இருக்கிறது.
குப்புசாமி அய்யன் தாடையைத் தடவிக் கொண்டான். நாலு நாள் தாடி வரவர என்று வியர்வையோ டு கையில் புரண்டது.
அமாவாசை, அவிட்டம் பார்த்துச் சிரைத்துக் கொள்வது போக, போன இடத்தில் சவுகரியமும் பார்க்க வேண்டியுள்ளது. சில இடங்களில் நாவிதர்கள் இருப்பதில்லை. இருக்கும் இடத்தில் வேலையிலேயே நேரம் முழுக்கக் கழிந்து போகிறது.
நல்ல வேளை. இது இன்னும் புதர் போல் வளர்ந்து தன்னை ரோகி மாதிரியோ யோகி போலவோ காட்ட ஆரம்பிக்கும் முன்னால் ஊருக்கு வந்தாகி விட்டது. வேலாயுதன் பார்த்துக் கொள்வான் இனிமேல் கொண்டு.
குப்புசாமி அய்யன் இங்கே இல்லாமல் போன இருபது சொச்சம் நாளில் என்னவெல்லாம் நடந்தேறியது என்று முகத்தை மழித்துக் கொண்டே வேலாயுதன் பாண்டித் தமிழில் ஊர் வர்த்தமானம் சொல்லக் கேட்பது நல்ல சுகமான விஷயம்.
இனி வரும் இரண்டு மாதமும் அவ்வளவாகக் கல்யாணம் எல்லாம் நடக்காது. கொஞ்சம் விச்ராந்தியாக வீட்டோடு கிடந்து சிரம பரிகாரம் செய்து கொள்ளலாம்.
ஊர் முழுக்க உண்ண எட்டு வகை பதார்த்தமும், இனிப்பும் மற்றதும் செய்து செய்து அலுத்துப் போய் சமையல்காரர்கள் எல்லோரும் சீரக ரசமும், வற்றல் குழம்புமாக அவ்வப்போது தனியாகச் செய்து கொள்கிற வழக்கம். அதற்கும் மோப்பம் பிடித்து ஆட்கள் வந்து விடுவதுண்டு. வீட்டில் அதையெல்லாம் பங்கு போட யாரும் வரப்போவதில்லை.
ஒப்புக் கொண்ட கடைசி விசேஷமும் நேற்றைக்கு முடிந்து காளை வண்டியில் பாத்திரம் பண்டங்களை ஏற்றி நேற்று ராத்திரிக்கே கூட வந்தவர்கள் வசம் அனுப்பியிருக்க வேண்டாம் என்று பட்டது குப்புசாமி அய்யனுக்கு.
கருநாகப்பள்ளிக்கு ஏழு மைல் தள்ளி ஒரு சின்ன ஊரில் கல்யாணம். இவன் ஒப்புக் கொள்கிற எல்லா விசேஷத்துக்கும் உப்பு, புளி ஆதியாக மளிகைச் சரக்கும் விசேஷமான காய்கறிகளும் வரவழைப்பது கருநாகப்பள்ளி சங்குண்ணி நாயரிடம் இருந்துதான். தொழில் முறையில் ஆரம்பித்து, நெருக்கமாகிப் போன சிநேகிதம்.
சங்குண்ணியும் அந்தக் கல்யாணத்துக்கு வந்திருந்தான். அவன் தாயாதி வழி உறவில் உறவு. அதாவது போன தலைமுறையில் இரண்டு தரவாட்டுக்கும் பந்தம் புலர்த்த ஒரே நம்பூத்திரி வந்து போனானாம். கல்யாணப் பெண்ணும் சங்குண்ணியும் அடுத்த அடுத்த பீஜத்தில் உருவானவர்களாக இருக்கலாம்.
இப்படிக் கெளபீனத்தை நெகிழ்த்திக் கொண்டு நம்பூதிரிகள் மலையாளக் கரை முழுக்க நாயர் குடும்பங்களில் அதி சுந்தரியான பெண்குட்டிகளோடு கூடிச் சுகிக்க மரக் குடை பிடித்து நடந்தது குப்புசாமி அய்யன் தகப்பன் காலத்தில் அதிகமாக இருந்தது. இப்போது அது கொஞ்சம் குறைந்து கொண்டிருக்கிறது தான்.
தேகண்டத்துக்குப் போன இடங்களில் கிழட்டு நம்பூத்திரிகள் தங்கள் பால்ய கால விளையாட்டுகளை விஸ்தாரமாக ஏகத்துக்கு நீர் விளம்பிச் சொல்வார்கள்.
