கார்ல் பாப்பரின் வெங்காயம்-8

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

சோதிப் பிரகாசம்


தேற்றமும் செயற்பாடும்

செயற்பாடு என்பது மட்டும்தான் எந்த ஒரு தேற்றத்திற்கும் நிருபணம் என்றால், ஒரு தேற்றம் என்னும் நிலையிலேயே ஒரு தேற்றத்தின் உண்மையினை அல்லது சரித்தன்மையினை நாம் புரிந்து கொள்ள முடியாதா ? என்பது பொருத்தமான ஒரு கேள்விதான்!

ஆனால், செயற்பாடுகளின் மூலமாக ஏற்கனவே நிருபிக்கப் பட்டு இருக்கின்ற விளைவுகளின் தருக்க முறையான நீட்சி என்னும் நிலையில்தான், ஒரு தேற்றத்தினை இன்னொரு தேற்றத்துடன் ஒப்பிட்டு நாம் பார்த்திட முடியும்.

கணிதம் என்பது கூட இத் தகையதுதானே! பொன்றாமையான (infinite) எண்களின் பொன்றிமையான (finite) நமது எண்ணிக்கைகள்தாமே, அவற்றின் ஒவ்வோர் அலகும்!

சரி, பிழையாக்கும் இயன்மையைப் பற்றிக் கார்ல் பாப்பர் பேசுகிறாரே, செயற்பாடு இல்லாமல் —-பரிசோதனை இல்லாமல்—-எதையாவது அவரால் பிழை படுத்திக் காட்டி விட முடியுமா ?

எனவே, தேற்றம்-செயற்பாடு என்னும் அடிப்படையில்தான் எந்த ஒரு தேற்றத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும் என்பது உறுதி!

ஆனால், கார்ல் பாப்பரோ ஓர் ஐயப் பாட்டு வாதி; ஓர் அவ நம்பிக்கை வாதியும் கூட!

எனவேதான், தேற்றம்-செயற்பாடு என்னும் கோணத்தில் எதையும் நோக்குவதற்கு அவர் மறுக்கிறார்; உண்டு என்றும் இல்லாமல், இல்லை என்றும் இல்லாமல், இவ் இரண்டிற்கும் இடைப் பட்ட ஓர் இரண்டும்-கெட்டான் ‘இயன்மை ‘யினைப் பற்றிப் பிடித்துக் கொண்டு தடுமாறுகிறார்; தமது சிந்தனைப் பகட்டுகளாகத் தமது தடுமாற்றத்தின் சிதறல்களை அள்ளித் தெளிக்கிறார்; இப்படித்தான், சிற்றுடைமைச் சிந்தனைக்கே உரிய ஓர் ஐயப் பாட்டு வாதியாகத் தம்மை வளர்த்து எடுத்துக் கொண்டும் அவர் வந்து இருக்கிறார்.

ஏனென்றால், ‘புறப் பொருள் வயமான மெய்ப் பொருள்தனை மனிதனின் சிந்தனையினால் புரிந்து கொள்ள முடியுமா ? என்னும் கேள்வி, தேற்ற முறையான ஒரு கேள்வி அல்ல; மாறாக, செயற் பாட்டு முறையான ஒரு கேள்வி. மெய்ப் பொருள் என்பதை, அதாவது, மனிதச் சிந்தனையின் மெய்மை, ஆற்றல் மற்றும் இப் பாலைத் தன்மை, ஆகிய வற்றினைச் செயற் பாட்டின் மூலமாக மனிதன் மெய்ப்பித்திட வேண்டும். ‘ (ஜெர்மன் கோட்பாடு, பக்.618: பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று, பக்.147.)

எனவேதான்—-

‘தூய்மையான ஞானத்தையும் தூய்மையான ஞாயத்தையும் சரியாக மனிதர்கள் புரிந்து கொள்ளாமல் வந்து இருப்பதுதான், இது வரை உலகில் அவற்றின் ஆட்சி ஏற்படாமல் போனதற்குக் காரணம். இதற்கு ஒரு மேதாவி தேவைப் பட்டான். இப் பொழுது அவன் தோன்றி விட்டான்; உண்மை புரிந்து கொள்ளப் பட்டும் விட்டது.

இப்படி ஒரு மேதாவி தோன்றி விட்டான்; உண்மை தெளிவாகப் புரிந்து கொள்ளப் பட்டு விட்டது என்பது, வரலாற்று வளர்ச்சியின் தொடர்ச்சியில் தவிர்த்திட முடியாத அவசியம் அல்ல; மாறாக, ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்ச்சி!

இவன் மட்டும் ஐந் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி வந்து இருந்தால், ஐந் நூறு ஆண்டுக் காலத் தவறுகளையும் பூசல்களையும் துயரங்களையும் மனித இனம் தவிர்த்து இருக்க முடியும் ‘ (டூரிங்கிற்கு எதிராக, மாஸ்கோ ஆங்கிலப் பதிப்பு, பக்.26: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று, பக்.163-64 அடிக் குறிப்பு-14.) என்று கருதுவதில் எந்தப் பொருளும் இல்லை.

ஆக, தேற்றம்-செயற்பாடு என்னும் கோணத்தில்தான் எதனையும் நாம் புரிந்து கொள்ள முடியும் என்பது தெளிவு.

அதே நேரத்தில், மூக்கு முட்டச் சோறும் மூளை நோகாத ஞானமுமாக வாழ்ந்திட முற் படுகின்ற சிற்றுடைமைச் சிந்தனையாளர்களுக்கு, கார்ல் பாப்பரின் மாய்மைதான் நிறைவு அளித்திட முடியும் என்பதும் தெளிவு.

பொன்றாமையும் வாழ்க்கையும்

மெய்மை என்பது பொன்றாமை (infinite) ஆனது என்பதை ஈண்டு நாம் விளக்கிடத் தேவை இல்லை. அறிவு என்பது கூட பொன்றாமை ஆனதுதான்!

ஆனால், நமது வாழ்க்கையோ பொன்றிமை (finite) ஆனது! நிலையாமையில் நீச்சல் அடித்துக் கொண்டு வருகின்ற இந்த வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டு வந்திடவும் முடியும். ஆனால் கார்ல் பாப்பரோ, பொன்றிமையான நமது வாழ்க்கையைப் பிழை என்று கூறுவதற்கு முற்பட்டு விடுகிறார்.

பொன்றாமை என்பதுதான் முழுமை ஆனது என்றால், பொன்றிமை என்பது அரை-குறைதான் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், பொன்றாமை என்பதை என்றைக்கும் நாம் எய்திட முடியாது என்கின்ற சூழ் நிலையில், அரை-குறையான பொன்றிமையினை நாம் பற்றிக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன ?.

இதனால்தான், பொன்றிமையான கட்டங்களின் எல்லை இல்லாத தொடர்ச்சிதான் பொன்றாமை என்று ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்.

அறிவும் நலனும்

மாவோ, ஸ்தாலின், ஹிட்லர், ஆகியோரைப் பற்றி முன்னர் நாம் குறிப்பிட்ட பொழுது, முற்றான உண்மையின் உறைவிடங்களாகத் தங்களை அவர்கள் கருதிக் கொண்டு வந்து இருந்தனர் என்பதை நாம் பார்த்தோம். இதனால்தான், தங்களை எதிர்த்தவர்களை எல்லாம் அழித்து ஒழித்துக் கொண்டு அவர்கள் வந்து இருந்தார்கள் என்றும் நாம் நினைத்தோம்.

ஆனால், தங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு இருந்தார்கள் என்பது உண்மையில் நமக்குத் தெரியாது. தாங்களாக வாய் திறந்து இது பற்றி எதையும் அவர்கள் கூறிடாத வரை—-உண்மையைத்தான் அவர்கள் கூறுகிறார்கள் என்று நாம் எடுத்துக் கொண்டால் கூட—-அவர்களுடைய மனங்களுக்குள் புகுந்து இதனை உறுதிப் படுத்திக் கொள்கின்ற வழியும் நமக்கு இல்லை.

இதனால்தான், அறிவினை விட ‘நலன் ‘தான் முக்கியம் என்று—-நலன்கள்தாம் வாழ்க்கையை இயக்குகின்றன என்று—-கார்ல் மார்க்ஸ் கூறுகிறார். தங்கள் நலன்களுக்குத் தேவைப் படாத எந்த ஓர் அறிவையும் யாரும் பொருட்படுத்துவதும் இல்லை.

அவ் அளவு ஏன், ‘ ‘நலன் ‘ என்பதில் இருந்து ‘கருத்து ‘ என்பது எந்த அளவுக்கு வேறு பட்டு வந்து இருக்கிறதோ, அந்த அளவுக்குக் கருத்து என்பது எப் பொழுதும் அவமானப் பட்டுதான் வந்து இருக்கிறது. ‘ (கார்ல் மார்க்ஸ், புனித குடும்பம்; வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு, பக். 68.)

இப்படி, நலன்களின் நிகழ்ப்பாடாகத்தான் வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள முடியுமே ஒழிய, அறிவின் நிகழ்ப்பாடாக அல்ல!

எடுத்துக் காட்டாக, எல்லோரும் இன்புற்று இருந்திட வேண்டும் என்னும் மனித இயல்பான பண்பினை எல்லோரும் அறிந்துதான் வைத்து இருக்கிறார்கள் என்ற போதிலும், செயற் பாட்டில் முன்னணிக்கு வந்து நின்று கொண்டு இருப்பதோ ஒவ்வொருவரதும் சொந்த நலன் மட்டும்தான் ஆகும்.

ஆனால், கார்ல் பாப்பருக்கோ அறிவுதான் முக்கியம்; அதில் அடங்கிக் கிடக்கின்ற பிழை கூட அல்ல, பிழையாக்கும் இயன்மைதான் முக்கியம்! எனினும், என்ன நலன் கருதி இந்த ஐயப் பாட்டு வாதத்தினை விதைத்து விட்டு அவர் சென்று இருக்கிறார் என்பதுதான் நமக்குப் புரிய வில்லை.

அதே நேரத்தில், சிற்றுடைமையின் நலனுக்கு ஏற்றனவாக அவரது கருத்துகள் அமைந்து உள்ளன என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.

ஐயமும் நம்பிக்கையும்

ஐயப் பாட்டு வாதம் என்பது விலை மதித்திட முடியாத ஓர் ஆடம்பரம்! எனவே, எல்லோராலும் இந்த ஆடம்பரத்தில் திளைத்து விட முடியாது; ஒரு முதலாளியாலோ அல்லது ஒரு வணிகனாலோ நிச்சயமாக இது முடியாது!

முதலாளர்களைப் பொறுத்த வரை, தங்களிடம் உள்ள ‘பண-முதலை ‘ ‘உற்பத்தி முதலாக ‘ ஈடு படுத்தி, ‘சரக்கு-முதலாக ‘ அதனைக் குவித்து வைத்துக் கொண்டு இருப்பவர்கள் அவர்கள்; தங்கள் சரக்குகளை விற்று ஆதாயத்துடன் தங்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொண்டு விட முடியும் என்னும் நம்பிக்கையினை என்றும் அவர்கள் இழந்து விடுவது இல்லை!

முதலாளிகளிடம் இருந்து சரக்குகளை வாங்கி விற்றுத் தங்கள் வாழ்க்கையினை ஓட்டிக் கொண்டு வருகின்ற வணிகர்களோ, சந்தைப் போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர் கொண்டு தங்கள் சரக்குகளை விற்றுத் தீர்த்தாக வேண்டும். இல்லை என்றால், தாங்கள் போட்ட பணத்தை அவர்கள் இழந்து விட நேர்ந்து விடும்.

இது போல, உழைப்பாளர்களாலும் ஐயப் பாட்டு வாதிகளாக விளங்கி விட முடியாது. ஏனென்றால், உயிர் வாழ்வதற்கு அவர்களுக்குக் கூலி வேண்டும்.

ஆனால், இரண்டும்-கெட்டான்களாக இடையில் நின்று தடுமாறிக் கொண்டு இருக்கின்ற சிற்றுடைமை யாளர்களுக்கோ, ஐயப் பாட்டு வாதம் தேவைப் படுகிறது. இதன் மூலம், சமுதாயத்தில் ஏற்பட்டு விடக் கூடிய எல்லா மாற்றங்களையும் தடுத்து நிறுத்தி விட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அவர்களது அறிவு அல்ல, நலன்தான் இதற்குக் காரணமும் ஆகும்.

ஆக, அறிவு அல்ல, ‘நலன்கள் ‘தாம் சமுதாய வாழ்க்கையினை இயக்கிக் கொண்டு வருகின்றன என்பது தெளிவு.

தொழிற் சங்க இயக்கம்

‘தோல்வியின் இயன்மை ‘யினை அல்ல, ‘வெற்றியின் இயன்மை ‘யினைக் கருத்தில் கொண்டுதான் நாட்டில் போராட்டங்கள் நடை பெற்றுக் கொண்டு வருகின்றன என்பதைக் கார்ல் பாப்பர் கூட மறுத்து விட முடியாது.

அன்றாட வாழ்க்கையினை அலுப்புத் தட்டாமல் வாழ்ந்து கொண்டு வருகின்ற ஒரு சமுதாயத்தில் இருந்து எழுந்து வருகின்ற எதிர்ப்புக் குரல்கள்தாம் போராட்டங்கள் என்பதில் ஐயம் எதுவும் இல்லை. இவற்றுள், உழைப்பாளர்களின் தொழிற் சங்கப் போராட்டங்களோ சற்று வேற்றுமை ஆனவை.

அதாவது, ஒரே வருக்கம் என்னும் உழைப்பாளர்களின் ஒருமைப்பாடான ஒற்றுமை; தீர்க்கமான ஒரு சமுதாயத் திறல் என்னும் அவர்களின் பங்களிப்பு; போராடுவது தங்கள் பிறப்பு உரிமை என்னும் விடுதலையான தனி மனித உணர்மை; ஆகியவைதாம் உழைப்பாளர்தம் போராட்டங்களின் தனிச் சிறந்த குணவரைகள் எனலாம்.

இந்த உழைப்பாளர்களின் போராட்டங்கள்—-முடங்கிப் போய்க் கிடக்கின்ற சமுதாயத்தின் இறுக்கங்களைத் தளர்த்துகின்றன; சலிப்புத் தட்டிப் போன வாழ்க்கைக்கு உயிர்ப்பான ஓர் எதிர் காலத்தைச் சுட்டிக் காட்டுகின்றன; புதுமையைத் தேடுகின்ற ஒரு முரணியக்கச் சிந்தனையைக் கிளர்த்தி விடுகின்றன; சமுதாயம் எங்கணும் நம்பிக்கை விதைகளை அள்ளித் தெளிக்கின்றன!

போராட்டங்களின் முழு வீச்சில்—-ஊழல் காரர்கள் உலுக்கப் படுகிறார்கள்; அதிகார வருக்கத்தின் ஆணவங்கள் ஆட்டம் காண்கின்றன; ஒடுக்கப் பட்டு ஒடுங்கிக் கிடக்கின்ற மக்கள் இடையே ஒரு விடியல் உதயம் ஆகிறது; பொது நாயகத்தின் அடித் தளங்கள் பலப் படுத்தவும் படுகின்றன!

இத் தகு சூழ் நிலைகளில்—-அவ நம்பிக்கைக் காரர்களால்தாம் அடங்கிக் கிடந்திட முடியும்; ஐயப் பாட்டு வாதிகளால்தாம் சோகத்தில் சுகம் கண்டிடவும் முடியும்!

இவர்கள்தாம் சிற்றுடைமையாளர்கள்; சிற்றுடைமைச் சிந்தனையாளர்கள்; இயன்மையா ? கூடுமையா ? பிழை படுத்தல் ஆகிடுமா ? என்று மாய்மைகளை விதைப்பதற்கு முற்படுபவர்கள்; கார்ல் பாப்பரின் வகையறாக்கள்!

ஸ்தாலினிச வாதிகளின் அரசு முதலாண்மையிலோ இத் தகைய போராட்டங்கள் எழுச்சி பெறுவது இல்லை என்பது வேறு விசயம்!

இனி, கார்ல் பாப்பரது மாயமான இயன்மையின் விளைவாகின்ற பான்மையினைச் சற்று நாம் பார்ப்போம்.

கார்ல் பாப்பரின் பான்மை

(1) பிழையாக்கும் இயன்மை என்பதுதான் எந்த ஒரு தேற்றத்தினதும் விஞ்ஞானத் தன்மையினை உரசிப் பார்த்திடத் தக்க அளவு கோல்!

(2) ஏனென்றால், எல்லாத் தேற்றங்களும் அரை-குறை ஆனவை!

(3) பிழை படுத்தப் பட முடியாத தேற்றம் என்று ஒன்று இருந்தால், அது மட்டும்தான் நல்ல விஞ்ஞானத் தேற்றம் ஆகிட முடியும்.

(4) ஆனால், பிழை படுத்தப் பட முடியாத முற்றான தேற்றம் என்பது ஒரு கற்பனை!

(5) பிழையாக்கும் இயன்மையினை ஏற்றுக் கொள்ளாதவர்கள்தாம் வல்லதிகாரிகள்!

(6) மார்க்சியத்தின் இயல்பான பிழையாக்கம்தான் ஸ்தாலினிசம்!

(7) எனவே, நமது அறிவு முயற்சிகள் அனைத்தும் பிழையானவை என்பது உறுதி!

(8) ஆக, மனித அறிவு மற்றும் வரலாற்றின் இயக்கம் அனைத்தும் பிழைகளின் இயக்கம்தான் ஆகும்.

இப் பொழுது, மார்க்சியப் பான்மையினைச் சற்று நாம் பார்ப்போம்.

மார்க்சியப் பான்மை

(1) நிலைவான உண்மையினையோ, அல்லது முற்றான அறிவினையோ என்றும் மனிதர்கள் எய்திட முடியாது!

(2) பொன்றாமையான மெய்மையினது இயக்கத்தின் ஒரு பொன்றிய கட்டம்தான் மனிதர்களின் வாழ்க்கை!

(3) எனவே, பொன்றிமையும் அரை-குறையும் ஆனதுதான் மனிதர்களின் அறிவு!

(4) அரை-குறை ஆனதுதான் மனிதர்களின் அறிவு என்ற போதிலும், அது பிழை ஆனது அல்ல!

(5) நமது அறிவின் சரித் தன்மையினை அல்லது பிழைமையினைச் செயற்பாடு மட்டும்தான் நிருபித்திட முடியும்.

(6) செயற்பாட்டின் விளைவுகளில் இருந்துதான் நமது அறிவினை நாம் வளப் படுத்திக் கொள்கிறோம்.

(7) எனவே, ஒவ்வொரு தேற்றத்தின் உள்ளும் அடங்கிக் கிடப்பது அதனை வளப் படுத்துகின்ற இயன்மை மட்டும்தான் ஆகும்.

(8) நமது நோக்கங்களை வடிவாக்குவது நமது அறிவு அல்ல; மாறாக, நலன்!

(9) வளப் படுத்தல்களின் நிகழ்ப்பாடாகத்தான் அறிவும், நலன்களின் மோதல்களாகத்தான் வரலாறும் இயங்கிக் கொண்டு வந்து இருக்கின்றன.

(10) பழைய பண்ணையச் சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு, அதனைப் புரிந்து கொண்டு இருந்த தேற்றக் காரர்களின் அறிவில் ஊடாடி நின்று கொண்டு இருந்த ‘பிழையாக்கும் இயன்மை ‘ அல்ல காரணம்; மாறாக, பழைய தொழில் நுட்பங்களின், அதாவது, உற்பத்தித் திறல்களின், புதிய வளர்ச்சிகள்தாம்—-வளமாக்கம்தான்—-காரணம்!

(11) ஸ்தாலினிசம் என்பது அரசு முதலாண்மை வாதம்; மார்க்சியம் என்பதோ மனித ‘உறவுகளின் விடுதலை ‘யினை முற்கூறுகின்ற மனித வாதம்!

கார்ல் பாப்பரின் முற்றான உண்மை

கார்ல் பாப்பரைப் பொறுத்த வரை, முற்றிலும் பிழைகளால் ஆனதுதான் நமது வாழ்க்கை! வரலாற்றின் இயக்கம் அனைத்தையும்—-வளர்ச்சி அனைத்தையும்—-பிழைகளின் இயக்கமாக மட்டும்தான் அவர் காண்கிறார். ஏனென்றால், அனைத்தும் அரை-குறை ஆனவை!

ஆனால், மார்க்சியத்தைப் பொறுத்த வரை, அரை-குறைகள் அனைத்தும் பிழைகள் அல்ல; எனவே, பிழையாக்கும் இயன்மை என்பன போன்ற போலிகளை அது புறம் தள்ளி விடுகிறது. நிறைவினை நோக்கிய அரை-குறையின் இயக்கத்தில் வளமைப் பாட்டினையும் வளர்ச்சியினையும் அது காண்கிறது.

எனவேதான், தேற்றம்-செயற்பாடு என்னும் நிலையில் இருந்தும் நலன்களின் தளங்களில் இருந்தும் வரலாற்றினை அது நோக்குகிறது.

இங்கே வேடிக்கை என்ன வென்றால், ‘முற்றான உண்மை ‘யினைக் கார்ல் பாப்பரின் வாதங்கள் முற்கருதுகின்றன என்பதுதான்! ஏனென்றால், முற்றான உண்மை என்பது மட்டும்தான், பிழையாக்கும் இயன்மை என்பதன் ஒரே அளவு கோலாக இருந்திட முடியும்!

