கோநா கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

கோநா


.

கவிதை 1; குழந்தைக் கனவினுள்…

இரண்டிரண்டு படிக்கட்டுகளாய்
தாவித்தாவி வந்ததில்
தவறி விழுந்து
தலையில் பெரிய காயம்.

ஊசி வேணா.. வேணா…

அழுதவளை
அதட்டி இழுத்து வந்த அப்பாவுடனும்
அறியாமல் இடித்துவிட்ட படிக்கட்டுடனும்
அழுத்திப் பிடித்துக் கொண்ட சிஸ்டருடனும்
ஆறு தையல்கள் போட்ட என்னுடனும்
‘கா’ விட்டுவிட்டு
கண்ணீர் கோடுகளாய் காய
அழுதபடியே
தூங்கிப்போகிறாள் ஓவியா.

அனால்ஜெசிக்குகளின் மந்திரத்தில்
வலி மறந்த கணமொன்றில்
பழம் விட்டுவிடுவாளென
குழந்தைக் கனவொன்றினுள்
நுழைந்து காத்திருக்கிறோம்
எல்லோரும் நம்பிக்கையுடன்.

கவிதை 2; கங்காரு குப்பைத் தொட்டியும் குழந்தைகளும்

சிரிக்கும் விழிகளுடனும்
மலர்ந்த இதழ்களுடனும்
அணைக்க அழைக்கும்
விரிந்த கரங்களுடனும்
பொதுஇடங்களில் நிற்பவைகளின்
இதழ்களுக்குள் துப்பிவிட்டும்
நெஞ்சுக்குள் குப்பைகளை எறிந்துவிட்டும்
கடந்துசெல்லும் உங்களை
கவனித்துக்கொண்டுதான்
உடன் வருகிறார்கள்
விலங்குகளையும் பொம்மைகளையும்
உயிராய் நேசிக்கும்
உங்கள் குழந்தைகள்.

கவிதை 3; ருத்ரதாண்டவம்

வாகனங்களின் நெரிசலில்
வழிகேட்டு ஊர்ந்தபடி
ஒரு தெருவில்
சவ ஊர்வலம்
மறு தெருவில்
சிவ ஊர்வலம்

உறவுகள் அழுது திரும்பிய
ஊரடங்கி ௨றங்கிய
பின்னிரவின் ஜாமத்தில்
நாடகம் முடிந்த களிப்பில்
வேடம் கலைத்து
இருவரும் இணைந்து
ஆனந்தத்தில்
ஆடிக்கொண்டிருக்கக் கூடுமொரு
ருத்ரதாண்டவம்
எரிந்து முடிந்து
கனன்று கொண்டிருக்கும்
கொள்ளிக்கட்டைகளின்
இளஞ்சிவப்புக்
கங்குகளின் வெளிச்சத்தில்.

கவிதை 4; இறுக்கிக் கட்டப்பட்ட நீர்

பின்னிருக்கையில்
இறுக்கிக் கட்டப்பட்ட நீரொன்று
சாலையெங்கும் சொட்டிச் செல்கிறது
மிதிவண்டிப் பனிக்கட்டியாய்.

கவிதை 5; புரிதல்

கொட்டும் பனிக்கும்
கொஞ்சம் பார்வைக்குமாய்
நான் அணிந்திருந்த
குல்லாவை
புரிந்து கொள்ளாமல்
அழுகிறது
பக்கத்து இருக்கை
குழந்தை.

Series Navigation

கோநா

கோநா

கோநா கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

கோநா


.

கவிதை 1; மந்திர மல்லி

வேலைக்குச் செல்லும் வேளையில்
மின்சார ரயில்நிலையத்தின் வெளியே
“ரெண்டு மொழம் அஞ்சு ரூபா
மல்லி, மல்லி…”
கூவிக் கொண்டிருந்தாள்
ஒரு சிறுமி.

வேலை முடிந்த மாலையில்
அதே இடத்தில் அச்சிறுமி
“நாலு மொழம் அஞ்சு ரூபா
மல்லி, மல்லி…”
கூவிக் கொண்டிருந்தாள்.

அது
அரைநாளில்
இருமடங்காகும்
மந்திர மல்லி
அச்சிறுமி
ஒரு தேவதையாக
அந்நிலமை
ஏதேனும் சாபமாகவும்
இருக்கக் கூடுமென்றேன்
ஒருவரும் நம்பவில்லை
சிரித்துச் செல்கிறார்கள்.

கவிதை 2; மழை விதைத்தவை

இரவு பெய்த மழை
சாலையில் குழிகளை
துளி ஏருகளால்
உழுது சேறாக்கி
ஒவ்வொன்றிலும்
விதைத்துச்
சென்றிருக்கிறது
ஒரு நிலவையும்
சில நட்சத்திரங்களையும்.

கவிதை 3; கதை தெரியாத காட்டின் கதை

ஒரு பெரிய காடு இருந்துச்சாம்
காட்ல ஒரு சிங்கமிருந்துச்சாம்
அப்றம் ஒரு புலி இருந்துச்சாம்
குரங்கு இருந்துச்சாம்
நரி இருந்துச்சாம்
மான் இருந்துச்சாம்
முயல் இருந்துச்சாம்
யானை இருந்துச்சாம் “ப்பா…ம்”
பூனை இருந்துச்சாம் “ம்மியாயாவ்”
எல்லாம் என்ன செய்தன,
என்ன கதை
என்பதெல்லாம் தெரியாததால்
எதுவும் சொல்லவில்லை
எதையும்
அவளும் கேட்கவில்லை
உறங்கிவிட்டிருந்தாள்.