காத்ரே காத்ரே துடர்ன்னு மதுரிம திரளு
மார்த்வம் நேத்ர ரங்கே
கூத்தாட்டத்தினு லஜ்ஜாயவனிகயில்
மரஞ்ஞம்கஜன்மா விரேஜே
முத்தேலும் கொங்க பங்ஙேருக
மழமங்கலம் நம்பூத்ரி தொடங்கி இன்னும் பல பேர் எழுதிப்போன சிருங்கார ஸ்லோகங்களோடு பழசையும் புதுசையும் அசை போடுவது காதில் விழுவதுண்டு. அதைக் கேட்டுக் கொண்டே பப்படம் பொறிக்க எண்ணெய் திளைக்க வைக்க மறந்து போய் குப்புசாமி அய்யன் கூட்டத்து இளசுகள் வாய் பார்த்தபடி நின்றபோது அவர்களை ஓட்டியதும் உண்டு.
குப்புசாமி அய்யனுக்கு நம்பூத்திரிகள் மேல் அத்தரைக்கொண்ணும் மரியாதை இல்லை. இது பரஸ்பரம் விளைவது. அந்தப் புண்ணியவான்களும் குப்புசாமி அய்யன் போல் தமிழ் பேசும் பிராமணர்களை மதிப்பதில்லை. நம்பூத்திரி மனைகளில் ஆள்கூட்டம் பெருகிப் போனதால் சுயம்பாகமாக சமையல் செய்து விசேஷம் அனுஷ்டிக்க முடிகிறதில்லை சில பொழுது. சரிதான், இதுக்குத் தமிழ்ப் பிராமண சமையல்காரர்களை அமர்த்திக் கொள்ளலாம் என்று ஆசாரங்களை அங்கங்கே நெகிழ்த்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது இந்தப் பகுதியில்.
தமிழ் பிராமணர்களும் அவிட்டத்துக்குப் பூணூல் மாட்டிக் கொள்கிறார்கள். தட்டுத்தடுமாறி காயத்ரி சொல்கிறார்கள். நன்றாகவே சமைக்கிறார்கள். பிழைத்துப் போங்கள் என்று விட்டிருக்கிறார்கள் திருமேனிகள்.
அவர்களுக்கு யார் மேலும் மதிப்புக் கிடையாது. சாமுத்ரி மகராஜாவே வந்தாலும் நாலு அடி தாண்டி அந்தாண்டை நிற்க வைத்து அம்பலத்தில் சந்தனத்தை விரலால் சுண்டிக் கையில் விழ எறிவார்கள். வெய்யில் தாழ அம்பலத்தில் இருந்து திரும்பும்போது வெடி வழிபாடு நடத்தும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி மூத்திரம் ஒழிக்க உட்கார்ந்து விட்டு, லிங்கத்தை பிடித்த பிடி நழுவாமல் நாட்டுத் துப்பாக்கி போல் நீட்டிக் கொண்டு அப்படியே குளத்தில் இறங்கி சுத்தி செய்து கொள்வார்கள். அங்கே குளிக்கிற ஸ்திரிகள் பார்த்துத் தலை கவிழ்ந்து கொள்ள, யாதொன்றையும் சட்டை செய்யாமல் கெளபீனத்தை முடிந்து கொண்டு மெல்லக் கரையேறுவார்கள்.
முகத்தைப் பார்க்காமலேயே எல்லா நம்பூத்திரிகளையும் எல்லோருக்கும் அடையாளம் தெரியும்.
நல்ல வெய்யில் நேரத்தில் நம்பூத்திரிகள் பற்றி யோசிப்பானேன் என்று குப்புசாமி அய்யனுக்குப் விளங்கவில்லை. இந்த மாதம் ஒப்புக் கொண்ட விசேஷங்களில் நாலைந்து அவர்கள் விஷயமாகத்தான். மற்ற ஜாதிக்காரர்கள் கொடுப்பதில் பாதி கூடக் கொடுக்கவில்லை எந்த நம்பூத்திரியும். அதனால் தானோ என்னமோ இழவெடுத்த அவர்களைப் பற்றியே நினைப்பு ஓடுகிறது.