முடிவாக

கார்ல் பாப்பரின் ‘திண்ணை ‘க் கட்டுரையினை மட்டும் எடுத்துக் கொண்டு கார்ல் பாப்பரை நான் எதிர் கொண்டு இருக்கிறேன்; அவரது பான்மையினைப் புரிந்து கொள்வதற்கு இது மட்டும் போதும் என்றும் எனக்குத் தோன்றுகிறது.

எனினும், கார்ல் பாப்பரின் நூல்களைப் படித்து இருக்கக் கூடியவர்களின் கருத்துகள்தாம் இங்கே முக்கியம்! இந்த வகையில், எனது பிழைகளைச் சுட்டிக் காட்டிட முன் வருபவர்களுக்கு எனது முன் கூட்டிய நன்றிகள்!

(முற்றும்)

(14-02-2005)

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்

கார்ல் பாப்பரின் வெங்காயம்-7

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

சோதிப் பிரகாசம்


ஆட்சித் தலைவர்கள்

எழுதப் படாத தாள் என்று உழவர்களின் மூளைகளைச் சித்தரித்து இருந்தார் மாவோ! ஆனால், உழவர்களின் கருத்துகளைத் தமது மூளையில் பதித்துக் கொண்டதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டு இருந்தவர்தாம் அவர்!

ஏனென்றால், அந்தந்த மக்களின் கருத்துகளுக்கு—-உள்ளக் கிடக்கைகளுக்கு—-நலன்களுக்கு—-வெளிப்பாடு நல்குபவர்கள்தாம் அவர்களின் தலைவர்கள் ஆவர். ஆனால், உழவர்களின் மூளைகளில் தமது கருத்துகளைத் தாமே எழுதி விட்டதாக மாவோவோ கற்பனை செய்து கொண்டு இருந்தார்; ‘முற்றான அறிவின் உறைவிடமாக ‘த் தமது மூளையை அவர் கருதிக் கொண்டும் இருந்தார்.

தமது கருத்துகளில் இருந்து வேறு பட்ட கருத்துகளை எல்லாம் அரை-குறையான கருத்துகளாக—-எனவே, பிழையான கருத்துகளாக—-மாவோ கருதியதால்தானே, ‘நூறு பூக்கள் மலரட்டும்! ‘ என்று சொல்லி, கரசியமாக ஆங்கு ஆங்கே பதுங்கிக் கிடந்து கொண்டு வந்து இருந்த எதிர்க் கருத்துகளை வெளியே கொண்டு வந்து, பின்னர் அவற்றை அவர் அழித்து ஒழித்து விடவும் நேர்ந்து இருந்தது!

புரட்சிகர உணர்மையினைத் தன்னியல்பாக உழைப்பாளர் வருக்கம் வளர்த்துக் கொண்டு விட முடியாது என்று கார்ல் காவுட்ஸ்கியை அடியொற்றி லெனின் கூறுகிறாரே, முற்றான உண்மையின்—- ‘முழுமையான புரட்சிகர உணர்மை ‘யின்—-உறைவிடமாகத் தம்மை அவர் கருதிக் கொண்டு இருந்ததுதானே, இதற்குக் காரணம்! இவை போன்ற கருத்துகளைப் பின்னர் அவர் மாற்றிக் கொள்ளவும் நேர்ந்து இருந்தது என்பது வேறு விசயம்!

நம் நாட்டு ஸ்தாலினிச வாதிகளோ, மார்க்சியம், லெனினிசம், புரட்சி, சுரண்டல், பருமை வாதம், கருத்து வாதம், தனி உடைமை, பொது உடைமை, என்று எல்லாம் ஒரு சில சொற்களை உச்சரிப்பதற்குத் தெரிந்து கொண்டு விட்டாலே போதும், ‘முற்றான உண்மை ‘யின் உறைவிடங்களாகத் தாங்கள் மாறி விட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள்; தங்கள் ‘பிறவி ஞானத்தை ‘ மற்றவர்களுக்கு எல்லாம் போதித்துக் கொண்டு வருவதற்கும் முற்பட்டு விடுகிறார்கள்.

எனினும், அறிவாளர்களின் ‘தேற்ற முறையான ‘ புரட்சிகர உணர்மை என்பதும் உழைப்பாளர் வருக்கத்தின் ‘செயற்பாட்டு முறையான ‘ புரட்சிகர உணர்மை என்பதும் ஒன்றானவை அல்ல என்பதுதான் இங்கே நமக்கு முக்கியம். ஏனென்றால், வருக்கங்களின் செயல் முறையான நடவடிக்கைகள் இல்லாமல், தலைவர்களின் கையால் ஆகாத தேற்றங்களினால் ஆகப் போவது எதுவும் இல்லை.

அதே நேரத்தில், அரை-குறை அறிவுக்கு வழிகாட்டிடத் தகுந்த ஒரு முற்றான அறிவின் உறைவிடமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளாமல் யாரும் தலைவர் ஆகி விட முடியுமா, என்ன!

இப்படித்தான், அரை-குறை அறிவினை ஏளனமாக நோக்குகிறார் கார்ல் பாப்பர்!

எனினும், கார்ல் மார்க்ஸைக் கொஞ்சம் அவர் அணுகிப் பார்த்து இருந்தால், பிழையாக்கும் இயன்மையில் அல்லாமல் ‘வளப் படுத்தும் இயன்மை ‘யில்தான் மனிதர்களின் வளர்ச்சி அடங்கிக் கிடக்கிறது என்பது அவருக்குக் கொஞ்சம் தெளிவு ஆகி இருந்து இருக்கும்!

குறையும் பிழையும்

அரை-குறையான அறிவு அனைத்தும் பிழையான அறிவுதான் என்று நாம் கூறி விட முடியுமா ? என்றால், முடியாது!

மனிதர்களுக்கு ஏன் பசி எடுக்கிறது ? உணவினை உண்டவுடன் அந்தப் பசி ஏன் அடங்கி விடுகிறது ? உடம்புக்கும் பசிக்கும் உணவிற்கும் இடையிலான நிகழ்ப்பாடு என்ன ? என்பனவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளாமல், பசித்தவுடன் உணவினை உண்டு தனது பசியினை ஆற்றிக் கொள்கின்ற ஒரு மனிதனின் அறிவு, அரை-குறை ஆனதுதான் என்பதில் ஐயம் இல்லை; ஆனால், பிழையானது அல்ல!

ஏனென்றால், பசியைப் பற்றிய அவனது கணிப்பு, செயற்பாட்டில் நிருபிக்கப் பட்டு இருக்கிறது. இதனால்தான், ‘கூழின் உண்மை அதனைக் குடிப்பதில் இருக்கிறது ‘ என்று ஏங்கெல்ஸ் எடுத்து உரைத்தார்.

‘தேற்ற முறையான அறிவின் ‘ நிருபணம் என்பது ‘அனுபவ முறையான செயற்பாட்டில் ‘ மட்டும்தான் கிடைத்திட முடியும் என்பதுதான் இதற்குப் பொருளும் ஆகும்.

‘அம்மா என்று தாயை விளிக்கின்ற பொழுது, அந்த ‘வரையறை ‘யை ஒரு குழந்தை அருத்தப் படுத்திக் கொள்வதற்கும் இப் பொழுது தாயாகி விட்ட ஒரு நங்கை அருத்தப் படுத்திக் கொள்வதற்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது அல்லவா ? எனினும், இந்த இருவரின் வரையறைகளும் சரியான வரையறைகளே ஆகும். ‘ (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று: பக்.234-35.)

ஏன், நேர்த்தியான அறிவினை எய்தியதன் பின்னர்தான் கருவிகளைச் செய்திட வேண்டும் என்று மனித இனம் கருதிக் கொண்டு வந்து இருந்தால், எந்த ஒரு தொழில் நுட்பமும் இன்று வரை வளர்ச்சி அடைந்து கொண்டு வந்து இருக்க முடியுமா ?

ஒவ்வொரு நாளும் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்ற மாற்றங்களை, முந்திய தொழில் நுட்பத்தின் பிழையாக்கமாகக் காண்பதில் தவறு இல்லை என்று நமக்குத் தோன்றிடலாம் என்ற போதிலும், அரை-குறையான முந்திய தொழில் நுட்பத்தின் வளமாக்கமாக அதனை நாம் கண்பதுதான் பொருத்தம் ஆகும். ஏனென்றால், முந்திய தொழின் நுட்பத்தினை நுகர்ந்து நாம் பயன் அடைந்து இருக்கிறோம்.

ஆக, தேற்றத்தில் அல்லாமல் செயற் பாட்டில்தான், விஞ் ஞானம் நிருபிக்கப் படுகிறது என்பதும் செயற்பாடுகளின் விளைவுகளில் இருந்துதான் அடுத்த கட்ட வளர்ச்சியினை எய்தி அது வளம் பெற்றிட முடிகிறது என்பதும் தெளிவு.

ஏனென்றால், ‘நேர்த்தியான அறிவு ‘ என்று ஒன்று என்றும் இருந்திடவே முடியாது.

நேர்த்தியான அறிவு

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், ‘அறிவின் தேற்றம் ‘ என்னும் ஓர் ஆங்கில நூலை நான் படித்தேன்; அதன் ஆசிரியர் பெயர்தான் என் நினைவில் இல்லை.

‘ ‘நேர்த்தி என்பது நமது கற்பனை; அப்படி ஒன்று மெய்மையில் இல்லை; எடுத்துக் காட்டாக, நேர்த்தியான வட்டம் எதுவும் மெய்மையில் இல்லை; எனினும், நேர்த்தியான ஒரு வட்டத்தை நாம் வரைந்து கொள்கிறோம்; பின்னர், அதனை ஓர் அளவு கோலாகக் கொண்டு, கால் வட்டம், அரை வட்டம், முதலியவற்றை நாம் புரிந்தும் கொள்கிறோம். நமது கரணிய முறையான (rational), அல்லது தருக்க முறையான (logical) சிந்தனையின் விளைது இது ‘ ‘ என்று அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.

இங்கே, முதலாண்மைச் சமுதாயம் பற்றிய கார்ல் மார்க்சின் கருத்துகளை நாம் எடுத்துக் கொள்வோம். முற்றான முடிவுகள் என்றும் நேர்த்தியான கணிப்புகள் என்றும் அவரது கருத்துகளை நாம் எடுத்துக் கொண்டு விட முடியுமா ? என்பதனைச் சற்று நாம் பார்ப்போம்.

கார்ல் மார்க்ஸ்

முதலாண்மைச் சமுதாயத்தை ஆராய்ந்திடத் தொடங்கிய கார்ல் மார்க்ஸ், ஓர் எடுத்துக் காட்டாகக் கொண்டு இருந்தது இங்கிலாந்தைதான்! எனினும், தனது சாயலில் ஓர் உலகத்தையே முதலாண்மை படைத்திடப் போகிறது என்றும் அவர் கூறி இருந்தார். அதே நேரத்தில், ஒரே ஒரு கை மாற்று உறவில் இருந்து—-ஒரே ஒரு முதலாளி-உழைப்பாளி உறவில் இருந்தும் கூட—-இதனை அவர் முற்கூறி இருந்து இருக்கவும் முடியும்.

இங்கே, தமது சாயலில் ஓர் உலகைத்தைப் படைத்திடப் போகிறது என்று முதலாண்மையைப் பற்றிக் கார்ல் மார்க்ஸ் முற்கூறி இருந்தது பொய் ஆகி விட்டது என்று நாம் கூறி விட முடியுமா ? என்றால், முடியாது! அதே நேரத்தில், பழைய சமுதாய அமைப்புகளை எல்லாம் அழித்து ஒழித்து விடும் என்று முதலாண்மையைப் பற்றி அவர் முற்கூறி இருந்த கணிப்புகள் அப்படியே நிறைவேறி விட்டனவா ? என்றால், அதுவோ இல்லவே இ ல்லை!

ஏனென்றால், பழைய பண்ணைய (feudal)ச் சமுதாயத்துடன் முதலாண்மை இணங்கிச் செல்வதை நாம் பார்த்து இருக்கிறோம். சிற்றுடைமை யாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ‘அரசு-முதலாண்மை ‘யாக அது வளர்ந்து கொண்டு வந்து இருப்பதையும் நாம் பார்த்து இருக்கிறோம். இதனால்தான், எதிர்ப் புரட்சிக் காரர்களாக முதலாளர்கள் மாறி விட்டு இருந்தனர் என்று கார்ல் மார்க்ஸ் கூட கருத்துக் கூறிடவும் நேர்ந்து இருந்தது.

இங்கே, கார்ல் மார்க்சின் ‘கணிப்பு ‘ப் பிழையாகி விட்டது என்பது உண்மைதான்! இதற்காக, அவரது ‘தேற்றமும் ‘ பிழையாகிப் போய் விட்டது என்று நாம் கூறி விட முடியாது. ஏனென்றால், இங்கே பிழை படுத்தப் பட்டு இருப்பது அவரது கணிப்பு மட்டும்தான் ஆகும். இந்தப் பிழைகளைக் களைந்து அடுத்த கட்டத்திற்கு மார்க்சியத்தை வளர்த்துக் கொண்டு செல்வது அடுத்த தலைமுறையினரின் பணியும்தான் ஆகும்.

ஏனென்றால், ‘அறிவின் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து நாம் சென்று கொண்டு இருக்கின்ற பொழுது, ‘அறிஞன் ‘ என்று கொட்டை எழுத்துகளில் எழுதி நமது நெற்றியில் நாம் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்குத் தோன்றிடலாம் என்ற போதிலும், அறிவின் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்திட நாம் முற் படுகின்ற பொழுது நம்மை வரவேற்பது, ‘மூடனே, வருக! ‘ என்னும் குரல்தான்!

நாமாக எழுதி ஒட்டிக் கொண்டு இருந்த அறிஞன் பட்டத்தைக் கிழித்து எறிந்து விட்டு, நம்மை வரவேற்று நிற்கின்ற மூடன் பட்டத்தை நமது நெற்றியில் நாம் ஒட்டிக் கொள்ளாமல், அறிவின் அடுத்த கட்டத்தைக் கடந்து சென்றிட நம்மால் முடிவது இல்லை. மூடன் பட்டத்தை இப்படி ஒட்டிக் கொள்ள மறுப்பவர்கள், அறிஞன் பட்டத்துடன் அறிவின் முந்திய கட்டத்திற்கு வேண்டும் என்றால் திரும்பிச் சென்று விடலாமே ஒழிய, அறிவின் அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்து சென்றிட முடியாது! ‘ (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு; பக்.229.)

மார்க்சும் ஏங்கெல்சும்

முதலாண்மையை அழித்து ஒழித்து விட்டு ஆட்சியை அமைத்துக் கொள்கின்ற உழைப்பாளர் வருக்கம், ஒரு வல்லதிகார ஆட்சியினை அமைக்கும் என்று மார்க்சும் ஏங்கெல்சும் கூறுகின்றனர்.

ஆனால், ஒரு வல்லதிகார ஆட்சியாக உழைப்பாளர் வருக்கத்தின் ஆட்சி இருந்திட வேண்டுமா ? அல்லது ஒரு பொது நாயக ஆட்சியாக அது இருந்திட வேண்டுமா ? என்னும் முடிவினை, ஆட்சி அமைத்து ஆளப் போகின்ற உழைப்பாளர் வருக்கம் முடிவு செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுவதற்கு அவர்களுக்குத் தோன்றிட வில்லையே, ஏன் ?

ஆட்சியினை அமைத்திடக் கூடிய ஒரு வருக்கத்திற்கு, எப்படி அந்த ஆட்சி இருந்திட வேண்டும் என்று முடிவு எடுத்திட முடியாமல் போய் விடுமா, என்ன! எனினும், மார்க்சும் ஏங்கெல்சும் முந்திக் கொள்கிறார்கள்—-எதிர் கால உழைப்பாளர்களின் ஆட்சிக்கு வழி காட்டுகின்ற ‘நல் எண்ணத்தில் ‘!

ஈரோப்பை ஒரு புதிய பூதம் பிடித்து ஆட்டி வைத்திடப் போகிறது என்று உலகையே அச்சுறுத்திய வண்ணம் தங்கள் பொதுமைக் கட்சியின் அறிக்கையினை வெளியிட்டு இருந்த மார்க்சிற்கும் ஏங்கெல்சிற்கும், எல்லோரையும் முந்திக் கொண்டு சில விளைவுகளையும் முற்கூறிட வேண்டும் என்னும் ஆர்வம் ஏற்பட்டு இருந்ததில் வியப்பு இல்லைதான்! சீடர்களின் எண்ணிக்கை அதிகமாகி, குரு பீடத்தில் அமர்த்தி வைக்கப் படுகின்ற பொழுது, எல்லாக் குருக்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடிய ஓர் ஆர்வக் கோளாறுதான் என்றும் இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், துணிவமான இந்த ஆர்வக் கோளாறோ, ஸ்தாலினிசத்திற்கு ஆதரவான—-அதே நேரத்தில், மார்க்சியத்திற்கு எதிரான—-ஒரு கணிப்பாகத்தான் பயன்பட்டிட முடிந்தது—- இன்றும் கூட!

ஏனென்றால், ‘அதிகார வருக்கத்தின் ‘ வல்லதிகாரத்தை ‘உழைப்பாளர் வருக்கத்தின் ‘ வல்லதிகாரமாகவும்—- ‘அரசு முதலாண்மை ‘ப் பொருளாதாரத்தைச் ‘சமுகாண்மை ‘ப் பொருளாதாரமாகவும்—-பொதுமை வாதிகள் புரிந்து கொண்டு மலங்கிப் போவதற்குதான் இந்த ஆர்வக் கோளாறு பயன் பட்டு வந்து இருந்தது.

பொது ‘உடைமை ‘ அல்ல, மாறாக, அதன் அழிவின் அடிப்படையில் கொள்ளப் படுகின்ற ‘உறவு ‘தான், பொதுமைச் சமுதாயத்தினைக் குணவரைப் படுத்திட முடியும் என்னும் தெளிவு மார்க்சிய வாதிகள் இடையே ஏற்படாமல் போய் இருப்பதற்குக் கூட இவர்களின் ஆர்வக் கோளாறுதான் காரணம்!

எப்படியும், முதலின் ஒன்றாம் பாகத்தினைக் கார்ல் மார்க்ஸ் எழுதி முடித்து இருந்த காலத்தில்—-பாரிஸ் கம்யூனினின் வீழ்ச்சிக்குச் சற்றுப் பின்னர் இருந்தே—-மார்க்சியம் பக்குவப் படத் தொடங்கி இருந்தது எனலாம்.

அரசு-முதலாண்மை

பொதுமைக் கட்சியின் அறிக்கையினைச் சற்று நாம் பார்ப்போம்.

ஆட்சியைக் கைப் பற்றிய உடன் உற்பத்தித் திறல்கள் அனைத்தையும் உழைப்பாளர் வருக்கத்தின் அரசு நடுமைப் படுத்தி விடும் என்று மார்க்சும் ஏங்கெல்சும் கூறுகின்றனர். சோவியத் ருஷ்யாவில் என்னவோ இதுதான் நடந்தும் முடிந்து இருந்தது. எனினும், கார்ல் மார்க்ஸ் வலியுறுத்தி இருந்த தனி மனித விடுதலையைத்தான் யாரும் அங்கு காண்பதற்கு முடிய வில்லை—-அரசு முதலாண்மையின் அடக்கு முறையினைத் தவிர!

அப்படி என்றால், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் கணிப்புப் பிழையாகிப் போய் விட்டது என்பதில் ஐயம் இல்லைதான்! அதற்காக, இந்தப் பிழையைப் புரிந்து கொண்டு மார்க்சியத்தை யாரும் வளப் படுத்திட முடியாது என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமா ?

‘சமுகாண்மையின் கூறுகளாக மூன்று நிகழ்வரங்களை (factors) …. மார்க்ஸ் வலியுறுத்திக் கூறுகிறார். ஒன்று: உணர்மை முறையான உழைப்பு; இரண்டு: பொதுவிலான உற்பத்திச் சாதனங்கள்; மூன்று: விடுதலையான தனி மனிதர்கள்!

முதலாண்மை நிகழ்வரங்களுடன் இந்த நிகழ்வரங்களை ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது, முதலாண்மைக்கு அடுத்ததாக வந்திடக் கூடிய புதிய சமுதாயத்தின் தன்மையினை நாம் புரிந்து கொள்வது ஒன்றும் நமக்குக் கடினம் அல்ல.

கூலி உணர்மையுடனும் ஆதாய உணர்மையுடனும் உற்பத்தியில் இன்று ஈடு பட்டு வருகின்ற மனிதர்கள், உற்பத்தி உணர்மையுடன் உழைப்பில் ஈடுபடுதல்; தனி உடைமை அடிப்படையில் இன்று அமைந்த உற்பத்தி உறவுகள், பொதுமை அடிப்படையில் ஏற்படுத்திக் கொள்ளப் படுதல்; உறவுகளில் விடுதலை இல்லாத தனி மனிதர்கள்—-சரக்குகளின் மூலமாக மட்டும் தங்களுக்குள் உறவுகளை இன்று ஏற்படுத்திக் கொண்டு வருகின்ற தனி

‘c1னிதர்கள்—-தங்கள் உறவுகளையும் விடுதலையாக ஏற்படுத்திக் கொள்ளுதல்; ஆகியவை, சமுகாண்மை நிகழ்வரங்களாக இங்கே நமக்கு வெளிப் படுத்தப் பட வில்லையா ? ‘ (வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு, பக். 228.)

