விஸ்வரூபம் – அத்தியாயம் ஐந்து
இரா.முருகன்
தெரிசா எழுந்தபோது விடிந்து வெகுநேரம் கழிந்திருந்தது. எட்டு மணி இருக்குமா? அவள் படுக்கைக்கு அடியே கழற்றி வைத்த இடுப்பு கடியாரத்தைத் தேடியபடி ஜன்னலைப் பார்த்தாள். கனமாக மேகம் கவிந்து குளிர் அப்பிக் கிடக்கும் ஒரு காலைப் பொழுது. லண்டன் இன்னும் தூக்கம் விழிக்கவில்லை.
ஜன்னலுக்கு வெளியே புகை மூட்டத்துக்கு நடுவே வெள்ளைச் சுண்ணாம்பு பூசிய கட்டிடங்கள் சீராக உயர்ந்து நின்றன. தெரிசா இருப்பதையும் சேர்த்து கென்சிங்டன் வீதி முழுக்க நூல் பிடித்தாற்போல் வரிசையாக இப்படியான வீடுகள் தான். இதையெல்லாம் உட்கார்ந்து திட்டம் போட்டு ஒரே மாதிரி வடிவமைத்து செங்கல்லை, பளிங்கை வைத்து இழைத்து, சன்னமான சுண்ணாம்பை அரைத்து விழுதாகப் பூசி எழுப்பி நிறுத்தி ஒரு நூறு வருடம் ஆகியிருக்குமா? சொல்லி வைத்து எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் குடி வந்திருப்பார்களா? அவர்களில் எத்தனை பேருடைய அடுத்தடுத்த தலைமுறைகள் இங்கே இருக்கின்றன?
இந்த ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூற்றொன்பதாம் வருடம் பிறக்கும்போதே குளிரக் குளிரத்தான் பிறந்தது. இதுவரை பத்துக் குளிர்காலம் லண்டனில் இருந்தவள் தெரிசா. அவளுக்கே புதுமையாக தெருவெல்லாம் பனி ராத்திரி முழுக்க விழுந்து உறைபனியாக உறைந்து வித்தியாசமாக ஆரம்பித்த வருடம். அம்பலப்புழையில் இடவப்பாதி கோடு கழிந்து அடித்துப் பெய்யும் பெருமழையையும், ஈரம் விசிறி அடிக்கும் குளிரையும் ஒரு நிமிடம் நினைவு படுத்தும் காற்று ஜன்னலுக்கு வெளியே இருந்து நுழைந்தது.
கிருஷ்ணாய துப்யம் நமஹ.
தெரிசா மெல்லச் சொல்லும்போது அவளுக்கே சிரிப்பு வந்தது. ஏசு கிறிஸ்துவை இஷ்ட தெய்வமாக வரிந்து கொண்டு குடும்பத்தோடு வேதத்தில் ஏறிய அம்பலப்புழை தேகண்ட பிராமண ஸ்திரி அவள். அதாவது, மாஜி பிராமணப் பெண்.
படுக்கைக்கு அடுத்த நிலைக் கண்ணாடியைப் பார்த்தாள். நாற்பது வயது கடந்தும் தேகமோ முகமோ அதை வெளிக்காட்டாது இன்னும் குட்டநாட்டு குக்கிராமத்தில் சிற்றாடையோடு சுற்றி வந்த தெற்றுப்பல் சிறுமியைத்தான் கண்ணாடி காட்டுகிறது. அந்த முகம் கிருஷ்ணன் கோவிலில் தொழுது வணங்கி நெற்றியில் சந்தனக் குறியோடு தினத்தைத் தொடங்கிய அதே பெண்குட்டியின் முகம்தான். இத்தனை வருடம் போனாலும் ஓடக் குழலும் உதட்டோரம் கொஞ்சம் மிச்சம் வைத்த புன்சிரிப்புமாக கிருஷ்ணன் காலையில் குசலம் விசாரிக்கிறான். ஜீசஸ், திஸ் இஸ் கிருஷ்ணா. மை பெஸ்ட் ஃப்ரண்ட்.
தெரிசா தலையணைக்கு அடியில் இருந்து தங்கச் சங்கிலியை இழுக்க, அலாரம் அடித்தபடி கடியாரமும் கூடவே வந்தது. கர்த்தாவே, அதற்குள் காலை பத்து மணி ஆகிவிட்டதா? அக்டோபர் மாதம் இப்படி விடியலைக் குளிரில் ஒளித்து வைத்து விளையாட வேணாம். லைக் தட் ஸ்வீட் குட்டன் கிருஷ்ணன். ஓல்ட் பாய்.