இது நாள் வரை உங்களை நீச ஜாதியாகவே வைத்திருந்தோம். இப்போ, போனால் போகிறது என்று உம்மையும் பிராமணனாக மதித்து தேகண்டத்துக்குக் கூப்பிட்டதே உங்களுக்கு மரியாதை என்கிற தோரணையில் சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் நடந்து கொள்வது மனதில் வந்து கொண்டே இருக்கிறது.
ஆனாலும் எல்லா நம்பூத்திரிக்கும் குப்புச்சாமி அய்யன் போல பாலக்காட்டு மடைப்பள்ளி பிராமணர்கள் மேல் அசூயை உண்டு என்று அவனுக்குத் தெரியும்.
இந்தப் பாண்டிப் பிராமணர்கள் எல்லோரும் தஞ்சாவூரிலும் வடக்கே தெலுங்கு பேசும் பிரதேசத்திலும் அதி வனப்புள்ள கன்யகைகளைக் கல்யாணம் கழித்துக் கூட்டி வந்து வாழ்க்கை பூரா சுகிக்கிறார்கள். நம்பூத்திரி மனையிலோ வீட்டுக்கு மூத்த நம்பூத்திரி மட்டுமே வேளி என்ற கல்யாணம் கழிக்கலாம். இளையவர்களுக்கு யோனிப் பொருத்தமும் ரஜ்ஜுப் பொருத்தமும் பார்த்து வீட்டில் ஸ்திரியைக் கொண்டு வந்து குடித்தனம் நடக்க யோகம் இல்லை. அவர்கள் பந்தம் புலர்த்த நாடு முழுக்க அலைந்து தரவாட்டு ஸ்திரிகளைத் தேட வேண்டியிருக்கிறது.
நேற்று தாசியாட்டத்திலும் குப்புசாமி அய்யன் ஒன்றிரண்டு நம்பூத்ரிகளைப் பார்த்தான். சங்கீதத்தை ரசிக்க வந்தவர்களாகச் சொல்லிக் கொண்டு ராமச்ச விசிறியால் விசிறியபடி, ஆடிய தாசிகளையே தாபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். குப்புசாமி அய்யனும் கூடத்தான்.
உன் ஆட்களை அனுப்பி வைத்து விட்டு என்னோடு வா.
சங்குண்ணி தான் குப்புசாமி அய்யனை நேற்று ராத்திரி தாசி ஆட்டத்துக்குக் கூட்டிப் போனான்.
என்னமா ஒரு நடை. ஆட்டம். கண் அசைப்பு. உதட்டுச் சுழிப்பு. பாண்டி தேசத்துப் பெண்கள். எல்லாமே அங்கே இருந்து தான் வரவேண்டி இருக்கிறது.
அவர்களின் சிருங்கார சேஷ்டைகளும், பாடிய பதங்களும் குப்புசாமி அய்யனை இன்னும் இம்சித்துக் கொண்டிருக்கின்றன. அவ்வப்போது பச்சை மலையாளத்தில் அந்தத் தமிழ்ப் பாட்டுகளை அர்த்தப் படுத்தி சங்குண்ணியிடம் சொல்லும்போது லகரி கூடிக்கொண்டே போனது.
விசாலாட்சி நினைப்பு மனதில் உக்கிரமாகத் தாக்க ஆரம்பித்தது அப்போது தான்.
வீட்டுக்குப் போக வேண்டும்.
வேலாயுதம் தெருவோடு போனால், கூப்பிட்டுத் திண்ணையில் இருத்தி முதலில் இந்தத் தாடியை மழித்துக் கொள்ளவேண்டும்.
விசாலாட்சி தூரம் குளித்திருக்க வேண்டும்.
அவள் கையால் செய்த பருப்புஞ் சாதமும் கத்தரி வதக்கலும் சாப்பிட வேண்டும். தேங்காய் சேராத நல்ல குழம்பும்.
அப்புறம் ராத்திரியில் மழுமழுத்த முகத்தை அவள் ஸ்தனங்களிலே இருத்தி ராத்திரி முழுக்க ரமிக்க வேண்டும்.
சகோதரர்கள் இரண்டு பேரும் இன்னும் ஒரு வாரம் திரும்ப வரப்போவதில்லை என்பதால் நடுராத்திரியில் அரிசி மூட்டை வைத்த அறை வெறுமனே தான் கிடக்கும்.
குப்புசாமி அய்யன் அங்க வஸ்திரத்தால் முகத்தைத் துடைத்துக் கொண்டு நடையை எட்டிப் போட்டான்.