இந்த அடிப்படையில்தான் மார்சியத்தை நாம் வளப் படுத்திக் கொள்கிறோம்—- ‘விடுதலையான தனி மனிதர்களின் விடுதலையான உறவு ‘களின் தொகுப்புதான் பொதுமைச் சமுதாயம் என்று! அதே நேரத்தில், அரசு-முதலாண்மையின் அடக்கு முறையில் இருந்து நாம் தெரிந்து கொண்டு இருக்கின்ற செயற்பாட்டு முறையான ஒரு படிப்பினையின் விளைவுதான் இதுவும் ஆகும்!

ஏனென்றால், பிழையான கணிப்புகளினால் மட்டும் ஒரு தேற்றம் பிழை பட்டுப் போவது இல்லை; வெறும் சிந்தனையின் மோதல்களாக மட்டும் புதிய அறிவு-வளர்ச்சி ஏற்பட்டு விடுவதும் இல்லை.

செயற்பாடு

‘நேருரை (thesis) என்றும் எதிருரை (antithesis) என்றும், ஒரு சில கருத்துகளைப் பிற சில கருத்துகளுடன் மோதிப் பார்ப்பதன் மூலம் வடிவாக்கப் படுகின்ற துணிபுரைகள்தாம் (synthesis) புதிய சிந்தனைகள் என்கின்றது ஒரு பிழையான கருத்து, சிந்தனை யாளர்கள் இடையே பரவலாகப் பதிந்து போய்க் கிடக்கிறது.

இத் தகு மோதல்களின் இடையே இருந்து, வெறும் சிந்தனையினால் மட்டும் தீர்த்திட முடியாத சிக்கல்கள் எழுந்து வருகின்ற நேரங்களில், ஐயப்பாட்டு வாதச் சிந்தனைகளை அவர்கள் வடிவு ஆக்குகிறார்கள்; மனிதனுக்கு விடிவே இல்லை என்கின்றது ஒரு ‘சோர்வு வாதமாக ‘ இந்த ஐயப்பாட்டு வாதம் வாழ்க்கையில் வெளிப் படுகிறது.

ஆனால், மனிதர்கள் மேற்கொள்ளுகின்ற செயற்பாடுகளின் ‘வெற்றி ‘ மற்றும் ‘தோல்வி ‘கள்தாம், ‘நேருரை ‘யாகவும் ‘எதிருரை ‘யாகவும் மோதி நின்று, சிந்தனையினை வளர்க்கின்றன என்பதையும் சிந்தனையினால் தீர்த்து வைத்திட முடியாத மெய்ப்பொருண்மைச் சிக்கல்கள் எல்லாம், புதிய செயற்பாடுகளின் மூலமாக மட்டும்தான் தீர்த்திடப் பட முடியும் என்பதனையும், மிகவும் எளிதாக இவர்கள் மறந்து விடுக  2றார்கள்.

எனவேதான், ‘எல்லாச் சமுதாய வாழ்க்கையும், சாரத்தில் செயற்பாட்டு முறையானவை; தேற்றங்களை மாய வாதத்திற்குள் உந்தித் தள்ளுகின்ற புதிர்கள் அனைத்தும், மனிதர்களின் செயற் பாட்டிலும் இந்தச் செயற் பாட்டினைப் புரிந்து கொள்ளுவதிலும்தாம், கரணிய முறையான தமது தீர்வினைக் காண்கின்றன ‘ என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். (ஃபாயர்:பாக் பற்றிய 8-ஆவது நேருரை) மிகவும் சிந்தித்து நோக்கிட பே 5ண்டிய ஒரு கூற்று இது என்பது சொல்லாமலே விளங்கும்.

ஆக, ஐயப்பாட்டு வாதத்தின் கேள்விகளுக்குச் செயற்பாடு மட்டும்தான் சரியான விடைகளை இறுதியாக இறுத்திட முடியும் என்பதும், செயற்பாடுகளின் மூலமாக மட்டும்தான் சிந்தனை என்பது செழுமைப் பட்டிடவும் முடியும் என்பதும், யாரும் மறுத்து விட முடியாத உண்மைகள் ‘ (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு; பக்.99.) என்பது தெளிவு.

அப்படி என்றால், செயலுக்கும் முந்திய தேற்றத்தின் தன்மை என்ன ? என்பது கேள்வி.

(தொடரும்)

09-02-2005

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்

கார்ல் பாப்பரின் வெங்காயம்-6

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

சோதிப் பிரகாசம்


கடவுள் நிலை

‘பரம் பொருள் நிலை ‘ என்பது இப் பாலை ஆனது என்றால், ‘கடவுள் நிலை ‘யோ அப் பாலை ஆனது என்பதற்கு ஈண்டு விளக்கம் எதுவும் தேவை இல்லை. அதாவது, பரம் பொருள் நிலை என்பது மனிதர்களின் பாற் பட்டது என்றால், கடவுள் நிலை என்பதோ மனிதர்களுக்கு அப்பாற் பட்டது, அவ் வளவுதான்!

எனவே, முற்றான—-முழுமையான—-நேர்த்தியான—-நிலைவான—-ஓர் அறிவு நிலையினை நாம் எய்தி விட்டோம் என்னும் கூற்றிற்கு, நமது அறிவு வளர்ச்சி முற்றுப் பெற்று விட்டது என்றுதான் பொருள்! பொன்றாமையான அறிவினை (infinite knowledge) நாம் எய்தி விட்டோம் என்றும் இதற்குப் பொருள்!

இங்கே, காலம் கடந்த நிலை என்று—-எல்லை இல்லாத நிலை என்று—-முக் காலங்களையும் அறிந்து விட்ட நிலை என்று—-முற்றும் நிலைவும் ஆன அறிவு நிலை என்று—-சமய வாதிகள் கூறிக் கொண்டு வந்து இருக்கின்ற கருத்துகளின் உண்மையினை நாம் புரிந்து கொண்டு விட்டது போன்ற ஒரு மகிழ்ச்சி நமக்குள் ஏற்பட்டு விட வில்லையா ?

ஒளி மயமான ஒரு நிலை இது! முழுமையான ஒரு நிலை இது! அலைவு இல்லாத ஒரு நிலை இது! நிறைவின் நிலை என்பதும் இதுதான்!

அம்மம்மா, என்ன தவம் செய்து இருக்க வேண்டும், இந் நிலையினை நாம் எய்துதற்கு!

எனினும், இந்த நிலைக்குப் பின்னர் நமக்கு ஏற்படப் போவதோ அழிவுதான்—-பாழ் நிலைதான்!

ஏனென்றால், முழுமையான இந்த நிறைவிற்குள்—-பன்மையில் இல்லாத இந்த ஒருமைக்குள்—-வளர்ச்சியின் அவசியம் எதுவும் இல்லை; உண்மையும் இன்மையும் (being-nothing) ஆன முரண் நிலையில் இருந்து புதியது ஒரு நிலைக்கு மாறி (becoming) ஆக வேண்டிய உயிர்மை (spirit) இல்லை—-உயிர்த் துடிப்பும் இல்லை!

அதாவது,

இருள் இல்லாத ஒளி—-குறைவு இல்லாத நிறைவு—-அலைவு இல்லாத அமைதி—-இயக்கம் இல்லாத இறுக்கம்—-செயல் இல்லாத கிடப்பு—-விழிப்பு இல்லாத உறக்கம்

—-கனவு இல்லாத நனவு—-பதற்றம் இல்லாத தளர்வு!

அருணகிரி நாதரின் ‘பாழ் ‘ என்பது கூட இதுதானே!

ஆக, ‘முற்றான நிலை ‘ என்பது ஓர் ‘அழிவு நிலை ‘தான் என்பதில் ஐயத்திற்கு இடம் எதுவும் இல்லை. ஏனென்றால், வளர்ச்சிக்கு அவசியம் இல்லாத ஒரு நிலை அது!

இந்த நிலையினைத்தான் கார்ல் பாப்பர் தேடிக் கொண்டு இருந்து இருக்கிறார்; ஒர் ஐயப்பாட்டு வாதியாகவும் நமக்கு அவர் காட்சி அளிக்கிறார். ஏனென்றால், நிலைவான உண்மையினை எய்திட முடியாத மனிதர்களின் ‘இயலாமை வாதம் ‘தான் ஐயப்பாட்டு வாதம் என்பது ஆகும்!

முற்றான உண்மையும் மனிதர்களும்

முற்றான உண்மையினைக் கண்டு பிடித்துதான் ஆக வேண்டும் என்கின்ற முனைப்பு ஆதியில் இருந்தே மனிதர்களிடம் இல்லாமல் இருந்து இருக்க முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், முற்றான உண்மையினை நோக்கிய மனிதர்களின் நகர்வுதான் அவர்களது அறிவினைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டு வந்து இருக்க வேண்டும்.

இதனால்தான், அறிவைப் பற்றிய அவ நம்பிக்கைகளை—-எல்லாவற்றையும் மனிதர்களால் அறிந்து கொண்டு விட முடியாது என்னும் அவ நம்பிக்கைகளை—-அவர்கள் வளர்த்துக் கொண்டு வந்து இருக்க வில்லை எனலாம். ஏனென்றால், அரை-குறையில் இருந்து முழுமையை நோக்கி நகர்கின்ற ஒரு பயணமாகத்தான் அவர்கள் இடையே அறிவு வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டு வந்து இருக்கிறது.

அதே நேரத்தில், தங்கள் அறிவு வளர்ச்சியின் மேல் மனிதர்கள் வைத்துக் கொண்டு வந்து இருந்த—-வந்து இருக்கின்ற—-இந்த நம்பிக்கையின் காரணமாகத்தான், முற்றான உண்மையின் தேடலை அவர்களால் விட்டு விடவும் முடிய வில்லை போலும்!

எனவேதான், தங்கள் கனவுகளில் அதனை ஓர் அப் பாலைப் பொருளாக அவர்கள் சுமந்து கொண்டு வந்து இருக்கிறார்கள்.

ஆக, முற்றான உண்மையின் அப் பாலைத் தன்மைதான் கடவுள் என்று நாம் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை என்பது தெளிவு.

கடவுளும் பேய்களும்

பேய்களைப் படைத்தவர் கடவுளாக இருந்திட முடியாது என்பதில் ஐயம் இல்லை; அப்படி எந்த ஒரு மதமும் கூறுவதாக நமக்குத் தெரியவும் வர வில்லை. அதே நேரத்தில், ஆதி சங்கரரின் பரம் பொருளிலோ பேய்களுக்கு இடமே இல்லை!

எனினும், முற்றான உண்மையின் அப் பாலைத் தன்மைக்கு எதிரான ஒரு திறலாகத்தான் பேய்களைப் படைத்து மண்ணில் அவற்றை மனிதர்கள் உலவ விட்டு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இல்லை என்றால், கடவுளுக்கு எதிராகப் பேய்களை அவர்கள் உருவாக்கிக் கொண்டு வந்து இருப்பதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை. ஏனென்றால், முற்றான உண்மையினை எதிர்த்துப் போராடிக் கொண்டு வந்து இருக்கின்ற தீவிரவாதிகள்தாம் பேய்கள் ஆகும்; அறிவில் அரை-குறை ஆனவையும் ஆகும்.

இந்த முற்றான உண்மை நிலையினை எய்தி விட்ட கடவுள், அரை-குறையான அறிவினை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? எனவேதான், மனிதர்களின் அறிவு வளர்ச்சியினைக் கடவுள் விரும்பிட வில்லை என்று விவிலியம் சித்தரிக்கிறது போலும்!

தமது கட்டளையையும் மீறி ஒரு கனியினை உண்டு விட்டதற்காக ஆதாமையும் ஏவாளையும் தமது தோட்டத்தில் இருந்து கடவுள் அடித்துத் துரத்தி விட்டதாக விவிலியம் கூறுகிறதே, அந்தப் பழம் எந்தப் பழம் ? அறிவுப் பழம்தானே!

இதில் பேயின் பங்குதான் புரட்சிகரம் ஆனது. தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு மனிதர்களை அது தூண்டி விடுகிறது; கடவுளின் வல்லதிகாரத்தை விட்டு விலகி, விடுதலையாக அவர்களை அது நடமாட வைக்கிறது; அரை-குறையான அறிவைக் கொண்டும் மனிதர்களால் வாழ்ந்திட முடியும் என்னும் நம்பிக்கையினையும் அவர்களுக்கு அது ஊட்டுகிறது.

காலப் போக்கில், பேய்களின் வெற்றியில் கடவுளுக்குப் பொறாமை ஏற்பட்டு விட்டது போலும்! எனவேதான், அடுத்த கட்டமாக, மனிதர்களுக்கு உதவுவதற்கு அவரே முன் வருகிறார்; ஆண்டைகளின் அடக்கு முறைகளில் இருந்து அடிமைகளை விடுவிப்பதற்கும் அவர் முற் படுகிறார்.

இதற்காக, முற்றான அறிவின் உறைவிடமாக அவர் திகழ்ந்து கொண்டு வந்து இருப்பதை அவரால் மறந்து விட முடியுமா ?

மோயீசனைக் காண்பதற்காக வருகை தருகின்ற கடவுள், அவருக்கு ஒரு முள் செடியில் காட்சி அளிக்கிறார். தம் அருகே வருமாறு அவரை அழைக்கவும் செய்கிறார்; ஆனால், செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டுத்தான் தமது முன்னிலையில் அவர் வர வேண்டும் என்று மோயீசனுக்கு ஒரு கட்டளையினையும் கடவுள் விடுக்கிறார்.

மோயீசனின் காலில் முள் தைத்து விடுமே என்று அவர் கவலைப் பட வில்லை. கடவுளின் அதிகாரத்திற்குக் குறுக்காக மோயீசனின் கால் செருப்பு வந்து எப்படி நின்றிட முடியும் என்று எண்ணிப் பார்ப்பதற்கும் அவருக்குத் தோன்றிட வில்லை.

இப்படி, ஆண்டைகளின் அடக்கு முறைகளில் இருந்து அடிமைகளுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு முன் வருகின்ற கடவுள் கூட, ஓர் ஆண்டையைப் போலவே அடிமையிடம் நடந்து கொள்கிறார். ஏனென்றால், முற்றான உண்மைக்கு—-முற்றான அறிவிற்கு—-சொந்தக் காரர் அவர்!

முற்றான அறிவாக மாறி விட்டதன் பின்னர், அரை-குறை அறிவினைக் கடவுளால் எப்படி மதித்திட முடியும் ? இதனால்தான், தமக்கு மனிதர்கள் அடி பணிந்திட வேண்டும் என்றும் தம்மை அவர்கள் வழி பட்டிட வேண்டும் என்றும் கடவுள் எதிர் பார்க்கிறார் போலும்!

முற்றான அறிவின் உறைவிடங்களாகத் தங்களைக் கருதிக் கொண்டு வந்து இருக்கின்ற எத்தனையோ மனிதர்களின் வரலாறு இதற்குச் சான்று பகர்ந்து கொண்டு வந்து இருக்கிறது.

மனிதக் கடவுள்கள்

‘நானே வழியும் உண்மையும் ஆவேன் ‘ என்று கூறிய ஏசு, தமது உண்மையினை முற்றான ஓர் உண்மையாகக் கருதிட வில்லை போலும்!

இல்லை என்றால், ஒரு கன்னத்தில் அடித்தவர்களின் மறு கன்னத்தை அவர் பிய்த்து எறிந்து இருப்பார். தமது ஆதிக்கத்தை எதிர்க்கின்ற புரட்சி வாதிகள் அனைவரையும் குறுக்கத்தில் அறைந்து கொன்று புதைத்துக் கொண்டு வந்து இருப்பார். உயிர்த்து எழுந்து மீண்டும் யாரும் வந்து இருக்கவும் முடியாது.

ஹிட்லர் யார் ? ஸ்தாலின் யார் ? முற்றான உண்மையின் உறைவிடங்கள்தாமே!

இதனால்தான், எதிர்க் கருத்துகளை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. ஒரே ஓர் உண்மையாக நின்று கொண்டு, எதிர்க் கட்சிகளை அவர்கள் தடை செய்தார்கள்; எதிர்த்தவர்களை எல்லாம் கொன்று குவித்துக் கொண்டும் வந்தார்கள்!

முற்றான உண்மைக்கு ஆயுதங்கள் வேண்டும். ஏனென்றால், கொலைக் கருவிகளால் மட்டும்தாம் தன்னை அது பாது காத்துக் கொள்ள முடியும்.

இன்றோ, பல் வேறு மதங்களின் முற்றான உண்மைகளும் மோதிக் கொண்டு வருகின்றன. கொலை வெறியில் தங்கள் அடையாளங்களை நிலைநிறுத்திக் கொண்டும் அவை வருகின்றன.

முற்றான உண்மையின் ஏளனம்

முற்றான உண்மை என்பது முழுமை ஆனது; நேர்த்தி ஆனது; நிறைவு ஆனது! எனவே, முற்றான ஒரு தற் பெருமையில் அது திளைத்துக் கொண்டு வருவது தவிர்த்திடவும் முடியாதது! ஏனென்றால், அதற்குத் தெரியாதது எதுவும் இல்லை.

எனவேதான், அரை-குறை அறிவினைச் சுமந்து கொண்டு, கூடவே, பெருமை அடித்துக் கொண்டும் வருகின்ற அனைத்து மனிதர்களையும் இளக்காரமாக அது கருதுகிறது; ஏளனத்துடன் நோக்குகிறது; எள்ளி நகைக்கிறது.

ஏனென்றால், உண்மையின் உறைவிடம் அது; உச்சி மண்டையும் அதுதான்!

25

—-

25 ‘கோட்பாட்டாளர்களின் கூற்றுப் படி, வரலாற்று வளர்ச்சி அனைத்தும், அவ் அக் காலத்தின் மெய்ப் பொருண்மை யாளர்கள் மற்றும் சமய வாதிகளின் ‘மண்டைகளில் ‘ வடிவம் பெறுகின்ற …. தேற்ற முறையான நுண்மைப்பாடுகளினுள் அடங்கிக் கிடக்கின்றன. இந்த அனைத்து மண்டைகளையும் ‘ஒன்று கூட வைத்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்து, வாக்கெடுப்பு நடத்துவது ‘ முடியாதது என்பதால், புனிதமான மண்டை என்று ஒன்று இருந்தாக வேண்டும். இந்த மண்டைதான் மெய்ப்பொருண்மை மற்றும் மத வாத மண்டைகளின் உச்சம். இந்த உச்சி மண்டைதான் அனைத்து ‘மட மண்டைகளினதும் ‘ ஒன்றிப்பு—-பாது காவலர்! ‘ (மார்க்ஸ், ஜெர்மன் கோட்பாடு, பக்.561; வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு: பக்.70.)

—-

விளைவாக, அரை-குறை அறிவினை அது புறக் கணிக்கிறது; தனது காலில் விழுந்து மன்றாடும் படி பணிக்கிறது; பணிவில் நிறைவு அடைந்ததன் பின்னர் அதற்கு வழி காட்டிடவும் அது முன் வருகிறது.*

—-

*இப்படித்தான், தேர்தலும் நடை பெறாமல், யாரும் தேர்ந்து எடுக்கவும் படாமல், தட்டிக் கேட்பதற்கு எந்த ஓர் எதிர்க் கட்சியும் இல்லாமல், கட்சிக்குள் ஒரு பொது நாயகமும் இல்லாமல், ருஷ்யாவில் ஒரு வல்லதிகார முற்றாண்மை ஆட்சி அன்று நடை பெறத் தொடங்கி இருந்தது. ஏனென்றால், :போல்ஷவிக் கட்சியினைத் தவிரப் பிற எல்லாக் கட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக ருஷ்யாவில் தடை செய்யப் பட்டுக் கொண்டு வந்தன.

சரியான வழியில் மக்களைச் சரியாக வழி நடத்திடத் தக்க சரியான அறிஞர் ஒருவர், மிகவும் சரியாக உலகில் தோன்றி விட்டதன் பின்னர், வேறு பட்ட அறிஞர்களின் வேறு பட்ட கருத்துகளுக்கு உலகில் அவசியம் எதுவும் ஏற்பட்டு விட முடியாது அல்லவா!

ஆனால், அறிஞர்களின் அறிவை எல்லாம் உரசிப் பார்த்து உதறி எறிகின்ற வரலாற்றின் மெய்மையின் முன்னால், இந்த அறிவுப் பெட்டகங்கள் எல்லாம் எம் மாத்திரம் ? எனினும், இத் தகு ‘சரியான ‘ அறிஞர்களுக்கு மட்டும் நாட்டில் என்றும் பஞ்சம் ஏற்படுவது இல்லை போலும்! (வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு: பக்.138-39.)

—-

ஏனென்றால், எங்கும் எதிலும் அது காண்பது பிழைகளைத்தாம்—-அரை-குறை அறிவின் பிழைகளை!

