நிசப்தங்களுடன்
உரையாடுவதில்
மனம் லயிப்பதுண்டு.
நீண்டநேரத்
தனிமையில்…
எனக்குப் பிடிக்காதவர்
திறக்க கதவோ
பிடித்தவரைத்
தடுக்க தாழ்ப்பாளோ
இருக்காத நிசப்தம்…
உரையாடல்களினூடே
அண்ணனிடமோ தம்பியிடமோ
அக்காளிடமோ தங்கையிடமோ
அப்பாவிடமோ நண்பனிடமோ
மனைவியிடமோ காதலியிடமோ
என
எல்லோரிடமும்
கேட்கப்படாமல் விடுபட்ட
கேள்விகள்
அணிவகுத்தாலும்
அம்மாவிடம் மட்டும்
சொல்லி முடிக்கவியலாத
பதில்கள்
மட்டுமே
மிஞ்சி நிற்கின்றன!
சகல மூலைகளிலும் இருந்து
தனித்துவிடப்பட்ட போதும்
தாக்குவதற்கான படையணிகள்
இல்லாதபோதும்
கண்ணுக்குப் புலப்படாத
பிரதேசங்களிலிருந்து
கொடூரமான அம்புகள்
பாய்ச்சப்படுகின்றன
பெரும்பாலானவை
அது பற்றியதாகவே
இருக்கின்றது
வறுமை எவ்வளவு
கொடியதாக இருக்கின்றது
நேரகாலத்துக்கு
அது கணக்குகளை
முடித்துவிட
அனுமதிப்பதில்லை
அதனால்
முகம் குப்புறக்
கவிழ்க்கப்படுகின்றது
அதனைக் கண்டு
பலர் சிரித்தும்
சிலர் அனுதாபப்பட்டும்
எல்லாவற்றையும்
வென்று விடுவதற்கான
வைராக்கியத்தை இழந்து
நடந்து கொண்டிருக்கின்றேன்
மாலைச் சூரியன்
தெறித்து விழுந்து
நிழலாகிப் போகின்றது
என் நிழல் என்னை
விழுங்கி விட்டிருந்தது
பனிக்கும்பியின் உச்சிகள்
தகர்ந்து கொண்டிருந்தன
தோலைக் கிழித்து
நாளங்களின்
இரத்த ஓட்டத்தில் கலந்து
உடலின் மூலைமுடுக்குகளில்
குத்திக்கொண்டு நின்றன
அம்பின் கூரிய முனைகள்
சுவர்க்கடிகாரம் ஆறடித்து ஓய்வதற்குள் சட்டென்று விழிப்பு வந்துவிட்டது முருகேசனுக்கு. நள்ளிரவு தாண்டியும் தான் கட்டிலிலேயே தூக்கம் வராமல் விழித்திருந்தது நினைவுக்கு வந்தது.
எல்லாம் கடன் ஞாபகம்தான். அவசரத்துக்கு எடுத்த பணம் ஐயாயிரம் கொஞ்ச நாளாக நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருந்தது.
‘ ஒரு மாதத்தில் அறுவடை. இரண்டு மாதத்துக்குள் எப்படியும் தந்து விடுகிறேன் ‘ என்ற கெஞ்சலையடுத்து பெறப்பட்ட கடன். இன்றோடு ஆறு மாதங்கள் முடியப் போகின்றன.
என்ன செய்ய ? அறுவடைக்கு ஊரே காத்திருந்த சமயத்தில் பெருமழை பெய்ததில் பயிர்களெல்லாம் நாசமாகிப்போயின. நல்ல அறுவடையை எதிர்பார்த்திருந்த நிறைய பேருக்கு நஷ்டம்தான்.
ஒரு வகையில் சிவராசன் இவருக்குத் தம்பி முறை வேண்டும் . மூன்றாம் மாதம் இவரை சந்திக்க நேர்ந்த சமயம் கடன் பற்றி அவரே ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. இருந்த பிரச்சினைகளெல்லாம் சொல்லப் பட்டு இன்னும் மூன்று மாதங்கள் தவணை கேட்கப்பட்டது. சரியாக இன்னும் மூன்று மாதத்தில் கையில் பணம் இருக்கவேண்டும் என்று உறுதியான பின்னர்தான் இவர் வீட்டுக்கே வந்தார்.
கமலமும் கடன் பணத்தைப் பற்றி அடிக்கடி அலுத்துக் கொள்வது வழமையானது.இவரும் எப்படியாவது முடித்து விடலாம் என்றுதான் பார்க்கிறார். மளிகைக் கடை , பால், பேப்பர் பாக்கி எல்லாம் சேர்ந்து வரும்போது கமலத்தின் புலம்பலிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. நகரத்தில் பணி புரியும் இவரது மகனும் ஒரு மாதமாக பணம் எதுவும் அனுப்பியிருக்கவில்லை. கஷ்டத்தை சொல்லி விடலாம் என்றால் சுய கௌரவம் தடுத்தது. எல்லாம் சேர்ந்து சில நாட்களாக கவலையை உண்டு பண்ணியிருந்தது .