சர்ப்பக்காவின் பக்கம் ஒரு ஸ்திரி தலையில் மீன் கூடையோடு எதிர்ப்பட்டாள்.
அவனைத் தூரத்தில் கண்டதுமே வெற்றிலை எச்சிலை ஓரமாகத் துப்பி, தோளில் துவர்த்தால் வாயையும் முகத்தையும் துடைத்து அந்தத் துண்டையும் கையில் ஏந்தியபடி குப்புசாமி அய்யனை நிறுத்தினாள்.
அவள் ஸ்தன்ய பாரம் தான் குப்புசாமி அய்யன் கண்ணில் முதலில் பட்டது. கோபாலகிருஷ்ணன், கோகுலபாலன் என்னை இங்கே பிடித்தான் என்று தாசியாட்டத்தில் அபிநயம் பிடித்த ஸ்திரிகள் இன்னும் லகரியை மனதில் வற்றவிடாமல் பொழிந்து கொண்டே இருக்கிறார்கள்.
காவின் பக்கம் இப்படி வழி மறிக்கும் பெண் காவில்லம்மவாக, தேவதையாகக் கூட இருக்கலாம். எந்த துர்சிந்தையும் மனதில் வேண்டாம்.
புத்தி எச்சரித்தது.
அவள் முகத்தைப் பார்த்தான் குப்புசாமி அய்யன். வெற்றிலை உலராத சுண்டுகள் இன்னும் லகரி லகரி என்றன. காவிலம்மே. இந்தக் களி நிறுத்தேணம்.
அவன் காயத்ரி முணுமுணுத்தபடி தலையைக் கவிழ்ந்து கொண்டான். யட்சியோ நீலியோ இடையாட வந்திருக்கும் பட்சத்தில் இன்றைக்கு வீட்டுக்குப் போய்ச் சேருவதே முடியாத காரியம் போல் தோன்றியது.
போன சொவ்வாயாழ்ச்ச நல்ல நாளா திருமேனி ?
அந்த மீன்காரப் பெண் விசாரித்தாள்.
அவள் மூத்த மகள் திரண்டிருக்கிறாளாம் போன செவ்வாய்க் கிழமை. ருது ஜாதகம் கணிக்கப் பணம் எல்லாம் கிடையாது. குப்புசாமி அய்யன் போல் சாஸ்திரம் படித்தவன் சொன்னால் தயவாக இருக்குமாம்.
உன் அங்க லட்சணம் பார்த்துத் தானடா அதைத் தீர்மானிக்க வேணும். கூடையை இறக்கி வைத்து விட்டு வியர்வையைத் துடைத்துக் கொண்டு இந்தப் பக்கமாக வா.
பூதங்குளம் நம்பூத்திரியாக இருந்தால் சொல்லி இருப்பான்.
குப்புசாமி அய்யன் சாஸ்திரம் படித்தவன் இல்லை. கரண்டி பிடிக்கிறவன். நாள் கணக்கும் நட்சத்திரக் கணக்கும் கொஞ்சம்போல் தெரியும்.
அதை எல்லாம் மனதில் ஓட்டிப் பார்த்து சுபமான தினம் என்று தரையைப் பார்த்தபடியே அறிவித்தான்.
அவள் இடுப்பில் சுருக்குப் பையில் தட்சணையைத் தேடும்போது வேண்டாம் என்று மறுத்து அவன் நடந்தான்.
குதிரைக் குளம்பு ஒலிக்க ஒரு வெள்ளைக்காரப் பாதிரியும் கூடவே பரிவாரமாகக் குடையும் தடியுமாகப் பத்துப் பேரும் கடந்து போனார்கள்.
துரை ஒரு வினாடி குப்புசாமி அய்யனைப் பார்த்தபோது அய்யனுக்குத் திரேகம் முழுக்க நடுங்கியது.
இல்லை. நான் அந்த ஸ்திரியோடு மனசிலும் சல்லாபிக்கவில்லை.
அவன் தனக்குத்தான் சொல்லிக் கொண்டான்.
அயல் வேதக்காரன் என்றாலும் சபித்துப் போட சக்தி உள்ளவன். அவன் எப்போது எங்கே பேசினாலும் பக்கத்தில் வருகிற கறுப்பன் பாவிகளே என்று தான் அதை நாட்டு மொழியில் சொல்கிறான்.
குப்புசாமி அய்யன் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது யாரையும் காணோம்.
விசாலாக்ஷி. விசாலாக்ஷி. விசாலம்.