இப்படி ஒரு மன நிலையில் நின்று கொண்டுதான் ‘பிழையாக்கும் இயன்மை ‘யைப் பற்றிக் கார்ல் பாப்பர் பேசுகிறார் என்றால் அது மிகை ஆகாது.

ஆனால், ‘தேற்றம்-செயற்பாடு ‘ என்னும் கோணத்தில் இதனை நாம் நோக்கிடுவோம் என்றால், இவை போன்ற மாயச் சிந்தனைகளுக்குத் தேவையே இருந்து இருக்காது என்பதுதான் உண்மை!

மீண்டும் கார்ல் பாப்பருக்கு நாம் வருவோம்.

எல்லைக் கோடு

Thus the problem which I tried to solve by proposing the criterion of falsifiability was neither a problem of meaningfulness or significance, nor a problem of truth or acceptability. It was the problem of drawing a line (as well as this can be done) between the statements, or systems of statements, of the empirical sciences, and all other statements – whether they are of a religious or of a metaphysical character, or simply pseudo-scientific.

Years later – it must have been in 1928 or 1929 – I called this first problem of mine the ‘problem of demarcation. ‘ The criterion of falsifiability is a solution to this problem of demarcation, for it says that statements or systems of statements, in order to be ranked as scientific, must be capable of conflicting with possible, or conceivable, observations என்று கூறுகிறார் கார்ல் பாப்பர். அவரைக் கொஞ்சம் புரிந்து கொள்வதற்கு நாம் முயல்வோம்.

பிழையாக்கும் இயன்மை என்னும் தமது அளவு கோலின் மூலம் கார்ல் பாப்பர் சாதித்திட விரும்பி இருந்தது எதனை ? விஞ் ஞானத்தின் பொருள் பொதிந்த தன்மையினையா ? அல்லது அதன் தனிச் சிறப்பினையா ? இல்லை!

உண்மையின் பிரச்சனையினையா ? அல்லது அதன் ஏற்பு உடைமையினையா ? இல்லவே இல்லை!

மாறாக, பல் வேறு கூற்றுகளுக்கும் இடையே ஓர் எல்லைக் கோட்டினை வரைவதுதான் அவரது நோக்கம்—-அனுபவ விஞ் ஞானங்களாக அவை இருந்தாலும் சரி; சமயம் மற்றும் மறை பொருள் வாதங்களாக அவை இருந்தாலும் சரி; அல்லது, வெறுமனே போலியான விஞ் ஞானங்களாக அவை இருந்தாலும் சரி!

நான் எடுத்துக் கொண்டு இருந்த பிரச்சனையை எல்லைக் கோடு பற்றிய ஒரு பிரச்சனையாக 1928-29 வாக்கில் நான் குறிப்பிட்டு இருந்தேன். எல்லை கட்டுகின்ற இந்தப் பிரச்சனையின் தீர்வுதான் பிழையாக்கும் இயன்மை என்பதும் ஆகும். விஞ் ஞான முறையானது என்று எந்த ஒரு கூற்றினையும் நாம் தரப் படுத்திட வேண்டும் என்றால், நாம் எதிர் பார்த்து இருக்கக் கூடிய விளைவுகளுடன் மோதுவதாக அது இருந்திட வேண்டும்—-கார்ல் பாப்பர் கூறுகிறார்.

ஆக, விஞ் ஞானத்திற்கும் அஞ் ஞானத்திற்கும் இடையே ஓர் எல்லைக் கோட்டினை வரைந்து விடுகின்ற பிரச்சனைதான் கார்ல் பாப்பரின் பிரச்சனை என்பது தெளிவு. இந்த எல்லைக் கோட்டினை வரைவதற்காக அவர் கண்டு பிடித்து அளித்து இருக்கின்ற ஓர் அளவுகோல்தான் ‘பிழையாக்கும் இயன்மை ‘ என்பதும் ஆகும்.

ஆனால், அரை-குறை அறிவின் முடிவுகள் அனைத்தும் பிழைகள்தாம் என்று நாம் கூறி விட முடியுமா ? என்பதுதான் கேள்வி!

(தொடரும்)

04-02-2005

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்

கார்ல் பாப்பரின் வெங்காயம்-5

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

சோதிப் பிரகாசம்


ஐன்ஸ்ட்டான் நிருபித்து இருப்பது என்ன ?

ஐன்ஸ்ட்டானது தேற்றத்தின் பதிப்பமான (impressive) விசயம் அதன் முற் கூற்றில் அடங்கி உள்ள துணிவம்தானாம்! அது முற் கூறுகின்ற விளைவு ஏற்படாமல் இருந்து இருந்தால், தவறாக்கப் பட்டு அது இருந்து இருக்குமாம்! அதே நேரத்தில், ஏற்கனவே நாம் கவனித்துக் கொண்டு வந்து இருக்கின்ற விளைவுகளுக்கு ஏற்பு உடைய ஒரு தேற்றமாகவும் அது இல்லையாம்—-குறிப்பாக, ஐன்ஸ்ட்டானுக்கு முந்தியவர்கள் எதிர் பார்த்து இருக்கக் கூடிய விளைவுகளுக்கு!

ஏற்கனவே கார்ல் பாப்பர் சித்தரித்து இருந்த சூழ் நிலைகளில் இருந்து வேறு பட்ட ஒரு சூழலாம் இது! மிகவும் முரண் பாடான மனிதப் பழக்கங்களுக்குக் கூட ஏற்பு உடையனவாக அத் தேற்றங்கள் இருந்தனவாம்! இதனால், எந்த வகையான மனிதப் பழக்கத்தையும் கூட அவற்றிற்கு ஏற்பு உடையனவாக நாம் எடுத்துக் கொள்வதற்கு நேர்ந்து விடுமாம்!

இங்கே, ஐன்ஸ்ட்டானின் தேற்றத்தில் இருந்து மனிதர்களின் பழக்கங்களுக்குக் கார்ல் பாப்பர் தாவி இருப்பதை நாம் காண்கிறோம்.

அதே நேரத்தில், ஐன்ஸ்ட்டானுக்கு முந்தியவர்களின் தேற்றங்களில் அடங்கிக் கிடந்த பிழையாக்கும் இயன்மையினை ஐன்ஸ்ட்டானின் தேற்றம் நிருபித்து இருக்கிறது என்பதுதான் கார்ல் பாப்பருக்கு முக்கியம்!

இதன் விளைவுகளைச் சற்று நாம் பார்ப்போம்.

அறியும் ஆற்றல்

முந்திய ஒவ்வொரு தேற்றத்தையும் பிந்திய ஒவ்வொரு தேற்றமும் பிழையாக்கிக் கொண்டு வருகின்றன. இப் பிந்திய தேற்றங்களைப் பிழையாக்கிக் காட்டுகின்ற பல புதிய தேற்றங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கவும் செய்யும்.

இப்படி, பிந்திய ஒவ்வொரு தேற்றமும் முந்திய தேற்றங்களினது பிழையாக்கும் இயன்மையின் ஒரு நிருபணம்தான் ஆகிறது. அதாவது, பிழையாக்கும் இயன்மை என்பதுதான் ஒவ்வொரு தேற்றத்திற்கு உள்ளும் அடங்கிக் கிடக்கின்ற ‘நிலைவான உண்மை ‘ (eternal truth) என்று ஆகி விடுகிறது.

அப்படி என்றால், ஒவ்வொரு தேற்றமும் பிழையானது என்று பொருள்; அறிவாக நமது தலையில் நாம் சுமந்து கொண்டு வருபவை அனைத்தும் பிழைகள்தாம் என்று பொருள்! எனவே, எந்த உண்மையையும் முழுமையாக நாம் தெரிந்து கொள்ள முடியாது என்றும் பொருள்!

அப்படி என்றால், முழுமையாக எதையும் தெரிந்து கொள்ளுகின்ற ஆற்றல் மனிதனின் அறிவுக்கு இல்லை என்பதுதான் கார்ல் பாப்பரின் முடிவு என்பது தெளிவு. ஆக, ‘எதையும் நாம் அறிந்திட முடியாது ‘ என்பதுதான் நமது ‘அறிவு ஆற்றலின் ‘ உண்மை!

இப்படி, ஐயப்பாட்டு வாதத்தில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் கார்ல் பாப்பர்; அல்லது, அப்படி அவர் கருதிக் கொள்கிறார்.

ஐயப்பாட்டின் விளைவுகள்

எதையும் தெரிந்து கொள்ளுகின்ற ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்பதால், எவ் வளவுதான் முயன்று பார்த்தாலும் ‘உண்மை ‘யை நாம் கண்டு பிடித்து விட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நமது அறிவு முயற்சிகளைக் கை விட்டு விட்டு, உணர்ச்சிகளுக்கு உள்ளும் உணர்மங்களுக்கு உள்ளும் நாம் தஞ்சம் புகுந்து விடுவதுதான் நமக்கு ஏற்பு உடையது; மனிதனால் இயன்றிடக் கூடியதும் இதுதான்!

எனவே, கதை-கவிதைகளின் பரப்புகளில் பறந்து திரிந்து தங்களுக்குத் தேவையான அறிவினை மனிதர்கள் தேடிக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை—-கலை-இலக்கியம்தான் எல்லாம் என்கின்ற மன நிலையினை இன்று எய்தி விட்டு இருக்கின்ற கவிஞர் இன்குலாப்பைப் போல!

இப்படி எல்லாம் கூறுவதற்குக் கார்ல் பாப்பர் முற்படுகிறாரா ? இல்லையா ? என்பது நமக்குத் தெரிய வில்லை. ஆனால், இப்படித்தான் அவரை நம் நாட்டுச் சிந்தனையாளர்கள் புரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதிலோ ஐயமும் இல்லை.

அதே நேரத்தில், கார்ல் பாப்பர் தேடிக் கொண்டு இருப்பதோ முற்றான உண்மையை—-நிலைவான உண்மையைத்தான்—-ஆகும்.

சித்தர் பத்திர கிரியாரைப் போல,

‘அறிவை அறிவால் அறிந்தே அறியும் அறிவினை ‘த்

தேடிக் கொண்டு இருப்பவர் கார்ல் பாப்பர்!

வளப் படுத்தும் இயன்மை

பிழையாக்கும் இயன்மையைப் பற்றிப் பெரிதாகப் பேசுகின்ற கார்ல் பாப்பர், வளமாக்கும் இயன்மையைப் பற்றிப் பேசிட வில்லையே, ஏன் ?

தமக்கு முந்திய விஞ் ஞானிகளின் தேற்றங்களை எல்லாம் ஐன்ஸ்ட்டான் பிழையாக்கி விட்டு இருந்ததாகக் கார்ல் பாப்பர் கூறுகிறாரே, அவற்றை எல்லாம் ஐன்ஸ்ட்டான் வளப் படுத்தி இருந்ததாக எடுத்துக் கொள்வதற்குக் கார்ல் பாப்பரால் ஏன் முடிய வில்லை ?

ஏனென்றால், நேர் முறையான ஒரு நோக்கு அல்ல கார்ல் பாப்பரின் நோக்கு; மாறாக, எதிர் முறையான ஒரு நோக்கு!

இதனால்தான், நிலைவான உண்மையைக் காட்டிட முடியுமா ? என்னும் பான்மையில் அவரது ஐயங்கள் வெளிப் படுத்தப் பட்டு இருக்கின்றன. இல்லை என்றால், முந்திய உண்மைகளை வளப் படுத்திடக் கூடிய வாய்ப்புகள் என்ன ? என்னும் பான்மையில் அவரது கேள்விகள் வெளிப் படுத்தப் பட்டு இருந்து இருக்கும்.

பிழையாக்கும் இயன்மையும் வளமாக்கும் இயன்மையும்

ஒரு தேற்றத்தில், அதனைப் பிழையாக்கிக் காட்டுகின்ற இயன்மை இருந்திட வேண்டும் என்று கார்ல் பாப்பர் கருதுகிறார்.

இதனால்தான், அறிவைக் கொண்டே அறிவை அளந்து விடுகின்ற முற்றான அறிவு வாதியாக நமக்கு அவர் காட்சியும் அளிக்கிறார். அதாவது, ஒரு தேற்றத்திற்கு எதிராக இன்னொரு தேற்றத்தினைக் கொண்டு வந்து அவர் நிறுத்துகிறார்.

ஆனால், பிழையாக்கும் இயன்மை அடங்கிக் கிடப்பது ஒரு தேற்றத்தில் அல்ல! மாறாக, எந்த நிகழ்வினைப் பற்றி ஒரு தேற்றம் பேசுகிறதோ, அந்த நிகழ்வின் இயக்கத்தில்—-அதன் இயங்கு விதியில்! ஏனென்றால், எந்த ஒரு தேற்றத்தின் உள்ளும் அடங்கிக் கிடப்பது அதனை வளப் படுத்துகின்ற இயன்மைதானே ஒழியப் பிழை படுத்துகின்ற இயன்மை அல்ல!

எனினும், கார்ல் பாப்பரின் பிற கூற்றுகளையும் இங்கே நாம் பார்த்து விடுவது நல்லது.

கார்ல் பாப்பரின் பிற கூற்றுகள்

3. Every ‘good ‘ scientific theory is a prohibition: it forbids certain things to happen. The more a theory forbids, the better it is.

5. Every genuine test of a theory is an attempt to falsify it, or to refute it. Testability is falsifiability; but there are degrees of testability: some theories are more testable, more exposed to refutation, than others; they take, as it were, greater risks.

7. Some genuinely testable theories, when found to be false, are still upheld by their admirers – for example by introducing ad hoc some auxiliary assumption, or by reinterpreting the theory ad hoc in such a way that it escapes refutation. Such a procedure is always possible, but it rescues the theory from refutation only at the price of destroying, or at least lowering, its scientific status. (I later described such a rescuing operation as a ‘conventionalist twist ‘ or a ‘conventionalist stratagem. ‘)

இவற்றுள், 5 மற்றும் 7-ஆவது கூறுகளை நாம் விட்டு விடலாம்.

ஏனென்றால், பிழையாக்கும் இயன்மை, பரிசோதிக்கும் இயன்மை, தவறாக்கும் இயன்மை, ஆகிய வற்றைப் பற்றி மீண்டும் கார்ல் பாப்பர் பேசுகின்ற வெறும் மீட்பாடுகள்தாம் (repetition) அவை!

எனவே, அவரது 3-ஆவது கூறினை மட்டும் இங்கே நாம் எடுத்துக் கொள்வோம்.

கார்ல் பாப்பர் கூறுவது என்ன ?

A theory which is not refutable by any conceivable event is non-scientific என்று—-அல்லது, a theory must be refutable by a conceivable event in order to be a scientific one என்று—-கூறுகின்ற கார்ல் பாப்பர், மேலும் கூறுகிறார்—-every ‘good ‘ scientific theory is a prohibition: it forbids certain things to happen. The more a theory forbids, the better it is என்று!

நாம் எதிர் பார்த்திடக் கூடிய ஒரு நிகழ்ச்சியினால் தவறாக்கிடப் பட முடியாத ஒரு தேற்றம், அஞ் ஞானத் தன்மை வாய்ந்தது என்று கூறுகின்ற கார்ல் பாப்பர் ‘நல்ல ‘ ஒரு விஞ் ஞானத் தேற்றம் என்பது ஒரு விலக்கம் என்றும் வேறு சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்து விடுவதை அது தடுத்து நிறுத்தி விடுகிறது என்றும் கூறுவதை இங்கே நாம் காண்கிறோம்.

அப்படி என்றால், மூன்று வகையாகத் தேற்றங்களை அவர் வகைப் படுத்துகிறார் என்பது தெளிவு: (1) அஞ் ஞானத் தேற்றம் (2) விஞ் ஞானத் தேற்றம் (3) ‘நல்ல ‘ விஞ் ஞானத் தேற்றம்!

விஞ் ஞானத் தேற்றம் என்பது வேறு; நல்ல விஞ் ஞானத் தேற்றம் என்பது வேறு; என்று விஞ் ஞானத் தேற்றங்களை வகைப் படுத்திக் கொள்வதற்கு முயல்கின்ற கார்ல் பாப்பரது முயற்சிகளுக்கு அவரது குழப்பங்கள்தாம் காரணம் என்பதில் நமக்கு ஐயம் எதுவும் இல்லை!

ஏனென்றால், விஞ் ஞானம் என்று வந்து விட்டதன் பின்னர், நல்ல விஞ் ஞானம்; கெட்ட விஞ் ஞானம்; என்று அதனை வகைப் படுத்திப் பார்த்திட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இதனை விட, விஞ் ஞானம் என்றால் என்ன ? என்று வரையறுப்பதற்கு அவர் முயன்று இருந்தார் என்றால், தேற்றங்களை நாம் புரிந்து கொள்வதற்கு வசதியாக நமக்கு அது இருந்து இருக்கக் கூடும்.

முற்றான உண்மை (absolute truth)

விஞ்ஞான முறையான தேற்றம் என்பது ஒரு தடையாம்—-அது முற் கூறுகின்ற நிகழ்ச்சிகளைத் தவிர வேறு நிகழ்ச்சிகள் எவையும் நிகழ்ந்திட முடியாது என்கின்ற ஒரு தடையாம்!

அப்படி என்றால், தவறாக்கிடப் பட முடியாத தேற்றங்களும் உண்டு என்றும் அவையும் விஞ்ஞான முறையானவைதாம் என்றும் கார்ல் பாப்பர் நம்புகிறார் என்பது நமக்குத் தெளிவு ஆகிறது.

ஆனால், அதே நேரத்தில், தவறாக்கிடப் பட முடியாத ஒரு தேற்றம், அஞ் ஞான முறையானது என்றும், அதாவது, விஞ்ஞான முறையானது அல்ல என்றும், அதாவது, a theory which is not refutable by any conceivable event is non-scientific என்றும் அவர் கூறி இருக்கிறாரே, ஏன் ?

‘தவறாக்கும் இயன்மை ‘ என்பதுதான் ஒரு தேற்றத்தினது விஞ் ஞானத் தன்மையின் அளவு கோல் என்றால், ‘தவறாக்கிட இயலாமை ‘ என்பது எப்படி ஒரு ‘நல்ல ‘ விஞ் ஞானத் தன்மையின் அளவு கோல் ஆகி விட முடியும் ?

அப்படி என்றால், முற்றான உண்மையினை மனிதர்கள் எய்திட முடியும் என்று கார்ல் பாப்பர் நம்புகிறார் என்று பொருள்; ஒரு நிகழ்வின் முற்றான உண்மையினை வெளிப் படுத்திக் காட்டுகின்ற தேற்றம் மட்டும்தான் சிறப்பான ஒரு விஞ் ஞானத் தேற்றம் என்று அவர் கருதுகிறார் என்றும் பொருள்!

ஏனென்றால், தனது முற்கூற்றினைத் தவிர, வேறு பிற முற்கூற்றுகள் அனைத்தையும் அந்தத் தேற்றம் தடை செய்து விடுகிறது; ஒரே ஓர் உண்மையாகத் தன்னை மட்டும் அது நிலைநிறுத்தியும் கொள்கிறது. அதாவது, every ‘good ‘ scientific theory is a prohibition: it forbids certain things to happen.

எனவே, தவறாக்கும் இயன்மைக்கு அப்பாற் பட்ட தேற்றங்கள் மட்டும்தாம் ‘சிறப்பான விஞ்ஞானத் தேற்றங்கள் ‘ ஆகும்; மாறாக, தவறாக்கும் இயன்மைக்கு உட்பட்ட தேற்றங்களோ ‘பொதுப் படையான விஞ் ஞானத் தேற்றங்கள் ‘ மட்டும்தாம் ஆகும்.

ஆக, முற்றான உண்மையினைத்தான் கார்ல் பாப்பர் தேடிக் கொண்டு இருக்கிறார் என்பதும், எனவேதான், ‘பிழையாக்கும் இயன்மை ‘ என்னும் ஓர் ஏட்டுச் சுரைக் காயினை அவர் உருவாக்கிக் கொண்டு வந்து இருக்கிறார் என்பதும் தெளிவு.

நிலைவான உண்மை (eternal truth)

முற்றான உண்மை என்பதும் நிலைவான உண்மை என்பதும் ஒரு-பொருள்-கிளவிகள்தாம் என்பதில் யாருக்கும் ஐயம் இருந்திட முடியாது.

இந்த நிலைவான, அல்லது முற்றான உண்மையினைத்தான் கடவுள் என்று சமயங்கள் கருத்துப் படுத்திக் கொண்டு வந்து இருக்கின்றன. ஆதி சங்கரரின் பரம் பொருள் கொள்கை கூட, முற்றான உண்மையினை நோக்கி நகர்ந்திடக் கூடிய ஒரு கருத்தமைவுதான் எனல் வேண்டும்.

இதனால்தான், சிவனையும் விண்ணவனையும் கூட, ‘பரம் பொருள் ‘ என்பதற்குள் கொண்டு வந்து மனிதர்களுடன் அவர்களை அவர் சமன் படுத்தி விடுகிறார்.

எனவே, கார்ல் பாப்பர் தேடிக் கொண்டு இருக்கின்ற நிலைவான உண்மை என்பது புதியதும் அல்ல; யாரும் புரிந்து கொள்ள முடியாததும் அல்ல!

ஆனால், ‘முழுமை ‘, அல்லது ‘முற்று ‘ என்பதோ, ‘அழிவின் ‘ தொடக்கமாகத்தான் இருந்திட முடியுமே ஒழிய, நிலைவின் நீடிப்பாக அல்ல!

