நல்ல நாள்

This entry is part [part not set] of 19 in the series 20010618_Issue

அ முத்துலிங்கம்


இன்று காலையில் நான்
துப்பும்போது
ரத்தம் வரவில்லை.

என்னுடைய முதலாளி
நான் நீட்டிய
கோப்புகளைப் பார்த்துப் பார்த்து
கையெழுத்திட்டார்.
ஒன்றைக்கூட
ஒருமுறைதானும்
தூக்கி
எறியவில்லை.

அம்மாவின்
அழுகிப்போன பெருவிரலை
ஒருமாதம் தள்ளி
எடுக்கலாம் என்று
வைத்தியர் சொல்லிவிட்டார்.

உஸ்ஸென்று
உருண்டைக் கண்
மஞ்சள் குளவி
மூக்குக்கு கிட்ட
நின்று, நின்று
உற்றுப் பார்த்து,
பிறகு
போனது.

வழக்கத்தில்
இருபது நாட்கள்
எடுக்கும்
அவளுடைய தீட்டு
இம்முறை
21ல் வந்தது.

இரவு
கதவு தாழ்ப்பாள்
ஒரு தரத்தில்
போட்டுக் கொண்டது.

அபூர்வம்.
இப்படி
அருமையான நாள்
இனிமேல்
வராது.

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்