தெரிசா நிலக்கரி அடுப்பை பற்றவைத்து தேனீர்ப் பாத்திரத்தை மேலே ஏற்றினாள். தேனீர் குடிக்காமல் பொழுது விடிந்ததாகக் கணக்காக்க முடியாது. அம்பலப்புழையில் அவள் இருந்தவரை விடிகாலை என்பது விசாலாட்சி பெரியம்மா செப்புக் குவளையில் விளம்பிக் கொடுக்கும் நீராகரத்தோடும், பழைய சாதம், ஊறுகாயோடும் தான் பிறக்கும். அப்பன் கிட்டாவய்யன் கொல்லத்தில் சாப்பாட்டுக் கடை போட்டு ஜான் கிட்டாவய்யன் ஆனபோது காப்பிக்குடி பழக்கத்தில் வந்தது. லண்டன் வந்ததும் தேனீர் ஆசாரம் விடாப்பிடியாகப் பற்றிக் கொள்ள பீட்டர் தான் காரணம். அவனைப் பற்றிப் படர்ந்ததால் அவன் பற்றிய சகலமானதும் பழகிப் போனது. டார்ஜிலிங் தேனீரும் டார்லிங் என்ற அழைப்பும் அதில் தொடக்கம்.
மேம், மேம்.
வாசல் பக்கம் இருந்து யாரோ உரக்கக் கூப்பிடும் சத்தம். பால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்தாள் தெரிசா.
நான் தான் கூப்பிட்டேன் மேம். மரியா. மரியா கெல்லர். உங்கள் விசுவாசமான பால்காரி. இங்கே, நேரே கீழே பாருங்க மேம்.
பால் நிறைத்த பெரிய மர வாளியைக் தோளில் கட்டித் தூக்கிப் பிடித்தபடி மரியா நின்று கொண்டிருந்தாள். தலையில் சும்மாடும் அதற்கு மேல் தயிர்ப்பானையும் ஏறினால் அவள் ஒரு கோபிகை ஆக மாறிவிடுவாள். அம்பலப்புழை கிருஷ்ணன் அம்பலத்துக்கு வெண்ணெய் சுமந்து போகிற லட்சணமான வெள்ளைக்கார கோபிகா ஸ்திரி. இங்கிலீஷ் பேசும் பெண் கிருஷ்ணனுக்கு இஷ்டமோ?
மேலே வாயேன் மரியா. நீ வருவேன்னு கதவைத் திறந்துதான் வச்சிருக்கேன்.
தெரிசா குரல் உயர்த்திச் சொல்ல ஆரம்பித்தது பாதியில் நின்று சைகையானது. மரியா சத்தம் போடலாம். ஆனால் பட்டாளத்து மேஜர் பீட்டர் மெக்கன்சியின் மனைவி தெரிசா பதிலுக்கு இரைய முடியாது. இது சொந்த ஊர் இல்லை. வந்து சேர்ந்த இடம். இனி திரும்ப முடியுமோ என்னமோ. அம்பலப்புழையோ மதராஸ் பட்டணமோ இனிமேல் கனவில் மட்டும் வரும் சங்கதிகள். அங்கே போய் சத்தம் போட்டுப் பேசும் இன்னொரு கனவு கண்டு எழுந்திருக்க தெரிசாவுக்கு இப்போது நேரம் இல்லை. அபர்டீனுக்கும் எடின்பரோவுக்கும் கிளம்பியாக வேண்டும் அவள். இன்னும் ஒரு மணி நேரத்தில் வாசலுக்கு சாரட் வண்டி வந்து விடும்.
மேலே வா.
மரியா பூஞ்சிட்டாக அந்தக் குறுகிய மாடிப்படிகளில் ஏறி வரும் அழகைப் பார்க்க ஒரு வினாடி அப்படியே பால்கனியில் நின்றாள் தெரிசா. இன்றைக்கு இருந்தால் இவளுக்கு இருபது வயது இருக்குமா? தெரிசாவுக்கு ஒரு பெண் இருந்தால் இவள் வயதுதான் இருக்கும். கருத்து மெலிந்த மரியா. உசரமானவள். பீட்டர் போல.