அதே நேரத்தில், தவறாக்கும் இயன்மை என்கின்ற அடிப்படையில் அல்லாமல், தேற்றம்-செயற்பாடு என்னும் அடிப்படையில் இதனை நாம் நோக்கிடுவோம் என்றால், நமது குழப்பங்களை எல்லாம் நாம் தவிர்த்திடவும் முடியும்.

இங்கே, ஏங்கெல்ஸைச் சற்று நாம் நாடிப் பார்ப்போம்.

ஏங்கெல்ஸ்

‘அனைத்தையும் விஞ்சிய செல்தகையும் உண்மையைக் கண்டு விட்ட முற்றான உரிமையும் வாய்ந்த சிந்தனை முடிவுகளுடன், ‘நிலைவான உண்மை ‘களின் மூலம் மட்டும்தான் இனிச் செயல் ஆற்றிட வேண்டும் என்கின்ற கட்டத்தை என்றாவது மனித இனம் எய்தி விட முடியும் என்றால், உள்ளுறைவான நிலையிலும் உண்மமான நிலையிலும், ‘அறிவாண்மை உலகின் பொன்றாமை ‘ என்பது தீர்ந்து போய் விட்ட கட்டத்தை அது எட்டி விட்டது என்றுதான் பொருள்! ‘ (ஏங்கெல்ஸ், டூரிங்கிற்கு எதிராக, மாஸ்கோ ஆங்கிலப் பதிப்பு, பக்.103.—-வாழ்க்கையின் கேள்விகள் (2002), பக்.66.) என்று ஏங்கெல்ஸ் கூறுகிறார்.

(1) அனைத்துச் சிந்தனைகளையும் அடித்து நொறுக்கி விட்டு, முற்றான உண்மையினைக் கண்டு பிடித்து விட்ட ஒரு முற்றான சிந்தனை! இந்த சிந்தனைக்கு மட்டும்தான் முழுமையான உரிமை! இப்படி ஒரு நிலையினை மனித இனம் எய்தி விடுகிறது.

(2) எனவே, அரை-குறையான உண்மைகளை எல்லாம் கணக்கில் நாம் எடுத்துக் கொண்டு இருக்க முடியாது. நிலைவான உண்மையை மட்டும்தான் நாம் மதிப்போம்; ஏற்றும் கொள்வோம்! ஏனென்றால், அறிவின் பொன்றாமையினை (infinity) நமது தலையால் நாம் அளந்து முடித்து விட்டோம்!

(3) இனிமேல், அரை-குறையான உண்மைகளை வைத்துக் கொண்டு நம்மால் செயல் ஆற்றிட முடியாது; நிலைவான உண்மையின் மூலமாக மட்டும்தான் நாம் செயல் ஆற்றிட முடியும்.

இப்படி ஒரு நிலையினை நாம் எய்தி விடுகின்ற பொழுது, ஒரு கடவுளாக நாம் மாறி விடுகிறோம் என்பதில் ஐயம் ஏது ?

எனவே, ஒரு கடவுளாகக் கொஞ்சம் நாம் மாறிப் பார்ப்போம்.

(தொடரும்)

01-02-2005

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்

கார்ல் பாப்பரின் வெங்காயம்-4

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

சோதிப் பிரகாசம்


முற்கூற்றுகளின் நிருபணம்

மகளுக்கு மணம் செய்து வைப்பது பெற்றவர்களின் கடமை மட்டும் அல்ல, தங்கள் சுமையினை அவர்கள் குறைத்துக் கொள்ளுகின்ற ஒரு வழியும் ஆகும். தங்கள் மகள்களின் திரு மணத்தினைப் பற்றி இப்படித்தான் நம் ஊர்ப் பெற்றோர்கள் நினைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது.

இந்த முயற்சியின் தொடர்ச்சியாகத் தங்கள் சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டு வருகின்ற அவர்கள், கோளியக் காரர்களையும் அணுகுகிறார்கள். வருகின்ற தை மாதத்தில் அவர்களின் மகளுக்குத் திரு மணம் நடந்தே தீரும் என்று கோளியக் காரர்களோ வருவது-உரைக்கிறார்கள்.

கோளியர்களது முற்கூற்றின் படியே அவர்கள்தம் மகளுக்குத் திரு மணம் நடந்து விடுகிறது என்று நாம் வைத்துக் கொள்வோம்.

கார்ல் பாப்பருக்கு உடனே கோவம் வந்து விடுகிறது; தங்கள் முற்கூற்றுகளைப் பரி சோதித்துப் பார்க்கின்ற இயன்மையினை அவர்கள் அழித்து விட்டார்கள் என்று ஓங்கிக் குரல் கொடுத்து அவர்களை அவர் பழிக்கிறார்; நம் ஊர்ப் ‘பகுத்தறிவுப் பகலவர்களும் ‘ அவருக்குக் கை தட்டுகிறார்கள்.

இங்கே, என்னத்தை அழித்து விட்டார்கள் கோளியர்கள் ? அழிப்பதற்கு அப்படி இதில் என்ன இருக்கிறது ?

ஒன்றும் புரிய வில்லை நமக்கு!

இப் பொழுது, கோளியக் காரர்களின் கணிப்பின் படி நமது பெற்றோர்களின் மகளுக்குத் திருமணம் நடை பெறாமல் போய் விடுகிறது என்று நாம் வைத்துக் கொள்வோம்.

கார்ல் பாப்பரின் மறு-வினை எப்படி இருந்திடக் கூடும் என்று நாம் எதிர் பார்ப்போம் ?

கார்ல் பாப்பர் மகிழ்ச்சி அடைவார் என்றுதானே! கோளியக் காரர்களை அவர் பழித்துத் தள்ளி விடுவார் என்றுதானே!

ஆனால், அதுதான் இல்லை!

கார்ல் பாப்பர் மகிழ்ச்சி அடைவார் என்பது உண்மைதான்; ஆனால், அவர்களை அவர் பழித்திட மாட்டார்; மாறாக, உண்மையான விஞ்ஞானிகள் என்று அவர்களை அவர் பாராட்டுவார்—-

4. A theory which is not refutable by any conceivable event is non-scientific. Irrefutability is not a virtue of a theory (as people often think) but a vice என்று!

அதாவது, a theory is scientific only if it is refutable (and is refuted!) என்று!

பிழையாக்கப் படுகின்ற பொழுதுதான், விஞ்ஞான முறையான ஒரு தேற்றத்தின் பாற் பட்டதாக, ஒரு முற் கூற்றினை நாம் கருதிட வேண்டும் என்றால், பலிக்காமல் போய் விட்ட காரணத்தினால்தான், நமது கோளியக் காரரின் கணிப்பு நிருபிக்கப் பட்டு இருக்கிறது என்று இங்கே பொருள் ஆகி விட வில்லையா ?

ஆனால், இப்படியே போனால் நமது கோளியக் காரர்களின் தொழில் படுத்து விடும் என்பதுதான் உண்மை. எனினும், அவர்களது நோக்கம் நிறைவேறி விட்டது; தங்கள் கட்டணத்தை அவர்கள் பெற்றுக் கொண்டும் விட்டார்கள்.

அதே நேரத்தில், இவ் அளவு எளிமையாகக் கார்ல் பாப்பரை நாம் புரிந்து கொள்ள முடியாது என்பதில் ஐயம் இல்லை. ஏனென்றால், அவர் கூறிடத் தவற வில்லை—-If observation shows that the predicted effect is definitely absent, then the theory is simply refuted என்று! அதாவது, ஒரு தேற்றத்தினால் முற்கூறப் பட்ட விளைவு ஏற்பட்டிட வில்லை என்கின்ற பொழுதுதான், அத் தேற்றம் பிழை படுத்தப் பட்டு நிற்கிறது என்று!

கார்ல் பாப்பரின் சிக்கல்

A theory which is not refutable by any conceivable event is non-scientific என்று கூறுகின்ற கார்ல் பாப்பர், If observation shows that the predicted effect is definitely absent, then the theory is simply refuted என்றும் கூறுகிறாரே, ஏன் ?

அதாவது, a theory is scientic only if it is refutable என்று கூறுகின்ற கார்ல் பாப்பர், a theory is proved only when the event predicted by it takes place என்றும் கூறுகிறாரே, ஏன் ?

ஒன்றில், ‘பிழையாக்கப் பட முடியாத எந்த ஒரு தேற்றமும் விஞ்ஞான முறையானது அல்ல ‘ என்னும் தமது கூற்றில் நிலைத்து அவர் நின்றிட வேண்டும்; அல்லது, ‘பிழையாக்கப் பட முடியாத ஒரு தேற்றம்தான் விஞ்ஞான முறையானது ‘ என்று அடித்துக் கூறுவதற்கு அவர் முன் வந்திட வேண்டும்.

அதை விட்டு விட்டு, ஓர் இரண்டும்-கெட்டான் கொள்கையாக தமது முடிவுகளை அவர் எடுத்து வைப்பது என்ன ஞாயம் ?

ஏனென்றால், பிழையாக்கப் பட்டு நிற்கின்ற ஒரு தேற்றம்—-விஞ்ஞான முறை ‘ஆனதா ? ‘ அல்லது ‘விஞ்ஞான முறை அற்றதா ? ‘ என்பதுதான் மையமான கேள்வி.

ஒரு வேளை, ‘பிழையாக்கம் ‘ என்பது வேறு; ‘பிழையாக்கும் இயன்மை ‘ என்பது வேறு; என்று அவர் கருதுகிறாரோ ? அல்லது, ‘தேற்றம் ‘ என்பதையும் அதன் அடிப்படையில் கணிக்கப் படுகின்ற ‘முற்கூற்று ‘ என்பதனையும் ஒன்றாகப் போட்டு அவர் குழப்பிக் கொள்கிறாரோ ?

ஒரு தேற்றத்திற்குள், அதனைப் பிழையாக்கிக் காட்டிடக் கூடிய இயன்மை அடங்கி இருக்கும் என்றால், அந்த இயன்மையினைப் பயன்படுத்தி அதனை நாம் பிழை ஆக்கிக் காட்டுகின்ற பொழுது, அந்தத் தேற்றத்தின் தன்மையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டு விடுவதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை. எனவே, இந்தக் கோணத்தில் கார்ல் பாப்பரை நாம் அணுகுவதற்கும் வாய்ப்பு இல்லை.

ஆனால், மறு வேளை, although a theory may be proved by the happening of the event predicted by it, it is still not scientific for, to be a scientific theory, it must be refutable at every point of time என்று கூறுவதற்குதான்—-ஒரு தேற்றம் முற்கூறுகின்ற ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்து முடிந்து விடுவதால் மட்டும், விஞ்ஞான முறையான ஒரு தேற்றமாக அது திகழ்ந்து விட முடியாது; ஏனென்றால், எந்தக் கணத்திலும் பிழையாக்கிடப் படக் கூடிய ஒரு தேற்றம் மட்டும்தான், விஞ்ஞான முறையான ஒரு தேற்றமாக விளங்கிட முடியும் என்று கூறுவதற்குதான்—-கார்ல் பாப்பர் முற்படுகிறாரோ ?

அப்படித்தான் என்றால் கூட, புதுமை என்று சொல்வதற்கு இதில் எதுவும் இல்லை—- புதிய பார்வையும் இல்லை; புதிய முயற்சியும் இல்லை!

முதலில், ‘முற் கூற்று ‘ என்பதன் முந்திய கட்டங்களைக் கொஞ்சம் நாம் எண்ணிப் பார்ப்போம்.

தேற்றம்-கணிப்பு-முற்கூற்று

முற்கூற்று என்பது ஒரு தேற்றம் அல்ல; ஒரு தேற்றத்தின் அடிப்படையில் கணித்துக் கூறப் படுகின்ற ஒரு முன்-மொழிவு மட்டும்தான் ஆகும்.

எனவே, ஒரு ‘முற்கூற்று ‘ பிழை பட்டுப் போய் விட்டது என்பதற்காக, அந்தத் ‘தேற்றமும் ‘ பிழை பட்டுப் போய் விட்டது என்று நாம் கூறி விட முடியாது. ஏனென்றால், பிழை பட்டு நிற்பது வெறும் ‘கணிப்பு ‘ மட்டும்தான் ஆகும்.

இப்படி, தேற்றம்—-கணிப்பு—-முற்கூற்று என்பதுதான் ‘கணிப்பு நிகழ்ப்பாட்டின் ‘ ஆதியும் அந்தமும் என்பதில் ஐயம் இல்லை.

இங்கே, ஒரு சில முற்கூற்றுகளை நாம் எடுத்துக் கொள்வோம்.

ஐன்ஸ்ட்டின்: ந்யூட்டன்

With Einstein ‘s theory the situation was strikingly different. Take one typical instance – Einstein ‘s prediction, just then confirmed by the finding of Eddington ‘s expedition. Einstein ‘s gravitational theory had led to the result that light must be attracted by heavy bodies (such as the sun), precisely as material bodies were attracted. As a consequence it could be calculated that light from a distant fixed star whose apparent position was close to the sun would reach the earth from such a direction that the star would seem to be slightly shifted away from the sun; or, in other words, that stars close to the sun would look as if they had moved a little away from the sun, and from one another. This is a thing which cannot normally be observed since such stars are rendered invisible in daytime by the sun ‘s overwhelming brightness; but during an eclipse it is possible to take photographs of them. If the same constellation is photographed at night one can measure the distance on the two photographs, and check the predicted effect.

கார்ல் பாப்பரின் கூற்று இது!

பருமையான உடலங்களைக் கனமான உடலங்கள் ஈர்ப்பது போலவே, அவற்றால் ஒளியும் ஈர்க்கப் படுகிறது என்பது ஐன்ஸ்ட்டானின் புவியீர்ப்புத் தேற்றமாம்! இதன் விளைவாக, சூரியனுக்கு அண்மையில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு வருகின்ற ஒளி, பூமியை அடைகின்ற பொழுது, அந்த நட்சத்திரம் கொஞ்சம் இடம் மாறி இருப்பதாக நமக்குத் தோன்றுமாம்! இந்தக் காட்சியை இருளில் படம் பிடித்துப் பார்த்து, இதனை நாம் தெரிந்து கொள்ளவும் முடியுமாம்! எடிங்க்ட்டனது பரிபயணத்தினால் ஒப்புறுதிப் படுத்தப் பட்டும் இது உள்ளதாம்!

சொ. கண்ணன்

ஐன்ஸ்ட்டானின் அணுக் கொள்கையைப் பற்றி முன்னர் ஒரு முறை எனக்கு இரண்டு மணி நேரம் பாடம் நடத்தி இருந்தவர் எனது நண்பர் சொ. கண்ணன்!

கார்ல் பாப்பரின் ‘திண்ணை ‘க் கட்டுரையைக் கையில் வைத்துக் கொண்டு திரு-திருவென நான் விழித்துக் கொண்டு இருந்த நேரம் பார்த்து, வெளியூர் சென்று இருந்த கண்ணன் சென்னை வந்து சேர்ந்தார். கார்ல் பாப்பரின் ‘திண்ணை ‘க் கட்டுரையைப் பற்றி அவரிடம் நான் கூறினேன்.

கார்ல் பாப்பர் குறிப்பிடுகின்ற ஈர்ப்புத் தேற்றம், ஐன்ஸ்ட்டானுக்கு மட்டும் உரியது அல்ல என்றும் ந்யூட்டனுக்கும் அது உரியது என்றும் கண்ணன் குறிப்பிட்டார்:

‘ஈர்த்தல் என்பது உண்மையா ? அல்லது விழுதல் என்பது உண்மையா ? என்பதுதான் மிகப் பெரிய கேள்வி! ‘

‘சரிதான், கண்ணன்! எனக்குத் தெரியாத விசயம் இது! எப்படி வேண்டும் என்றாலும் என்னை நீங்கள் குழப்பிக் கொள்ளலாம். ‘

‘என்ன பிரகாசம், நானா குழப்புகிறேன் ? விஞ் ஞானிகள் குழப்புகிறார்கள்! ‘

‘எப்படி ? ‘

‘பூமிக்கு வெளியே நிற்கக் கூடிய ஒரு தளத்தைக் காட்டுங்கள்; நெம்பு கோலால் பூமியை உருட்டிக் காட்டுகிறேன் என்றார் ந்யூட்டன்! ‘

‘ஏன் ? நிலவில் நின்று கொள்ள வேண்டியதுதானே ? ‘

‘ந்யூட்டன் கேட்டது பூமிக்கு அருகில் ஒரு தளம். ‘

நான் சிரித்தேன்: ‘விண் வெளியைக் கூறு போட்டு விற்று விடலாம் என்னும் நினைப்புப் போலும் அவருக்கு! ஆனால், நிற்பதற்கு இடம் கிடைத்தால் மட்டும் போதாது; நெம்பு கோலின் மறு முனையை ஊன்றிக் கொள்கின்ற வகையில் பூமிக்கு அடியிலும் ஒரு தளம் வேண்டும்! ‘

‘தேறி விட்டார்கள், பிரகாசம்! ‘

‘சரி, கண்ணன்! ஈர்த்தலா ? விழுதலா ? அதைப் பற்றிச் சொல்லுங்கள்! ‘

‘பருமையான உடலங்களைப் பருமையான உடலங்கள் ஈர்க்கின்றன என்று ந்யூட்டன் கூறுகிறார். அதே நேரத்தில், கோள் மண்டலங்களின் வளைவுகளுக்குள் பருமை உடலங்கள் விழுந்து விடுகின்றன என்பதுதான் ஐன்ஸ்ட்டானின் கருத்து என்று கருதுபவர்களும் உண்டு! ‘

‘கடவுளே! ‘

‘கிண்டல் அடிக்கின்ற விசயம் அல்ல இது! ‘

‘கோள்களின் எடையினால் கோள்களைச் சுற்றி உள்ள மண்டலங்களில் ஒரு வளைவு ஏற்படுகிறது. இந்த வளைவிற்குள் பருமை உடலங்கள் விழுந்து விடுகின்றன. ‘

‘விண் வெளியில் வளைவு! அப்படி என்றால், விண் வெளி என்பது ஒரு பருப் பொருளா ? ‘

‘அதுதான் கேள்வி!

‘நல்ல கேள்வி! மேல் இருந்து பார்த்தால் கீழே வளைவு; கீழ் இருந்து பார்த்தால் மேலே வளைவு! ‘

‘இந்தக் கீழ்-மேல் கதை எல்லாம் விண் வெளிக்குப் பொருந்தாது. ‘

‘சரி! விழுதல் என்பதும் ஓர் ஈர்ப்புதானே! ஈர்ப்பு இல்லாமல் விழுதலுக்கு அவசியம் என்ன ? ‘

‘நல்ல கேள்வி! இம் மாதிரியான ஆய்வுகளில் கேள்விகள்தாம் முக்கியம்! கேள்வி—-விடை—-கேள்வி என்றுதான் விஞ் ஞானம் வளர்ந்து கொண்டு வந்து இருக்கிறது. ஏங்கெல்ஸின் இயற்கையின் முரண் இயக்கத்தினைப் படிப்பது இல்லை என்று முன்னர் நீங்கள் முடிவு செய்து இருந்தீர்கள். இனியாவது படியுங்கள்! ‘

‘என்ன கண்ணன், கார்ல் பாப்பரை எப்படி நான் அணுகுவது ? ‘

‘நம் ஊர் எழுத்தாளர்களுக்கு இணைய தளம் என்றால் பெரிய விசயம்! ஏதாவது ஒரு புத்தகத்தைப் பற்றி யாராவது அதில் விளம்பரம் செய்து இருப்பார்கள்; அதைப் பற்றிச் சில குறிப்புகளையும் எழுதி இருப்பார்கள்! இதைப் படித்து விட்டு வாசகர்கள் இடையே பந்தா பண்ணுபவர்கள்தாம் இங்கே தீவிரமான எழுத்தாளர்கள், அவ் அளவுதான்! ‘

‘எழுத்தாளர்களை விடுங்கள் கண்ணன்! விசயத்திற்கு வாருங்கள்! ‘

‘எந்த விசயத்திற்கு, பிரகாசம் ? வேலைக்கு என்ன வழி ? சாப்பாட்டுக்கு என்ன வழி ? என்று அவனவன் திண்டாடிக் கொண்டு இருக்கிறான். இதில் சாதிச் சண்டை; மதச் சண்டை என்று வெறி பிடித்துப் போன மன நோயாளிகள் வேறு! இதுதான் இன்றைக்கு விசயம்! ‘

‘வசனத்தை விடுங்கள் கண்ணன்! கார்ல் பாப்பரின் கேள்விக்கு விடை என்ன ? ‘

‘கார்ல் பாப்பர் என்ன, விஞ் ஞானியா ? அவனவனுக்குத் தெரிந்த வேலையை அவனவன் பார்த்தால் போதும்! விஞ் ஞானத்தை விஞ் ஞானிகள் பார்த்துக் கொள்வார்கள். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்! ‘

கண்ணன் கூறுவதும் சரிதானே; நம் வேலையை நாம் பார்ப்போம்.

கடல் கோள்

26-12-2004 அன்று நிகழ்ந்த கடல் கோளினை நாம் எடுத்துக் கொள்வோம்.