நித்திரை போயிருப்பாள்.
தம்பி கிட்டாவய்யன் குழந்தைகள் எங்கே ? கீசு கீசென்று இரையும் அவன் பெண்டாட்டி எங்கே ? துரைசாமியைக் கட்டியவளான காமாட்சி என்ன ஆனாள் ? லட்சுமியும் பகவதியும் போன இடம் எது ?
பட்டப் பகலில் வீட்டுக் கதவை விரியத் திறந்து வைத்து விட்டு எல்லோரும் எங்கே போய்த் தொலைந்தார்கள் ?
கொல்லைப் பக்கம் போய்க் கிணற்றில் தண்ணீர் சேந்திக் கால் கை நனைத்துக் கொண்டு மெல்ல விசாரிக்கலாம்.
குப்புசாமி அய்யன் வாசல் நிலைப்படி இடிக்காமல் ஜாக்கிரதையாகக் குனிந்து உள்ளே நுழைந்து அப்படியே பின் கொல்லைக்குப் போனான்.
கிணற்றில் தண்ணீர் சேந்திக் கொண்டிருந்தபோது, பின்னால் ஏதோ ராட்சசப் பறவை மாதிரி நிழல் தட்டிற்று.
திரும்பிப் பார்த்தான்.
தம்பி கிட்டாவய்யனின் மாமனார் மாடியிலிருந்து பறந்த மாதிரி இறங்கிக் கொண்டிருந்தார்.
அவர் தரைக்கு ஒரு அடி மேலே மிதந்து கொண்டு தோட்டத்தில் தென்னை மரங்களுக்குப் பக்கமாகப் போனார்.
(தொடரும்)
eramurug@yahoo.com
- விக்கிரமாதித்யன் கவிதைகள்
- விலங்குகளின் வாழ்வும் விளங்கும் உண்மைகளும் (வாழும் சுவடுகள் – கால்நடை வைத்தியரின் அனுபவங்கள் – நூல் அறிமுகம்)
- கடிதங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதிமூன்று
- விடியும்! (நாவல் – 3)
- தீராநதி
- மரபணு
- மனிதர்கள்
- இராமன் அவதரித்த நாட்டில் …
- பாருக்குட்டி
- நகர்நடுவே நடுக்காடு [அ.கா.பெருமாள் எழுதிய ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம் :நாட்டார் தெய்வங்களும் கதைப்பாடல்களும் ‘ என்ற நூலின் ம
- தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்
- மூன்று கவிதைகள்
- இரண்டு கவிதைகள்
- மணி
- சிறையா, தண்டனையா ? ?
- ‘ஓமெல்லாசை விட்டு போகிறவர்கள் ‘ ஒரு சிறுகதையும், அது குறித்த புரிதலுக்காக குறிப்புகளும்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 9
- கண்காட்சி
- எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்
- குறிப்புகள் சில-ஜீலை 3 2003 (நதிகள் இணைப்புத் திட்டம்-உயிரியல் தொழில்நுட்பமும்,வேளாண்மையும்,எதிர்ப்பும்-செம்மொழி-அறிவின் எல்லைகள
- பேய்களின் கூத்து
- தமிழா எழுந்துவா!
- பொருந்தாக் காமம்
- தண்ணீர்
- உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் (காளிந்திசரண் பாணிக்கிரஹியின் ‘நாய்தான் என்றாலும் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 67)
- நமது வசையிலக்கிய மரபு
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-1
- சுஜாதா – எனது பார்வையில்
- ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்.
- ஏறத்தாழ சூரியக் கிரகக்குடும்பத்தைப் போன்றே இருக்கும் இன்னொரு சூரியக் குடும்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
- அறிவியல் மேதைகள் ஜான் லோகி பெரெட் (John Logi Baird)
- இரண்டு கவிதைகள்
- வாரபலன் ஜூன் 24, 2003 (குயில்கள், கவிதைகள், குறுந்தொகைகள்)
- மனுஷ்யபுத்திரன்களும் மண்குதிரைகளும்.
- கூட்டுக்கவிதைகள் இரண்டு
- அன்புள்ள மகனுக்கு ….. அம்மா
- பார்க் ‘கலாம் ‘
- உலகத்தின் மாற்றம்
- கணையும் கானமும்
- நான்கு கவிதைகள்
- பிரம்மனிடம் கேட்ட வரம்!
- கவி
- தீத்துளி
- சீச் சீ இந்தப் பழம் புளிக்கும்