பீட்டருக்கு என்னமோ மரியாவைப் பிடிக்காது. இவளா, உனக்குப் பிறந்த பெண்ணா? இவள் பின்னால் போய் லண்டன் டவர் பக்கம் நடந்து பார். புழுத்த வசவு இவள் வாயிலிருந்து வந்து நாலு திசையையும் கெட்ட வாடையடிக்க வைப்பதை உன் காது குளிரக் கேட்கலாம். அப்போ உன்னைப் பார்த்தா மேம்னு எல்லாம் மரியாதையாக் கூப்பிட மாட்டா. கருப்புப் பொட்டை நாய். இல்லாட்ட கருத்த தேவிடிச்சி. அதான் உனக்கு அவ மனசுக்குள்ளே கொடுத்திட்டு இருக்கற மரியாதை.
பீட்டர், நீ என்னை ப்ளாக் பிட்ச், ஸ்லட் அப்படி எல்லாம் கூப்பிட நினைக்கற ஆசையை இப்படிச் சொல்லி தீர்த்துக்கறியோ?
தெரிசா பீட்டரின் இடுப்பை அணைத்தபடி கேட்டாள். அது ஜூன் மாசம். அவன் ஆப்பிரிக்கா கிளம்பிப் போனது அதற்கு அடுத்த நாள்.
நானா? வெல், வென் ஐ யாம் ஹார்ட் ஹியர் ஐ கால் யூ ஆல் நேம்ஸ். யூ நோ தட்.
அவன் இடுப்புக்குக் கீழே காட்டியபடி சிரித்தான். வாஸ்தவம்தான். கலவி உச்சத்தில் அவனுக்கு தெரிசாவை ஆபாச வார்த்தையால் வர்ணிக்க, திட்டியபடி முயங்கத்தான் பிடிக்கும். அவன் வற்புறுத்தி வற்புறுத்தி கலக்கும் பொழுதுகளில் அரைக்கண் மட்டும் திறந்து அவனை அவிசாரி மகனே என்று விளித்தபடி உதட்டில் முத்தவும் தெரிசாவுக்குப் பழகி இருந்தது.
பீட்டருக்கு இத்தனை வருஷமாக அவள் முத்தம் மட்டும்தான் தரமுடிந்தது. குறை யார் வசம் என்று தெரியவில்லை. தெரிந்து என்ன ஆகப் போகிறது? ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக, இசைவான துணையாக இப்படியே இன்னும் கொஞ்சம் நீண்டு போய் கென்சிங்டனில் முடியப் போகிறது வாழ்க்கை. அம்பலப்புழை தெரசாள் மெக்கன்சி என்று பொறித்த கல்லறைக்குள் அப்புறம் அடக்கமாகி. வேண்டாம். இப்போ எதுக்கு அச்சானியமா அந்த நினைவெல்லாம்? அச்சானியம் என்றால் என்ன? ஜீசஸ் கேட்டபோது மரியா சொன்னாள் – கிருஷ்ணா, டெல் ஹிம்.
மேம், என்ன யோசனையில் மூழ்கிட்டீங்க? எடின்பரோவில் எந்த சர்ச்சில் முதலில் பியானோ வாசிச்சு கூட்டம் போடறதுன்னு தீவிரமா யோசிக்கறீங்களா?
மரியா சுவாதீனமாக உள்ளே வந்து பாலை சமையல் அறைப் பாத்திரத்தில் நிறைத்தபடி சொன்னாள்.
இவளிடம் சொல்ல முடியாது. கேட்டால் பொட்டை நாய் என்று நிசமாகவே திட்டக்கூடும். சொந்த மகளாக இருந்தாலும் கேட்பாள். தேவ ஊழியம் செய்யப் போகிற மத்திய வயசு ஸ்திரிக்கு மனசு முழுக்க கிரீடை நினைவு, இல்லை சாவு பற்றிய யோசனை. இது தவிர வேறு எதுவும் உலகத்திலே இல்லியா?