கடல் கோள் நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகியும் கூட அந்தமானில் பூமி அதிர்வுகள் ஓய்ந்தபாடு இல்லையாம்! செங்குத்தாகவும் பக்க வாட்டிலும் இந்த அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றனவாம்! பக்க வாட்டில் ஏற்படுகின்ற பூமி அதிர்வுகள் இமய மலைத் தொடரிலும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்திடக் கூடுமாம்! விஞ் ஞானிகளுக்கோ இது திகைப்பாகவும் இருக்கிறதாம்—-தினத் தந்தி கூறுகிறது.

இதனைக் கார்ல் பாப்பர் நம்புவாரா ?

கடல் கோள் ஏற்படுவதற்கும் முன்னரே சென்னைக் கடற் கரைக் குடியிருப்புகளைக் காலி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து இருந்தால், அதனை மக்கள் நம்பி இருந்து இருப்பார்களா ? குடியிருப்புகளைக் காலி செய்துதான் இருப்பார்களா ?

நிச்சயமாக இல்லை!

மாறாக, போராட்டத்தில் அவர்கள் குதித்து இருப்பார்கள். கடற் கரைப் பகுதிகளைக் காலி செய்வதற்கு அரசாங்கம் செய்கின்ற சூழ்ச்சி என்றும் கூக் குரல் எழுப்பி இருப்பார்கள்.

இது மட்டுமா, கண்ணகி சிலையை அகற்றி விட்ட அரசாங்கம் குடியிருப்புகளையும் அகற்றுவதற்கு முயற்சி செய்கிறது என்று கூறி பல் வேறு கட்சிகளும் அமைப்புகளும் தமிழ்ப் புலவர்களும் ஆர்ப்பரித்திடவும் தொடங்கி இருந்து இருப்பார்கள்.

நமது கார்ல் பாப்பரோ, பிழை ஆக்கும் இயன்மை இதில் இருக்கிறதா ? இல்லையா ? என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கி இருப்பார். துணிவமான ஒரு முற் கூற்று என்றும் இதனை அவர் கணித்து வைத்து இருப்பார்.

எனினும், ஐன்ஸ்ட்டானின் தேற்றத்தைப் பற்றிப் பின் வருமாறு அவர் கூறி இருந்தது போல,

Now the impressive thing about this case is the risk involved in a prediction of this kind. If observation shows that the predicted effect is definitely absent, then the theory is simply refuted. The theory is incompatible with certain possible results of observation, in fact with results which everybody before Einstein would have expected. This is quite different from the situation I have previously described, when it turned out that the theories in question were compatible with the most divergent human behavior, so that it was practically impossible to describe any human behavior that might not be claimed to be a verification of these theories.

26-12-2004 அன்று மாலையிலும் அவர் கூறி இருந்து இருப்பார்—-

Confirming evidence should not count except when it is the result of a genuine test of the theory; and this means that it can be presented as a serious but unsuccessful attempt to falsify the theory; என்று!

மக்களோ மடிந்து மண்ணாகிப் போய் இருந்து இருப்பார்கள்!

இப் பொழுது, ஐன்ஸ்ட்டான் நிருபித்து இருப்பதாகக் கார்ல் பாப்பர் கூறுகின்ற கருத்துகளுக்கு நாம் வருவோம்.

(தொடரும்)

29-01-2004

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்

கார்ல் பாப்பரின் வெங்காயம்-3

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

சோதிப் பிரகாசம்


மாக்ஸ் முல்லர்

மாக்ஸ் முல்லரின் முடிவுகளில் சில மாறுபாடுகள் எனக்கு உண்டு என்ற போதிலும், அவரது அறிவாண்மைத் திறமையிலும் நேர்மையிலும் எனக்கு மாறுபாடு எதுவும் இல்லை.

இதற்கு ஓர் எடுத்துக் காட்டாக, fors fortuna என்னும் ஒரு தேவதையைப் பற்றிய அவரது ஆய்வினை நாம் குறிப்பிடலாம்.

Fors fortuna என்னும் தேவதையைப் பற்றிய மாற்றுக் கருத்துகளை வரலாற்று முறையாகவும் மொழி முறையாகவும் அவர் ஆராய்கிறார். கூடவே, இனி மேல் எழுந்து வந்திடக் கூடிய எதிர்க் கருத்துகளையும் கணக்கில் அவர் எடுத்துக் கொள்கிறார்.

இப்படி எடுத்துக் கொண்டு அவர் கூறுகிறார்—-

‘நன்மையை அல்லது தீய குறிகளைத் தினமும் கொண்டு வருகின்ற பரகாசமான டான் (dawn) என்பதற்கு ஃபார்ஸ் (fors) என்று பெயர் கொடுக்கப் பட்டு இருந்தது பொருத்தம்தான் ஆகும். ‘

‘ஏனென்றால், யாருக்கும் தெரியாதவள் இவள்—-என்ன தருவாள் இவள் என்று உறுதியாக யாரும் கூறி விடவும் முடியாது; வானத்தின் பரகாசமான ஆற்றல்களில் இருந்து முதலாவதாகப் பிறந்தவள் இவள்—-வானத்தின் மகளும் இவள்தான் ஆவாள்; அதே நேரத்தில், சூரியனின் தாய் இவள்—-இவளது பரகாசமான குழந்தையும் சூரியன்தான் ஆகும். ‘

‘ஃபார்ஸ் (fors) என்பதன் பொருத்தமான சொல் ஆய்வு இது. :கர் (ghar) என்னும் வேரில் இருந்து அல்லாமல், :பர் (bhar) என்னும் வேரில் இருந்துதான் இது பிறந்தது என்று எடுத்துக் காட்டுங்கள், எனது முடிவுகளை நான் மாற்றிக் கொள்கிறேன். ‘ என்று! (பார்க்க: F. Max Muller, Biographies of Words And The Home of the Aryas, Introduction (1987), pp.5-15, ஆரியர் வரலாறு: பாகம் இரண்டு (2003), பக்.211.)

இதுதான் ஆய்வுப் பான்மை என்பது! பகட்டுத் தனமோ வீண் பெருமையோ இல்லாத அறிவாண்மை நேர்மை என்பதும் இதுதான் ஆகும்.

உண்மையை உண்மத்தில் தேடிக் கொண்டு இருந்தவர் மாக்ஸ் முல்லர்!

இது பற்றிப் பின் வருமாறு நான் குறிப்பிட நேர்ந்து இருந்தது:

‘உண்மமான ஒரு சிறந்த அறிவாளர், மாக்ஸ் முல்லர்! எனவேதான், மாற்றுக் கருத்துகள் உருவாகிடத் தக்க வாய்ப்பினையும் நமக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டு அவர் செல்கிறார். ‘

‘ ‘உஷஸ் ‘ என்னும் சம்ஸ்க்ருதத் தெய்வம், தமிழின் ‘உதய ‘த் தெய்வம்தான் ஆகும். ‘உதி ‘ என்னும் வினைச் சொல்லில் இருந்து விளர்ந்து வந்து இருந்த ஒரு சொல் இது! ‘ஹுஜுஸ்ச :தையியி ‘ என்பதோ ‘உதயத் தெய்வம் ‘ என்னும் தமிழ்ப் பதத்தின் நேரடியான திரிபு!

‘அகைதல் ‘ என்னும் தமிழ்ச் சொல்லிற்குச் சுடர் விட்டு எரிதல் என்று பொருள். இதன் திரிபுதான் ‘அ:க்ரியா ‘ என்னும் சம்ஸ்க்ருதச் சொல்!

இனி, :கர் என்னும் வேரில் இருந்து அல்லாமல் :பர் என்னும் வேரில் இருந்து ஃபார்ஸ் என்னும் சொல்லின் விளர்ச்சியினைக் காட்டிட முடியுமா ? என்று மாக்ஸ் முல்லர் கேட்கின்ற கேள்விக்கு நாம் வருவோம்.

இந்தப் ‘:பர் ‘ என்னும் சொல்லிற்கு என்ன பொருள் ? என்று கூறிட அவர் முன் வந்திட வில்லை. ஆனால், ‘பர் ‘ என்னும் சொல்லில் இருந்துதான் ஃபார்ஸ் என்னும் சொல் விளர்ந்து வந்து இருக்க வேண்டும் என்று அவர் கூறி இருந்தார் என்றால் இன்னும் பொருத்தமாக அது இருந்து இருக்கும். எனினும், ‘பருதி ‘ என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து விளர்ந்து வந்து இருந்ததுதான் ஃபார்ஸ் என்னும் எலத்தின் சொல் என்பது அதை விட மிகவும் பொருத்தம் ஆனது ஆகும்.

ஆக, ‘பருதி ‘ என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்து வந்து இருந்த ஓர் எலத்தின் சொல்தான் ஃபார்ஸ் என்பது தெளிவு. எனவே, ஃபார்ஸ் என்னும் தெய்வம் ஒரு ‘பருதித் தெய்வம் ‘தான் ஆவாள்.

அண்டத்து ஒளியின் குழந்தை இவள்; உலகத்து ஒளியின் தாயும் இவள்தான்! இவள்தான் ஒளியைத் தருகிறாள்; உயிரையும் கொடுக்கிறாள். ஒவ்வொரு நாளும் காலையில் வணங்கவும் படுகிறாள்.

ஆக, ஃபார்ஸ் ஃபார்ச்சுனா என்னும் ஈரோப்பியத் தேவதை திரவிடத்தின் பருதித் தேவதைதான் என்பது தெளிவு.

இல்லாத ஆரியப் பந்தவத்தை நிருபிப்பதற்கு ஆதாரமாக மாக்ஸ் முல்லர் எடுத்துக் கொண்டு இருக்கின்ற இந்தத் தேவதை, உண்மத்தில் ஒரு தமிழ்த் தேவதைதான் என்பதனால்தான், ஈரோப்பியர்தம் திரவிடக் கூறுகளை நிருபிப்பதற்கு நமக்கு இவள் துணை நின்று இருக்கிறாள் போலும்! ‘ (பார்க்க: ஆரியர் வரலாறு: பாகம் இரண்டு (2003), பக்.213-14.)

ஆக, தமது கூற்றினைப் பிழை படுத்திடக் கூடிய வழியினையும் மாக்ஸ் முல்லர் சுட்டிக் காட்டி இருக்கிறார் என்பது தெளிவு.

இப்படி, தனது தேற்றம் பிழை பட்டுப் போகின்ற இயன்மையினை அல்லது வாய்ப்பினை ஒவ்வொரு தேற்றக் காரனும் கருத்தில் கொண்டுதான் ஆக வேண்டும் என்றுதான் கார்ல் பாப்பர் கூறுகிறார் என்றால், அதற்கு எதிரீடு எதுவும் நமக்கு இல்லை. அதே நேரத்தில், சிறப்பாக இதில் எதுவும் இல்லவும் இல்லை.

காக்காய்-குருவிகள்

முந்திய தேற்றங்களின் பிழைகளைச் சுட்டிக் காட்டிய வண்ணம்தான் புதிய தேற்றங்கள் அனைத்தும் வளர்ந்து கொண்டு வந்து இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.

பிழையாக்கும் இயன்மையைப் பொறுத்த வரை, நமது காக்காய்-குருவிகளை விட நன்றாக அதனைப் புரிந்து கொண்டவர்கள் உலகில் யாரும் இருந்ததும் இல்லை எனலாம்! புவி ஈர்ப்புத் தேற்றம் கண்டு பிடிக்கப் படுவதற்கும் முன்னர் இருந்தே, விண்ணில் பறந்து-பறந்து அதனைப் பிழை படுத்திக் கொண்டு அவை வந்திட வில்லையா ?

உண்மையில், இயற்கைத் திறல்களை எப்படி நாம் பயன் படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் பொருள்-பொதிவான ஒரு கேள்வியே அன்றி, ‘முற்றான உண்மை ‘ எது ? என்பது அல்ல!

ஏனென்றால், அரை-குறையான அறிவில் இருந்து முழுமையை நோக்கி நகர்கின்ற வகையில்தான் நமது அறிவின் வளர்ச்சி நிகழ்ந்து கொண்டு வந்து இருக்கிறது; நிகழ்ந்திடவும் முடிகிறது.

எனினும், நாம் முந்திக் கொள்ள வேண்டாம். எனவே, ஒப்புறுதியினை, அதாவது, cofirmation என்பதைப் பற்றிய கார்ல் பாப்பரின் கருத்துகளை இங்கே நாம் சற்றுப் பார்த்து விடுவோம்.

ஒப்புறுதி (confirmation)

7 கூறுகளாகத் தமது கருத்துகளை விளக்கிடற்கு முற்படுகின்ற கார்ல் பாப்பர், 1, 2 மற்றும் 6 ஆகிய கூறுகளில் ஒப்புறுதி பற்றிப் பேசுகிறார். இந்த மூன்றினையும் முதலில் நாம் பார்ப்போம்:

1. It is easy to obtain confirmations, or verifications, for nearly every theory – if we look for confirmations.

2. Confirmations should count only if they are the result of risky predictions; that is to say, if, unenlightened by the theory in question, we should have expected an event which was incompatible with the theory – an event which would have refuted the theory.

6. Confirming evidence should not count except when it is the result of a genuine test of the theory; and this means that it can be presented as a serious but unsuccessful attempt to falsify the theory. (I now speak in such cases of ‘corroborating evidence. ‘)

மாய்மை இல்லாமல் இம் மூன்றையும் நாம் புரிந்து கொள்ளத் தக்க வகையில், இவற்றை முதலில் நாம் சுருக்கிக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை.

(1) If confirmation is what we want, we can easily obtain it for almost every theory. (2) However, confirmation becomes important when a theory predicts certain events which we would expect to be incompatible with that theory in the absence of the enlightenment provided by the it. (3) A theory is therefore confirmed only when all the serious attempts to disprove it fail.

(1) ஒப்புறுதிதான் தேவை என்றால், ஏறக் குறைய எல்லாத் தேற்றங்களுக்கும் ஓர் ஒப்புறுதினை நாம் பெற்று விட முடியும். (2) எனினும், ஒரு தேற்றம் முற் கூறுகின்ற நிகழ்ச்சிகள் அத் தேற்றத்திற்கு ஏற்ப நிகழ்ந்திட முடியாது என்று நாம் கருதுகின்ற வேளைகளில், ஒப்புறுதி என்பது முக்கியம் பெறுகிறது. (3) எனவே, ஒரு தேற்றத்தினைப் பிழையாக்கிக் காட்டுகின்ற நமது முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போகின்ற பொழுதுதான், ஒப்புறுதியினை அது பெறுகிறது எனல் வேண்டும்.

கார்ல் பாப்பர் கூறுவது என்ன ?

ஒரு பக்கம், ஏறக் குறைய எல்லாத் தேற்றங்களுக்கும் ஓர் ஒப்புறுதினை நாம் பெற்று விட முடியும் என்று கூறி, ஒப்புறுதி என்பதை மிகவும் எளிமைப் படுத்திக் காட்டி விடுகிறார் கார்ல் பாப்பர்! மறு பக்கமோ, ஒரு தேற்றத்தைப் பிழையாக்கிக் காட்டுகின்ற நிகழ்ப்பாட்டில் நாம் தோற்று விடுகின்ற பொழுதுதான், அதற்கான ஒப்புறுதினை நாம் பெற்றிட முடியும் என்று கூறி, ஒப்புறுதி என்பதனை மிகவும் கடினப் படுத்தியும் அவர் காட்டி விடுகிறார்.

எனினும், ‘எளிமையான ஒப்புறுதி ‘ மற்றும் ‘கடினமான ஒப்புறுதி ‘ என்று இரண்டு வகைப்பாடுகளைக் கார்ல் பாப்பர் வகுத்துக் கொண்டு இருக்கிறார் என்று அவரை நாம் புரிந்து கொள்வதில் தவறு இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அதே நேரத்தில், கடினமான ஒப்புறுதி மட்டும்தான் அவருக்கு முக்கியம் என்பதும் நமக்குத் தெளிவு ஆகிறது.

பிறந்த நேரத்தின் அடிப்படையில் கோள் நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நமது வாழ்க்கையைக் கணிக்கின்ற கோளியக் காரர்களின் முற் கூற்றுகளை இங்கே நாம் எடுத்துக் கொள்வோம்.

கோளியம் பற்றியும் கார்ல் பாப்பர் பேசுகின்ற காரணத்தால், கோளியக் காரர்களின் முற் கூற்றுகளை இங்கே நாம் எடுத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அதே நேரத்தில், எளிமையான ஒப்புறுதியின் பாற் பட்டவைதாம் இவையும் ஆகும்.

கோளியக் காரர்களின் முற் கூற்றுகள்

‘மகிழ்ச்சியான நாள் ‘ என்று ஒரு கோளகரின் தினப் பலனை முற் கூறுகின்ற கோளியக் கணிப்புகளுக்கு ஒப்புறுதி காண்பது மிகவும் எளிது. ஏனென்றால், மகிழ்ச்சி தருகின்ற ஏதேனும் ஒரு நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடை பெற்றிடாமல் இருந்திட முடியாது.

எளிமையினும் எளிமையாகப் பலருக்கும் இது தோன்றிடக் கூடும் என்பதால், கோளியம் பற்றிய ஒரு சில கதைகளையும் இங்கே நாம் பார்த்து விடுவோம். பல வாறாகப் பலரின் தந்தை மார்களும் சொல்லி நம்மில் பலரும் கேட்டு இருக்கக் கூடிய கதைகள்தாம் இவை!

‘குரு ‘ என்னும் பெயரில் விண்ணில் ஒரு ‘கோள் ‘, அல்லது ‘கிரகம் ‘ சுழன்று கொண்டு வருகிறது என்பது நமக்குத் தெரியும். வியாழன் என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு!

இந்த வியாழன், அல்லது குருவின் பலன் நிறைந்து இருந்தால்தான் ஒருவருக்குத் திரு மணம் ஆகிட முடியுமாம்! காதல் மலர்வதற்கும் கூட இப்படி ஏதேனும் ஒரு பலன் தேவை என்று கோளியக் காரர்கள் கருதுகிறார்களா ? என்பது தெரிய வில்லை.

இந்தக் குருவிற்கு ஒரு மகள்! அவளுக்கு மணம் முடித்து வைப்பது என்று அவர் முடிவு செய்கிறார். அதே நேரத்தில், முதல் இரவின் பொழுது அவளோ அல்லது அவளது கணவனோ மடிந்து விடுவார்கள் என்று ஏற்கனவே கோளியக் காரர்கள் முற்கூறி இருந்ததும் அவருக்குத் தெரியும்.

இதற்காக, குரு பலன் கூடி இருக்கின்ற ஒரு நேரத்தில் யாருக்கும் திரு மணம் நடை பெற்றிடாமல் இருந்திட முடியுமா ?

திரு மணம் நடை பெற்று முடிந்து விடுகிறது. மகளின் முதல் இரவில் மனத்திற்குள் குமுறிக் கொண்டு இருக்கிறார் குரு!

இறுதியில், மகளையோ அல்லது மரு மகனையோ பறி கொடுத்து விடக் கூடிய ஒரு கையறு நிலையில், கதவின் துளை வழியாக அவர்களை அவர் பார்க்கிறார்; பார்த்துக் கொண்டே இருக்கிறார். கோளியக் காரர்கள் கணித்துக் கூறி இருந்தது போல அவர்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்து விட வில்லை.

மறு நாள், கோளியக் காரர்களின் முற் கூற்றுப் பிழை பட்டுப் போனது எப்படி ? என்று குருவிற்கும் அவர்களது கோளியக் காரர்களுக்கும் இடையே ஒரு விவாதம் நடை பெறுகிறது. அப் பொழுது, ஆணித் தரமாக ஒரு கோளியக் காரர் கூறினாராம்—- ‘குரு பார்க்கக் கோடி நன்மை ‘ என்று!

அதற்கு அவர் விளக்கமும் அளித்தாராம்—-குருவாகிய குருவே பார்த்துக் கொண்டு இருந்ததனால்தான், கோளியக் காரர்களின் முற் கூற்று பிழை பட்டுப் போய் விட்டது என்று; அதே நேரத்தில், குரு பார்க்கக் கோடி நன்மை என்ற கோளியக் கணிப்பு நிருபிக்கப் பட்டும் விட்டது என்று!

இன்னும் ஒரு கதையினையும் இங்கு நாம் பார்ப்போம். அரச யோகம் நிரம்பி இருந்த இருவரது கோளியக் கணிப்புகளைப் பற்றிய ஒரு கதை இது!

அரச யோகத்தில் பிறந்த ஒருவன் அரியணையில் அமர்ந்து ஆட்சி செலுத்திக் கொண்டு இருந்தானாம்; அவன் பிறந்த அதே நேரத்தில் பிறந்து இருந்த இன்னொருவனோ பிச்சைக் காரர்களின் நடுவில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தானாம்!

இதற்கும் விளக்கம் அளிப்பதற்கும் கோளியக் காரர்கள் தவற வில்லை—-ஒருவனின் அரச யோகம் அவனை மக்களின் தலைவனாக ஆக்கி இருந்தது என்று; மற்றவனின் அரச யோகம் அவனைப் பிச்சைக் காரர்களின் தலைவனாக ஆக்கி இருந்தது என்று!