இது விடயமாக சிவராசனிடம் எப்படிப்பேசுவது ? தப்பாக எடுத்துக் கொள்வானோ? குடும்ப விஷயம். கஷ்ட நஷ்டங்களை பொறுத்துத்தான் போக வேண்டும். நான்கு பேருக்குத் தெரிந்தால் அவமானம்.
யோசித்து , ஒரு முடிவுக்கு வந்தவராக கை, கால் ,முகம் கழுவி தலைசீவும் சமயத்தில் சிவராசனின் குரல் வாசலில் கேட்டது . கூடவே கமலத்தின் “என்னங்க…” வும்.
வாசலுக்கு வந்தார். உள்ளே வரும்படி அழைத்தார்.
“இல்லைண்ணா. நிறைய நாளா ரொம்ப செலவுகள் . உங்களுக்கே தெரியும் . பேத்தி காதுகுத்து , அத்தை திதின்னு செலவு ரொம்ப அதிகமாய்டுசசு . உர விலைகளும் கூடிடுச்சு. ”
கமலத்தையும் இலேசாக பார்த்துவிட்டு அவர் தொடர்ந்தார் .
” இருந்தாலும் தக்க சமயத்துல கடவுளாக் கொடுத்த மாதிரி அவ போட்டிருந்த சீட்டு விழுந்துடிச்சு. அதான் முதல் வேலையா உங்க கடனைத் திருப்பி குடுத்துட்டு ப் போகலாம்னு காலையிலே ஓடி வந்தேன். ”
என்று சொல்லியவாறே சிவராசன் எடுத்து நீட்டிய பணத்தை முருகேசன் புன்னகையோடு வாங்கிக் கொண்டார்.
கொண்டா ரெட்டியாரிடம் ஒரு ரூபாய் கடன் வாங்குவதானால் கூட பத்து நடை நடந்தாக வேண்டும் என்பது ஊரில் எல்லோருக்கும் அத்துப்படியான விஷயம். ஊரில் பெரிய புள்ளி அவர்தான். பயிர்வழி, வெளிவிவகாரம், நாலு பெரிய மனுஷாள் சாவகாசம் எல்லாவற்றிலுமே ஒசத்தியும் அவர்தான். ரெண்டடுக்கு மெத்தை வீடும் சுத்துக்காட்டில் ஆளுயரமதில் சுவரும், அதைப்போல மூணு மடங்கு உயரமுள்ள கனமான வைக்கோல் போரும் ஊரில் வேறு யாருக்கும் கிடையாது.
எல்லாம் கால் காணி, அரை காணிகள் காலாணி குடிசைகள். நெல்லு வட்டிக்கும், பத்து வட்டிக்கும் கடன் வாங்குபவர்கள். நூறுக்கு நூற்றி ஐம்பதாய் புரோ நோட்டு எழுதிக் கொடுப்பவர்கள். அன்னாடங் காய்ச்சிகள்.
குளிகுளித்த செலவுக்கு அர்ஜன்டாய் ஒரு பத்து ரூபாய் வேண்டுமென்றால் கூட ரெட்டியாரிடம் தான் போய் நிற்க வேண்டும்.
மண்ணாங்கட்டிக்கு அதுமாதிரி ஒரு அர்ஜன்ட்.
குளி குளித்த செலவு இல்லை. ஒரு ஒண்ணே கால் காணி ஐ.ஆர்.8 நட்டிருந்தான். (பயிர் பச்சை கட்டி வருகிற சமயம்) பூச்சி மருந்தும் உரமும் வாங்க வேண்டும். ஒரு நூறு ரூபாய் இருந்தால் போதும். அவரிடம் தான் கேட்க வேண்டும். நடக்கிறான்.
* * *
நடை ஒண்ணு:
மத்தியான நேரம். கொஞ்சம் தாழ்ந்திருக்கும். ஈ மொய்க்கும் அமைதி. பெரிய வீட்டின் வெளியே யாரையும் காணோம். வெராந்தா படியேறி திறந்திருந்த கதவு வழியாக லேசாய் தலையை நீட்டிப் பார்க்கிறான். உள்ளே பேச்சுக் குரல் கேட்கிறது. கொஞ்சம் தயங்கி நிற்கிறான். மெள்ள பணிவோடு அழைக்கிறான்.
‘ரெட்டியாரே…….ரெட்டியாரே ‘
ரெட்டியார் வரவில்லை; ரெட்டியார் வீட்டு அம்மா வருகிறார்கள்.
