அந்தி மாலைப் போது

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

அனந்த்


…. அந்திமாலைப் போதிலே
…. அழகிஎன்றன் காதிலே

வந்துசொன்னாள் வாலிபத்தின் சேதியை -அதில்
மறந்துவிட்டேன் நான்பிறந்த தேதியை!

… ஆரவளோ வான்மகள்
… அறிந்திலேன்அப் பூநிகர்

நாரிமணம் தொட்டதென்றன் நாசியை – உடன்
நானிழந்தேன் என்னுடைய வாசியை

… ஆங்கிருந்த புல்வெளி
… ஆனதொரு விண்வெளி

ஓங்கிஅங்கே உயர்ந்ததென்றன் ஆவலும் – கூவி
ஓலமிட்ட தென்றன்உள்ளச் சேவலும்

… சலசலக்கும் ஓடையைச்
… சார்ந்தவள்தன் ஆடையை
நனைத்தழகு விழிமலரால் சீண்டினாள் – என்
நினைவின்அடித் தளத்தினையே தோண்டினாள்

… புவிமுழுதும் பூக்களாய்
… புலவனது பாக்களாய்க்

கவிழ்ந்தெனது துயரைஎல்லாம் மூடின- காதல்
கதைகள்பல மனத்திரையில் ஆடின

… அந்தஅம்பி காபதி
… அழகிஅம ராவதி

தந்தபோதை தன்னில் கண்ட தோற்றமும் – அதைத்
தொடர்ந்தவன்தன் கதையடைந்த மாற்றமும்

… முந்திவந்து மூளையை
… மோதஅந்த வேளையின்

தந்திரத்தை நெஞ்(சு)உ ணர்ந்து போனதே – மோகத்
தாகம்உலர்ந் தேசருகாய் ஆனதே!

… இன்றிழைக்கும் பிழைகளே
… இன்னல்தரும் மழைகளாய்ப்

பின்னர்ஆகி வாட்டுமென்ற போதனை – நினைவில்
மின்ன,கனவு கலைந்த(து);என்ன வேதனை!

***
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்