இம் மாதிரியான கதைகளை எல்லாம் கார்ல் பாப்பர் போன்ற ஆய்வாளர்கள் கூட வினயமாக எடுத்துக் கொண்டு இருப்பது நமக்கு வேடிக்கையாகத் தோன்றிடலாம் என்ற போதிலும், அவருக்கு இவை முக்கியம்! ஏனென்றால், இம் மாதிரியான முற்கூற்றுகளை வீழ்த்தி விடுவதன் மூலம், அனைத்து வகையான முற்கூற்றுகளையும் அடித்து நொறுக்கி விட முடியும் என்று அவர் நம்புகிறார்.

இந்த நம்பிக்கையில்தான் அவர் கூறுகிறார்—-ஒப்புறுதிதான் தேவை என்றால் எப்படியும் அதனைப் பெற்று விட முடியும் என்று!

இப் பொழுது, கார்ல் பார்ப்பரின் கணிப்புகளுக்கு நாம் வருவோம்.

கோளியக் காரர்களும் கார்ல் பாப்பரும்

Astrology did not pass the test. Astrologers were greatly impressed, and misled, by what they believed to be confirming evidence – so much so that they were quite unimpressed by any unfavorable evidence. Moreover, by making their interpretations and prophesies sufficiently vague they were able to explain away anything that might have been a refutation of the theory had the theory and the prophesies been more precise. In order to escape falsification they destroyed the testability of their theory. It is a typical soothsayer ‘s trick to predict things so vaguely that the predictions can hardly fail: that they become irrefutable….

பெரிதாக எதையும் இங்கே கார்ல் பாப்பர் கூறி விட வில்லை.

இது இப்படி இருந்தால் அது அப்படி இருக்கும்; அது அப்படி இருந்தால் இது இப்படி இருக்கும்; என்று வெறுமனே கலங்கலாகத்தான் தங்கள் முற் கூற்றுகளைக் கோளியக் காரர்களால் கணித்திட முடிகிறதாம்; இதன் மூலம், தங்கள் முற் கூற்றுகளைப் பரி சோதித்துப் பார்க்கின்ற இயன்மையினை அவர்கள் அழித்தும் விடுகிறார்களாம்!

இதனைத்தான் கொஞ்சம் நீட்டி முழக்கி இருக்கிறார் கார்ல் பாப்பர்!

எனினும், இவ்வளவு எளிமையாக நம் ஊர்க் கோளியக் காரர்களைக் கார்ல் பாப்பரால் மடக்கி விட முடியும் என்று நமக்குத் தோன்ற வில்லை. அதே நேரத்தில், கோளியக் காரர்களுக்கும் கார்ல் பாப்பருக்கும் இடையிலான இந்த மோதலில் நம்மை இடைப் படுத்திக் கொள்வதற்கு நாம் விரும்பிடவும் இல்லை.

எனினும், தங்கள் முற் கூற்றுகளை மற்றவர்கள் பரி சோதித்துப் பார்க்கின்ற இயன்மையினைக் கோளியக் காரர்கள் அழித்து விடுகிறார்கள் என்று கார்ல் பாப்பர் கூறுகிறாரே, அது எப்படி ? என்பதுதான் நமக்குப் புரிய வில்லை.

ஏனென்றால், இங்குதான் குழப்பங்கள் அதிகம்—-கோளியக் காரர்களின் முற் கூற்றுகளை விட மிக மிக அதிகம்!

எனினும், தேற்ற முறையான நிருபணத்திற்கும் செயற்பாட்டு முறையான நிருபணத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றிய ஒரு கேள்விதான் இது!

ஆனால், செயற்பாட்டு முறையான ஒரு நிருபணத்த்ினை எப்படியும் நாம் பெற்று விட முடியும் என்று கூறி, அதனைக் கார்ல் பாப்பரோ புறக்கணித்து விடுவதற்கு முயல்கிறார்; முற்கூற்றுகளைப் பற்றிய பிரச்சனையாக மட்டும், தேற்றத்திற்கும் செயற்பாட்டிற்கும் இடையே உள்ள பிரச்சனையினைக் குறுக்கிக் கொள்வதற்கும் அவர் முற்படுகிறார்.

எனவே, ஒரு சில முற்கூற்றுகளை எடுத்துக் கொண்டு அவரை நாம் அணுகுவதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.

(தொடரும்)

23-12-2004

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்

கார்ல் பாப்பரின் வெங்காயம்-2

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

சோதிப் பிரகாசம்


மயக்கும் சொற்கள்

‘Conceive ‘ என்னும் ஆங்கிலச் சொல்லுக்குக் ‘கருத்தில் கொள்ளுதல் ‘ என்றும் ஒரு பொருள் உண்டு என்பது நாம் அறிந்தது.

இது ஒரு வினைச் சொல்! இந்த வினைச் சொல்லின் அடியாக விளர்ந்து கொண்டு வந்து இருக்கின்ற ஒரு வினை அடிப் பெயர்ச் சொல்தான் ‘conception ‘ என்பது! இந்த வினையின் விளைவான பெயர்ச் சொல்லோ ‘concept ‘ என்பது ஆகும்.

இப்படி,

வினை—-வினை அடிப் பெயர்—-வினை விளைவுப் பெயர்

என்பதாகக்

conceive—-conception—-concept

என்னும் சொற்கள் விளர்ந்து கொண்டு வந்து இருப்பதை நாம் காண்கிறோம்.

இந்தச் சொற்களில் மாய்மை எதுவும் இல்லை. பாமரர் முதல் படித்தவர் வரை எல்லோரும் இவற்றைத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் என்பதிலும் ஐயம் இல்லை.

ஆனால், concept என்னும் பெயர்ச் சொல்லில் இருந்து உருவாக்கப் பட்டு இருக்கின்ற conceptualize என்னும் வினைச் சொல்லோ சற்று மாய்மை ஆனது. இந்த வினைச் சொல்லில் இருந்து உருவாக்கப் பட்டு இருக்கின்ற conceptualization என்னும் பெயர்ச் சொல்லோ இன்னும் மாய்மை ஆனது.

ஏனென்றால், இவை போன்ற சொற்களை அறிவாளர்கள் மட்டும்தாம் பயன் படுத்திக் கொண்டு வருகிறார்கள். எனவே, மேலும் அதிகமான மாய்மையுடன் இதனை நாம் புரிந்து கொள்வதுதான் நல்லது.

அதாவது, conceive என்னும் சொல்லில் இருந்து தொடங்கி conception என்னும் வினைப் பெயராக நீடித்துக் கொண்டு வந்து concept என்னும் பெயர்ச் சொல்லாக, ஒரு நிகழ்வினை (phenomenon)க் கருத்துப் படுத்திக் கொள்கின்ற நமது சிந்தனைச் செயல் ஒரு முடிவினை எய்தி விடுகிறது.

ஆனால், concept-ஐ மீண்டும் conceptualize செய்கின்ற அறிவாளர்களுக்கு இது போதாது. ஏனென்றால், பகட்டுத் தனம் வாய்ந்ததாகவும் மாய்மை ஆனதாகவும் மற்றவர்களுக்கு இது தோன்றாது! எனவேதான்—-தங்கள் சிந்தனைச் செயலின் பகட்டுத் தனத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்கின்ற வகையில்—-conceptualize என்னும் சொல்லைப் பயன் படுத்துவதற்கு அவர்கள் முற் படுகிறார்கள்.

சரி, conceive என்பதற்கும் conceptualize என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுதான் என்ன ?

எதுவும் இல்லை.

ஏனென்றால், Concept என்பதைத் தவிர வேறு விளைவு எதுவும் இதில் இல்லை.

ஒரு வேளை, அனுபவ அறிவு நிலையில் எதையும் நாம் கருத்துப் படுத்திக் கொள்வதை conception என்றும் காரண அறிவு நிலையில் அதனை நாம் கருத்துப் படுத்திக் கொள்வதை conceptualization என்றும் குறிப்பிடுவதற்காகத்தான் இச் சொற்களை அறிவாளர்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்களோ ? என்றால், அதுவும் இல்லை.

ஏனென்றால், மாய்மை இல்லாமல் இவ் வேறுபாடுகளை வெளிப் படுத்துவதற்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இல்லை. அனுபவ அறிவு முறையான கருத்தமைவினை emprical concept என்றும் காரண அறிவு முறையான கருத்தமைவினை reasonal concept என்றும் மாய்மை இல்லாமல் நாம் சுட்டிக் காட்டிக் கொள்ள முடியும்.

(குறிப்பு: at the level of reason என்பதை, அதாவது, concept at the level of reason என்பதை ‘reasonal concept ‘ என்று நான் குறிப்பிட்டு இருக்கிறேன். ஆங்கிலத்தில் இப்படி ஒரு சொல், அதாவது, reasonal என்னும் சொல் இல்லை என்று எனது நண்பர் ஆர். காசிலிங்கம் ஒரு முறை என்னிடம் குறிப்பிட்டார்; எனினும், இல்லாமல் இருந்திட முடியாது என்னும் நம்பிக்கையில் இந்தச் சொல்லை நான் பயன் படுத்திக் கொண்டு வந்து இருக்கிறேன்; விளக்கம் அளித்திட வேண்டியது ஆங்கில வாணர்தம் பொறுப்பு!)

சரி, conceive என்னும் சிந்தனைச் செயலின் விளைவுதான் concept என்றால் conceptualize என்னும் சிந்தனைச் செயலின் விளைவு என்ன ?

Conceptualization என்பதாக இந்த விளைவு இருந்திட முடியாது. ஏனென்றால், conception என்பதைப் போன்ற ஒரு வினை அடிப் பெயர்தான் conceptualization என்பதும் ஆகும்!

அதாவது,

conceive—-conception—-concept

என்றால்,

conceptualize—-conceptualization—-என்ன ?

என்பது கேள்வி.

conceptualism என்பதாக இந்தச் சொல் இருந்திட முடியாது. ஏனென்றால், ஒரு கொள்கையைக் குறிக்கின்ற கோட்பாட்டு முறையான ஒரு சொல் இது!

அதே நேரத்தில், conceptuality என்று இதனை நாம் குறிப்பிடலாம் என்றால், அதுவோ ஒரு பண்பினைக் குறிக்கின்ற ஒரு பெயராக மாறி விடுகிறது. அதாவது, conceptual என்னும் பண்பினை, அல்லது தன்மையினை! Conceptualness என்பது கூட கருத்தமைவான ஒரு கருத்தின் தன்மையினைக் குறிப்பதாகத்தான் இருந்திடவும் கூடும்.

சரி, Conceptualcept என்று ஒரு சொல்லை உருவாக்கி,

conceieve—-conception—-concept

என்பது போல,

conceptualize—-conceptualization—-conceptualcept

என்று நமது கேள்விக்கு ஒரு மொழி இயல் ஆய்வாளர் விளக்கம் அளிக்கிறார் என்று நாம் வைத்துக் கொள்ளுவோம்.

எவ்வளவு மாய்மையாக நமக்கு இது தோன்றும்!

Conceptualization என்பதே ஒரு மாய்மை என்றால், conceptualcept என்பது மாய்மையினும் மாய்மைதானே!

இப்படிப் பட்ட மாய்மையான ஒரு பான்மையில்தான் testability, falsifiability மற்றும் refutability ஆகிய சொற்களைக் கார்ல் பாப்பர் பயன் படுத்தி இருக்கிறார். இந்த மாய்மைகளோ இச் சொற்களினது பொருள்களின் மாய்மை என்பதுதான் இங்கே நமக்கு முக்கியம்!

ஏனென்றால், கார்ல் பாப்பரின் சொல் ஆட்சியில் இந்த மூன்று சொற்களுக்கும் இடையே எந்த ஒரு வேறுபாடும் இல்லை.

முதலில், நமது சொல்லாட்சிகளை நாம் துல்லியப் படுத்திக் கொள்வது நல்லது.

சொற் பொருள்கள்

False என்பதைத் ‘தவறு ‘ என்று நமது மொழி பெயர்ப்பாளர் தமிழ்ப் படுத்தி இருக்கிறார்.

எனவே, falsification என்பதைத் ‘தவறு என நிருபித்தல் ‘, அல்லது, ‘பிழை என்று ஆக்கிக் காட்டுதல் ‘ என்று எடுத்துக் கொண்டு, அதனைப் ‘பிழையாக்கம் ‘ என்று நாம் துல்லியப் படுத்திக் கொள்ளலாம். கூடவே, falsify செய்கின்ற ability-யினைப் ‘பிழையாக்கும் இயன்மை ‘ என்றும் நாம் பொருள் படுத்திக் கொள்ளலாம்.

இது போல, refute என்பதைத் ‘தவறு என்று எடுத்துக் காட்டுதல் ‘, அல்லது ‘தவறு என்று மறுத்தல் ‘ என்று கொண்டு, refutation என்பதைத் ‘தவறாக்கம் ‘ என்றும் refutability என்பதைத் ‘தவறாக்கும் இயன்மை ‘ என்றும் நாம் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

Risk எடுத்து ஒரு காரியத்தில் ஈடு படுவதைத் ‘துணிச்சலுடன் ‘ செயல் படுவது என்று நமது மொழி பெயர்ப்பாளர் தமிழ்ப் படுத்தி இருக்கிறார்.

எனவே, துணிச்சலை முன்னிலைப் படுத்துகின்ற வகையில் ‘துணிவம் ‘ என்றோ அல்லது நமது துணிச்சலினால் நாம் எதிர் கொள்ள வேண்டிய இடர்களை முன்னிலைப் படுத்துகின்ற வகையில் ‘இடரம் ‘ என்றோ இதனை நாம் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

இங்கே, ‘துணிவம் ‘ என்பதை மட்டும் நாம் தேர்வு செய்தும் கொள்ளலாம். துணிவத்துடன் செயல் படுவது என்பது இடரத்துடன் செயல் படுவதுதானே! கூடவே, வருவது-உரைக்கின்ற prediction என்பதை ‘முற் கூற்று ‘ என்றும் astrology என்பதைக் ‘கோளியம் ‘ என்றும் நாம் வைத்துக் கொள்ளலாம்.

பிழையாக்கம் என்னும் சொல் மிகவும் குழப்பம் வாய்ந்தது என்று ஓர் எதிரீட்டினை (objection) எழுப்புகிறார் நண்பர் குடியரசு! ஒரு தேற்றத்தைப் ‘பிழையாகப் புரிந்து கொள்ளுதல் ‘ அல்லது ‘பிழையாகக் குறிப்பிடுதல் ‘ என்றுதான் இந்தச் சொல் பொருள் பட்டிட முடியும் என்றும் அவர் வாதிடுகிறார்!

எனினும், ‘பிழை ‘ என்னும் ஒரு சொல்லே இதற்குப் போதும் ஆனது என்று எனக்குத் தோன்றுகிறது. வேண்டும் என்றால், ‘பிழையான புரிவு ‘ (fallacy) என்று இதனை நாம் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

இப் பொழுது, கார்ல் பாப்பரின் இறுதி முடிவினை இங்கே நாம் பார்ப்போம்—-அதாவது, அவரது முடிபுகளுக்கு எல்லாம் இறுதியான முடிவினை!

கார்ல் பாப்பரின் இறுதி முடிவு

‘One can sum up all this by saying that the criterion of the scientific status of a theory is its falsifiability, or refutability, or testability. ‘

அதாவது, ‘சுருக்கமாகக் கூறுவது என்றால், ஒரு தேற்றத்தின் பிழையாக்கும் இயன்மை, அல்லது தவறாக்கும் இயன்மை, அல்லது பரிசோதிக்கும் இயன்மைதான் அதன் விஞ்ஞானத் தன்மையினது அளவு கோல் ஆகும். ‘

இதுதான் கார்ல் பாப்பரின் இறுதி முடிவு. இங்கு இருந்து நமது அலசலினை நாம் தொடங்குவோம்.

பரிசோதனை

பிழை என்று ஒரு தேற்றத்தை நாம் நிருபிப்பது எப்படி ? அதாவது, பிழை ஆக்கிக் காட்டுவது எப்படி ? அதாவது, பிழையாக்குவது எப்படி ?

பரி சோதனையின் மூலம்!

ஒரு தேற்றத்தைத் தவறு ஆக்கிக் காட்டுவது எப்படி ?

பரி சோதனையின் மூலம்!

அப்படி என்றால், தவறாக்கம் என்பதற்கும் பிழையாக்கம் என்பதற்கும் இடையே ஏதேனும் வேறுபாடு இங்கு உள்ளதா ?

இல்லை; அணுவளவும் இல்லை!

பின்னர் ஏன், பிழையாக்கம் என்றும் தவறாக்கம் என்றும் இரண்டு சொற்களை இங்கே கார்ல் பாப்பர் பயன் படுத்துகிறார் ?

பகட்டுக் காட்டி நம்மை மயங்கிட வைப்பதற்காகவா ? அல்லது, தெளிவாக அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவா ?

தெளிவினை நமக்கு ஊட்டுவதுதான் அவரது நோக்கம் என்றால், இவற்றுள் ஏதேனும் ஒரு சொல்லை மட்டும் நாம் எடுத்துக் கொண்டால் போதும்! எனவே, பிழை ஆக்கம் என்பதை மட்டும் இங்கே நாம் எடுத்துக் கொள்வோம்.

சரி, ஒரு தேற்றத்தைப் பிழை ஆக்கி நாம் காட்டுவது எப்படி ?

பரி சோதனையின் மூலம்!

ஒரு தேற்றத்தைப் பரி சோதிப்பது எதற்காக ?

அது பிழையா ? சரியா ? என்பதை நாம் தெரிந்து கொள்வதற்காக!

பரி சோதிக்காமல் ஒரு தேற்றத்தை நாம் பிழை ஆக்கிட முடியாது. எதையும் பிழை ஆக்கிக் காட்டிட வேண்டும் என்றால் அதனை நாம் பரி சோதித்துதான் ஆக வேண்டும்.

இப்படி, பரிசோதனை இல்லாமல் பிழையாக்கம் இல்லை; பிழையாக்கத்திற்குத் தேவை இல்லாமல் பரிசோதனையும் இல்லை.

எனவே, ‘பிழையாக்கம் ‘ என்னும் செயலினை மட்டும் இங்கே நாம் எடுத்துக் கொண்டால் போதும், கார்ல் பாப்பரின் இறுதி முடிவினை நாம் அலசிப் பார்த்து விடலாம்.

பிழை ஆக்கும் இயன்மை

ஒரு நிகழ்வினைப் பற்றிய ஒரு தேற்றத்தினைப் பிழையாக்கும் இயன்மைதான் அத் தேற்றத்தின் விஞ்ஞானத் தன்மைக்கு அல்லது நிலைமைக்கு உரிய அளவுகோல் என்று கார்ல் பாப்பர் கூறுகிறார்.

அப்படி என்றால், பிழை ‘ஆக்கும் இயன்மை ‘ என்பதுதான் அவர் கூறுகின்ற அளவுகோல் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால், இந்த அளவுகோல், அதாவது, பிழை ஆக்கும் இயன்மை, யாரிடம் அல்லது எங்கே இருந்திட வேண்டும் ? என்று அவர் கருதுகிறார் என்பதுதான் நமது சிக்கல்!

அதாவது, ஒரு தேற்றத்தினைப் பிழை படுத்திக் காட்டுகின்ற, அல்லது பிழை பாடானது என்று நிருபிக்கின்ற இயன்மை என்பது அத் தேற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற இன்னொரு தேற்றக் காரரிடம் இருந்திட வேண்டும் என்று அவர் கருதுகிறாரா ? அல்லது, அத் தேற்றத்திற்கு உள்ளேயே அந்த இயன்மை இருந்திட வேண்டும் என்று அவர் கருதுகிறாரா ? என்பதுதான் சிக்கல்!

முதலாவதாக, முன்னதை நாம் எடுத்துக் கொள்வோம்.

ஒரு தேற்றத்தைப் பிழை ஆக்குகின்ற இயன்மை, அதனை மறுக்கின்ற மற்றும் ஒரு தேற்றக் காரரிடம் இருந்திட வேண்டும் என்று கார்ல் பாப்பர் கருதுவார் என்றால், அந்த அவரது திறமையினை இங்கே அவர் குறிப்பிடுகிறார் என்று பொருள்!

எனவே, அனைத்துத் தேற்றங்களையும் ஒதுக்கித் தள்ளி விட முற் படுகின்ற தம்மைத் தாமே அவர் குறிப்பிட்டுக் கொள்கிறார் என்றும் கூட ஒரு பொருள்!

எனினும், கார்ல் பாப்பரின் திறமை மற்றும் அறிவாண்மை ஆற்றல் ஆகிய வற்றை எதிர் பார்த்துக் கொண்டு எந்த ஒரு தேற்றக் காரனும் தனது தேற்றத்தினை வடிவு ஆக்குவது (formulate) இல்லை; அதே நேரத்தில், தனக்குத் தெரிந்த எதிர்க் கருத்துகளைக் கருத்தில் கொள்ளாமலும் அவன் இருப்பது இல்லை.

ஏனென்றால், பழைய தேற்றங்களின் புதியது ஒரு வளர்ச்சிதான் புதிய தேற்றம் என்பது ஆகும்.

எனவே, தமது இயன்மையைத்தான் கார்ல் பாப்பர் இங்கே குறிப்பிடுகிறார் என்று நாம் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

அப்படி என்றால், கார்ல் பாப்பரது திறமையின் அளவுகோல் என்ன ? என்னும் கேள்வி இங்கே எழுந்து விடுகிறது என்பது உண்மைதான்.