‘யாரது ‘
‘ஏங்க ‘
‘நீ தானா… ? என்ன விஷயம் ? ‘
‘ரெட்டியார் இல்லீங்களா ? ‘
‘தூங்கறாரு ‘
சுவற்றைப் பார்த்து முழிக்கிறான். ரெட்டியார் குரல் கேட்ட மாதிரியிருந்தது. தயங்கி நிற்கிறான். அம்மா முகத்தைச் சந்தேகத்தோடு நோக்குகிறான்.
அம்மா சுள்ளென்று முறைக்கிறாள்.
‘ஒண்ணுமில்லிங்க. ஒரு சமாசாரம். பார்க்கலாம்னு….அப்புறமா வந்து பார்த்துக்கறேங்க. சாயரட்சை….. ‘
* * *
நடை ரெண்டு:
பொழுது போன சமயம். சாயரட்சை. ரெட்டியார் வீட்டிலிருக்கிறார். பெரிய நாற்காலி போட்டுக் குந்தியிருக்கிறார். நாற்காலி கொள்ள உடம்பு. பத்தொன்பது காணி நஞ்சையும், இருபத்தி ரெண்டு காணி புஞ்சையும் கண்களில் கொப்பளிக்கிறது. வெற்று உடம்பு. மேல் துண்டு. பச்சையரிசியும், பருப்பும் நெய்யும்…வயிறு பளபளக்கிறது.
வெராந்தாவுக்குக் கீழே நாலைந்து பேர். ஓரமாய் கைக்கட்டி நிற்கிறார்கள் பணியாட்கள். மேலே சில ஊர் நாட்டாண்மைகள். மூணு காணி நாலு காணிகள். அந்தஸ்துக்கு ஏற்றா மாதிரி அது அதுகளுக்கும் இடம்.
அதற்குள் ரெட்டியார் ஊட்டம்மா வருகிறார்கள். தெலுங்கில் என்னவோ திருவாய் மொழிந்தார்கள். இவனுக்கு தெலுங்கு தெரியாது. குழம்புகிறான். அடுத்த விநாடியே தெரிந்து விடுகிறது.
பாண்டு– ‘குறித்த கெடுவுக்குள் பணத்தை திருப்பித்தரத் தவறினால் ஆகும் கோர்ட் செலவுகளுடன் என் சொத்தில் தாவா செய்து வசூல் செய்து கொள்ள… இந்தப்படிக்கு நான் சம்மதித்து எழுதிக்கொடுத்த…., ‘ஷரா ஷரத்துக்களெல்லாம் அடங்கிய பிராம்சரி நோட்டு. ஸ்டாம்பு ஒட்டி கையெழுத்திட்டது. சாட்சி உள்பட சம்பூரணமாய்…..ரெட்டியார் முன்னே நீட்டுகிறான்.
பரிசீலனை செய்கிறார்.
பணிந்து நிற்கிறான்.
இன்னும் ஏதாவது குறையிருக்குமோ…
ஒன்றும் இருக்கிற மாதிரித் தெரியவில்லை.
ஏறக்குறைய கடைசி கட்டம்.
பதட்டத்தில் மனசு அடித்துக் கொள்கிறது…..
கடைசி நேரத்தில் ஏதாவது வந்து… நேரத்தை கைகளால் பிடிக்கிறான்.
‘பூராவும் பணமே வேணுமா ‘
‘ஒரம் வாங்க தாங்க. பழைய கடன் வேற இருக்குது ‘ தயங்கி சொல்கிறான். தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது…. ‘
‘ஏன் யூரியா கொஞ்சம் போடேன்…. ‘
‘அது இதுக்கு சரிபட்டு வராதுங்க. இது புதுரகம் இல்லிங்களா… ‘
‘எங்கிட்ட ஒரு மூட்ட யூரியா இருக்குது ‘
என்ன பதில் சொல்வது ?சும்மா நிற்கிறான்.
முகம் சுருங்குகிறார்.
‘சரி அப்ப காலம்பர வந்து வாங்கிக்கோ…. ‘
திகைத்து நிற்கிறான்.
பாண்டு அவரிடம்…. ‘
‘பணம் கொடுத்தப்புறம் பாண்டு தர்ரேனுங்க. அதக்குடுங்க இப்படி… ‘கேட்க முடியுமா ‘ அவ்வளவு நம்பிக்கை இல்லாமலா…. ‘
யோசனையில் ஒரு கணம். மறந்தாற் போல நிற்கிறான்.
நின்றதற்குப் பலன்… ‘
‘ஊட்டுல எதுனா வேல இருக்குதா….. ‘ ‘
‘ஒண்ணும் இல்லிங்க. மருந்து வாங்கியாந்தா அடிச்சிட்டு அப்படியே ஒரம் வாங்கிப் போட்டுடவேண்டிதான் ‘