மதராஸ் சர்வகலாசாலையில் பீட்டரை சந்தித்திருக்காவிட்டால் தெரிசா இந்தப் பேச்சை எல்லாம் கேட்க வேண்டியிருக்காது. அவள் கொல்லத்திலேயோ சென்னை அல்லது புதுச்சேரியிலோ வேதத்தில் ஏறிய ஒரு பிராமண வாலிபனை தாலி சார்த்த வைத்து கல்யாணம் கழித்திருப்பாள். மூங்கில் தட்டி அடைத்து புதுசாகப் போட்ட சாப்பாட்டுக் கடைக்கு இட்லி அவித்து அனுப்பி தொழில் விருத்தியாக ஒத்தாசையாக இருந்திருப்பாள். ஞாயிற்றுக்கிழமை பட்டுக் குடை பிடித்தபடி தேவாலயத்துக்குப் போய் கூட்டத்தோடு சேர்ந்து மண்டியிட்டு பிரசங்கம் கேட்டுத் திரும்பி இருப்பாள். ஒரு பாவம் பிராமண ரோமன் கத்தோலிக்க ஸ்திரி.
ஜான் கிட்டாவய்யன் தன் இரண்டு புத்ரிகளையும் பட்டணத்துக்கு அனுப்பிப் படிக்க வைத்தபோது இப்படி இரண்டு பேருக்கும் துரைத்தன உத்தியோகம் பார்க்கிற வெள்ளைக்கார மாப்பிள்ளைகள் அமையும் என்று எதிர்பார்த்திருப்பானா? கால் காசு செலவில்லாமல் கல்யாணம் கட்டிய இந்த மாப்பிள்ளைகளில் ஒருத்தன் மான்செஸ்டருக்கு தெரிசாவின் தங்கை நிர்மலாவோடு போனான். பீட்டர் தெரிசாவோடு லண்டனில் தன் கென்சிங்க்டன் மாளிகைக்குத் திரும்பினான். இவர்கள் ரெண்டு பேரும் ரோமன் கத்தோலிக்க மதத்திலிருந்து புராட்டஸ்டண்ட் ஆக மாறியது மட்டும் ஜான் கிட்டாவய்யனுக்குப் பிடிக்கவில்லை. எங்கே இருந்தால் என்ன? எல்லாம் கிறிஸ்து முனிவரைத் தொழுகிறதுதானே? அவன் சமாதானம் சொல்லி தெரிசாவை அனுப்பி வைத்தது தெரிசாவுக்கு நினைவு வந்தது. அப்பா, நீங்களும் கிருஷ்ணனை இன்னும் கூட நினைச்சுக்கறீங்களா?
மரியா, நேத்திக்கே உனக்கு தரவேண்டிய ரெண்டு பவுண்ட், எட்டு ஷில்லிங் பால் காசைத் தர மறந்திட்டேன். வாங்கிட்டுப் போயிடு. அப்புறம் நான் திரும்பிவர இன்னும் ஒரு பத்து நாள் ஆயிடும். உனக்குக் கடன் சொல்லிட்டு சர்ச்சுக்குப் போனா ஜீசஸ் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிப்பார்.
மரியா புன்னகையோடு காசை வாங்கி எண்ணித் தோளில் பைக்குள் வைத்தாள்.
ஜாக்கிரதையாப் போய்ட்டு வாங்க மேம். ரயில் முழுக்க திருட்டுப் பசங்க தான்.
எந்த ரயிலைச் சொல்றே மரியா?
எல்லா ரயிலும் தான் மேம். நான் போன வாரம் டவர்லே இருந்து இங்கே பாதாள ரயில்லே வந்தேனே, அப்போ பிக்கடலியில் அடுத்த பெட்டியில் இருந்த என் சிநேகிதியை கத்தியைக் காட்டிக் கொள்ளையடிச்சது யாருன்னு நினைக்கறீங்க? தேவ ஊழியம் செய்யற ஒரு மதகுருதான்.
உளறாதே. எல்லா சர்ச்சிலேயும் கணிசமா பணம் இருக்கு. இன்னும் பத்து தலைமுறை குருமார்கள் உட்கார்ந்து சாப்பிட்டு உடம்பு ஊதினாலும் மடத்துச் சொத்து கொஞ்சமும் குறையாது. அப்புறம் மதகுரு எதுக்கு வழிப்பறி செய்யணும்?
மதகுருன்னா மதகுருவா? அந்த மாதிரி உடுப்பு மாட்டிய ஜேப்படிக்காரன். அது என்னமோ வேறே உடுப்பு எதையும் விட அவங்களுக்கு குருமார் வேஷம்தான் பிடிச்சிருக்காம். அல்லது பொருந்தி வருதாம்.
மரியா அடக்க மாட்டாமல் சிரித்தாள். தெரிசா அவள் முதுகில் அடித்து பொய்க் கோபத்தோடு கண்டித்தாள். இன்னும் பலமாகச் சிரித்தபடி மரியா வெளியே ஓடினாள்.