எனினும், இங்கே இது நமது நோக்கம் அல்ல.

இப் பொழுது, இரண்டாவதாக, பின்னதை நாம் எடுத்துக் கொள்வோம்.

ஒரு தேற்றத்தினைப் பிழையாக்கும் இயன்மை அந்தத் தேற்றத்திற்கு உள்ளேயே அடங்கிக் கிடந்திட வேண்டும் என்று கார்ல் பாப்பர் கருதுவார் என்றால், அந்தத் தேற்றத்தின் மொழிபினைப் பற்றி அவர் பேசுகிறார் என்று பொருள்!

எனவே, தமக்கு முந்திய எதிர்க் கருத்துகளையும் இனி மேல் எழுந்திடக் கூடிய மாற்றுக் கருத்துகளையும், தமது கருத்தில் அந்தத் தேற்றக் காரன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கார்ல் பாப்பர் கருதுகிறார் என்றுதான் பொருள்!

இங்கே, மாக்ஸ் முல்லரை நாம் எடுத்துக் கொள்வோம்.

(தொடரும்)

19-12-2004

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்

கார்ல் பாப்பரின் வெங்காயம்-1

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

சோதிப் பிரகாசம்


‘உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இல்லை ‘ என்பது எல்லோருக்கும் தெரியும்.

நமது அனுபவ அறிவிற்கு உட்பட்ட ஒரு பொதுப் படையான உண்மை இது! இத் தகு பொதுப் படையான உண்மைகளை எல்லாம் மெய்ப் பொருண்மைக் கூற்றுகளாகப் பலரும் கருதிக் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்பது வேறு விசயம்! நமது பொதுவான ஓர்மையின் (common sense), அல்லது உலக அறிவின் கூற்று என்றும் இதனை நாம் குறிப்பிடலாம்.

எனினும், 02-12-2004 அன்று திண்ணையில் வெளி வந்து இருந்த கார்ல் பாப்பரின் ஒரே ஒரு கட்டுரையை மட்டும் வைத்துக் கொண்டு, வெங்காயம் என்று எல்லாம் அவரை நாம் கிண்டல் அடிப்பது சரியாக இருக்குமா ? என்பதுதான் எனக்குத் தெரிய வில்லை. அதே நேரத்தில், கார்ல் பாப்பரின் இந்தக் கட்டுரையைப் பொறுத்த வரை, அது ஒரு வெங்காயம்தான் என்பதில் யாருக்கும் எந்த ஓர் ஐயமும் ஏற்பட்டு விட வேண்டியதும் இல்லை.

‘அரசியல்-பொருளாதாரத்தின் திறனாய்விற்கு ஒரு பங்களிப்பு ‘ என்னும் தமது நூலின் முன்னுரையில் தமது ஆய்வு முடிவுகளை மொழிகிறார் கார்ல் மார்க்ஸ்! இவற்றைப் புரிந்து கொள்கின்ற எனது முயற்சிதான் வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று என்றால் அது மிகை ஆகாது. இந்த முயற்சியில், கார்ல் மார்க்சின் ஒரு சில கருத்துகளை நான் வளப் படுத்திக் கொள்ளவும் நேர்ந்து இருந்தது.

இது போல, தமது ஆய்வு முடிவுகளாகக் கார்ல் பாப்பர் மொழிகின்ற ஒரு கட்டுரையாக இதனை நாம் எடுத்துக் கொண்டால், கார்ல் பாப்பரின் இறுதி முடிவுகள் என்று இவற்றை நாம் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை; எனவே, அவரது வெங்காயமாக இதனைக் கொண்டு, அவரை நாம் உரித்துப் பார்ப்பதிலும் தவறு எதுவும் இல்லை; என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஈ. வெ. ரா. பெரியார் என்ன, உரித்துப் பார்த்திட முடியாத ஒரு வெங்காயமா ? என்று புதிய கோடாங்கியில் ஒரு கேள்வியினை எழுப்பி இருந்தார் கவிஞர் (பிரதிபா) ஜெயச் சந்திரன்! இவரைப் பார்க்கின்ற பொழுதுகளில் எல்லாம் எனது கண்களைக் கைகளால் நான் பொத்திக் கொள்வேன்—-இவர் உரிக்கின்ற வெங்காய நெடியில் எனது கண்கள் கடுத்துக் கண்ணீர் வந்து விடலாம் என்னும் அச்சத்தினை நான் வெளிப் படுத்துவது போல!

ஆனால், கார்ல் பாப்பரின் வெங்காயமோ நெடி இல்லாத ஒரு வெங்காயம், அதுவும், பந்தத் தனமான ஒரு வெங்காயம்! எனவே, இதனை உரித்துப் பார்ப்பதால் நமக்குக் கண்ணீர் வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதே நேரத்தில், ஒரு குழம்பு வைப்பதற்குக் கூட யாருக்கும் இது பயன் படப் போவதும் இல்லை!

மொழி பெயர்ப்பு

இந்தக் கட்டுரையின் ‘திண்ணை ‘ மொழி பெயர்ப்பாளர் யார் ? என்பது நமக்குத் தெரிய வில்லை; அவரது பெயர் குறிப்பிடப் படாதது ஏன் ? என்பதும் புரிய வில்லை. எனினும், தெளிவான சில சொற்களை இவர் பயன் படுத்தி இருப்பதனைப் பாராட்டாமல் நாம் இருந்திட முடியாது.

‘Science as Falsification ‘ என்னும் கார்ல் பாப்பரின் கட்டுரையை ‘விஞ்ஞானக் கோட்பாடு—-தவறென நிரூபிக்கும் தன்மை ‘ என்று இவர் மொழி பெயர்த்து இருக்கிறார். ‘prediction ‘ என்பதைக் ‘கணிப்பு ‘ என்றும் ‘risky ‘ என்பதைத் ‘துணிச்சலான ‘ ஈடுபாடு என்றும் குறிப்பிட்டு நமக்கு ஒரு வழியினையும் இவர் காட்டி இருக்கிறார்.

இவரைப் பின் பற்றி, ஒரு சில சொற்களின் பொருள்களைத் தெளிவு படுத்திக் கொள்ளாமல் கார்ல் பாப்பரை நாம் புரிந்து கொள்வது முடியாது என்பதில் ஐயம் இல்லை.

அதே நேரத்தில், மா பெரும் சிந்தனைகளை உள்ளடக்கி இருக்கின்ற ஒரு பெரிய வெங்காயமாகக் கார்ல் பாப்பரின் வெங்காயம் கருதப் பட்டு வந்து இருப்பதால்—-கண்கள் கடு-கடுக்கக் கண்ணீர் சிந்தாமல் இதனை உரித்துப் பார்ப்பதற்கு யாராலும் முடியாது என்று ஆங்கில வழித் தமிழ்ச் சிந்தனையாளர்களால் சூள் உரைக்கப் பட்டும் வந்து இருப்பதால்—-கொஞ்சம் பகட்டுத் தனமாக இந்த வெங்காயத்தை நாம் உரித்துப் பார்ப்பதுதான் ஏற்புடையதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

மொழியின் அதிகாரம்

‘மொழியின் அதிகாரம் ‘ பற்றி என்னத்தை எல்லாம் ஈரோப்பியச் சிந்தனையாளர்கள் தெளிவு படுத்தி இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிய வில்லை. இது பற்றித் தெரிந்து வைத்து இருப்பவராகத் தம்மை வெளிப் படுத்திக் கொண்டு வந்து இருக்கின்ற அ. மார்க்சோ மொழியின் அதிகாரம் பற்றி அவ் அப்போது பேசிக் கொண்டு வருகிறார்.

தாலி:பான் படைகளுக்கும் அமெரிக்கக் கூட்டணிப் படைகளுக்கும் இடையே ஆஃப்கானிஸ்தானில் நடை பெற்றுக் கொண்டு வந்து இருந்த போரினைக் கூட ஒரு ‘மொழிப் போர் ‘ என்றுதான் இவர் சித்தரித்து இருந்தார். ‘மொழிப் பணம் ‘, ‘மொழிச் சோறு ‘, என்று எல்லாம் எவையாவது இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் நமக்கு எண்ணிடத் தோன்றுகிறது.

அதே நேரத்தில், இப்படி எல்லாம் பேசி நம் ஊர்ப் பாமரனைக் கூட எந்த ஒரு மேதாவியாலும் ஏமாற்றி விட முடியாது என்பதுதான் நமது கவலை! ஏனென்றால், ‘நெருப்பு என்றால் வாய் சுட்டு விடாது ‘ என்று பழ மொழி பேசியே இந்த மேதாவிகளை எல்லாம் குப்பை மேட்டில் அவன் தூக்கி எறிந்து விடுவான்.

எப்படியும், மொழி பற்றிய மாய்மை எதுவும் நம் ஊர்ப் பாமரனுக்கு இல்லை. எந்த ஊர்ப் பாமரனுக்கும் இந்த மாய்மை இருந்திட முடியாது என்று நாம் எடுத்துக் கொள்வதிலும் தவறு இல்லை.

ஆனால், இந்த அறிவாளர்கள் இருக்கிறார்களே, இவர்களுக்கு மட்டும்தாம் இம் மாதிரியான மாய்மைகள் அதிகம்! பேசுவது என்பதே மெய்யைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் என்ற போதிலும், பொய்யைப் பேசியே உலகத்தை ஏமாற்றி விடலாம் என்று கருதுபவர்கள் ஆயினரே, இவர்கள்!

எனினும், மொழியைப் பற்றிய இம் மாதிரியான மாய்மைகள் எப்படி உருவாகி இருந்து இருக்கக் கூடும் ? என்பது பற்றிச் சிறிது நாம் எண்ணிப் பார்ப்பதில் தவறு இல்லை.

சொற்களின் மாய்மை

நமது செயல்களைக் குறிக்கின்ற வினைச் சொற்களில் இருந்துதான் பல் வேறு சொற்களும் கிளைத்துக் கொண்டு வந்து இருக்கின்றன என்பது மாக்ஸ் முல்லரின் கருத்து!

எடுத்துக் காட்டாக,

‘உ ‘ என்னும் ஒலிப்பில் இருந்து விளர்ந்து கொண்டு வந்து இருக்கின்ற ஒரு வினைச் சொல்தான் ‘உய் ‘ என்பது ஆகும். இதனை ஏற்றுக் கொள்வதில் நமக்குக் கடினம் எதுவும் இல்லை.

ஆனால், இந்த ‘உய் ‘ என்னும் வேரில் இருந்துதான் ‘குதி ‘, கொதி ‘, முதலிய பல் வேறு சொற்கள் விளர்ச்சி அடைந்து கொண்டு வந்து இருக்க வேண்டும் என்று நம்மிடம் யாராவது கூறினால், அவர் மீது நமக்கு ஓர் ஐயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இத் தகு விந்தைகள் மட்டும் அல்ல, இவை போன்ற ஐயங்களும் மாய்மைகளும் நிறைந்ததுதான் மொழி என்பதும் ஆகும்.

ஏனென்றால், இந்த ‘உ—உய் ‘ என்னும் வினைச் சொல்லில் இருந்துதான்,

சில கிளைகளாக,

‘உயரம் ‘, உயர்ச்சி ‘, ‘உசத்தி ‘, ‘ஒஸ்தி ‘—-

‘உதி ‘, ‘உதை ‘, ‘உத்தமன் ‘, ‘உத்தரவு ‘—-

‘எழு ‘, ‘எடு ‘, ‘எகிறு ‘, ‘ஏகு ‘—-

‘ஓடு ‘, ‘ஒட்டகம் ‘, ‘ஓலம் ‘, ‘ஏலம் ‘—-

முதலிய சொற்களும்

மற்றும் சில கிளைகளாக,

‘உதி ‘, ‘கொதி ‘, ‘குதி ‘, ‘குத்து ‘—-

‘சுதி ‘, ‘சூழ் ‘, ‘சுழல் ‘, ‘சுற்றம் ‘—-

‘தூக்கு ‘, ‘தூபம் ‘, ‘துதி ‘, ‘தூது ‘—-

‘புகு ‘, ‘புகை ‘, ‘பூ ‘, ‘பூதம் ‘—-

முதலிய சொற்களும்

இன்னும் சில கிளைகளாக,

‘கொம்பு ‘, ‘கூப்பு ‘, ‘துப்பு ‘, ‘தும்பி ‘—-

‘உரு ‘, ‘குரு ‘, ‘கிரி ‘, ‘குருத்து ‘, —-

‘புரை ‘, ‘பொங்கு ‘, ‘புல் ‘, ‘புத்தி ‘—-

‘உடு ‘, ‘மடு ‘, ‘கொடு ‘, கோடு ‘—-

முதலிய சொற்களும்

கிளைத்துக் கொண்டு வந்து இருக்கின்றன!

சொல் ஆய்வாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இது இருந்திடலாம் என்ற போதிலும், மற்றவர்களுக்கு மாயமாக இது தோன்றிடலாம் என்பதில் ஐயம் இல்லை. இதனைக் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டு தற் பெருமை அடித்துக் கொண்டு வருகின்ற தமிழ்ப் புலவர்களுக்கோ நாட்டில் பஞ்சமும் இல்லை.

இந்த மாய்மையில் இருந்து விடு பட்டிட விரும்புபவர்கள் அனைவரும், இம் மாதிரியான சொல் ஆய்வுகளில் ஈடு பட்டுக் கொள்ளலாம். ஒரு சில அகராதிகளைக் கொஞ்சம் நாம் புரட்டிப் பார்த்துக் கொண்டால் போதும், நமது மாய்மைகளை எல்லாம் எளிதில் நாம் அகற்றிக் கொண்டும் விடலாம்; ஒரு மொழிப் பயிற்சியாகவும் நமக்கு இது இருந்திடக் கூடும்.

நமது உணவினைப் பற்றி—-உடைகளைப் பற்றி—-உறவுகளைப் பற்றி—-தெரிந்து கொள்வதற்கு நாம் விரும்புவதைப் போல, பேசியும் எழுதியும் நாம் பயன் அடைந்து கொண்டு வருகின்ற நமது மொழியைப் பற்றியும் கொஞ்சம் நாம் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறு என்ன ?

சொற்களின் விளர்ச்சியில்தான் இத் தகு மாய்மைகள் என்றால், சொற்களின் மூலமாக அவற்றின் பொருள்களிலும் சில மாய்மைகள் புகுந்து விடுவது உண்டு.

சொற் பொருள்களின் மாய்மை

‘ஒரு மொழியின் இலக்கணத்திற்கும் சமயக் கொள்கைகள் மற்றும் மெய்ப்பொருண்மைக் கருத்துகளுக்கும் இடையே உள்ள உறவுகளை நோக்கிடும் முகத்தான், ‘நான் ‘ என்னும் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு இங்கே சற்றுச் சொல் விளையாட்டில் நாம் ஈடு பட்டுப் பார்க்கலாம்.

‘நான் ‘ என்பது திண்மையான ஒரு பதம். ஏனென்றால், ‘நான் ‘ என்று நம்மைத் தனித் தனியாக நாம் ஒவ்வொருவரும் சுட்டிக் கொள்ளலாம். இந்த வகையில், பொதுப் படையான ஒரு பதமும் இது ஆகும். ஆனால், சமயம் சார்ந்த ஒரு பொருளில் இந்தச் சொல்லினை நாம் பயன் படுத்துகின்ற பொழுது, நம்முள் அடங்கி இருக்கின்ற கடவுளைக் குறிக்கின்ற—-உள்முகமான மனிதனைக் குறிக்கின்ற—-நுண்மையான ஒரு கருத்தமைவாகவும் இது மாற்றம் அடைந்து விடுகிறது!

‘அவன், அவள், அது எனும் அவை ‘ என்று மெய்மையினை—-உலகத்தினை—-சித்தரிக்கின்ற மெய் கண்ட தேவ நாயனார்,10 ‘மூவினை ‘யினை இந்த ‘அவை ‘ ‘உடைமை ‘யினை, அதாவது, தோன்றி, நின்று, அழிகின்ற மூன்று வினைகளை உடைய அதன் தன்மையினை நமக்கு எடுத்துக் கூறி, தமது வாதங்களைத் தொடர்கிறார்.

—-

10 பார்க்க: சிவஞான போதம்.

—-

இங்கே, ஆண்களைப் பொதுப் படையாகக் குறிக்கின்ற ஒரு பிறதிப் பெயர்தான் ‘அவன் ‘ என்பதும் பெண்களைப் பொதுப் படையாகக் குறிக்கின்ற ஒரு பிறதிப் பெயர்தான் ‘அவள் ‘ என்பதும் பிற எல்லாப் பொருள்களையும் பொதுப் படையாகக் குறிக்கின்ற ஒரு பிறதிப் பெயர்தான் ‘அது ‘ என்பதும் தெளிவு. இப்படி, அவனாகவும் அவளாகவும் அதுவாகவும் இருக்கின்ற மெய்மைகளின் தொகுப்பினை ‘அவை ‘ என்று பொதுப் படைக்கும் பொதுப் படையான ஒரு பிறதிப் பெயரால் அவர் சுட்டுகிறார்.

இப்படித்தான், பொழிலன், முகிலன் முதலிய திண்மையான, குறிப்பிட்ட, ஆண்களைப் பொதுப் படையாக ‘அவன் ‘ என்று நாம் சுட்டுகிறோம். ‘நான் ‘ என்று தங்களைத் திண்மையாகவும் தனித் தனியாகவும் இவர்கள் ஒவ்வொருவரும் சுட்டிக் கொள்கிறார்கள்.

‘நான் பொழிலன் ‘ என்னும் தொடரின் மூலம், ‘நான் ‘ முகிலன் அல்லேன் என்னும் கருத்தினை நான் வெளிப் படுத்துகிறேன்.

இது போல, ‘நான் முகிலன் ‘ என்னும் தொடரின் மூலம், ‘நான் ‘ பொழிலன் அல்லேன் என்னும் கருத்தினை நான் வெளிப் படுத்துகிறேன்.

அப்படி என்றால், ‘நான் ‘ யார் ?

பொழிலனுக்கு ‘நான் ‘ முகிலன் இல்லை; முகிலனுக்கு ‘நான் ‘ பொழிலன் இல்லை.

உங்களுக்கு நான் ‘நான் ‘ இல்லை; எனக்கு நீங்கள் ‘நான் ‘ இல்லை.

அப்படி என்றால், இந்த ‘நான் ‘ என்பது என்ன ?

எனக்கு ‘நான் ‘ யார் ? உங்களுக்கு ‘நான் ‘ யார் ?

‘என் ‘ நிலையில் உங்களில் இல்லாத ‘நான் ‘ யார் ? உங்கள் நிலையில் என்னில் இல்லாத ‘நான் ‘ யார் ?

‘என் ‘ உயிரில் இல்லாத ‘நான் ‘ என் உடலா ? அல்லது ‘என் ‘ உடலில் இல்லாத ‘நான் ‘ என் உயிரா ?

‘என் ‘ உயிர் என்கின்ற பொழுது ‘என் ‘ என்று என் உயிருக்கு உரிமை கொண்டாடுகின்ற ‘நான் ‘ யார் ?

‘என் ‘ உடல் என்கின்ற பொழுது ‘என் ‘ என்று என் உடலுக்கு உரிமை கொண்டாடுகின்ற ‘நான் ‘ யார் ?

இப்படி, என் உடலிலும் ‘இல்லாமல் ‘ என் உயிரிலும் ‘இல்லாமல் ‘ ‘இருக்கின்ற ‘ அந்த ‘நான் ‘ யார் ?

அந்த ‘நான் ‘தான் ‘கடவுள் ‘!

அப்படி என்றால், பொழிலன் கடவுளா ?

முகிலன் கடவுளா ?

இல்லை, ‘நானே ‘ கடவுள்!11

—-

11 பார்க்க: கார்ல் மார்க்ஸின் முதல்: தமிழாக்கங்கள் பற்றிய திறனாய்வு, சங்கொலி, 25-9-1998.

—-

இங்கே, ‘நான் ‘ என்பது கடவுள் நிலைக்கு உயர்த்தப் பட்டு நுண்மைப் படுத்தப் பட்டு இருப்பதை நாம் காண்கிறோம். ஆனால், ஒரு முதலாண்மைச் சமுதாயத்தில் மட்டும்தான் இத் தகு சொல் விளையாட்டுகளை நாம் ஆடிக் காட்டிட முடியும் என்பதுதான் உண்மை. ஏனென்றால், இயற்கை முறையில் பொதுப் படையாக ‘நான் ‘ என்று தங்களைச் சுட்டிக் கொள்கின்ற ‘திண்மை ‘யான மனிதர்கள், சமுதாய முறையில் ‘நுண்மை ‘யானவர்களாகவும் இங்கே நிலவிக் கொண்டு வருகிறார்கள். ‘ (பார்க்க: ஆரியர் வரலாறு: பாகம் இரண்டு: பக்.194-95.)

எனினும், ஆங்கிலத்தில் இருந்து தொடங்கிச் சொற்களின் மாயத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் முயல்வதுதான் சிந்தனைச் சிறப்பாகத் தமிழ் நாட்டு அறிவாளர்களுக்குத் தோன்றிடக் கூடும் என்பதால், ஆங்கிலத்தில் இருந்து ஒரு சொல்லை நாம் எடுத்துக் கொள்வோம்.

(தொடரும்)

17-12-2004

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்