அப்றம் எல்லாம்
நைட்டு சாப்ட்டு
சமத்தா தூங்கிடுச்சாம்
என கதையை முடித்து
கன்னத்தில் முத்தமிட
உறக்கத்தில் சிரிக்கிறாள் ஓவியா.

கவிதை 4; கைவிடப்பட்ட குழந்தைகள்

உருவானதும்
கருப்பையிலேயே சுமக்கிறார்கள்…

பிறந்ததும் மார்போடே
அணைத்து வைத்துக் கொள்கிறார்கள்…

சற்றே இறக்கி
இடையில் வைத்துக் கொள்கிறார்கள்
சிலகாலம்…

பின்
தரையில் விட்டு
விரல்களை மட்டும்
பிடித்துடன் வருகிறார்கள்…

மெ…ல்…ல… மெ…ல்…ல…
விரல்களையும் விட்டுவிடுகிறார்கள்…

பெரியவர்களால்
கைவிடப்பட்ட குழந்தைகளே
பெரியவர்களாகிறார்கள்…

இல்லையெனில்
குழந்தைகளாகவே இருக்கக் கூடும்
வளர்ந்தும்.

கவிதை 5; ஆடை துறந்த ஞானி

அஞ்சு வயசாகுது
ட்ரஸ்சே போட்டுக்க மாட்டேங்கறா…
எம் மாமிய என்னத் திட்றா,
என்ன புள்ள வளத்துருக்கேன்னு…

பக்கத்து வீட்டக்கா
பிராது கொடுத்தாள்
கண்ணாமூச்சி ஆட்டத்தோழியை
கண்டித்தேன் அழைத்து

வெட்கமாயில்லையா உனக்கு

அழகாய் சிரித்துக் கொண்டே
ஆடை துறந்த ஞானியென
அமைதியாய் திருப்பிக் கேட்டாள்

வெட்கமாயில்லையா உனக்கு

ச்சே…
ரொம்ப வெட்கமாய் போய்விட்டது.

Series Navigation

கோநா

கோநா

கோநா கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

கோநா



கோநா.

கவிதை 1.

தலைப்பு: சற்றுமுன் பெய்தமழை.

தெருவெங்கும் குழிகளை
தெளிந்த வானத்தையும்
கொஞ்சம் மேகத்தையும்
நிரப்பி
சாலையை சீர்செய்துள்ளது
சற்றுமுன் பெய்தமழை.

பாதசாரிகள்
வாகன ஓட்டிகள்
பார்த்துச் செல்லுங்கள்
பறந்து கடந்திடும்
பறவைகளை மிதித்துவிடாமல்
விமானங்களில் மோதிவிடாமல்
தவிர…
நீங்கள்
தவறிவிழுந்துவிடவும் கூடும்
தரையில்லா
பிரபஞ்சப்பெருவெளிக்குள்
பூமியைச் சுற்ற
இன்னொரு நிலவாய்.

கவிதை.2

தலைப்பு; சிலதேநீர்த் துளிகளும் பல சூரியன்களும்

கைதவறி
விழுந்து
த ய றிது சி
உண்மையுடன்
கண்ணாடி டம்ளர்.

ஒளியில் மின்னிய
ஒவ்வொரு சில்லிலும்
இன்னும்
ஒட்டியிருக்கிறது
எனக்கான
சில தேநீர்துளிகளும்
பல சூரியன்களும்.

கவிதை.3

தலைப்பு; கடவுள் பைத்தியம்

சுருண்டு படுத்து
கடிக்கும் கொசுக்களுடன்,
அடிக்கும் குளிர்மழையுடன்
போராடி
உறங்க முயன்று…
பின்னிரவில் கண்ணசந்தவனை
தட்டியெழுப்பிப் போகிறது
ரோந்து வாகன சைரன் ஒலி.

துணி மூட்டையில்
தலைவைத்துப் படுத்திருந்த
வீதியோரத்து பைத்தியம்
காறிக் காறி
வானத்துள் துப்புகிறான்
தூக்கங்கெட்டு.

நரகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு
வேர்த்துக் களைத்து
சொர்க்கத்துள் நுழைந்த கடவுள்
கைக்குட்டை தேடுகிறான்
முகந்துடைக்க.

கவிதை.4

தலைப்பு; அலகு முளைத்த அல்லிகள்

பருவ நீர்க் குளத்துள்
பட்டுப்போன மரத்தின் கிளைகள்,
அடர்த்தியாய் பூத்திருக்கின்றன
அலகு முளைத்த அல்லிகள்
நிலாக் கண்களில் மலர்ந்திடும்
பறிக்க நினைத்தால் பறந்திடும்.

கவிதை.5

தலைப்பு: எ(அ)து.

உருவான(அ)து
சேர்ந்த(அ)து
வளர்ந்த(அ)து
மகிழ்ந்த(அ)து
இருந்த(அ)து
அறிந்த(அ)து
பெருகிய(அ)து
ம௫கிய(அ)து
உ௫கிய(அ)து
பிரிந்த(அ)து
கரைந்த(அ)து
குறைந்த(அ)து
மறைந்த(அ)து
அருவான(அ)து
பொதுவான(அ)து.

Series Navigation

கோநா

கோநா