பால் பாத்திரத்தை விட்டுட்டுப் போறியே, என்ன பொண்ணு நீ?
தெரிசா அவள் போனதும் கதவைத் தாழிட்டாள். ஜன்னல்களை ஜாக்கிரதையாக மூடி, காற்றில் அவை திறக்காமல் கொக்கிகளை அழுத்தி மாட்டினாள். குளிக்கலாமா? இப்போது நேரம் இல்லை.
குளிப்பதை சாயந்திரத்துக்கு ஒத்திவைத்து உடுப்பைக் களைந்தாள். உடம்பு முழுக்க வென்னீரில் நனைத்த ஈரத் துணி கொண்டு அழுத்தத் துடைத்தாள். கண்ணாடியில் தேகத்தோடு ஒட்டிக்கொண்டு அணைத்துப் பிடித்தபடி பீட்டர் இழைந்தான். தேவிடிச்சி. பீட்டர் அவள் மேல் கவிந்தபடி சொன்னான்.
நாயே, நீ ஏண்டா என்னைத் தனியா இங்கே விட்டுட்டு ஆப்பிரிக்கா போனே? ஆரஞ்ச் எஸ்டேட் போயர் சண்டையிலே நீ துப்பாக்கி எடுத்துச் சுடாமல் போனா, இங்கிலாந்து ஜயிக்காதா என்ன?
பீட்டருடைய இடுப்புக்குக் கீழ் ஆசையோடு தடவியபடி வாசல் கதவைப் பூட்டினாள் தெரிசா. வேண்டாம். இது தேவ ஊழியம் செய்யப் புறப்படும் நேரம். மனசு அசங்கியமான சங்கதிகளை ஏன் நினைத்துத் தொலைக்கிறது? குளித்துவிட்டுக் கிளம்பியிருந்தால் இதெல்லாம் இல்லாது போயிருக்குமோ?
நிறுத்து நிறுத்து இந்த வீடுதான். இந்தியாவின் சக்ரவர்த்தினி வராங்க பாரு. ரதத்தில் ஏறி உக்காரும்மா மகாராணி.
ரெட்டைக் குதிரை சாரட் ஒன்று கம்பீரமாக வீட்டு வாசலில் நின்றிருந்தது. உள்ளே இருந்து தொப்பியை உயர்த்திப் பிடித்தபடி தாமஸ் நாஷ் போலி மரியாதையோடு சொன்னான். அவன் வாயில் வழக்கம் போல் சுருட்டு புகைந்தபடி இருந்தது.
பதினொண்ணரை மணிக்கு யூஸ்டன்லே இருந்து ஸ்காட்லாந்து ரயில் கிளம்பிடும். அதைத் துரத்திக்கிட்டு அப்புறம் எடின்பரோ வரைக்கும் ஓட எனக்கு உடம்பிலே சக்தி இல்லே. நான் என்ன பீட்டர் மாதிரி பட்டாளத்துக்காரனா என்ன? சாதாரண டாக்டர். மகாராணிகள் மனது வைத்தால் ராஜ வைத்தியன் ஆக யோகம் வரும்.
தெரிசா சாரட்டில் ஏற கையைத் தாழ்த்திப் பிடித்தபடி தாமஸ் சொன்னான். பீட்டருக்கு அவன் அப்பா வழியில் ஒரு தலைமுறைக்கு முந்திக் கிளைத்த உறவின் படி, சிற்றப்பனின் மகன். இங்கே அப்படி எல்லாம் நார் நாராக சொந்த பந்தம் தேடிப் பிரித்து அழைக்காமல் எல்லோரும் கசின். பீட்டருக்கு இவன் கசின். அதனால் தெரிசாவுக்கும் தான்.
நான் போயர் யுத்தம் முடிந்து பிழைத்துக் கிடந்தால் சாவகாசமாக வந்து சேர்கிறேன். அதற்குள் நாம் புத்தாண்டு தீர்மானம் எடுத்தபடி எடின்பரோவிலும் அபர்டீனிலும் ஆலையிலும் சுரங்கத்திலும் உழைக்கிற ஏழைகளுக்கு உபகாரம் செய்கிறதை ஆரம்பித்து விடலாம். தெரிசா குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரவும், தாமஸ் ஆரம்ப சுகாதாரத்தைப் பற்றிச் சொல்லவும் மருத்துவம் பார்க்கவுமாக இதைத் தொடங்கி விடலாம். லீஸ்டர் பேங்கில் என் பெயரிலும் தெரிசா பெயரிலும் உள்ள கணக்கில் இருந்து ஐநூறு பவுண்ட் எடுத்துக் கொண்டு இந்த வாரமே நீங்கள் புறப்பட முடிந்தால் நன்றாக இருக்கும்.
பீட்டர் ஒரே கடிதத்தை ஜாக்கிரதையாகப் பிரதி செய்து தெரிசாவுக்கும் தாமஸுக்கும் அனுப்பியிருந்தது போன வாரம் தான் வந்தது. தெரிசாவுக்கு வந்த கடிதத்தோடு துண்டுக் காகிதத்தில் அவன் எழுதியிருந்தான்.
கருத்த தேவிடிச்சி. பொட்டை நாயே. உன்னை நினைச்சு இப்பத்தான் சுய மைதுனம் செய்துவிட்டு வந்தேன்.
அடிக்கடி இதைத் திரும்பச் செய்யாதே. நரகத்துக்குப் போகவேண்டி வரும்.
தெரிசா சொன்னாள்.
உன்னைக் கைகொடுத்து சாரட்டிலே ஏத்தி விட்டா நான் நரகத்துக்குப் போவேன்னா, எத்தனை தடவை வேணுமானாலும் அங்கே போய்த் திரும்பத் தயார்.
தாமஸ் கண்ணடித்தான். கசின் செய்கிற காரியமா அது?
சாரட் மெல்ல கென்சிங்டன் வீதியில் ஊர்ந்தபோது தெரிசா வெளியே பார்த்தாள். தெரு ஓரம் பனிமூட்டத்தில் யார் மரியாவா? அவளேதான்.
மரியா வெற்றுப் பாத்திரத்தை பூங்கா கம்பிக் கதவு ஓரம் வைத்துவிட்டு மரத்தில் சாய்ந்து நின்றிருந்தாள். அசப்பில் பீட்டர் போல் இருந்த ஒருத்தன் அவளுக்கு ஆர்வமாக முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு கை இல்லாதது தெரிசா கண்ணில் பட்டது. அவன் தோளில் மாட்டிய துணி சஞ்சியிலிருந்து எட்டிப் பார்ப்பது குருமார்களின் உடுப்பா என்று தெரியவில்லை. (தொடரும்)
eramurukan@gmail.com
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – காலைக் கவிதை -1 காதலி : மாடில்தே உரூத்தியா (Matilde Urrutia)
- விட்டில் பூச்சிகள்
- விவாதங்களும், வெட்டிக்கவிதைகளும்
- மண்டலஎருது
- “ஆற்றின் மௌனம்”
- புதிர்
- நகைப்பாக்கள்- சென்ரியு
- சென்ரியு – நகைப்பாக்கள்
- குற்ற உணர்வு இல்லா இந்தியர்கள்
- ஜ ந் து.
- ஆனந்த சுதந்திரம் ( ரஜித்)
- காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்
- தொட்டுப்பிடித்து விளையாடும் தொடுவானங்கள் (cosmic horizons) (ஐன்ஸ்டீன் அறிவாலயம்-1)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூதக் கருந்துளைகள் விடுக்கும் புதிய மர்மங்கள் ! [கட்டுரை: 40]
- சுப்ரபாரதிமணியனின் ‘ஓலைக்கீற்று’ நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்
- உங்கள் மழை தட்டுகையில்…
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 6 (சுருக்கப் பட்டது)
- “வையத் தலைமை கொள்” எனும் நூல் வெளியீட்டு விழா
- “இலக்கிய உரையாடல்” கே.டானியல் எழுதிய “பஞ்சமர்”
- மதுரையில் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா
- “நேராக நில்! கைகளைப் பக்கவாட்டில் வை”
- மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்
- பல்சமய உரையாடலை வலியுறுத்தும் எழுத்துக்கள் நம் காலத்தின் அவசியம்
- ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் – 3
- நினைவுகளின் தடத்தில் – 16
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 34. பிரபஞ்சன்
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐந்து
- புன்னகையின் ஒளி ததும்பும் கதைகள்
- தாகூரின் கீதங்கள் – 46 நமது நெருங்கிய நட்பு !
- குழந்தைக் கதை